Wednesday, July 27, 2016

23. பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை



கோயில்கள் என்றால் இறைவன் உறையும் இடம் என மட்டுமே நினைத்திருப்போம். அதில் குடைவரைக் கோயில், பாறைக் கோயில், நடுகல் என சிலவற்றைக் கேள்விப்பட்டிருப்போம். பள்ளிப்படை கோயில் என்ற ஒன்றினைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

பள்ளிப்படை கோயில் என்பது, இறந்து போன அரசகுடும்பத்தினரில், குறிப்பாக அரசன் அல்லது அரசிக்கு அமைக்கப்பட்ட சமாதி கோயில் எனச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக சிவதீட்சை பெற்றவராக அந்த அரச குடும்பத்தவர் இருக்க வேண்டியதும் மிக அவசியம். இறந்தவரின் உடலைச் சுத்தம் செய்து, புதைக்கப்பட உள்ள இடத்தில் ஒரு பள்ளத்தினை அமைத்து, பின்னர் அந்த உடலை கிழக்குப்பக்கம் பார்த்த வகையில் அமர வைத்து, உட்கார்ந்த வகையில் அந்த உடலுக்கு இறைவடிவங்களுக்குச் செய்வது போன்ற எல்லா வகை அபிஷேகங்களையும் செய்து, படையல்களைத் தயாரித்து அவற்றை அந்த உடலுக்குக் கொடுப்பதாக பாவித்து அந்த உடலை அந்த உட்கார்ந்த நிலையில் அப்படியே மண்ணை மூடிப் புதைத்து, அதன் மேல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வர். ஒரு சில இடங்களில் இதற்குப் பதிலாக இறந்த உடலின் சமாதி மேல் அரசமரத்தினை நட்டு அதன் பக்கத்தில் சமாதியை வைப்பதும் வழக்கம்.

அப்படி ஒரு கோயிலைப்பற்றியது தான் இன்றைய பதிவு.

2013ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் சோழர் கால கோயில்களைக் காணும் ஒரு முயற்சியாக டாக்டர். பத்மாவதி, இந்திய தொல்லியல் துறை ஆய்வு மாணவர் பரந்தாமன், நான் ஆகியோர் சென்றிருந்த போது குறிப்பிடத்தக்க சில இடங்களைக் காண வேண்டும் என ஒரு பட்டியல் போட்டுக் கொண்டு கும்பகோணம் பகுதியிலும் அதன் சுற்றுப்புற நகரங்களிலும் கிராமங்களிலும் தேடிச் சென்றோம். பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் பஞ்சவன் மாதேவி கோயில் எங்கள் பட்டியலில் இருந்தது. முதலில் கோயிலை சரியாகக் கண்டுபிடிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினாலும், உள்ளூர் மக்கள் வந்து வழி காட்டியதால் இந்தக் கோயிலை கண்டுபிடித்துப் பார்க்க முடிந்தது.

இந்த சோழர்காலக் கோயில் இன்று இருக்கும் வடிவில் இன்றைக்கு ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன் வரை இல்லை. 1978ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் இக்கோயில் அறியப்பட்டு, முழு கோயிலும் மீட்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பானதொரு விஷயம். பழுவேட்டறையர் குலப்பெண்ணான பஞ்சவன் மாதேவி மாவேந்தன் ராஜராஜ சோழனின் துணைவியர்களில் ஒருவர். கடாரம் வென்ற ராஜேந்திர சோழனின் சிற்றன்னை தான் இந்தக் கோயிலின் நாயகி பஞ்சவன் மாதேவியார். தன் சிற்றன்னை நினைவாகப் பேரரசன் ராஜேந்திர சோழன் கட்டிய கோயில் இது.

பஞ்சவன் மாதேவியின் பூதவுடலை வைத்து அதன்மேல் சிவலிங்கம் வைத்துக் கட்டப்பட்ட ஒரு பள்ளிப்படை கோயில் இது என்பது இதன் கூடுதல் சிறப்பு.

தமிழகத் தொல்லியல் துறை இக்கோயிலைக் கண்டறிந்தபோது இக்கோயிலைச் சுத்தம் செய்து முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டியது பெரிய காரியமாக இருந்திருக்கின்றது. இந்தப் பெரும் பணியை குழுக்களாகப் பிரித்துக் கொண்டு இவர்கள் கோயிலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர் என்பதை என்னுடன் பயணத்தில் இணிஅந்து கொண்ட டாக்டர்.பத்மாவதி சுவாரசியத்துடன் விளக்கினார்.

கோயில் மண்புதற் சூழ்ந்து காடுகள் நிறைந்து இப்பகுதி இருந்திருக்கின்றது. ஒரு குழு கோபுரப் பகுதியைச் சுத்தம் செய்து மரம் செடி கொடிகளையெல்லாம் வெட்டியெடுத்திருக்கின்றார்கள். இன்னொரு குழு கோயில் சுற்றுப் புரத்தில் மண்டிக் கிடந்த காடுகளை வெட்டி அப்புறப்படுத்தியிருக்கின்றாரகள். டாக்டர்.பத்மாவும் சிலரும் கோயிலுக்குள் கிடந்த மண்ணையெல்லாம் அப்புறப்படுத்தி சிலைகளைச் சுத்தப்படுத்தி பிரகாரப்பகுதியைச் சுத்தப்படுத்தியிருக்கின்றார்கள். அருகாமையில் இருந்த கிணற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து கோயில் முழுமையையும் தூய்மைப் படுத்தி கோயிலை வழிபாட்டுக்கு உகந்த வகையில் புத்துயிர் கொடுத்திருக்கின்றார்கள்.

பின்னர் இக்கோயிலைப் பராமரிக்கும் பொறுப்பு அவ்வூர் மக்களுக்கே என அமைத்துக் கொடுத்து விட்டு வந்திருக்கின்றனர். தற்சமயம் கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியும் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புது வர்ணங்களுடன் கோபுரம் காட்சியளிக்கின்றது.


இந்தக் கோயிலுக்கு அதிக அளவு மக்கள் வந்து போவதாக அறியமுடியவில்லை.ஆயினும் தொடர்ந்து ஊர் மக்கள் கோயிலைப் பராமரித்து வருகின்றரகள். நாங்கள் சென்றதை அறிந்து கோயிலில் பூசை செய்யும் ஒருவர் வந்து இரும்புக் கதவுகளைத் திறந்து விட்டு எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளூர் மக்கள் சிலரும் நாங்கள் என்ன செய்கின்றோம் என்படஹி அறிந்து கொள்ள ஆவலௌடன் வந்து நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் கோயிலுக்குள் செல்லும் போது வௌவால்கள் கடந்து பறந்து சென்றன. கோயிலின் வெளிப்பகுதியைச் சுர்றிப்பார்த்தேன். சுற்றுப்புறச் சுவர் அனைத்திலும் மிகத் தெளிவான கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழக தொல்லியல் துறையினால் படியெடுக்கப்பட்டு விட்டன என்ற நல்ல செய்தியை டாக்டர்.பத்மாவதி தெரிவித்தபோது மனமகிழ்ந்தேன்

இந்தப் பஞ்சவன் மாதேவி கோயிலில் சமாதியின் மேலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட வடியில் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சிவதீட்சை பெற்றோர் உடலை தீக்கு இரையாக்கக்கூடாது என்பது சைவ மரபு. அப்படி சிவதீட்சை பெற்ற ஒருவரது உடலை எரித்தால் அது சிவபெருமானின் உடலை தீக்கு இரையாக்குவதற்குச் சமம் என்ற நம்பிக்கை சைவ மரபில் உண்டு. அப்படிச் செய்யும் போது அது நாட்டில் நோய்,பஞ்சம், வறுமை போன்ற கெட்ட பலன்களை நாட்டு மக்களுக்கு வழங்கும் என்பது இந்த நம்பிக்கையில் அடங்குகின்றது. பொதுவாக சிவதீட்சை பெற்று இறந்தவரின் சமாதி என்பது சிவன்கோவிலுக்குச் சமம் என்ற கருத்தும் இருப்பதால் சிவன்கோவிலில் செய்யப்படும் அனைத்துப் பூஜைகளும் இவ்வகை கோயில்களிலும் செய்யப்பட வேண்டும் என்பது நியதியாக இருக்கின்றது. அந்த வகையான ஒரு அமைப்பாகக் கட்டப்பட்ட கோயில் தான் இது.

பஞ்சவன் மாதேவியார் பழுவேட்டறையர் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் அந்த வகை கலை நுணுக்கத்துடன் கூடிய சிற்ப வகை அமைப்பு இந்தப் பள்ளிப்படை கோயில் அமைப்பில் தெரிகின்றது. பழுவேட்டறையர் வகை சிற்ப அமைப்பில் செதுக்கப்பட்ட நந்தி, அதாவது நந்தியின்கழுத்தில் வரிசை வரிசையாக மணிகள் கோர்க்கப்பட்ட ஆரம் இருப்பது போல கழுத்து மாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. நந்தியின் கொம்பு பகுதி குறுகியதாகவும் அந்தக் கொம்பைச் சுற்றி அழகிய கல்ஆரங்கள் இரண்டு கொம்பு பகுதிகளிலும் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றது. நெற்றியில் அழகிய நெற்றிச் சுட்டியுடன் இந்த நந்தி காட்சியளிக்கின்றது.


கோயிலின் கருவறைக்குள் சிவலிங்கம் சமாதிமேல் அமைக்கப்பட்டிருக்கின்றது. வெளியே கருவறையைச் சுற்றிய பகுதியில் இரண்டு துவார பாலகர்கள் உள்ளனர். இவர்கள் வித்தியாசமான வகையில் அமைக்கப்பட்ட வகையில் ஒரு கால் இன்னொரு காலில் குத்திட்டவாறு நிற்கும் அமைப்பில் நடன அடவினை வெளிக்காட்டுவது போல இச்சிற்பங்கள் உள்ளன.

இந்த வகையான இறந்தோருக்கான பிரத்தியேக சமாதி அமைப்பு முறையும் வழிபாடும் சைவ சமத்தில் எந்தப் பிரிவில் இருந்தது என தொல்லியல் துறை ஆய்வறிஞர் டாக்டர்.பத்மாவதி அவர்களை நான் வினவியபோது சைவ சமத்தில் மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன என்றும், காளாமுகம், பாசுபதம், கபாலிகம் என்பவையே அவை என்றும், இந்த வகை சடங்குகள் காளாமுக, பாசுபத சைவப் பிரிவுகளில் அடங்குவது எனவும் விரிவாக விளக்கினார். அதுமட்டுமன்றி எங்கெல்லாம் பள்ளிப்படை கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம் ஒரு மடம் அக்கோயிலோடு இணைந்ததாக இருந்திருக்கும் என்றும், அங்கே லகுளீசப் பண்டிதர் என்றழைக்கப்படும் ஒரு சிவனடியார் ஒருவர் மடத்தில் இயங்கியிருப்பார் என்றும் கூடுதல் தகவல்களை வழங்கினார்கள்.

இந்தப் பயணத்தின் போது செய்யப்பட்ட விழியப்பதிவும் புகைப்படங்களும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தின் வரலாற்றுப் பகுதியில் சோழநாட்டுக் கோயில்கள் என்ற பகுதியில் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழர் நம் வரலாற்றில் எத்தனையோ வகை வழிபாட்டு முறைகள் உள்ளன,. அதில் இந்தப் பள்ளிப்படை கோயில் அமைப்பும் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகின்றது.

Wednesday, July 20, 2016

22. வட அமெரிக்காவில் தமிழ் ஒலித்தது



வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையும் நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய பேரவையின் 29வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு மேலும் சில நாட்கள் வட அமெரிக்காவில் சுற்றுப்பயணமும் மேற்கொண்டு கடந்த வாரம் திரும்பினேன். மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்வு.  நாம் இருப்பது அமெரிக்கா தானே?  அல்லது மலேசியா சிங்கையா?  என நினைக்கும் அளவிற்கு என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது இந்த நிகழ்வு.

FETNA என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையின் நிகழ்வில் நான் கலந்து கொள்வது இது தான் முதல் முறை. 1988ம் ஆண்டு அமைக்கப்பட்ட இப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டு விழாவை வட அமெரிக்காவின் ஒரு மாநிலத்தில் நடத்தி தமிழுக்குச் சிறப்பு சேர்த்து வருகின்றது.

தாயகத்தை விட்டு அயல் நாடுகளுக்கு ஏதாகினும் ஒரு காரணத்திற்காக எனச் சென்ற ஏராளமான தமிழ் மக்கள் உலகின் எல்லாக் கண்டங்களிலும் வாழ்கின்றனர். வட அமெரிக்காவில் தமிழர்களின் வருகை என்பது தொழில் அடிப்படையில் அமைந்தது எனலாம். இன்று வட அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழர் நடத்தும் உணவகங்கள் இருக்கின்றன. இந்தியாவிலிருந்து சினிமா பிரபலங்களை அழித்து வந்து கலை நிகழ்ச்சிகளைச் செய்து மகிழ்கின்றனர். தமிழ் மொழி தொடர்பான பல சீரிய முயற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. வார இறுதி தமிழ்ப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இசை வகுப்பு, நடனவகுப்பு, வாத்தியக் கருவிகள் இசைக்கும் பயிற்சிக்கான வகுப்புக்கள் நடக்கின்றன. தமிழர் கல்விக்காகவும் பொருளீட்டவும் அமெரிக்கா சென்று விட்ட காரணத்தால் தங்கள் மரபையும் தமிழின் பெருமையையும் மறந்து விடவில்லை. மாறாகப் பலர் மிக ஆர்வத்துடன் தமிழ் மொழி, கலை பண்பாடு, ஆய்வு என்ற ரீதியில் தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் மரபு அறக்கட்டளையும் இவ்வாண்டு நடைபெறுகின்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையின் 29வது ஆண்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என அதன் தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் அவர்கள் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பொங்கல் விழாவில் நாங்கள் இருவருமே சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டபோது எனக்கு அழைப்பு விடுத்தார். தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளை அமெரிக்க வாழ் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவது நன்மையளிக்கும் என்பதை மனதில் கொண்டு நான் கலந்து கொள்ளத் தேவையான ஏற்பாடுகளில் ஈடுபட்டேன். ஜூலை மாதம் 1ம் நாள் மாலை தொடங்கி இந்த ஆண்டு விழா இவ்வருடம் நியூ ஜெர்சி மாநிலத்தின் தலைநகரமான ட்ரெண்டன் நகரில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் ஆய்வாளர்கள், சினிமா பிரபலங்கள், இசைக்கலைஞர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அதோடு இளம் சிறார்களும் பெரியோரும் கலந்து கொள்ளும் வகையிலான போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

முதல் நாள் மாலை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழ் மரபு அறக்கட்டளை, கடந்த பதினாறு ஆண்டுகள் செய்து வரும் பணிகளையும் வரலாற்று பாதுகாப்பு என்பதன் அவசியத்தைப் பற்றியும் விவரித்துப் பேச எனக்கு நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. அதனை அடுத்து சனிக்கிழமை நடந்த இணை அமர்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று பாதுகாப்பு பணிகளைப் பற்றி இரண்டு மணி நேரம் விரிவாகப் பேசும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. கல்விமான்களும், தமிழார்வலர்களும் ஆர்வத்துடன் வந்து இந்த அமர்வில் கலந்து கொண்டனர். அதே போல இறுதி நாள் பொது அமர்விலும் சில நிமிடங்கள் வரலாற்றுச் சான்றுகளின் பாதுகாப்பை பற்றி பேசுவதற்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை எனக்கு வய்ப்பளித்திருந்தனர்.

தமிழ் மரபு அறக்கட்டளை பணிகளைப் பற்றி அறிந்து கொண்ட இளைஞர்களும் பெரியோரும் பாராட்டி வாழ்த்தியதோடு அவர்களில் சிலர் இவ்வகைப் பணிகளில் தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டனர். இது பொதுமக்களுக்கு தமிழ்ப் பண்பாடு மற்றும் மரபு சார் விசயங்கள்தொடர்பான ஆய்வுகளில் பெருகி வரும் ஆர்வத்தை நன்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்ச்சி தவிர தொடர்ந்து இரு தினங்களும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறள் மனனப் போட்டி, தமிழ்த்தேனீ , இலக்கிய கேள்வி வினா விடைப்போட்டி, கவியரங்கம் என பலதரப்பட்ட போட்டி நிகழ்வுகள் நடந்தன. இளையோரும் பெரியோரும் கலந்து தங்கள் தமிழ் மொழித்திறனை வெளிப்படுத்தி பரிசு பெற்றனர். வாஷிங்டன் தமிழ்ச்சங்கத்தினர் பறை இசை நடனத்தை வழங்கி வந்திருந்தோர் கவனத்தை ஈர்த்தனர். பறை இசையையும் நடனத்தையும் தகுந்த மதிப்பளிக்காமல் ஒதுக்கி தரம் தாழ்த்திப் பேசும் தமிழ் மக்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர் என்ற சூழலில் இந்தக் கலையை வாஷிங்டனில் பல்கலைக்கழகத்தில் நுண்கலை மையத்தில் ஒரு பாடமாக அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் இந்த அமைப்பைச் சார்ந்தோர். இது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் ஒரு விசயமல்லவா?

கண்களுக்கு விருந்தாகும் நடனம், காதுகளுக்கு இனிமை சேர்த்த இசை, அறிவுக்கு விருந்தாகும் உரைகள், மனதிற்கு அன்பைச் சேர்க்கும் இனிய நட்புகள், வயிற்றிற்கு விருந்தான சுவையான உணவு என அனைத்துமே முழு திருப்தி அளிக்கும் வகையில் இந்த ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் சில நாட்கள் சான் பிரான்ஸிஸ்கோ நகரிலும் சில நாட்கள் சிக்ககோவிலும், ஒரு நாள் பிலடெல்ஃபியாவிலும் இருந்து விட்டு ஜூலை 13ம் தேதி நான் ஜெர்னி திரும்பினேன்.

இத்தகைய ஒரு நிகழ்வைச் செய்வதற்கு தேவைப்படும் உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் மகத்தானது. இந்த ஆண்டு விழாவை வெற்றி விழாவாக ஆக்கிய வட அமெரிக்கத்தமிழ்ச் சங்கப் பேரவையின் அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!

Thursday, July 14, 2016

21.கூத்துக்கலை - புரிசை




சினிமா ​ஊடகம் மிகப் ​பிரபலமடைந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் பண்டைய கூத்துக்கலை​யானது ​மக்கள் மத்தியில் பிரபலம் குன்றித்தான் போய் விட்டது. ஆனாலும் கூட வழி வழியாக இக்கலையைப் பாதுகாத்து இக்கலை அழியாமல் கூத்துக்கலைப் பள்ளிகள் தமிழ​க​த்தில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.

கூத்துக்கலை என்பது ஒரு வகையான நாடகபாணி தான். இக்கலையில் ஈடுபடும் கலைஞர்கள் பொதுவாக அபார நடிப்புத் தி​ற ​மையுடன் பாடல் பாடக் கூடியவராகோ, நடன​ங்க​​ள் ஆடக்கூடியவராகவோ இ​சைக்​​ ​கருவிகளை வாசிக்கக் கூடியவர்களாகவோ இருப்பர். பொதுவாக தமிழக இலக்கிய உலகில் பிரபலமான புராணக் கதைகளும் இலக்கியங்களின் மையக் கதைகளும் கூத்துக்களில் பிரபலமாக இடம்பெறுவனவாக அமைகின்றன. பண்டைய கதைகளை பயன்படுத்துவதை விட்டு சமகால சமூ​க​ ​ விசயங்களை மையப்படுத்தி கூத்துக்கான கதைக்களத்தை அமைக்கும் கூத்துக் கலை பட்டறைகளும் தமிழகத்தில் இயங்குகின்றன. கூத்துக்கலயை பயிற்சி செய்வது, அதனை மேடைகளில் நடித்து மக்களை மகிழ்விப்பது என்பது மட்டுமன்றி அதனை ஆர்வமுள்ளோருக்கு பயிற்றுவிக்கும் பணியையும் கூத்துக்கலையை வளர்க்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இப்படி உள்ள ஒரு கூத்துக்கலை வளர்க்கும் பள்ளிக்குச் சென்று அங்கே​ ​ஒரு பதிவினைச் செய்ய வேண்டும் என்​ற​ முயற்சியில் ஈடுபட்ட போது மூன்று வெவ்வேறு வகையான கூத்துக்கலை ஆசிரியர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுகளுக்காக நான் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

அப்படி கூத்துக்கலையை இன்றும் தமிழகத்தில் வளர்த்து வரும் ஒரு பிரபலமான கலைஞர் தான் திரு.துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் அவர்கள்.

​தமிழகத்தின் ​திருவண்ணாமலை​யும் அதன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள கிராமங்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல சான்றுகளைக் கொண்டிருக்கும் வளமான ஒரு பகுதி. அங்கு ​ ​வரலாற்றுச் சான்றுகளை​​ பதிவுகள் செய்வதற்காக நண்பர்களுடன் ஒரு பயணம் மேற்கொண்டிருந்தேன். 2011ம் ஆண்டு அது. திருவண்ணாமலைக்கு அருகே இருக்கும் ஒரு சிற்றூர் புரிசை. புரிசை என்றாலே தமிழகத்தில் கூத்துக்கலைக்கு புகழ்பெற்ற ஒரு ஊர் என்பது பலரும் அறிந்த ஒரு விசயம் தான்.

புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களை பேட்டி செய்யும் வாய்ப்பு அமைந்தது. இவரைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதோடு இவரது பயிற்சிப் பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்று தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியை பார்த்துப் புகை​ப்பட​​ங்களும் எடுத்து வந்து அவற்றை ஒரு விரிவான பதிவாக தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் பதிவாக்கினேன். ​அப்பதிவினை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே http://www.tamilheritage.org/thfcms/ என்ற பக்கம் சென்று அதில் வரலாறு எனும் பகுதிக்குச் சென்று அதில் திருவண்ணாமலை எனும் பக்கத்தைத் திறந்தால் காணலாம். இப்பகுதியில் ஒலிப்பதிவு பேட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

​கண்ணப்ப தம்பிரான் கூத்துக்கலை பயிற்சிப்பள்ளி ​அழகிய எளிமையான முறையில் அமைந்த ஒரு குடில். ​ பள்ளி வளாகத்தின் உள்ளே ​கண்ணப்ப தம்பிரான் அவர்களின் பெரிய நிழற்படம் ஒன்று சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி செய்வதற்காக சில நாடக உபகரணங்களும் இந்தப் பள்ளியில் உள்ளன. இந்த குடிலுக்கு உள்ளே நுழைவதற்கு முன் வாசலின் இடது புறத்தில் இந்தப் பள்ளி திறந்து வைக்கப்பட்டதை ஒட்டிய தகவல் கல்லில் பதிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

​கூத்துக்கலையைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து அதனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுவதைப் பற்றி தெரிவித்ததும் ஒரு பேட்டியளிக்க சம்மதித்தனர்.

​தற்சமயம் இந்த ​புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின் தலைவராக இருப்பவர் ​​கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்கள். இவரது தலைமுறையில் இவர் ஐந்தாமவர். பரம்பரை பரம்பரையாக தெருக்கூத்து கலையை வளர்க்கும் கலைஞர்களின் பாரம்பரியத்தில் வருபவர். இவர் தந்தையார் திரு. கண்ணப்ப தம்பிரான் அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த பின்னர் இவர் இம்மன்றத்திற்குத் தலைமையேற்று இந்தக் கலையை தொடர்ந்து வளர்த்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த நான்கு வருடங்களாக ஒரு பயிற்சிப் பள்ளியை அமைத்து அதில் ஆர்வமுள்ளோருக்கு தெருக்கூத்து பயிற்சி வழங்கி வருகின்றார்.

வார இறுதி நாட்களில் தொடர்ந்து 15 வாரங்கள் என்ற வகையில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. சிறு குழந்தைகளுக்கான பயிற்சிகளும் அதில் இடம்பெறுகின்றன.

மஹாபாரதம் தவிர்த்து ராமாயணக் கதைகள், பாரதியின் பாஞ்சாலி சபதம், தெனாலி ராமன் கதைகள் போன்றவை தெருக்கூத்து கதைக்கருவாகப் பயன்படுத்தப்படுகின்றது.​ இந்தக் கூத்துக் கலைக் குழுவினர் கொலம்பியாவில் நடைபெற்ற ஐந்தாவது உலக நாடக மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். ப்ரான்ஸ், ஸ்வீடன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கே தெருக்கூத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றியிருக்கின்றனர். தமிழகத்தில் புரிசையில் மட்டுமன்றி சிங்கப்பூரிலும் தெருக்கூத்து பயிற்சியை நடத்திவருகின்றார்​ ​கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்கள்​.

துரைசாமி தம்பிரான் காலத்தில் தோல்பாவை ஆட்டமாக ஆரம்பித்த இந்தக் கலை பின்னர் தெருக்கூத்துக் கலையாக உருவெடுத்து மாற்றம் கண்டிருக்கின்றது. தற்சமயம் இக்கலை மக்களின் கவனத்தைப் பெற்று வளர்ந்து வருகின்றது என்றே இவர் குறிப்பிடுகின்றார்.

காலத்திற்கேற்றவாறு மாற்றங்களைப் புகுத்துவதோடு மக்கள் மத்தியில் இக்கலையைக் கொண்டு செல்ல உழைக்கும் இவரது முயற்சிகள் பாராட்டத்தக்கவை.​ சினிமா என்ற ஊடகம் எல்லாத் தரப்பு மக்களையும் ஈர்த்து விட்ட இக்காலச் சூழலில் கூத்துக்கலை போன்ற பண்டைய மகிழ்கலைகள் எதிர் நீச்சல் போட்டு சமாளிப்பதுதான் நிதர்சனம். அந்த வகையில் பல சிரமங்களுக்கிடையில் தான் இவ்வகை பள்ளிகள் தங்கள் முயற்சிகளைத் தொடர்கின்றன.

​கூத்துக்கலையைப் பற்றிய அடிப்படையை அறிந்து கொண்டவர்கள் இதன் சிறப்பினை மறுக்க முடியாது. விரிவாக இக்கலை மக்கள் மத்தியில் பிரபலமடையும் போது இக்கலை மேன்மேலும் வளர நல்ல வாய்ப்பு அமையும். மலேசிய சூழலில் கூத்துக்கலைக்கு இது காறும் வாய்ப்பு என்பது அமையாத சூழலே நிலவுகின்றது. கலைகளில் ஆர்வம் உள்ளோர் இத்தகையை கூத்துக்கலைப் பயிற்சிகளை மேற்கொண்டு மலேசிய சூழலில் இக்கலையை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும். மிக வளமிக்க கலை இது. இதன் புகழ் மங்காமல் வளர்க்க வேண்டிய பணி மலேசிய தமிழர்களுக்கும் உண்டு.​

Saturday, July 2, 2016

20. கட்டபொம்மன் - பாஞ்சாலங்குறிச்சி நாயகன்




தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று பதிவுகளைச் செய்வதற்காக தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு நான் கடந்த ஏறக்குறைய இருபது ஆண்டுகள் ஒவ்வொரு வருடமும் சென்று வருகின்றேன்.  2009ம் ஆண்டில் நெல்லைப் பகுதிக்கான என் பயணத்தில் பாஞ்சாலங்குறிச்சியும் இடம்பெற்றிருந்தது. பாஞ்சாலங்குறிச்சியின் நாயகன் நாம் எல்லோரும் நன்கறிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் அல்லவா? அவருக்கு அங்கே ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டிருப்பதாகவும் அதனை நேரில் சென்று பார்த்துப் பதிவு செய்து அச்செய்திகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் பதிய வேண்டுமே என்ற எண்ணம் ஏற்பட நெல்லை வட்டார நண்பர்கள் சிலருடன் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டேன்.

பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் நாம் ஐந்து வளைவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். முதலில் தெரிவது ஊமைத்துரை நுழைவாயில்.இதைக் கடந்து மேலும் சற்று தூரம் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இரண்டாவது நுழைவாயில் தென்படுகின்றது. இதற்குப் பெயர் வெள்ளையத்தேவர் நுழைவாயில். இதைக் கடந்து மேலும் சற்று தூரம் சென்ற பின்னர் நம்மை வரவேற்பது தானாபதிப் பிள்ளை தோரணவாயில். இதற்கு அடுத்தார் போல் சற்று தூரத்தில் அமைந்திருப்பது சுந்தரலிங்கம் தோரணவாயில். இதனைக் கடந்து மேலும் பயணித்தால் நம்மை வரவேற்பது வீரசக்கம்மாள் தோரணவாயில். இந்த ஐந்து தோரண நுழைவாயில்களையும் கடந்து செல்லும் போது சற்று தூரத்திலிருந்தே வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுக் கோட்டை தெரிகின்றது. முதற் பார்வையிலேயே நம் கவனத்தை ஈர்க்கும் அழகான ஒரு சிறு கோட்டையாக இதனைக் கட்டியுள்ளனர்.

எனது அந்தப் பயணத்தில், நான் திருநெல்வேலி புறப்படுவதற்கு முன் சென்னையில் இருந்த நாட்களில் இருமுறை தொல்லியல் ஆய்வு நிபுணர் முனைவர்.நாகசாமி அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முனைவர்.நாகசாமி அவர்கள் என்னிடம் தனது வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் தாம் நிகழ்த்திய அகழ்வாய்வு தொடர்பான ஆய்வு விபரங்களை இந்தச் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்து தூக்கிலிட்ட பிறகு அவர் கட்டிய மாளிகை ஆங்கிலேய அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதி பிறகு வெறும் மணல் மேடாகக் கிடந்தது. முனைவர்.நாகசாமி அவர்கள் தொல்லியல் துறை இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தான் முதன் முதலாக அகழ்வாராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட ஆய்வுப் பகுதி வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த இந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இருந்த இடம் தான்.

கட்டபொம்மன் வாழ்ந்த சமயத்தில் அவன் கட்டிய கோட்டை செங்கல்லால் கட்டப்பட்டது. அவன் அமர்ந்து ஆட்சி செய்த அரியணை பகுதிகளெல்லாம் அந்த மாளிகைப் பகுதிகளிலேயே இருந்திருந்ததையும் இவரது ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அமைச்சர்களும் அறிஞர்களும் அமர்ந்து ஆலோசனை செய்யும் இடங்களெல்லாம் இந்த ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த இடிபாடுகளுக்கிடையில் கிடைத்த பானை ஓடுகள், கண்ணாடி சீசாக்கள் முதலியனவற்றைச் சேகரித்து பாதுகாத்திருக்கின்றது இந்த ஆய்வுக் குழு.

சிதைக்கப்பட்ட அந்த இடம் அப்படியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் தான் இந்த அழகிய மணி பண்டபத்தை எழுப்பியிருக்கின்றார்கள்.

மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும் உடனே இருப்பது சித்திரக் கூடம். இதற்கு உள்ளே சென்றால் மேலும் ஒரு சிறிய கூடம் ஒன்று இருக்கின்றது. அதன் மையத்தில் மிகக் கம்பீரமான வடிவத்தில் வீர பாண்டிய கட்டபொம்மனின் சிலை ஒன்று பிரமாண்டமாக வடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றது. சித்திரக்கூடத்தில் பாஞ்சாலங்குறிச்சி நாயகனின் கதை சொல்லும் சித்திரங்கள் சுவர்களில் மிக அழகாகத் தீட்டப்பட்டு அதன் கீழே தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

கட்டபொம்மன் மூதாதையினர், இன்றைய ஆந்திர தேசத்து தெலுங்கு இன மக்கள். அவர்கள் நாயக்க மன்னர் காலத்தில் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டவர்கள். பாஞ்சாலங்குறிச்சியைத் தனது கோட்டைக்கான இடமாக கட்டபொம்மன் வம்சத்தினர் தேர்ந்தெடுத்தமைக்குப் பொதுவாக ஒரு கதை கூறுகின்றனர்.

ஒரு நாய் மிக வேகமாக ஒரு முயலை விரட்டிக் கொண்டு வருகின்றது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணை மிதித்ததும் அந்த முயல் திடீரென எதிர்த்துக் கொண்டு நாயை விரட்ட ஆரம்பித்திருக்கின்றது. இந்த மண்ணை மிதித்ததுமே இந்த முயலுக்கே வீரம் வந்திருக்கின்றதென்றால் இந்த இடத்தில் நாம் நமது கோட்டையை அமைத்தால் அதற்கு அர்த்தம் இருக்கும். நாம் வீரமாக ஆட்சி புரியலாம் என நினைத்து இந்த இடத்தில் கோட்டையை அமைத்தனராம் கட்டபொம்மன் மூதாதையினர்.
அவரது பாட்டனார் ஆட்சிப் பொறுப்பை வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அவரது 30வது வயதில் வழங்கியிருக்கின்றார். தனது பாட்டனார் பாஞ்சாலன் ஞாபகமாக இந்தப் பகுதிக்குப் பாஞ்சாலங்குறிச்சி என்று பெயர் சூட்டினாராம் கட்டபொம்மன்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தனது ஆட்சியின் போது ஆறு ஆண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு வரி கட்டாமலேயே இருந்திருக்கின்றார். இதனை அறிந்த ஆங்கிலேய அதிகாரி இவரிடம் வரி கட்டும் படி கோரி செய்தி அனுப்புகின்றார். வரி கட்ட முடியாது என்று தெரிவித்து கட்டபொம்மன் மறுக்கின்றார்.

ஜாக்சன் துரை என்பவர் 10.9.1790ல் தனது ஆட்களை அனுப்பி கட்டபொம்மனை அழைத்து வந்து கட்ட வேண்டிய பாக்கி வரியை கட்டாததன் காரணத்தை அறிய விசாரணை நடத்துகின்றார். இந்த விசாரணை நடைபெறும் போது கட்டபொம்மன் தந்திரமாக தனது வாளால் அவரைத் தாக்கி விட்டுத் தப்பித்து ஓடி விடுகின்றார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பித்துப் ஓடினாலும் இவரது கணக்குப்பிள்ளை தாணாபதிப்பிள்ளை பிடிபட்டு விடுகின்றார். இவரைப் பிடித்து ஆங்கில அரசாங்கம் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கின்றார்கள். கணக்குப்பிள்ளை பின்னர் விடுதலை செய்யப்படுகின்றார். கட்டபொம்மனும் அவரது மனைவியும் சில வீரர்களுடன் ஒட்டப்பிடாரத்துக்கு அருகில் சாலிகுளம் என்னும் இடத்தில் தங்கியிருக்கின்றார்கள். அப்போது அனைத்துப் பொறுப்பும் மந்திரி தானாபதி பிள்ளைக்குப் போய் சேர்கின்றது.
திருச்சியில் தன்னை சிறைபிடித்து வைத்ததை மனதில் வைத்து அதற்காகப் பழிவாங்க வேண்டும் என்றும் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான தபால் போக்குவரத்தைத் தடை செய்து விடுகின்றார் மந்திரி தானாபதிப்பிள்ளை.

எட்டயபுரம் ஜமீனோடு ஒப்பிடும் போது கட்டபொம்மனின் அரசாங்கம் சிறியதே. ஆக ஆங்கிலேயர்கள் எட்டயபுர ஜமீன் ஆதரவோடு கட்டபொம்மன் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர்.

கட்டபொம்மன் சிறந்த முருக பக்தர் என்றும் திருச்செந்தூரில் திருவிழா நடைபெறும் போது வீரர்களுடன் கோயிலுக்குச் சென்று விடுவார் என்றும் இங்குக் குறிப்புக்கள் உள்ளன. அந்த நேரத்தில் கோட்டையைத் தாக்கினால் கோட்டையைக் கைபற்றிவிடலாம் என்று ஆங்கில அரசு திட்டமிடுகின்றனர். 5.9.1799 அன்று பானர்மேன் என்ற ஒரு ஆங்கிலேய அதிகாரி தன் வீரர்களுடன் கோட்டைக்கு வருகின்றார். அந்தச் சமயம் கட்டபொம்மன் கோட்டையில் இல்லாத காரணத்தால் இந்தக் கோட்டையை இடித்து உடைத்து தரை மட்டமாக்கி விட்டுச் சென்று விடுகின்றனர்.

இப்படி தரை மட்டமாக்கிய பின்னர், மந்திரி தாணாபதிப்பிள்ளையின் ஆலோசனையைக் கேட்டு தம்பி ஊமைத்துரையையும் அழைத்துக் கொண்டு புதுக்கோட்டைக்குச் சென்று விடுகின்றார் கட்டபொம்மன்.
9.9.1799ல் கட்டபொம்மன் தனது இடத்தை விட்டு வேறு இடம் சென்று விட்டார் என்ற தகவல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குச் செல்கின்றது. கட்டபொம்மன் இல்லாததால் கோட்டைப்பகுதியை இடித்து உடைக்க உத்தரவிடுகின்றார்.

கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியிருக்கும் விஷயம் அறிந்த புதுக்கோட்டை மன்னர் விசயநகர தொண்டைமான் என்பவர் இந்தத் தகவலை ஆங்கிலேயர்களுக்குத் தெரிவிக்கின்றார். தகவல் கிடைத்த ஆங்கிலேயர்கள் அங்குச் சென்று கட்டபொம்மனை புதுக்கோட்டையில் கைது செய்து விடுகின்றார்கள். கைது செய்து அங்கிருந்து கட்டபொம்மனைக் கயத்தாறு கொண்டு செல்கின்றார்கள். அங்கு அவரை விசாரணை செய்கின்றார்கள். விசாரணையின் அடிப்படையில் 16.10.1799 அன்று அவரைப் புளியமரத்தில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட உத்தரவிடுகின்றார்கள்.

கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பின்னர் ஆங்கிலேய அரசு கட்டபொம்மனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பொது மக்களையும் சிறையில் அடைக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும் ஒருவர். இவர் சிறையிலிருந்து தப்பித்து பாஞ்சாலங்குறிச்சி வருகின்றார்.

திரும்பி வந்ததும் அங்குள்ள மக்களை ஒன்று திரட்டி மீண்டும் முதலில் கோட்டை இருந்த இடத்திலேயே ஒரு கோட்டையையும் கட்டி விடுகின்றார் ஊமைத்துரை. இந்தச் செய்தி ஆங்கிலேயர்களுக்கு எட்டுகின்றது. மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்கின்றது. ஊமைத்துரைக்குத் துணையாக இருந்து படைக்கு தலைவராக இருந்து போராடுகின்றார் வெள்ளயத்தேவன். ஊமைத்துரை கட்டிய கோட்டையைப் பீரங்கிகளை வைத்து ஆங்கிலேயர்கள் உடைத்து தரைமட்டமாக்கி விடுகின்றனர்.

இப்படி மீண்டும் மீண்டும் அழிவுக்கு உட்பட்ட கோட்டைப்பகுதி இன்று தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. கட்டபொம்மன் பெயர் சொல்லும் மண்டபமும் அவன் வழிபட்ட வீரஜக்கம்மா கோயிலும் அருகிலேயே இருக்கின்றன.

பாஞ்சாலங்குறிச்சியின் தவிர்க்க முடியாத நாயகன் வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைச் சிறப்பிக்கும் இந்த மணிமண்டபம் சிறப்பான ஒரு வரலாற்றுச் சின்னம் தான்!