Wednesday, June 22, 2016

19. அமுதகவி உமறுப்புலவர் சமாதி



தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக அரிய தமிழ் நூற்களை நாம் வலைப்பக்கத்தில்  இணைத்துக் கொண்டே வருகின்றோம். நமது தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் வெளியீடுகளில் உமறுப் புலவர் சரிதை என்ற ஒரு நூலும் இடம் பெற்றுள்ளது. இது நமது சேகரத்தில் 148வது நூலாக உள்ளது. செய்யுளும் உரைநடையுமாக அமைந்த இந்த நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கத்திற்காக வழங்கியிருந்தார் திருமதி சீத்தாலட்சுமி அவர்கள். தமிழகத்திலிருந்து அமெரிக்கா சென்ற போது அவர் தமது வாசிப்புக்காக எடுத்துச் சென்ற நூல்களில் இதுவும் ஒன்று. தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல்களின் போது இந்த நூலைப் பற்றி அவர் மின் தமிழ் மடலாடற் குழுமத்தில் தெரிவிக்கவும் இதனையும் மின்னாக்கம் செய்து பொது மக்கள் வாசிப்பிற்கு வழங்க வேண்டும் என நானும் திருமதி.சீத்தாலட்சுமி அவர்களும் திட்டமிட்டோம். 

நூலை நான் மின்னக்கம் செய்து தருகின்றேன். எனது இல்ல முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்று திருமதி.சீத்தாலட்சுமி அவர்களைக் கேட்ட உடன் எனக்குத் தபாலில் இந்த நூலை அனுப்பி வைத்தார்கள். இந்த நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு 10.10.2009 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைக்கப்பட்ட செய்தியை மின்தமிழில் அறிவித்திருந்தேன். மின்னூலாக்கத்திற்குப் பின்னர் இந்த நூலை உமறுப் புலவர் சமாதியை மேற்பார்வை செய்து வருபவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது திருமதி.சீத்தாலட்சுமி அவர்களின் விருப்பம். எனது எட்டயபுரத்துக்கான பயணம் 2009ம் ஆண்டு டிசம்பர் ஆரம்பத்தில் என உறுதியானவுடன் நானே நேரடியாக அங்கே செல்லும் போது அவர்களிடம் ஒப்படைத்து விடுவதாக உறுதி கூறியிருந்தேன். 

2009ம் ஆண்டு தமிழகத்தின் எட்டயபுரம் செல்லவேண்டும். அந்தக் கிராமத்தின் அனைத்து வரலாற்று விசயங்களையும் சேகரித்து தொகுத்து தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதனை மனதில் கொண்டு 2009ம் ஆண்டு டிசம்பரில் ஓரிரு நாட்கள் எட்டயபுரம் சிற்றூரில் இருந்தேன். 

எட்டயபுரத்தில் சில மணி நேரங்கள் ஜமீன்தாரின் அரண்மனையைச் சுற்றிப் பார்த்து பதிவுகள் செய்து கொண்ட பின்னர் நேராக அமுதகவி உமறுப் புலவர் சமாதி இருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டேன். என்னுடன்  மதுரையிலிருந்து வந்திருந்த இரண்டு நண்பர்களும் இணைந்து கொண்டனர். இந்த இடம் அரண்மனையிலிருந்து வெகு தூரமில்லை. சில குறுக்கு பாதைகளில் சென்று ஐந்தே நிமிடத்தில் அமுதகவி உமறுப் புலவர் மணிமண்டபத்தை வந்தடைந்தோம். எனது கற்பனையில் இது ஒரு இல்லம் போல இருக்கும் என முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு மாறாக இந்த உமறுப்புலவர் மணிமண்டபம் ஒரு பள்ளி வாசல் போலவே அமைந்திருக்கின்றது. மணிமண்டபத்தில் உள்ளோருக்கு நாங்கள் முன் அறிவிப்பு ஏதும் தெரிவித்து விட்டு வரவில்லை. ஆனாலும் திருமதி.சீத்தாலட்சுமி அவர்கள் கொடுத்து நான் மின்னாக்கம் செய்து முடித்த நூலின் அசல் பிரதியை உமறுப்புலவர் மணிமண்டபத்தின் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. 

உமறுப் புலவர் 1642ம் ஆண்டு பிறந்தவர். எட்டயபுரத்து அரண்மனை சமஸ்தானக் கவிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவரது நூலாகிய சீறாப்புராணம் இலக்கிய கவித்துவச் சிறப்புடன் நோக்கப்படும் ஒரு நூல். உமறுப் புலவர் தமது இளம் வயதிலேயே தமது கவித்திறமையால் எல்லோரையும் கவர்ந்தவர். இவரது ஆசிரியரான கடிகை முத்துப் புலவரும் சமஸ்தானப் புலவர்களில் ஒருவரே. மத வேறுபாடுகள் இல்லாமல் அந்தக் காலகட்டத்தில் அரண்மனையில் புலவர்கள் சிறப்புச் செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இவரும் ஒரு சான்று. உமறுப் புலவர் 1703ம் ஆண்டு மறைந்ததாக நூல் குறிப்பு உள்ளது. 

சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு மணிமண்டபத்திற்குள் நுழைந்தோம். அழகான வடிமவமைப்பில் அமைந்த கட்டிடம். 
நாங்கள் சென்ற சமயத்தில் சிலர் அங்கிருந்தனர். 

உமறுப் புலவர் சமாதி, முதலில் பிச்சை என்பவரால் 1912ம் ஆண்டு நினைவுச் சின்னமாக உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் 2007ம் ஆண்டு இப்போதிருக்கும் இந்தப் புதிய மணி மண்டபம் கட்டப்பட்டு சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. உமறுப் புலவர் சரிதை நூலை எடுத்துக் கொண்டு மண்டபத்திற்குள்ளே நுழைந்தோம். பச்சை நிறத்திலான துணியைக் கொண்டு சமாதியை அலங்கரித்திருக்கின்றனர். தினம் அங்கு மக்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர் என்பதை சூழலைப் பார்க்கும் போது அறியமுடிந்தது. 

மணிமண்டபத்தின் உள்ளே சென்று அங்கிருந்த இரண்டு பேரிடம் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். நான் வந்த நோக்கத்தை அவர்களிடம் குறிப்பிட்டேன். உமறுப்புலவரின் சரிதத்தை அங்கே மணிமண்டபத்தில் வைக்க வேண்டும் என்ற திருமதி.சீத்தாலட்சுமிய் அவர்களது விருப்பத்தைத் தெரிவித்து இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் இடம்பெற நான் ஏற்பாடு செய்டிருப்பதையும் தெரிவித்த போது அவர்கள் இருவரும் அகமகிழ்ந்தார்கள். அங்கிருந்தவரில் ஒருவர் மணிமண்டபத்தின் பொறுப்பாளரை அழைத்து வர அவரிடமே அந்த நூலை வழங்கினேன். 

இந்த உமறுப்புலவர் நினைவு மண்டபத்திற்கு பொது மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மந்திரிக்க வருகின்றனர் என்ற விபரத்தையும் தெரிந்து கொண்டேன். குழந்தைகள் உடல் வருத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் உமறுப் புலவரின் சமாதி உள்ள இந்த மணிமண்டபத்திற்கு குழந்தைகளைப் பெற்றோர்கள் அழைனத்து வருவார்களாம். இங்கு வந்து மந்திரித்துச் சென்றால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை பொது மக்களுக்கு இருக்கின்றது. இப்படி வரும் குழந்தைகள் அல்லது நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பூஜைக்கு வைத்துள்ள தண்ணீரைத் தெளித்து விட்டால் நோய் குணமாகும் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாக இருக்கின்றது. 

இஸ்லாமியர்கள் மட்டுமன்றி இந்துக்களும் கிறித்துவர்களும் கூடத் தயக்கமின்றி சர்வ சாதாரணமாக தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றார்கள். சிலர் பிரச்சனைகள் நீங்கியதன் ஞாபகார்த்தமாக தங்கள் குழந்தைகளுக்குக்கும் உமர் என்று பெயர் வைப்பதும் இங்கு வழக்கத்தில் இருக்கின்றது என்பதை இந்த இஸ்லாமிய நண்பர் திரு. அகமது ஜலால் அவர்களிடம் பேசிய போது அறிய முடிந்தது. 

அந்த மண்டபத்தை முழுதுமாகச் சுற்றிக் காண்பித்து அங்கு வந்து செல்வோர் பற்றியும் தொழுகை நடைபெறுவது பற்றியும் எங்களிடம் தகவல் பகிர்ந்து கொண்டனர் இந்த இஸ்லாமிய நண்பர்கள். 

வேறுபட்ட மதங்களைப் பேணுவோராக இருந்தாலும் எட்டயபுர கிராம மக்கள் மத வேறுபாடின்றி எல்லோரும் நட்புடனும் அன்புடனும் பழகும் சூழலை அங்கு நேரில் பார்த்து மகிழ்ந்தேன். மத நல்லிணக்கம் அமைதியான வாழ்க்கைச் சூழலை மக்களுக்கு வழங்கக்கூடிய நல்ல பண்பு இதனை மதித்துப் போற்றி வளர்ப்பது சமூக மேம்பாட்டிற்கு உறுதுணையாக நிற்கும்! 

Friday, June 17, 2016

18. கோவிலூர் வேதாந்த மடம்

மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.


இவ்வாரக் கட்டுரையில் தமிழகத்தில் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் வேதாந்த மடம் பற்றியும் அதன் வரலாற்றின் சில தகவல்களையும் மடத்தின் செயல்பாடுகளையும் விவரிக்கின்றேன்.


Thursday, June 9, 2016

17. திருமலை சிகாமணி




பண்டைய தமிழர் நிலப்பரப்பில் இருந்த இயல்பான வழிபாடுகளானவை குலதெய்வ வழிபாடு, இயற்கை தெய்வ வழிபாடு, தாய் தெய்வ வழிபாடு, இயற்கையாகிய காடு-மலை-தாவரங்கள்-மழை-நெருப்பு ஆகியவற்றைப் போற்றும் வழிபாடு என அமைந்திருந்தன. இவை மனிதர்களும் தெய்வங்களும் நெருக்கமான உறவினைக் கொண்டிருக்கும் வகையில் அமைந்த வழிபாடுகள். இந்த வழிபாட்டு முறையில் மனிதருக்கும் கடவுளுக்கும் இடையே இடைத்தரகர்களாக பலம் பொருந்திய ஒருவர் தேவை என்ற கருத்திற்கு இடமில்லை. ஆண் பெண் இருவருமே பூசாரிகளாக இருக்கத் தகுதி படைத்தோராகவே பண்டைய தமிழ்ச்சமூகத்தின் நிலை இருந்தது. இந்த இயல்பான தெய்வ வழிபாடு மக்களை இணைத்தது. அவர்கள் அஞ்சுகின்ற சக்திகளிடமிருந்து அவர்களைப் பாதுகாத்து நன்மை அளிக்கும் ஒரு சமூகப்பண்பாக இது அமைந்திருந்தது. 

இது சாதிப்பிரிவினை அற்ற மிக இயல்பான திணை, அதாவது, நிலப்பகுதி அடிப்படையில் அமைந்த மனித வாழ்க்கையும் அதற்குரிய தெய்வ வழிபாடுகளும் என்ற வகையில் அமைந்த ஒரு சமூக நிலை. 

இந்த வழிபாட்டு முறையில் மிகப்பெரிய மாற்றம் என்பது தமிழக நிலப்பரப்பிற்கு ஆரியர்களின் வேத நெறி அறிமுகப்படுத்தப்பட்டபோது நிகழ்ந்தது. அது வர்ண பேதங்களை, அதாவது மனு தர்மம் எனும் வேத சாத்திர நூலில் குறிக்கப்படும் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டும் மனிதருக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு கொள்கை. ஆரிய வேத தத்துவக்கருத்துக்களின் தாக்கம் அரசுகளை ஈர்த்த போது வேத சாத்திரங்கள் அதிலும் குறிப்பாக மனு தர்மம் சொல்லும் பிரிவினையை அரசியல் அமைப்புப்படி சட்டமாக்கி நடைமுறைப்படுத்தி அதனை விரிவாக்கின அன்றைய அரசுகள். வேத முனிவர்கள் செய்கின்ற வேள்விகளில் உயிர்ப்பலி கொடுக்கும் நடைமுறை வழக்கில் இருந்தது. உயிரினங்களை தாங்கள் செய்கின்ற யாகங்களில் பலி கொடுத்து மேல் உலகத்தில் இருக்கும் தேவர்களை மகிழ வைத்து தங்கள் விருப்பங்களை வரமாகப் பெறலாம் என்ற நம்பிக்கையை வைதீக சமயம் விரிவாக்கியிருந்தது. அதுமட்டுமன்றி ஞானக் கல்வி வாய்ப்புக்கள் என்பன குறிப்பிட்ட குலத்தோருக்கு மட்டுமே உரியது என்றும் ஏனையோர் தொழில் கல்வி செய்து வாழ்வதே குல தர்மம் என்ற கொள்கையையும் விரிவு படுத்தியிருந்தது வைதீக மதம். 

இதற்கு ஒரு மாற்றாகச் சமணமும் பௌத்தமும் விளங்கின. இறைவனை அடைய எல்லோரும் தவம் செய்யலாம்; நல்ல நெறிகளை ஒழுகினால் மோட்சம் பெறலாம்; கல்வி என்பது எல்லோருக்கும் சமமானது;. என்ற கருத்துக்களைச் சமணமும் பௌத்தமும் முன்வைத்தன. இதில் மேலும் விரிவாக அகிம்சை கோட்பாட்டை வலியுறுத்தும் பண்பைக் கொண்டிருந்தது சமணம். எந்த உயினங்களையும் வதைத்தல் கூடாது என்பதை மிக முக்கியக் கோட்பாடாக சமண சமயம் முன்வைத்தது. மக்கள் மத்தியில் அறத்தை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற சிந்தனையையும் எல்லோருக்கும் கல்வி என்ற கொள்கையையும் வைதீக மதம் சூழ்ந்திருந்த தமிழக நிலப்பரப்பில் சமணம் முன்வைத்துப் பரவலாக பொது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வளர்ந்தது. 

சமணம் இன்றைய தமிழகம் என்று குறிப்பிடப்படும் நிலப்பகுதியில் கி.மு 5ம் நூற்றாண்டு வாக்கிலிருந்து வழக்கில் இருந்து வந்தமையை இன்று நமக்குக் கிடைக்கின்ற பல சான்றுகளிலிருந்து அறிகின்றோம். பொதுவாக பண்டைய தமிழி (பிராமி) எழுத்தால் அமைந்த கல்வெட்டுக்கள் இருக்கின்ற பகுதிகளான மாங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, ஆனைமலை, அறச்சலூர் போன்ற பகுதிகள் தமிழகத்தில் சமணத்தின் தொன்மையை உறுதி செய்வதாக இங்குள்ள கல்வெட்டுக்களும், சமணர் கற்படுக்கைகளும் அமைகின்றன. 

சமண சமயம் இந்தியாவில் மட்டுமே தோன்றி வளர்ந்து இன்றளவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களால் ஒழுகப்படும் ஒரு சமயம். தமிழகத்தில் கி.பி 7ம் நூற்றாண்டிற்குப் பின்னர் தோன்றிய சைவ வைணவ சமயங்கள் பெருமளவில் மன்னர்களின் ஆதரவைப் பெற்று வளர்ந்த போது சமணமும் பௌத்தமும் அதன் புகழை இழக்கத் தொடங்கின. அதன் பின்னர் மீண்டும் அச்சணந்தி முனிவரின் முயற்சிகளினால் கி.பி 9ம் நூற்றாண்டு முதல் மீண்டும் சமணம் அதன் சிறப்பைப் பெறத் தொடங்கியது. பிற்காலச் சோழ மன்னர்கள் ஆட்சியின் போது சைவ வைணவ சமயத்தோடு சமணமும் மன்னர்களின் ஆதரவைப் பெற்ற சமயமாகவே திகழ்ந்தது. அதிலும் குறிப்பாக மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் சமய வெறி அற்ற, எல்லா சமயத்தோரையும் ஆதரிக்கும் பொது நலச்சிந்தனை பரவியிருந்ததால் சமணமும் புத்துயிர் பெற்று வளர்ச்சி பெற ஆரம்பித்தது. 

மாமன்னன் ராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவைப்பிராட்டியார் சமண சமயத்தில் பற்று கொண்டவராக இருந்தார். தமிழகத்தின் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள திருமலை மற்றும் கரந்தை போன்ற பகுதிகளில் குந்தவை நாச்சியார் கட்டிய சமண ஆலயங்கள் இன்றும் சிறப்புடன் காட்சியளிக்கின்றன. 

அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான கோயில் தான் சிகாமணி நாதர் சமணக்கோயில். இந்தக் கோயில் இருக்கும் இடம் எழில் நிறைந்த ஒரு பகுதி. தமிழகத்தின் போற்றத்தக்க வகையில் அமைந்த சமண சின்னங்கள் உள்ள ஒரு பகுதியாக இந்தக் கோயில் இருக்கும் திருமலை என்னும் ஊரைச் சொல்லலாம்.. திருமலை திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருமலை என்றாலே பொதுவாக பலரும் இது திருப்பதி வெங்கடாசலபதி இருக்கும் திருமலையோ என யோசிக்கலாம். இங்குக் குறிப்பிடப்படும் திருமலை ஆந்திரப்பிரதேசத்தில் இருக்கும் திருமலை அல்ல. இது தமிழகத்தில் இருக்கும் ஒரு சிற்றூர்தான். திருமலை என்ற இந்த ஊரில் வைகாவூர் என்னும் கிராமத்தில் தான் இந்தச் சிகாமணி நாதர் கோயில் இருக்கின்றது, 

இந்தக் கிராமத்திற்கு நான் 2014ம் ஆண்டில் சென்றிருந்தேன். அங்கிருக்கும் சமண மடத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அருகாமையில் இருக்கும் சமண சமயச் சின்னங்களைப் பார்வையிட்டும் மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீ தவளகீர்த்தி பட்டாரக சுவாமிகளைப் பேட்டிகண்டேன். அந்த விழியப் பதிவு தமிழ் மரபு அறக்கட்டளையின் சமண சமய வரலாறு உள்ள பகுதியில் இடம்பெறுகின்றது. 

இந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதி பாறைகள் நிறைந்த ஒரு மலைப்பகுதி. மலையின் கீழடிவாரத்தில் ராஜராஜன் தன் தேவியருடன் இருக்கும் வகையில் அமைந்த சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் கடந்து சென்றால் பாறைகளுக்கு மேலே செல்ல அமைக்கப்பட்டுள்ள மலையின் மேற்கே படிகளில் ஏறிச்சென்றால் நாம் பிரம்மாண்டமான வடிவில் உள்ள ஸ்ரீசிகாமணி நாதர் புடைப்புச் சிற்பத்தை அங்குக் காணலாம். இச்சிலையின் மொத்த உயரம் 16 1/2 அடியாகும். தீர்த்தங்கரர் நேமிநாதரின் சிறப்புப் பெயரே சிகாமணிநாதர் என்பதாகும். இச்சிற்பம் சோழ இளவரசியார் குந்தவை பிராட்டியாரால் கி.பி.11ம் நூற்றாண்டில் மாமன்னன் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பின்னர் கட்டப்பட்டது. 

இந்தியாவிலேயே மிக உயரமான நேமிநாத தீர்த்தங்கரர் சிற்பம் என்ற சிறப்பைக் கொண்டது இந்தச் சோழர் காலத்துச் சிற்பம். மாமன்னன் ராஜராஜனின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில் அவருக்குப் பல பெயர்கள் உண்டு. மும்முடிச் சோழன், ஜனநாதன், அருண்மொழி, சத்திரிய சிகாமணி ஆகியவை அவற்றுள் அடங்கும். திருமலையில் செதுக்கப்பட்ட இந்த நேமிநாதரின் சிற்பத்தை தனது சகோதரன் மாமன்னன் ராஜரானின் மறைவுக்குப் பின்னால் கட்டியதால் ராஜரானின் நினைவாக 'சிகாமணி' என்று பெயரிட்டிருக்கலாம் என "திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு" என்ற நூலில் அதன் ஆசிரியர் ஆர்.விஜயன் குறிப்பிடுகின்றார். 

இச்சிகாமணி நாதர் புடைப்புச் சிற்பத்திற்கு பூஜையும் செய்யப்படுகின்றது. இந்த மலை இருக்கும் பகுதியில் மேலே செல்லச் செல்ல மேலும் பல சமண சின்னங்கள் இருப்பதைக் காணலாம். 

இந்தச் சிற்பம் அமைந்திருக்கும் சூழலும் இதன் அமைப்பும் இங்கு வருவோர் மனதில் ஆழ்ந்த தியானத்தை ஏற்படுத்டும் வல்லமை கொண்டவை. இத்தகைய சிறந்த கலைப்படைப்புக்கள் தமிழர் வரலாற்றின் சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்ப்பவையாக அமைந்திருக்கின்றன. 

சமண நெறி என்றோ இருந்து என்றோ மறைந்தது எனவும், அதன் வரலாற்று அம்சங்களை முழு பரிமாணத்தோடு அறியாது ஒரு பகை சமயம் போலவும் கருதுவோரும் உள்ளனர். சமண சமயம் தமிழ் மொழிக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் கலைக்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். அவற்றை அறிந்து கொள்ள முனையும் போது தமிழர் வரலாற்றைப் பற்றிய விரிவான தகவல்களை நாம் பெற முடியும்.

Thursday, June 2, 2016

16. டென்மார்க்கில் தமிழ் ஒலைச்சுவடிகள்

நல்லதோர் வீணை செய்தே - அதை
     நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ? 
சொல்லடி, சிவசக்தி ! எனைச்
     சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
     மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

தமிழ் ஓலைச்சுவடிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு விட்டனவா? அனைத்தும் நூற்களாக அச்சிடப்பட்டு வெளிவந்து விட்டனவா? என்றால் அதற்கு பதில், ”இல்லை” என்பது தான்!






தமிழ் நிலம் பல நூறு ஆண்டுகளாய் கிளைத்தெழுந்த அறிவுப் பொக்கிஷங்கள் நிறைந்த ஒரு தாய் நிலம். இங்கே அறிவுக் களஞ்சியங்கள் காலம்தோறும் ஏதோ ஒரு வகையில் தொடர்ச்சியாகப் பாதுகாக்கப்பட்டும் பரவலாக்கப்பட்டும் வந்துள்ளது. 

அச்சு பதிப்பு முறை தமிழகத்தில் அறிமுகமாகும் வரை தமிழர் தம் வாழ்வியலில், தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களும் ஆவணங்களும் பல்வேறு வகைப்பட்ட குறிப்புக்களும் பணை ஓலைச் சுவடிகளிலும், கோயில்களில் கல்வெட்டுக்களாகவும் தான் எழுதப்பட்டும் பொறிக்கப்பட்டும் இருந்தன. அச்சு இயந்திரங்கள் தமிழக நிலப்பரப்பில் அறிமுகமாகும் வரை இலக்கியங்கள் என்பது மட்டுமன்றி வணிகம், கலைகள், இலக்கியம், பக்தி பனுவல்கள், பல்வேறு வகைப்பட்ட சாத்திரங்கள், ஓவியங்கள், சிற்பக் கலை நுணுக்கங்கள், மனிதர்களுக்கான மருத்துவக் குறிப்புக்கள், விலங்குகளுக்கான மருத்துவக் குறிப்புக்கள், வான சாஸ்திரம், கலைகள் என பலதரப்பட்ட தகவல்கள் அனைத்துமே பனை ஓலை நூல்களில் வழிவழியாக படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. அதே வேளை, பண்டைய அரசுகளின் அதிகாரப்பூர்வ  செய்திகளும், போர் செய்திகளும், நன்கொடைகளும் கோயில்களில் கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டு இன்றும் வாசிக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன.  

அச்சு இயந்திரங்களின் அறிமுகம், அதன் தொடர்ச்சியாக தாட்களின் அறிமுகம் என தமிழ் சமூகம் கல்விப் புரட்சியை நோக்கி முன்னேற்றம் கண்ட வேளையில் குறிப்பிடத்தக்க ஆவணப்பாதுகாப்பு முயற்சிகள் நடந்தன. முதம் முயற்சிகள் 16ம் நூற்றாண்டிலே தொடங்கினாலும் விரிவான முயற்சிகள் 17ம் நூற்றாண்டு தொடங்கி நடைபெற ஆரம்பித்தது எனலாம்.  

இவ்வகை முயற்சிகளே நமது பண்டைய இலக்கிய வளங்களில் சில இன்று நமக்கு அச்சு வடிவிலும் இணையத்திலும் கிடைக்க அடிப்படை காரணங்களாக அமைகின்றன. இலக்கியங்கள், வரலாற்றுத் தகவல்கள், தமிழக நிலப்பரப்பில் வாழும் பழங்குடி மக்கள், இனக்குழுக்கள், சடங்கு முறைகள் என்பன போன்ற பல தகவல்கள் இப்படி கடந்த நான்கு நூற்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக நமக்குக் கிடைத்திருக்கின்றன.
தாள் அச்சு இயந்திரங்கள் தமிழகத்தில் அறிமுகமாவதற்கு முன்னர் பண்டைய தமிழர்களின் ஞானக் கருவூலங்கள் கல்வெட்டுக்களிலும் சுவடி நூல்களிலும் மட்டுமே எழுதப்படுவது வழக்கமாக இருந்தது. சில சிறு குறிப்புக்கள் பாறைகளிலும் மண்பாண்டங்களிலும் கீறி வைக்கப்பட்டமையயும் தொல்லியல் ஆய்வுகளும், அகழ்வாய்வுகளும் வெளிப்படுத்துவதை நாம் அறிய வருகின்றோம். 

லூத்தரன் பாதிரிமார்களின் தமிழகத்துக்கான வருகை என்பது டேனீஷ் வருகையோடு தொடர்புடையது. லூத்தரன் பாதிரிமார்கள் என்போர் அடிப்படையில் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். 16ம் நூற்றாண்டில் ஒரு மாபெரும் சிந்தனைப் புரட்சியை ஐரோப்பிய சூழலில் உருவாக்கினார் மார்ட்டின் லூதர். இவர் ஜெர்மனியைச் சார்ந்தவர். அன்றைய வாட்டிக்கன் சமய  ஆளுமையைக்கு எதிர்குரலாக அமைந்தது மார்ட்டின் லூதரின் கருத்துக்கள். இவையே லூத்தரன் சமய நெறியாக உருவாக்கம் கண்டன. இன்று ப்ராட்டஸ்டன் மதம் என்ற பெயரால் இது அழைக்கப்படுகின்றது. மார்ட்டின் லூதரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு சமய சீர்திருத்தத்தை வரவேற்ற பொதுமக்கள் இந்த புதிய சமயத்தை ஜெர்மனியில் விரிவாக வரவேற்றனர். டென்மார்க் அரசு இந்த சமயத்திற்கு பெறும் ஆதரவும் அளித்து அதனை பரப்பும் முயற்சியில் பெரும் பங்கு வகித்தது என்பது மிக முக்கியமானது.

1612ம் ஆண்டில் டென்மார்க் அரசின் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி, தமிழகத்தின் தஞ்சாவூரின் தரங்கம்பாடி பகுதியில் ஒரு சிறு பகுதியைப் பெறும் உரிமையை ஆண்டுக் கட்டணமாக இந்திய ரூ.3111 செலுத்தி  அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் அனுமதியோடு பெற்ரனர். இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரச ஆணையின் படி 19.11.1620ம் நாள் தரங்கம்பாடியில் டென்மார்க்கின் டேனிஷ் கொடி ஏற்றப்பட்டு தரங்கம்பாடியில் டேனிஷ் தொடர்பு உறுதி செய்யப்பட்டு இந்த உடன்பாடு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டேனீஷ் வர்த்தகர்கள் தரங்கம்பாடி வந்திறங்கினர். வர்த்தகத்தோடு மதம் பரப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் வகையில் ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்கள் தமிழகத்தின் தரங்கம்பாடி வந்தனர். அவர்களில் சீகன்பால்க், ஷூல்ட்ஷெ, க்ருண்ட்லர், ரைனூஸ் போன்றோர் தமிழில் நூல்களை எழுதி ஐரோப்பிய பாதிரிமார்களும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் ஒரு மொழியாகக் கற்க வகைசெய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இவர்களது நூல்கள் மட்டுமன்றி தமிழகத்தில் இவர்கள் இருந்த காலத்தில் எழுதப்பட்ட இவர்களது நாட்குறிப்புக்கள், கடிதங்கள் ஆகியன தமிழில் எழுதப்பட்டவை. உதாரணமாக டேனிஷ் உயரதிகாரியால் சிறைபடுத்தப்பட்ட சீகன்பால்க் ஒவ்வொரு நாளும் சில பக்கங்கள் நாட்குறிப்புக்களை பனை ஓலைச் சுவடிகளில் எழுதியிருக்கின்றார். இன்னொரு பாதிரியாரான க்ருன்ட்லர், தான் கண்டறிந்த உள்ளூர் மூலிகைகள் பற்றி பனை ஓலைச் சுவடிகளில் எழுதி தொகுத்து வந்ததோடு அவற்றை டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் நூலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்துக் குறிப்புக்களாக உள்ள ஆவணங்கள் 17, 18, 19, 20ம் நூற்றாண்டின் தமிழக மக்களின் சமூக, வாழ்வியல், சமய, வரலாற்று, அரசாட்சி, மருத்துவம், ஆய்வு என பல்வகைப்படுவன. லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்து பனை ஓலைச்சுவடி ஆவணங்கள் இன்று டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் அரச நூலகத்திலும் ஜெர்மனியின் ஹாலே ஃப்ராங்கன் ஆய்வகத்திலும் பாதுகாக்கப்படுகின்றன.  இப்படி பாதுகாக்கப்படும் கையெழுத்து பனை ஓலைச்சுவடி ஆவணங்கள் மின்னாக்கம் செய்யப்பட்டு பொது மக்கள் வாசிப்பிற்கு கிடைக்கும் போது 15ம் நூற்றாண்டு தொடங்கி 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான சமூக வரலாற்று விஷயங்கள் மிகப் பல விரிவான ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இது அக்கால சூழலின் சமூகவிஷயங்களை அறிந்து கொள்ள பல சான்றுகளை வழங்குவதாகவும் நிச்சயம் அமையும் என்ற எண்ணம் எனக்கு உருவானது.

முதன் முதலில் லூத்தரன் பாதிரிமார்களின் தமிழகத்திற்கான வருகை, பின்னர் அது தொடர்பில் படிப்படியாக நிகழ்ந்த செயல்பாடுகள் ஆகியனபற்றிய அறிமுகம் எனக்கு டாக்டர்.மோகனவேலு அவர்கள் எழுதிய German Tamilology  என்ற நூலின் வழி கிடைத்தது.  அப்பாதிரிமார்கள் எழுதிய தமிழ் ஓலைச்சுவடிகளைப் பார்க்க வேண்டும், வாசிக்க வேண்டும்;  அதுமட்டுமன்றி அவற்றைக் கணினி தொழில்நுட்பம் கொண்டு மின்னாக்கம் செய்து தமிழ் மொழியிலும் தமிழக வரலாற்றிலும் ஆர்வம் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும், அது தொடர்பிலான ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகரித்துக் கொண்டே வந்தது. 

நான் அறிந்து கொண்ட செய்திகளை கட்டுரையாக ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் 2014ம் ஆண்டு வாசித்துப் படைத்தேன். தொடர்ச்சியாக 2014ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத்தமிராய்ச்சி மாநாட்டில்  இது தொடர்பான ஒரு கட்டுரையை நான் வாசித்தேன். 2015ம் ஆண்டு திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மதுரைத் தமிழ்ச்சங்க கருத்தரங்கிலும் ஒரு கட்டுரை இது தொடர்பில் வாசித்தளித்தேன். இதன் வழி ஐரோப்பிய லூத்தரன்பாதிரிமார்களின் தமிழ் முயற்சிகள் பற்றிய செய்திகள் தமிழ் வரலாற்று ஆர்வலகர்களிடையே ஓரளவு கொண்டு செல்ல முடிந்தது.

தமிழ் மரபு அறக்கட்டளை ஐரோப்பாவில் டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹாகனிலும், ஹெர்மனியின் ஹாலேயிலும் பாதுகாக்கும் இந்த ஆவணங்களை கணினி தொழில்நுட்பத்தின் துணை கொண்டு மின்னாக்கம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குத் தொடர்ச்சியாக இருந்தமையால், கோப்பன்ஹாகன் அரச நூலகத்தின் அரிய கையெழுத்து சுவடிகள் துறையின் பொறுப்பாளர் டாக்டர்.பெண்ட் அவர்களை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு அதற்குத் தேவையான அதிகாரப்பூர்வ ஏற்பாடுகளைச் செய்த பின்னர், கோப்பன்ஹாகன் அரச நூலகம் எனக்கு அங்கே வருகை தந்து நேரடியாக இவற்றை நான் மின்னாக்கம் செய்ய அனுமதி அளித்தனர். இது என்னுடைய இந்தத் தீவிர முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி.  அதோடு டென்மார்க்கில் வாழும் கோப்பன்ஹாகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். ராமானுஜம் அவர்களின் தொடர்பும்  நட்பும்  ஏற்பட்டதால் மேலும் சில தகவல்களும் எனக்குக் கிடைத்தன. அவர் ஏற்கனவே நூலகத்தின் பட்டியலிலிருந்து எடுத்து பட்டியலிட்டிருந்த தமிழ் ஓலைச்சுவடிகளின் பட்டியல் ஒன்றினை எனக்கு அனுப்பி வைத்தார். 

இந்த முன்னேற்பாடுகளுடன் எனது டென்மார்க்கிற்கான பயணத்தை நான் திட்டமிடலானேன். 2016, மே மாதம் 26ம் தேதி கோப்பன்ஹாகனுக்கு ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டேன்.அன்றே கோப்பன்ஹாகன் அரச நூலகம் சென்று என்னை நூலகர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த அரிய தமிழ்ச்சுவடிகளின் மின்னாக்கப்பணியைத் தொடங்கினேன். மூன்று நாட்கள் இடைவிடா மின்னாக்கப்பணியில் ஈடுபட்டிருந்தேன். காலை 9மணிக்குத் தொடங்கி இரவு ஒன்பது மணி வரை என என் மின்னாக்கப்பணி நடைபெற்றது. இந்த முயற்சியில் முப்பத்தெட்டு தமிழ் பனை ஓலைச்சுவடிகளை, அதாவது ஏறக்குறைய 1200 பனை ஓலைப்பக்கங்கள் கொண்ட தமிழ் ஆவணங்களை மின்னக்கம் செய்து முடித்துள்ளேன்.

நாம் ஏற்கனவே நன்கறிந்த சில கதைகள், ஒரு நிகண்டு, இரண்டு மருத்துவ ஓலைச்சுவடிகள் இவற்றுள் அடங்கும்.  இதுவரை வெளியிடப்படாத சீகன்பால்கின் கையெழுத்து ஆவணங்கள், தமிழிலும் தெலுங்கிலும் என இரு மொழிகளில் அமைந்த ஷூல்ட்ஷேவின் சமய போதனை நூல், சீகன்பால்கின் டைரி, சீகன்பால்கின் உதவியாளர்களின் டைரிகள் என பல புதிய ஆவணங்கள் இந்த மின்னாக்கத்தில் உள்ளன.  இந்த மின்னாக்கப்படிமங்கள் படிப்படியாக நூல் வடிவம் பெறும் வகையிலும், ஆக்கப்பூர்வமான  தொடர் ஆய்வுகள் தொடங்கும் வகையிலும் எமது அடுத்தக் கட்ட செயல் பாடுகள் அமையும். 

இந்த முயற்சியில், தரங்கம் பாடியில் டென்மார்க் அரசின் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியிடம் சிறு பகுதியைப் பெற ரூ3111 ஆண்டுக்கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு  உரிமை அளித்த, அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் கையெழுத்து பொறிக்கப்பட்ட தங்க ஆவணத்தை நேரில் பார்த்து அதனை ஆவணப்படுத்தியது என் வாழிவில் ஒரு மறக்க முடியாத அனுபவம்.  இந்த பத்திரம் தங்கத்தினால் ஆனது. வேறு எந்த உலோகமும் கலக்காதது. பனை ஓலைச்சுவடி போன்ற வடிவத்திலேயே அமைக்கப்பட்டது. இதில் ரூ 3111 ஆண்டுக்கட்டணத்திற்கு தரங்கம்பாடியின் ஒரு பகுதியை டேனீஷ் அரசு பெற்றுக் கொண்டமை தமிழில் எழுதப்பட்டுள்ளன. மன்னர் ரகுநாத நாயக்கரின் கையெழுத்து தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. இந்தத் தங்கச்சுவடி கோப்பன்ஹாகன் நேஷனல் ஆர்க்கவில் மிகப்பாதுகாப்பாகன அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

இன்றைய கட்டுரை டென்மார்க், கோப்பன்ஹாகன் விமான நிலையத்திலிருந்து உங்களை வந்தடைகின்றது. அதிலும் குறிப்பாக டென்மார்க் அரச நூலகத்தில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகளில் சிலவற்றை தொட்டு மின்னாக்கம் செய்த அனுபவத்தோடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் அச்செய்திகளை உங்களுடன் இக்கட்டுரையின் வழி பகிர்ந்து கொள்வதில் அகம் மிக மகிழ்கின்றேன்.

Wednesday, May 25, 2016

15.குன்றக்குடி குடைவரைக்கோயில்




இந்து தெய்வ கோயில்களின் அமைப்பு, காலம் காலமாக பல மாறுபாடுகளை உள்ளடக்கியதாக படிப்படியான வளர்ச்சியைக் கண்டுள்ளது. தமிழக நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்து தெய்வ கோயில்கள் பலவகைப்படும். இன்று நாம் காணும் திறந்த வெளியில் அமைந்த குல தெய்வ சாமி வழிபாடாகட்டும், கோபுரங்களுடன் கூடிய பெரிய கட்டுமானங்களைக் கொண்ட கோயில்களாகட்டும், இவைஅ அனைத்துமே காலம் காலமாக பல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சியடைந்தன. இன்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னான கோயில் கலை பற்றி ஆராயும் போது அவை மரம், செங்கல், சுண்ணாம்பு, மணல்  போன்ற அடிப்படைப் பொருட்களைக் கொண்டு கபட்டப்பட்டதாக அமைந்திருப்பதை, நமக்கு கிடைக்கின்ற அகழ்வாராய்ச்சி தகவல்களிலிருந்து அறிகின்றோம். பல்லவர் ஆட்சி காலத்தில், உறுதியான மலை பாறைகளைக் குடைந்து  கோயில் அமைக்கும் தொழிற்கலை உருவானது. 

குடைவரைக் கோயில் என்றால் என்ன, என பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
குடைவரைக் கோயில் என்பது மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு உறுதியான பாறையைக்  குடைந்து அதில் சிற்பிகளைக் கொண்டு இறைவடிவங்களைச் செதுக்கச் செய்து, அக்குகைக்குள்ளேயே மண்டபங்களையும் அமைத்து தூண்களையும் செதுக்கி  அமைக்கப்படும் கோயில் அமைப்பாகும்.

தமிழகத்தில் இருக்கின்ற  புகழ்பெற்ற குடவரைக் கோயில்கள் வரிசையில் மகேந்திரப்பல்லவனால் அமைக்கப்பட்ட மண்டகப்பட்டு கோயில் காலத்தால் முந்தியதாக இன்று அறியப்படுகின்றது. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலும் ஒரு குடைவரை கோயில் தான். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தில் உருவாக்கிய குடைவரைக் கோயில்கள் இன்று உலகப்பிரசித்தி பெற்றவையாகத் திகழ்கின்றன. கழுகு மலையில் இருக்கும் வெட்டுவான் கோயில் பாறையைக் குடைந்தும் கூட இத்தனை சிற்பங்களை அமைக்க முடியுமா என்று நம்மை வியக்க வைக்கும் அமைப்பாக இருக்கின்றது. 

தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இத்தகைய காலத்தால் முந்திய குடைவரைக் கோயில்களில்  இதுவரை ஏறக்குறைய பத்துக்கும் குறையாத எண்ணிக்கையிலான குடைவரைக் கோயில்களைப் பற்றிய தகவல்களை இணைத்திருக்கின்றோம்.  அவற்றில் ஒன்று தான் குன்றக்குடியில் இருக்கும் ஒரு குடைவரைக்கோயில். 

குன்றக்குடியில் குன்றக்குடி மடத்தின் அருகாமையில் உள்ள குடவரைக் கோயில் பொதுவாக பார்ப்பவர்களுக்குச் சிறு குகைக் கோயில் என்ற எண்ணத்தைக் கொடுத்தாலும் கூட உள்ளே சென்று பார்க்கும் போது அங்குள்ள சிற்பங்களும், கருவறையில் அமைந்திருக்கும் சிவலிங்க வடிவமும் நம்மை வியக்க வைக்கின்றன. மனதைப் பரவசப் படுத்தும் அற்புதச் சிற்பங்கள் இவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

கோயில் முழுக்க மலையைக் குடைந்து சிற்பிகள் உயரமான பெரிய சிற்பங்களை வடித்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல.  இச்சிறிய குடவரைக் கோயில் முழுதும் பல கல்வெட்டுக்கள் நிறைந்திருப்பதும் இக்கோயிலின் சிறப்பாக அமைகின்றது. குறிப்பாக "திருமகள் போல பெருநிலச் செல்வியும்" எனத் தொடங்கும் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியைக் குறிக்கும் கல்வெட்டு, சோழ மன்னர்கள் செய்த தானங்கள் மற்றும் பல வரலாற்றுக் குறிப்புக்களை இன்றளவும் வெளிக்காட்டும் ஆவணங்களாகத் திகழ்கின்றன.
இந்தக் குடவரைக் கோயிலின் மூலஸ்தானத்தில் அமைந்திருப்பது சிவலிங்க வடிவம். மலையிலேயே பாறையைக் குடைந்து செதுக்கி இச்சிவலிங்க வடிவம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் குடவரைக் கோயிலில் ஒரு பக்கத்தில் வலம்புரி பிள்ளையாரின் சிலையும் வடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலில் உள்ளதைப் போலவே இந்தக் கோயிலில் அமைந்துள்ள பிள்ளையார் சிலையும் வலம்புரிப்பிள்ளையார் வடிவமாக, இரண்டு கரங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. 
பழமையான இந்தக் கோயில் கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று இங்குள்ள எழுத்துக்களின் தோற்ற அமைப்பைக் கருத்தில் கொண்டு கல்வெட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும் பின்னர் வந்த சோழ மன்னர்களும் இக்கோயிலை பராமரித்து இங்கே தங்கள் கல்வெட்டுச் செய்திகளையும் செதுக்கி வைத்து இக்கோயிலில் தொடர்ந்து வழிபாடு நடந்து வர ஆவண செய்திருக்கின்றனர்.
  
வெளியேயிருந்து பார்க்கும் போது ஒரு கோயிலாக மட்டும் இது தெரிந்தாலும் இக்கோயிலுக்குள் மூன்று கோயில்கள் அமைந்திருப்பதை உள்ளே சென்று காணும் போது அறியலாம். 
முதலில் அமைக்கப்பட்டுள்ள கோயிலில் மூலஸ்தானத்தில் இறைவன் சிவலிங்க வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றார். வெளிப்பக்கச் சுவற்றில் பாறையைக் குடைந்தே ஒரு புறம் துர்க்கையின் வடிவமும் ஒரு புறம் விஷ்ணுவின் சிலையும் அமைக்கப்பட்டிருக்கின்றன.சங்கு சக்கரத்துடன் உள்ள மிகப் பிரமாண்டமான திருமால் வடிவம் இது. நடந்து செல்லும் வகையில் இந்த திருமால் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. திருமால், துர்க்கை, இரண்டு சிலைகளுமே மிகப் பெரிதாக பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது குடவரைக் கோயில் சற்று எளிமையான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலிலும் மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவமே அமைந்துள்ளது. இதுவும் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சிவலிங்க சிலையே.
  
மூன்றாவதாக அமைந்துள்ள கோயிலில் முன் வாசல் பகுதியில் இரண்டு துவார பாலகர்கள் அமைந்திருக்கின்றனர். மூலஸ்தானத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.குடவறை கோயில் படிகள் பாதி வட்டமாக (அர்த்தவட்டம்) அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இக்கோயிலில் தற்சமயம் மாத ப்ரதோஷத்தின் போது மட்டும் இங்கு பூஜை நடைபெறுகின்றது. மற்ற சமயங்களில் இக்கோயில் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் குன்றக்குடி ஆதீனத்தின் மேற்பார்வையிலேயே தற்சமயம் உள்ளது.
இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் பதிக்கப்பட்டுள்ள குறிப்புக்களின் வழி முன்னர் இக்கோயில் மசிலீச்வரம் என்று அழைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 
நாங்கள் பதிவிற்காகச் சென்ற தினத்தில் முதலில் குன்றக்குடியில் ஆதீனகர்த்தரை சந்திந்து ஒரு பேட்டியை முடித்து விட்டு தொல்லியல் அறிஞர் முனைவர்.வள்ளி சொக்கலிங்கம், முனைவர்.கண்ணன்,முனைவர்.காளைராசன் நான் ஆகிய நால்வரும் இந்தக் கோயிலைப் பார்க்க வந்தோம். எங்களுக்கு உதவியாக கோயிலைத் திறந்து காட்டி உதவிட குன்றக்குடி மடத்திலிருந்து ஒரு உதவியாளரும் வந்திருந்தார்.

இந்தப் பதிவின் போது தொல்லியல், கல்வெட்டு , தமிழ் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற காரைக்குடி முனைவர்.வள்ளி சொக்கலிங்கம் அவர்களும் எங்களுடன் வந்திருந்ததால் கல்வெட்டுக்களை வாசித்து உடன் பொருளறிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. மாமன்னன் ராஜராஜ சோழனின் கல்வெட்டுக்கள், குலோத்துங்க சோழனின் 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் ஆகியவற்றை டாக்டர் வள்ளி அவர்கள்  வாசிக்கக் கேட்டு பதிவு செய்தேன். இப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வாஇப்பக்கத்தில் பல புகைப்படங்களுடனும் ஒலிப்பதிவு கோப்புக்களுடனும் வரலாற்றுப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. 

இக்குகைக் கோயிலில் இருக்கும் ஒரு கல்வெட்டில் குன்றக்குடி என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது. இது இவ்வூருக்கு அமைந்துள்ள பெயரின் பழமைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் பாண்டி நாடு சோழர் ஆட்சியின் கீழ் இருந்ததால் இக்கல்வெட்டுக்கள் சோழ அரசரின் மெய்கீர்த்தி குறிப்புக்களோடு தொடங்குவதைக் காணமுடிகின்றது.
தமிழகத்தில்,பொதுவாக எங்கெங்கெல்லாம் சமண முனிவர்கள் தங்கியிருந்து சமணப் பள்ளிகள் அமைத்திருந்தார்களோ அங்கெல்லாம் இவ்வகைக் குடவரைக் கோயில்களைப் காணலாம். சைவ வைஷ்ணவ தெய்வ வழிபாடுகள் மேலோங்க ஆரம்பித்த காலங்களில் மன்னர்களின் ஆதரவும் இச்சமயங்கள் பெற்றதால்  சைவ வைஷ்ணவ தெய்வங்களுக்காக இவ்வகை பாறையைக் குடைந்த கட்டுமான அடிப்படையில் சிற்பிகளில் தேர்ந்த கைத்திறனைக் கொண்டு இவ்வகைக் குடைவரைக் கோயில்களை உருவாக்கியிருக்கின்றனர் 

இதே குடைவரைக் கோயிலின் முன் வாசல் புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் மன்னர்களின் சிலைகள் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. மன்னர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் சிற்பங்களின் வடிவங்களைப் பார்த்தே அரசர்களின் வடிவங்கள் இவை என்பதை உறுதி செய்து கொள்ள முடிகின்றது.
இக்கோயிலுள்ள அனைத்து கல்வெட்டுக்களும் தமிழக தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு மிக்க குடவரைக் கோயில்களில் இதுவும் ஒன்று. கலைச்சிற்பங்களாக அமைந்திருக்கும் இறை வடிவங்களும் தமிழர் வரலாற்றை இன்றளவும் போற்றிப் பாதுகாக்கும் கல்வெட்டு ஆவணங்களும் நிறைந்துள்ள இக்குடவரைக் கோயிலைப் பற்றி பலரும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். 

Wednesday, May 18, 2016

14. அக்னி சிறகொன்று கண்டேன்



திரு.அப்துல் கலாம் அவர்களைத் தெரியாத தமிழ் மக்களே கிடையாது எனலாம். அவர் பெயரைக் கேட்கும் போதே அவரது புன்னகைப் பூத்த முகமும் இளையோர் அனைவரும் கல்வி கற்று சிறந்த குடிமக்களாக வாழவேண்டும் என்ற அவரது அறிவுரையும், அவர் உள்ளத்தின் அன்பும், கனிவுமே நம் எல்லோருக்கும் உடன் நினைவுக்கு வரும். 

இந்திய நாட்டின் 11-வது குடியரசுத்தலைவராக  2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பதவி வகித்த சிறப்பைப் பெற்றவர் திரு.அப்துல்.கலாம் அவர்கள். இந்திய நாட்டின் உயரிய அரசியல் பதவியை வகித்த அப்துல் கலாம் அவர்கள் மிக எளிமையான குடும்பத்தில் இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தவர் தான். இவரது தந்தையார் திரு.ஜெனுலாபுதீன், தாயார் திருமதி.அஷியம்மா.  இருவரும் அன்பு நிறைந்த உதாரணத்தம்பதியர் என அண்டை அயலாரிடம் மதிப்புப் பெற்றிருந்தனர்.. இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்திலேயே இவர்கள் குடும்பம் வருமையில் வாடியதால் படிக்கும் போதே வேலை செய்து குடும்ப வருமையைப் போக்க தன் உழைப்பையும் நல்கியவர் திரு.அப்துல் கலாம். வீட்டில் வருமை இருந்த போதிலும் கூட தம் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கும் மேலாக பலரும் உணவு உண்ண வருவார்கள் என்றும்,  அனைவருக்கும் உணவு  பரிமாறும் தரும சிந்தனை கொண்டவர்கள் தமது பெற்றோர் என்றும் இவர் குறிப்பிடுகின்றார்.  பெற்றோரது அன்பும் கருணையும், பிறரை நேசிக்கும் மனமும் இயல்பாகவே இவருக்கு வாய்த்திருந்தது.

தனது அயராத முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும், கட்டுக்கோப்பான சிந்தனையினாலும் படிப்படியாக கல்விக்கூட தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்று தன் கல்வித்தரத்தையும் வாழ்க்க்கை நிலையையும் இவர் உயர்த்திக் கொண்டதோடு நாட்டின் உயரிய பதவியையும் பெற்றார். தமிழகத்தின் மெட்ராஸ் தொழில் நுட்பக்கழகத்தில் கல்வி கற்று பட்டம் பெற்று பாதுகாப்பு ஆய்வு வளர்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாக முதலில் தமது பணியைத் தொடங்கினார். அதன் பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் இணைந்தார். 1980ம் ஆண்டில் ரோகினி துணைக்கோளை ஏவும் பணிக்கு தலைமையேற்று அதனை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.  இந்த சாதனைக்காக அவருக்கு 1981ம் ஆண்டில் இந்திய அரசு பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.

1989ம் ஆண்டு "அக்னி"  ஏவுகனையை விண்ணில் செலுத்தும் குழுவிற்கு திரு.அப்துல் கலாம் அவர்கள் தலைமை தாங்கினார். மே மாதம் 22ம் தேதி "அக்னி" வானில் செலுத்தப்பட்டது. இது மாபெரும் வெற்றி என்பதோடு உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு அணு ஆயுத வல்லரசு என்ற சிறப்புத்தகுதியைப் பெற்றுத்தந்தது. "அக்னி" ஏவுகணையை விண்ணில் செலுத்துவதற்கு முதல் நாள் பாதுகாப்பு அமைச்சரும் மேலும் சிலரும் திரு.அப்துல் கலாம் அவர்களும் மாலை உலாவச் சென்ற போது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் திரு.கே.சி.பந்த் அவர்கள் "கலாம்! ... அக்னி வெற்றியை கொண்டாடுவதற்காக நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகின்றீர்கள்" என்று கேட்டிருக்கின்றார். அதற்கு பதிலளிக்கு முன்னர்.. "எனக்கு என்ன வேண்டும்? என்னிடம் இல்லாதது எது? எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கப்போவது எது? .." என இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்து விட்டு, அங்கே ஆய்வுக்கூடத்தில் நடுவதற்கு ஒரு லட்சம்  செடிகள் வேண்டும் எனக் கேட்டிருக்கின்றார்.  இதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்த பாதுகாப்பு அமைச்சர், "அக்னிக்காக பூமித்தாயின்  ஆசிகளை நீங்கள் பெறுகின்றீர்கள்.. நாளை நாம் வெற்றியடைவோம்" என்று சொன்னாராம். அதனை தனது சுயசரிதையான அக்னிச்சிறகுகள் நூலில் திரு.அப்துல் கலாம் குறிப்பிடுகின்றார்.

எவ்வளவு உயர்ந்த சிந்தனை இது என ஒவ்வொருவரையும் எண்ணிப் பார்க்க வைக்கும் செய்தி இது. 

திட்டமிட்டபடி "அக்னி"  விண்ணில் செலுத்தப்பட்டு அதன் வான் பயணத்தின் வெற்றி உறுதி என அறிவிக்கப்பட்டபோது தனது நாட்குறிப்பில் அன்றைய இரவு திரு.அப்துல் கலாம் அவர்கள் இப்படி எழுதுகின்றார். 

தீச் சகுனங்களைத் தடுத்து நிறுத்த
மேல் நோக்கிச் செலுத்தும் அம்சமாகவோ,
உனது பேராற்றலை வெளிப்படுத்தச் 
செலுத்தப்படுவதாகவோ
அக்கினியைப் பார்க்காதே.

அது நெருப்பு
இந்தியனின் இதய நெருப்பு.
அது ஒரு வெறும் ஏவுகளையன்று.
இந்த நாட்டின் எரியும் பெருமை.
அதனால் தான்  அதற்கு 
அத்தனை ஒளி.

எத்தகைய எழுச்சி தரும் வரிகள்!

சாதனையைப் படைக்கப் பிறந்தவர்கள் ஏற்றும் அக ஒளி அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் அனைவரிடத்தும் சூழ்ந்து நிச்சயம் ஒளி பரப்பத்தான் செய்யும்..

தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காக 2002ம் ஆண்டு நான் தமிழகம் சென்றிருந்த வேளையில் அதி வேக ஸ்கேனர்களைக் கொண்டு எவ்வகையில் அரிய பழம் தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்யலாம் என்ற ஒரு கலந்துரையாடலை தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்துறைப் பேராசிரியர் டாக்டர்.உதயகுமார் அவர்களுடன் நானும் டாக்டர்.நா.கண்ணன் அவர்களும் மேற்கொண்டிருந்தோம். அவ்வேளையில் அங்கே திரு.அப்துல் கலாம் அவர்கள் சிறப்பு பேராசியரியராக பதவி எடுத்துக் கொண்டு பணியாற்றிய காலகட்டம் அது. நாங்கள் இருந்த சமயத்தில்  அவர் அருகாமையில் தனது அலுவலகத்தில் இருப்பதாகத் தெரியவர தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அவரிடம் கூறி அறிவுரையும் ஆசிகளும் பெற அவரது அறைக்குச் சென்றோம்.

முன்னறிவிப்பு ஏதும் இன்றி செல்கின்றோமே என்ற தயக்கம் மனம் முழுவதும் இருந்தது. ஆனால் அவரைப் பார்த்துப் பேசிய மறு நொடியே தயக்கம் மறைந்து மிக அன்னியோன்னியமானதொரு கலந்துரையாடலாக அது அமைந்தது என்பதோடு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாளாகவும் அது பதிந்து போனது.

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் எமது தன்னார்வ தொண்டூழிய நிறுவனத்தின் நோக்கம், செயல்பாடுகள் திட்டங்கள் என்பன பற்றி நானும் டாக்டர்.கண்ணன் அவர்களும் திரு.அப்துல் கலாமுக்கு விளக்கிச் சொன்னோம். மிகப் பொறுமையாகவும் மிகுந்த ஆர்வத்தோடும் எங்கள் விளக்கங்களைக் கேட்டவர் ஓலைச்சுவடிகள் பற்றி குறிப்பிட ஆரம்பித்த போது இடைக்கிடையே தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சுக்கிடையே அடிக்கடி திருக்குறள் செய்யுட்களை உதாரணமாகச் சொல்லி பேசியது என்னுள் மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.

ஒரு பொறியியல் விஞ்ஞானி என்ற போதிலும் தமிழ் மொழியையும், தமிழ் பண்பாட்டையும் தமிழ் நிலத்தின் வரலாற்றையும் உணர்வுப்பூர்வமாக மிக நேசிக்கும் ஒரு மனிதரை நேரில் பார்த்து பேசியது என்னுள்ளே பல மடங்கு எழுச்சியை எற்படுத்தியது. அடிப்படையில் கணினி அறிவியல் துறையே எனது துறை என்ற வகையில் கூடுதலாக தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளில் அதிலும் குறிப்பாக பழம் நூல்கள் பாதுகாப்பு, தமிழர் வரலாற்று புராதன சின்னங்கள் பாதுகாப்பு  என்ற வகையில் அப்போது ஈடுபட ஆரம்பித்திருந்த  எனக்கு  உறுதியான உந்துதலைத் தருவதாக அச்சந்திப்பு அமைந்தது. மிக உயரிய சாதனையைச் செய்த மாபெரும் விஞ்ஞானி என்ற கர்வம் ஏதும் இல்லாமல் தமிழ் மொழியின் பால் கொண்ட பற்றினாலும் ஆர்வத்தினாலும் எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சிகளை ஆசீர்வதித்து நல்வாழ்த்துக்களை வழங்கினார். அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக இந்தியாவின் மில்லியன் நூற்கள் மின்னாக்கத் திட்டத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையும் அங்கம் வகித்து நூறு தமிழ் நூற்களை நமது முயற்சியில் இத்திட்டத்திற்காக மின்னாக்கம் செய்து வழங்கினோம் என்பது பெருமையுடன் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவிசயம். 

அன்றைய சந்திப்பில் எங்களை மேலும் மகிழ்ச்சி படுத்தியது திரு.அப்துல் கலாம் அவர்கள் எனக்கும் டாக்டர். கண்ணன் அவர்களுக்கு அளித்த விருந்தோம்பல். அவருக்காக கொண்டு வரப்பட்டிருந்த உணவை எங்கள் இருவருடன் பகிர்ந்து கொள்ள மூவருமாக அன்று சேர்ந்து உணவருந்தினோம். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பேறு என்று தான் சொல்ல வேண்டும்.  அந்தச் சந்திப்பிற்குப் பிறகு திரு.அப்துல் கலாம் அவர்கள் கைப்பட தமிழ் மரபு அற்க்கட்டளையின் முயற்சிகளை வாழ்த்தி தாமே எழுதி அனுப்பிய  வாழ்த்துக் கடிதமும் எங்களுக்குக் கிடைத்தது. இது எமது தமிழ் மரபு அறக்கட்டளைக்குக் கிடைத்த மிக உயரிய பாராட்டுதல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அச்சந்திப்பிற்குப் பிறகு அவரது சுயசரிதை  Wings of Fire நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான அக்னிச்சிறகுகள் நூலை வாங்கி வாசித்தேன். கொண்ட குறிக்கோளில் வெற்றி காண வேண்டும் என்ற இதயத் தீயின் வெளிப்பாடு அந்த நூல் முழுவதும் இருப்பதை வாசிக்கும் போது ஒவ்வொரு கணமும் உணர்ந்தேன். தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள் மட்டுமன்றி எனது தனிப்பட்ட வாழ்க்கையின் மேம்பாட்டிற்கும் அக்னிச்சிறகுகள் தரும் அனுபவக் கருத்துக்களும் ஊக்கச் சொற்களும் எனக்குத் துணையாக அமைந்தன. இந்த நூலை எப்போது எடுத்து வாசித்தாலும் திரு.அப்துல் கலாமின் எண்ணங்களின் வெளிப்பாடுகளும் சிந்தனைகளும் மனதில் எழுச்சியை ஏற்படுத்தத் தவறவில்லை.

இந்தப் பூவுலகை விட்டுப் பிரிந்தாலும் அவரது எண்ணங்களும் கருத்துக்களும் பலரது நெஞ்சத்தில் குடிகொண்டிருப்பதைப் போல தமிழ் மரபு அறக்கட்டளைக்கு அவர் உளமார வழங்கிய வாழ்த்துக்கள் எமது நோக்கங்களுக்கு துணையாகத் தொடர்கின்றன!

Thursday, May 12, 2016

13. கரிகால் வளவன் கட்டிய கல்லணை




நீரின்றி அமையாது உலகு. உலகம் செழிக்க நீர் அவசியம். மழையாகவும், பனித்துளிகளாகவும், ஆறாகவும்,  ஓடையாகவும் வடிகின்ற நீர் சரியாக தேக்கி வைக்கும் போது மக்கள் பயன்பாட்டிற்குப் பயன்படும் வகையில் அமைந்து விடுகின்றது. இன்றைக்கு நீர் பயன்பாட்டின் தேவையின் காரணத்தை அறிந்திருப்பதால், நீரைத் தேக்கி வைத்து மக்கள் பயன்படும் வகையில் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் நீர் தேக்கி வைப்பதற்கான தொழில்நுட்ப முறைகளைப் பற்றியும் உலகின் எல்லா நாடுகளிலும் அரசும் சமூக நலனில் அக்கறை கொண்ட குழுவினரும் தனி மனிதர்களும் கூட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை பொது ஊடகங்களின் வழி அறிகின்றோம்.

நீர் நிலைகளை முறையாகப் பாதுகாக்காதக் காரணங்களினாலும் ஏரிகளையும் குளங்களையும் நீர் நிலைகளையும் கவனிக்காது அவற்றை சேதப்படுத்தியும் அவற்றில் கட்டிடங்களைக் கட்டியும் அழித்ததனால் தமிழகத்தின் சென்னைப்பகுதியே 2015ம் ஆண்டு வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டது என்பதை தமிழர் அனைவருமே அறிவோம். 

இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் பற்றிய சிந்தனை இல்லாத அக்காலத்திலேயே பல்லாண்டுகள் உறுதியாக இருக்கும் வகையில் நீரைத் தேக்கி வைத்து நாட்டு மக்கள் விவசாயம் செய்து நல்வாழ்வு வாழ வழி செய்தவன் சோழ மன்னன் கரிகால் வளவன்.  

சங்ககால சோழ மன்னர்களுள் காலத்தால் முந்தியவனாகக் கருதப்படுபவன் சோழன் இளஞ்சேட்சென்னி. இவனது வீரத்தையும், இவனது நால்வகைச் சேனைப்படைகளையும், அவனது வள்ளல் குணத்தையும் விளக்கும் வகையில் அமைந்த இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவனது திருக்குமாரனாகப் பிறந்தவன் கரிகாலன். தாயின் வயிற்றில் இருக்கும் போதே அரச உரிமையைப் பெற்றவன் என்ற சிறப்பைக் கொண்டவன் கரிகால வளவன். இவனுக்குத் திருமாவளவன், கரிகால் பெருவளத்தான், கரிகால் வளவன், வளவன் என்ற பெயர்களும் உண்டு.

கரிகால் வளவனின் ஆட்சி காலத்தில் அவனுக்குப் புகழ் சேர்த்த போர் என்றால் அது வெண்ணி வாயில் போர் எனக் குறிப்பிடலாம்.  தென்னாசிய அளவில் மிகப்பெரியதொரு போர் என்ற சிறப்புடன் இப்போர் வர்ணிக்கப்படுகின்றது. கரிகால் வளவன் தஞ்சாவூருக்கு அருகாமையில் உள்ள வென்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில் சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுடனும், பாண்டிய மன்னனுடனும், பதினொரு வேளிருடனும் போரிட்டு அவர்களைத் தோல்வியுறச் செய்தான். இதனால் தமிழகம் முழுவதும் கரிகால் வளவனின் ஆட்சிக்குக் கீழ் வந்தது.  மூன்று தலைமுறைகளாக சோழ மன்னர்களுக்கிடையே இருந்த குழுச்சண்டை முடிவுக்கு வந்து துறைமுக நகரமான புகார் நகரமும், தலநகரமான உறையூரும் பெருமை பெற்றது.  தமிழகத்தைக் கைப்பற்றி பின்னர் வடநாட்டிற்கும் சென்று, அங்குச் செல்லும் வழியில் உள்ள ஊர்களிலெல்லாம் போர் நடத்தி அவ்வூர்களையெல்லாம் வென்று  இமயம் வரை சென்று அங்கு போரிட்டு வெற்றிக் கொடி நாட்டினான் கரிகால் வளவன். சோழப் பேரரசு தென்னிந்தியா முழுமையுமான பேரரசாகவும், கரிகால் வளவன் பேரரசனாகவும் உருவெடுக்க வெண்ணிப்பறந்தலைப் போர் மிக முக்கியக் காரணியாக அமைந்தது.

தரைப்படை மட்டுமன்றி கடற்படை பலமும் கொண்டிருந்தான் கரிகால் பெருவளத்தான். இப்படை பலத்துடன் இலங்கையில் போரிட்டு இலங்கையையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான் இச்சோழமன்னன்.  அவனது ஆட்சி காலத்தில் அடிக்கடி காவிரியில் வெள்ளப்பெருக்கு புகார் நகரத்தில் ஏற்பட்டு வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியது. காவிரி வெள்ளத்தில் அடித்துவரும் மணல்  கடல் வாணிபத்தையும் பாதித்ததோடு கப்பல், மற்றும் படகு போக்குவரத்துக்கு மிகுந்த இடையூற்றையும் ஏற்படுத்தியது. ஆக இதனை சரி செய்ய ஒரு அணையைக் கட்டி நீர் நிலையை சரி செய்து துறை முகத்தை பாதுகாப்பதுடன் தமிழகத்தின் விவசாயத்தைச் செழுமைப்படுத்தவும் முயற்சி எடுத்தான் வளவன். தனது பெரும்படையின் பலத்துடனும் இலங்கைப் போரில் தோல்வி கண்ட படையினரையும் கொண்டு தமிழகத்தின் காவிரியாற்றின் கரைப்பகுதியைச் சீரமைத்து உயர்த்திக் கட்டினான்  பெருவளத்தான். காவிரியில் கல்லணை கட்டி தலைநகரான உறையூர் வரை நிலையான நீர்ப்போக்குவரத்து விரிவடைய வழி செய்தான் நீர் மேலாண்மையில் தனித்திறன் கொண்டிருந்த கரிகால் வளவன். வெண்ணிப் போரின் நினைவாக கரிகாலன் வெட்டிய ஆறு இன்றைக்கு வெண்ணாறு என அழைக்கப்படுகின்றது (வெண்ணியாறு என்பதன் திரிபு). இந்த ஆற்றின் தலைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளதுதான் கரிகாலன் திருமாவளவன் கட்டிய கல்லணை.

இந்தக் கல்லணையைக் கட்ட சோழ நாட்டின் கரூர், முசிறி என்ற நகரங்களிலிருந்து வெட்டியெடுத்து ஆற்று வழியே கொண்டு வரப்பட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவை ஆங்கிலேய காலணித்துவ அரசு ஆண்ட போது இக்கல்லணையைப் பரிசோதித்து இடிக்கும் படி முடிவெடுத்து பொறுப்பை சர் ஆர்தர் காட்டன் என்பவருக்குக் கொடுத்தனராம் .அவர் தலைமையில் இயங்கிய குழு இக்கல்லணையைப் பரிசோதித்து இதன் கட்டுமானத் தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்து அதிசயித்து இதனை Grand Anaicut, அதாவது மாபெரும் அணைக்கட்டு என்று கூறிப் புகழ்ந்து சென்றதாம். 

இந்தக் கல்லணை ஏனைய கல்லணைகளுக்கும் பொறியியல் ரீதியில் உதாரணமாக அமைந்தது. கோதாவரியில் அமைக்கப்பட்ட கல்லணையும் இதே தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டதே. இந்த கல்லணையின் பொறியியல் நுட்பத்திறன் பின்னர் ஆங்கிலேய அரசு அமைத்த பாலங்களின் கட்டுமானம், ஏரி அணை அமைப்புக் கட்டுமாணம் ஆகியவற்றிற்கு அடிப்படையாக அமைந்தது என்பது இதன் தொழில்நுட்பத்திறனுக்குக் கிடைத்திருக்கும் பெருமை.  

சோழமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை பற்றிய விரிவான வரலாற்றுப் பதிவை தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காக 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்றிருந்தபோது செய்து வந்தேன். அது பற்றிய தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை  வலைப்பக்கத்தில் காணலாம்.

உலகமக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது நீர் நிலைகளே. இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சோழன் கரிகால் வளவன் தூரநோக்குச் சிந்தனையுடன் நாட்டு மக்கள் நலன் கருதி எடுப்பித்த கல்லணை இன்றளவும் காவிரி நீர்ப்பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கி நாட்டு மக்கள் நலன தரும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.