Sunday, February 26, 2017

46.டெக்சாஸ் மாநிலத்தில் தமிழ் வளர்கின்றது




டெக்ஸாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரிலிருந்து ஸ்டுட்கார்ட் நகருக்குத் திரும்பி வரும் வழியில் விமானப்பயணத்தின்போது  இப்பதிவை எழுதுகின்றேன். இம்மாதம் 10ம் தேதி தொடங்கி ஒரு வார காலம் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரிலும் மற்றும் அதன் தலைநகரமான ஆஸ்டின் நகரிலும், மற்றுமொரு அழகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரான சான் அந்தோனியோவிலும் இருந்து, இப்பகுதிகளில் இயங்கும் அமைப்புக்கள், தமிழ்ப்பள்ளிகள் மற்றும்  தமிழ்ச்சங்கங்களின்  நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு வரலாற்றுப் பாதுகாப்புப் பணிகளைப் பற்றிய செய்திகளை இங்கே வாழ்கின்ற தமிழ் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நல்லதொரு  வாய்ப்பாகவும் இது எனக்கு அமைந்தது.

கடந்த பத்து ஆண்டுகளாகத் திருக்குறள் போட்டிகளை நடத்தி, விரிவான வகையில் தமிழ் குழந்தைகளுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தும் பணியை டல்லாஸ் நகரில் இயங்கும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை செய்து வருகின்றது. கடந்த ஆண்டு, அதாவது 2016 ஜூலை மாதம் நான் நியூ ஜெர்ஸி நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்து நடத்திய ஆண்டு நிகழ்வில்  உரையாற்றும் வாய்ப்பு அமைந்த போது, இந்த சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர்களாகிய திரு.வேலு, திருமதி.விசாலாட்சி வேலு ஆகிய இருவருடனும் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இந்த ஆண்டு இந்த அமைப்பின் பத்தாவது ஆண்டு விழா நடைபெற உள்ளதாகவும் அதில் சிறப்பு விருந்தினராக  நான்  கலந்து கொள்ளவேண்டும் என்றும் என்னை இவர்கள் இந்த நிகழ்விற்காக அழைத்திருந்தனர்.

ஜனவரி 28ம் தேதி அன்று திருக்குறள் மனனப் போட்டி, திருக்குறள் கட்டுரை எழுதும் போட்டி ஆகியன நடத்தப்பட்டு ஏறக்குறைய இந்த நிகழ்விற்காக 8600 முறை திருக்குறள் ஓதப்பட்டுள்ளது என்பதை அறிந்த போது வியக்காமல் இருக்க முடியவில்லை.  11.2.2017 அன்று  காலை தொடங்கி நான்கு படி நிலைகளில் திருக்குறள் பேச்சுப் போட்டி நடைபெற்றது. பின்னர் திருக்குறளின் பொருள் விளக்கமாக   பொருட்காட்சி போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெற்றோரின் துணையுடன் குழந்தைகள் இக்காட்சிப் பொருட்களை ஏற்பாடு செய்திருந்தாலும், மிக அழகாக தாங்கள் கற்ற குறளையும் அதனைத் தாங்கள் எவ்வாறு பொருளுடன் புரிந்து கொண்டு விளக்க முடியும் என்றும் நிகழ்த்திக் காட்டினர்.

குழந்தைகளில் பெரும்பாலோர் தட்டுத்தடுமாறி தமிழில் பேசினாலும், திருக்குறளைத் தமிழிலேயே எழுதி வாசித்ததைப் பார்த்தபோது நான் உண்மையில் மனம் மகிழ்ந்தேன். அதுமட்டுமன்றி அக்குறளின் பொருளைத் தக்க உதாரணங்களோடு அவர்கள் விளக்கும் போது எவ்வகையில் திருக்குறளைப் பற்றிய அவர்களது புரிதல்  இருக்கின்றது என்பதனையும் என்னால் அறிய முடிந்தது. பொருளுணர்ந்து சொல்வது தானே பயன். இதனை சாஸ்தா அறக்கட்டளைச் சாதித்துக் காட்டியிருக்கின்றது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

இந்தப் போட்டிகளுக்குப் பின்னர் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கத்தில், மூன்று சொற்பொழிவாளர்களின் உரைகள் நிகழ்ந்தன. பெரும்பாலும் பெரியோர்கள் வந்து கலந்து கேட்டு பங்கெடுத்துக்கொண்டனர் . இந்த கருத்தரங்கில் கலிபோர்னியாவைச் சேர்ந்த திரு.நா.உதயபாஸ்கரன், ஹூஸ்டனைச் சேர்ந்த திரு.கரு.மலர்ச்செல்வன் ஆகியோருடன் எனது சொற்பொழிவும் இடம்பெற்றது.

எனது உரையில் திருக்குறளின் ஐரோப்பிய மொழிகளிலான மொழிபெயர்ப்புக்கள் பற்றிய தகவல்களைக் காட்சிப்படங்களுடன் விளக்கமளித்தேன். எனது உரைக்குப் பின்னர் எழுந்த கேள்விகளும், கருத்துக்களும் வந்திருந்தோர் இத்தகவல்களை மிகுந்த ஆர்வத்துடன் உள்வாங்கிகொண்டிருப்பதை எனக்குப் புலப்படுத்தியது. இது எனக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் நான் டெக்ஸாஸ் மானிலத்தில் இருந்த  ஒரு வார காலத்தில் இங்கு தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழிக்காக எடுக்கப்படுகின்ற முயற்சிகளைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ப்ளேனோ தமிழ்ப்பள்ளி, மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளின் அமைப்பாளர்களுடன் உரையாடியபோது அவர்கள் தொடர்ச்சியாக தமிழ்ப்பள்ளிகளைத்  தொய்வின்றி வாரா வாரம் நடத்தி வருவதைப்பற்றியும், குழந்தைகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் பற்றியும், பயன்படுத்தப்படும் பாட நூற்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது.

ஆஸ்டின், சான் அந்தோனியோ ஆகிய பகுதிகளில் அங்கு இயங்கும் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்ச்சங்கங்கள் என்னை சொற்பொழிவாற்ற அழைத்திருந்தன. அந்த  சந்தர்ப்பங்களில் இப்பள்ளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் சில தகவல்களைப் பெற முடிந்தது.

வட அமெரிக்காவைப் பொருத்தவரையில் பொதுவாகவே இங்கே தமிழ்ப்பள்ளிகளைத் தமிழகத்திலிருந்து இங்கு தொழிலுக்காக வந்து  இங்கேயே தங்கி விட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்னெடுத்து நடத்துகின்றனர். இப்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிவோர் தன்னார்வலர்களாக தம்மை இப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் பெற்றோர்களே. ஒருங்கிணைக்கப்பட்ட பாட நூற்கள் என்ற வகையிலான முயற்சிகள் தொடர்கின்றன என்ற போதிலும் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் ஏதாவது ஒரு வகையில் சிறப்பான முயற்சிகளை முன்னெடுத்துச் செயல்படுகின்றன. இந்த முயற்சிகளில் தன்னார்வலர்களாகச் செயல்படும் பெற்றோர்களின் பங்கு வியக்கத்தக்கதாயிருக்கின்றது.

மிகுந்த அர்ப்பணிப்புத் தண்மையுடன் சில பெற்றோர்கள் செயல்படுகின்றனர். தம் பிள்ளைகள் மட்டுமல்லாது ஏனைய குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் பயன்படும் வகையில் நடமாடும் நூலகத்தைச் சிலர் நடத்துகின்றனர். சிலர் வாரம் ஒரு வாசிப்பு பகுதி என தேர்ந்தெடுத்து அவற்றை வாட்ஸப் தொடர்பு சாதனம் வழி பகிர்கின்றனர். சிலர் திருக்குறள் விளக்கங்களை வாட்ஸப் செய்திப்பகிர்வாக தமக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.

தன்னார்வலர்கள் முயற்சிதான் என்ற போதிலும் அதில் கட்டுக்கோப்பும், பொறுப்புணர்ச்சியும் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர்களாகப் பலர் செயல்படுகின்றனர். அயல் நாட்டிற்கு, அதிலும் அமெரிக்கா என்ற பொருளாதார வளர்ச்சியும் பலமும்  பெற்ற நாட்டிற்கு தாங்கள் புலம்பெயர்ந்து விட்ட போதிலும், தமிழ் மொழி தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என்ற முனைப்புடன் இவர்கள் செயல்படுகின்றனர். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ஈடுபாடு அல்லது பெற்றோருக்கு மட்டும்தான் ஈடுபாடு என்ற நிலை அன்றி குழந்தைகளும் இவ்வகை நடவடிக்கைகளில் முழு மனதுடன் ஈடுபடும் அழகான அனுபவத்தை இங்கே நேரில் கண்டு மகிழ்ந்தேன். அத்தகைய அழகிய குடும்பம் தான் நண்பர் விசாலாட்சி வேலு தம்பதியரின் குடும்பமும். தங்கள் பெற்றோரின் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை மற்றும் அவர்கள் மேற்பார்வையில் இயங்கும் ப்ளேனோ தமிழ்ப்பள்ளி ஆகியற்றில் இவர்களது இரு குழந்தைகளான ரம்யா, ராமு ஆகிய இருவரின் ஈடுபாடும் முழுமையாக இருக்கின்றது. இப்படி மேலும் சில குடும்பங்களையும் காணும் வாய்ப்பு கிட்டிய போது நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற முதுமொழி நினைவில் எழுந்தது.

திருக்குறள் மனனப் போட்டியில் இந்த ஆண்டு 1330 குறளையும் ஒப்புவித்து சிறப்பு பரிசினைத்தட்டிச் சென்ற செல்வி சீதா அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த குழந்தை என்பது சொன்னால் தான் நமக்குத் தெரியும். மிகச் சரளமாகத் தமிழில் உரையாடவும், மேடையில் பேசவும் திறமைப்பெற்ற இப்பெண்ணிற்கு அவள் தமிழ் மொழி வளர்ச்சியில் மிக உறுதுணையாக இருந்து வரும் அவளது பெற்றோர்கள் சாந்தி, பாலாஜி தம்பதியர் பாராட்டுதலுக்குறியோர். இப்படி தங்கள் குழந்தைகளின் தமிழ் மொழிக்கல்விக்காகச் செயல்படும் பெற்றோரைச் சந்திக்கும் போது அயல் நாட்டிற்குச் சென்றாலும் தமிழை அவர்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார்கள்  என்ற நம்பிக்கை உரம் பெறுகின்றது.

வட அமெரிக்காவில் இயங்கக்கூடிய தமிழ்ப்பள்ளிகள் மட்டுமன்றி ஐரோப்பா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளிலும் தமிழ்ப்பள்ளிகளில் நடத்தப்படுகின்ற பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு தொடர்பான செய்திகளை உட்புகுத்த வேண்டியது மிக அவசியம். சான் ஆஸ்டின் தமிழ்ப்பள்ளியும் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய எனது சொற்பொழிவு நிகழ்வில் இந்தச் செய்தியை நான் முன்வைத்து உரையாற்றினேன்.

தமிழ் எழுதவும் வாசிக்கவும் படிக்கும் குழந்தைகள் தமிழர் வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில் செய்திகள் பாடத்திட்டங்களில் அமைய வேண்டும். உதாரணமாக தமிழ் மொழியின் எழுத்தின் ஆரம்பகால வடிவங்களான தமிழி எழுத்துக்கள், வட்டெழுத்துக்கள் ஆகியன பற்றியும் அவை படிப்படியாக இக்காலத்தில் நாம் அறியக்கூடிய வகையில் அமைந்திருக்கும் தமிழ் எழுத்து வடிவம் பற்றியும் சிறிய அறிமுகத்தை உயர் படிநிலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். அத்தோடு, தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்த ஆரம்பகால அச்சுப்பதிப்பு முயற்சிகள் பற்றி விவரித்து எவ்வகையில் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் நூல்கள் படிப்படியாக அச்சு வடிவம் பெற்றன என்ற தகவல்களையும் பாடத்திட்டங்களில் ஓரளவு புகுத்தலாம். தமிழ் மண்ணில் ஆட்சி செலுத்திய பாண்டிய, சேர, சோழ, பல்லவ மன்னர்களின் ஆட்சி பற்றியும், கட்டப்பட்ட கோயில்களைப் பற்றியும் சுவாரசியமான சிறிய கதைகளை உருவாக்கி அவற்றைப் பாடத்திட்டத்தில் இணைக்கலாம். சங்கப் பாடல்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து   அக்காலத்தில்  தமிழகத்துடன் ரோமானிய, கிரேக்க யவனர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்புகள் பற்றியும் அக்காலத்தில் புகழுடன் இயங்கிய கடற்கரை துறைமுகப்பட்டினங்கள் பற்றியும் தமிழர்களின் பண்டைய கடல் மார்க்கப் பயணங்கள் பற்றியுமான செய்திகளைத் தங்கள் பாடத்திட்டத்தில் இணைக்க முயற்சி எடுக்கலாம்.

தமிழ் மொழியை மட்டும் கற்கும் இளையோர் ஓரளவு பேசும் திறனைத் தக்க வைத்துக் கொள்வர். ஆனால், தமிழ் மொழியோடு தமிழர் வரலாற்றையும் சேர்த்தே கற்கும் குழந்தைகள் தமிழ் மொழி அறிந்தவர்களாகவும் தமிழ் உணர்வு நிறைந்தவர்களாகவும் வளர்வார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற கூற்று இன்று பொய்யாகிவிட்டது. உலகின் பல நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களில் குறிப்பிடத்தக்கோர் மேற்கொள்கின்ற சீரிய முயற்சிகளால் தமிழ் அழகாக வளர்ந்து  விரிவான வளர்ச்சியைக் கண்டு வருவதை எனது பல நாடுகளுக்கானப் பயணங்களின் போது நான் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களின் வழி அறிகின்றேன்.

டெக்ஸாஸ் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் வழியாக  அடுத்த  தலைமுறைக்குத்  தமிழ் மொழியை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தன்னார்வலர்களையும் பாராட்டி வாழ்த்துவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கின்றோம். தங்கள் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாற்றுச் செய்திகளை இணைக்க விரும்பும் தமிழ்ப்பள்ளிகள், எமது தமிழ் மரபு அறக்கட்டளையின்  முகநூல் பக்கமான Tamil Heritage Foundation, மற்றும் Subashini THF வழியாகத் தயக்கமின்றி தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் மொழியும் தமிழர் வரலாறும் நம் இரு கண்கள்!!

Wednesday, February 15, 2017

45. உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் மலேசியக் கிளை



மலேசியாவிற்கு வந்து சில வாரங்கள் அங்கிருந்து இப்போது மீண்டும் ஜெர்மனி திரும்பி விட்டேன். 2016ம் ஆண்டு தமிழகத்திற்கு களப்பணிக்காகச் செல்வதற்கு முன்னர் ஆறு நாட்கள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் வந்து அங்கு சில நாட்கள் தங்கி தமிழ் மரபு அறக்கட்டளையின் மலேசியக் கிளைக்கான சில பணிகளைச் செய்து விட்டு பின்னர் தமிழகம் புறப்படுவதாக நான் திட்டமிருந்தபடியால், டிசம்பர் 1ம் தேதி ஸ்டுட்கார்ட்டிலிருந்து புறப்பட்டு டிசம்பர் 2ம் தேதி காலையில் கோலாலம்பூர் வந்தடைந்தேன். நண்பர்கள் சந்திப்புடன் மலேசிய உணவுகளைச் சுவைப்பதே அலாதியான மகிழ்ச்சிதானே. அந்த வகையில் முதல் சில நாட்கள் மிக இனிமையானதாக எனக்குக் கழிந்தன.

நான் கோலாலம்பூரில் இருந்த அந்தக் குறுகியகால இடைவெளியில் நான் துணைப்பொதுச்செயலாளராக அங்கம் வகிக்கும் உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் ஒரு சந்திப்பு நிகழ்வினைச் செய்வது நன்மை பயக்கும் என்ற எண்ணத்தில் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். கடந்த ஆண்டு புதிய நிர்வாகம் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் செய்யப்படும் ஒரு சொற்பொழிவு நிகழ்வாக இதனை அமைக்கலாம் என இயக்கத்தின் தலைவர் திரு.ப.கு.சண்முகம் அவர்களும் அவரைச் சார்ந்த மலேசியக் கிளையின் குழுவினரும் ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். அதன் பலனாக, குறுகிய கால இடைவெளியில் டிசம்பர் ஆறாம் தேதி கிள்ளான் நகரில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியை ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் எனது உரை மைய நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் வரவேற்புரைக்குப் பின்னர் நிகழ்ச்சியைத் தலைமை ஏற்றுச் சிற்றுரை ஆற்றினார் செந்தமிழ்ச்செல்வர் திரு.ஓம்ஸ் தியாகராஜன் அவர்கள்.

2016ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது டென்மார்க் நகரின் தலைநகரான கோப்பன்ஹாகனில் உள்ள அரச நூலகத்தில் இருக்கும் தமிழ் ஓலைச்சுவடிகளின் மின்னாக்கப்பணி. 2016 மே மாதத்தில் ஐந்து நாட்கள் பயணமாக நான் சென்றிருந்த வேளையில், இந்த அரச நூலகத்தில் உள்ள முப்பத்தெட்டு ஓலைச்சுவடி நூல்களை, அதாவது, ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஓலைகளை மின்னாக்கம் செய்திருந்தேன். இவை தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஓலைச்சுவடிகளில் அடங்குவன. காரணம், இந்த ஓலைச்சுவடிகள், 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு லூத்தரன் கிறித்துவ மத போதகர்களாகச் சென்ற ஜெர்மானிய பாதிரிமார்கள் அங்கேயே தமிழ் மொழியைக் கற்று ஓலைச்சுவடியில் எழுதவும் கற்றுக் கொண்டு தங்கள் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி நூல்களும் குறிப்புக்களுமாகும்.

இந்த விபரங்களை விளக்கும் வகையில் இந்த ஓலைச்சுவடிகள் பற்றியும், அவை எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது பற்றியும், பின்னர் இவை எவ்வாறு இந்த அரச நூலகத்தில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன போன்ற செய்திகளையும் இந்த நிகழ்வில் வந்து கலந்து கொண்ட பார்வையாளர்களிடம் குறிப்பிட்டுப் பேசினேன். கோப்பான்ஹாகன் அரச நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் அனைத்தும் டென்மார்க் அரசிடம் ஜெர்மானிய மதபோதகர்களாக தமிழகத்தின் தரங்கம்பாடிக்குப் பணியாற்ற வந்த ஜெர்மானிய பாதிரிமார்கள், மற்றும் அவர்களது உதவியாளர்களாகப் பணியாற்றிய சிலர் கைப்பட எழுதியவையாகும். அவற்றுடன் தங்கள் பணிக்காலத்தில் இவர்கள் உள்ளூர் மக்களிடம் சேகரித்த சில சுவடி நூல்களும் இந்தச் சேகரிப்பில் அடங்கும். இந்தச் சுவடி நூல்கள் அனைத்துமே மிகக்கவனமாகத் தூய்மை செய்யப்பட்டு நூல் கட்டப்பட்டு வெள்ளைத்துணியினால் சுற்றப்பட்டு ஒரு காகிதப்பெட்டிக்குள் தனித்தனியாக வைக்கப்பட்டுச் சரியாக பெயர் ஒட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காணும் போது அவை அங்கே அந்த நூலகத்தில் பாதுகாக்கப்படும் முறைக்காக அவர்களைப் பாராட்டியது பற்றியும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களிடம் பகிந்து கொண்டேன்.

ஏறக்குறைய நூற்று இருபது பேர் இந்த நிகழ்வில் வந்து கலந்து சிறப்பித்தமை கிள்ளான் வாழ் மக்களில் பலருக்கு தமிழ் ஆய்வு தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வம் இருப்பதைக் காட்டுவதாக அமைந்தது. எனது உரைக்குப் பின்னர் பல கேள்விகள் எழுந்தன. அவற்றிற்குப் பதில் சொல்லும் வகையில் எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டேன். நல்ல பல செய்திகளை வந்திருந்தோரிடம் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியும் மன நிறைவும் எனக்கு ஏற்பட்டிருந்தது. இதனை என்னுடன் இணைந்து செயல்படுத்திய உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகத்தின் மலேசியக் கிளையின் பொறுப்பாளர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து பாராட்டுவது அவசியமே!

உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் ஏறக்குறைய நாற்பத்து இரண்டு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு இயக்கம். தமிழர் பண்பாட்டுக் கூறுகளை மையப்படுத்தும் வகையில் சீரிய நற்பணிகளைச் செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகு தழுவிய ஒரு மாபெரும் இயக்கம் இது. இடைப்பட்ட காலத்தில் நிர்வாகக் கோளாறுகள் சிலவற்றினால் நடவடிக்கைகள் ஏதும் செய்யப்படாமல் இருந்த சூழலில், கடந்த 2015ம் ஆண்டு புதிய செயலைவைக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, மலேசியாவைச் சேர்ந்த திரு.ப.கு சண்முகம் அவர்களைத் தலைவராகக் கொண்டும் டென்மார்க்கைச் சேர்ந்த திரு.தருமகுலசிங்கம் அவர்களைச் செயலாளராகக் கொண்டும் இந்த இயக்கம் இப்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்கியுள்ளது.

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கமானது உலகின் பல நாடுகளில் கிளைகளை அமைத்து தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சார விழுமியங்களை விரிவாக்கும் முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்றி வருகின்றது. தமிழ் மக்கள் வாழ்கின்ற ஒவ்வொரு நாடுகளிலும் அம்மக்களின் நிலைக்கேற்ற வகையில் இம்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மலேசிய சூழலில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்கச் சமுதாய நலனைக் குறிக்கோளாகக் கொண்ட பல நிகழ்ச்சிகளைக் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது. சர்வதேச கருத்தரங்கங்கள், பொங்கல் திருவிழா நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் மொழியின் சிறப்பினை வலியுறுத்தும் சந்திப்புக்கள், மலேசிய மண்ணில் தமிழ்ப்பணியாற்றிய தமிழ்ச் சான்றோர்களுக்கு சிறப்புச் செய்தல் என்ற வகையில் பல நடவடிக்கைகள் இந்த இயக்கத்தால் கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டமை நினைவு கூர்தல் அவசியம்.

மலேசியா மலாய், சீன, இந்தியர்கள் என்ற மூன்று பெரிய இனங்கள் கூடி வாழும் ஒரு நாடு. இங்கு மலாய் மற்றும் சீன இனித்தவர்களோடு சகோதரத்துவத்துடன் பழகும் தமிழ் மக்கள் அதே வேளையில் தமது தமிழ் இனத்தின் பண்பாட்டு கலை கலாச்சார விழுமியங்களை மறக்காதும் ஒதுக்காதும் தக்க வைத்துப் போற்றி வளர்த்து வருகின்றனர். இந்த முயற்சியில் மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை, ஒதுக்கப்பட முடியாதவை.

தமிழ் மொழி கல்வியை, மலேசியாவில் பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் பெறுகின்ற வாய்ப்பு என்பது அமைந்திருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறிதான். ஓரளவு கல்வி கற்று நிலையான தொழிலுக்கு வந்து விட்ட பெரும்பாலோர் தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை. தமிழ்ப்பள்ளிக்குத் தங்கள் குழந்தைகள் கல்வி கற்கச் செல்வதைச் சமூக அந்தஸ்து பாதிக்கும் ஒரு விசயமாகக் கருதி தேசிய ஆரம்பப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்கள் பெருகிக் கொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம், சமூகத்தில் தமிழ் இளைஞர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் நம் கண் முன்னே நிற்கின்றன. இளம் வயதிலேயே தகாத போதைப்பழக்கம், குண்டர் கும்பலில் தம்மை இணைத்துக் கொள்வது என்பது போன்ற தகாத நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளும் இளம் தலைமுறையினரின் நிலை பரிதாபகரமானது. இது ஒரு புறமிருக்க படிப்படியாக வளர்ந்து வரும் நாகரிக மோகத்தில் தமிழர் பண்பாட்டு இசை, நடனம், கூத்து ஆகியக் கலைகள் மைய நீரோட்டத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு உயர் கலைகள் என வர்ணிக்கப்படும் கர்நாடக சங்கீதமும், பரதமும், காப்பிய நாடகங்கள் மட்டுமே தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளில் மைய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. தமிழர் பாரம்பரிய நடனக்கலைகளான ஒயிலாட்டம், பறையிசை, கும்மி, கோலாட்டம், கரகாட்டம், கூத்து ஆகியன பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டுவிட்ட நிலையைப் பெருவாரியாக மலேசியச் சூழலில் காண்கின்றோம்.

ஆக, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மலேசியக் கிளை, மலேசிய சூழலில் தமிழ் மொழி, தமிழர் கலை பண்பாட்டு அம்சங்கள் ஆகியவை புத்துணர்ச்சி பெற்றுப் பொலிவுடன் மீண்டும் மக்கள் மத்தியில் வலம் வரத் தீவிர முயற்சிகள் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. இப்போது அமைந்திருக்கின்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் புதிய செலவைக் குழுவினர் ஒவ்வொருவருமே நீண்ட கால அனுபவமும் தமிழ் மக்களுக்குத் தொண்டாற்ற தீவிர ஆர்வமும் முனைப்பும் கொண்டவர்கள் என்பதோடு இந்த அமைப்பை முன்னெடுத்துச் செல்லக் கூடிய தகுந்த தகுதி கொண்டவர்களாக இருப்பது கூடுதல் பலமாக அமைகின்றது. மலேசிய சூழலில் தமிழ் மற்றும் கலாச்சாரப்பணி என்பதோடு உலகளாவிய அளவில் ஏனைய நாடுகளில் அமைந்திருக்கும் அமைப்புக்கள் வளர்வதற்கு உதவிக்கரம் நீட்டி மேலும் உலகளாவிய அளவில் உலகத் தமிழ்ப்பண்பாடு இயக்கத்தினை வளர்த்திட மலேசியக் கிளையினால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

தமிழால் ஒன்றிணைவோம்!

Wednesday, February 1, 2017

44. தூத்துக்குடி – கடலும் வாழ்வும்



தூத்துக்குடி பல வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்த ஒரு மாவட்டம். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அருகாமையில் இருந்தாலும் கூட, இந்த ஊரின் நில அமைப்பு இதற்கென்று சில தனித்துவமான தன்மையை வழங்கியிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.  2009ம் ஆண்டில் இரண்டு நாட்கள் பயணமாக தூத்துக்குடிக்கு நான் சென்றிருந்தேன். அச்சமயம் கடலோர மக்களின் தொழிலான உப்பு தயாரிப்பு பற்றி சில தகவல்களை நான் சேகரிக்க முடிந்தது. அதனைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக வெளியிட்டிருந்தேன். தூத்துக்குடியின் வரலாற்றுச் சின்னங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழும் பனிமயமாதா  திருக்கோயிலுக்கும் சென்று அந்தக்கோயிலின் சமய குருவை பேட்டி செய்து  தூத்துக்குடி பரதவர்கள் பற்றிய சில கட்டுரைகளைச் சேகரித்து அவற்றையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கட்டுரைகள் தொகுப்பு பகுதியான மரபு விக்கியில் இணைத்து வெளியிட்டோம். இவை விரிவான பல தகவல்களை ஆய்வு மாணவர்களுக்கு வழங்கும் கட்டுரைகளாகத் திகழ்கின்றன.

கடந்த ஆண்டு, 2016 டிசம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு நான் களப்பணிக்காகச் செல்ல திட்டமிட்டபோது என் பட்டியலில் தூத்துக்குடியின் பெயரையும் இணைத்திருந்தேன்.  கடல் சார்ந்த தொழில் என்பதுவும் நெசவுத் தொழிலும் தூத்துக்குடியின் பண்டைய தொழில்களில் மிக முக்கியம் பெருபவை. இந்த இரு வேறு தொழில்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சேகரிப்பது எனது நோக்கங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.

தூத்துக்குடி துறைமுகம் அயல்நாட்டவர்களுக்குப் பல ஆண்டுகளாக வணிகத்திற்கான மிக முக்கியப் பகுதியாக விளங்கியிருக்கின்றது. இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டே இப்பகுதிகளில் அயல்நாட்டாரின் கடல் வணிகம் தொடர்பான போக்குவரத்துக்கள் மற்றும் அதனை உறுதி செய்யும் வகையிலான இம்மாவட்டத்தில் உள்ள ஊர்களில் நிகழ்ந்த தொல்லியல் அகழ்வாய்வுகள் இக்கருத்துக்கு நல்ல சான்றுகளைத் தருகின்றன. இன்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்டால், இப்பகுதி அரேபிய மூர் இனத்தவரால் மிக விரும்பப்பட்ட ஒரு வணிகத்தலமாக விளங்கியமையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இக்காலகட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து தென் இந்தியாவிற்கு வாணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்களின் வருகை   தமிழக வரலாற்றில் மிக முக்கிய தாக்கத்தை  படிப்படியாக ஏற்படுத்தியது.  தூத்துக்குடியில் கடலில் மூழ்கி எடுக்கப்பட்ட முத்துக்களும் சங்குகளும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பணம் படைத்தோரால் விரும்பி வாங்கப்பட்டன. தென் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட மிளகு ஏலக்காய் போன்றவைகளும் ஐரோப்பாவில் மக்களின் உணவில் படிப்படியாக இடம் பிடிக்க ஆரம்பித்ததன் விளைவாக ஐரோப்பியர்கள் பெருமளவில் தமிழகத்திற்கு, அதிலும் குறிப்பாக கடற்கரை துறைமுகப்பட்டனமான தூத்துக்குடிக்கு வருவது முக்கியமாக கருதப்பட்டது.

அப்படி வருகை தந்த போர்த்துக்கீசியர்கள், உள்ளூர் பரதவ சமூக மக்களோடு இணைந்த வகையில் வணிகத்தில் ஈடுபட்டதோடு கத்தோலிக்க மதப்பிரச்சாரம் செய்து உள்ளூர் மக்களை தாங்கள் கொண்டு வந்த புதிய மதத்திற்கு மதமாற்றம் செய்த நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெறுகின்றன. அக்காலத்தில் ஏற்பட்டிருந்த  அரசியல் மாற்றமும், பலமிழந்த உள்ளூர் ஆளுமைகளும், சமூக நிலையும் இவ்வகை நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைந்தன. படிப்படியாக மதமாற்றம் செய்யப்பட்ட உள்ளூர் தமிழ் மக்களில் பலர் ஐரோப்பாவிலிருந்து கத்தோலிக்க  சமயத்தை ஏற்றுக் கொண்டனர். அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கிருத்துவ இயக்கங்கள் பல ஐரோப்பாவின் முக்கிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வந்ததன் விளைவாக இப்பகுதியில்  படிப்படியாக மதமாற்றம் என்பது நிகழ்ந்தது என்பதோடு அது சமூகத்தளத்தில் விரிவான முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்தியது.

அத்தகைய மாற்றங்களில் மிக முக்கியமானதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதக்கூடியதாகவும் அமைந்தது அக்கால கல்வி நிலை.  ஒரு சில சமூகத்திற்கு மட்டுமே கல்வி என்ற நிலை மாறி அனைவருக்கும் கல்வி என்ற ஒரு சமூக மாற்றம் இந்த வேளையில் நிகழ்ந்தது.  இந்த முயற்சியைத்  தூத்துக்குடியில் தம்மை நிலை நிறுத்திக் கொண்ட கிருத்துவ சமய அமைப்புக்கள் முன்னெடுத்தன.  இதற்கு ஒரு உதாரணமாக ஜி.யூ.போப் அவர்களது முயற்சிகளையும் அவர் பெயரில் இன்றும் இருக்கின்ற ஜி.யூ போப் உயர் நிலைப்பள்ளியைக் குறிப்பிடலாம்.

ஆரம்ப நிலைக்கல்வி, உயர் நிலைக்கல்வி என்பதோடு கல்லூரிகளை அமைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வெற்றி கண்டன இந்த கிறித்துவ சமய இயக்கங்கள். பொருளாதார ரீதியாக பெரிய மாற்றத்தை அளிக்கவில்லை என்ற போதிலும் கல்வி வாய்ப்பு கிட்டியமையால் அதனால் பலனடைந்து உயர்கல்வி கற்று தூத்துக்குடியின் குக்கிராமங்களிலிருந்து பெயர்ந்து நகரங்களுக்கு சென்றடைந்து அங்கு அரசு மற்றும் தனியார் துறையில் பணி புரியச் சென்றோர் பலர் உள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.

தூத்துக்குடியின் பண்டைய தொழில்களான முத்துக் குளித்தல் என்பது பரவலாக இன்று வழக்கில் இல்லை. கடலோர மீனவ மக்கள் மீன் பிடித்தலையும் சங்கு குளித்தலையும்தான் முக்கிய தொழில்களாகச் செய்து வருகின்றனர்.   மீனவர்களுக்கு இன்று பெரும் சவாலாக இருப்பது இலங்கை கடற்படையினர் வழியாக அவர்கள் சந்திக்கும் அபாயங்கள் எனலாம்.  தூரக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் நலமுடன் திரும்பி வருவார்களா என்பது தினம் தினம் ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் இருக்கின்ற சந்தேகமும் அச்சமும் தான்.

சங்கு குளித்தல் தொழிலை எடுத்துக் கொண்டால் பொதுவாக இத்தொழிலைச் செய்வோர் தூரக்கடலுக்குச் செல்வதில்லை. கடலின் உள்ளே பாய்ந்து தரை மட்டம் வரை சென்று மண்ணைக் கிளறி முத்தெடுக்கும் தொழில் மிகச் சிரமமானது. சங்கு குளிக்கும் ஒருவர் ஆழ்கடலில் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் இருக்கின்றார்.  படகிலிருந்து ஒரு குழாய் வழியாக வழங்கப்படுகின்ற ஆக்சிஜன் காற்றினை மூக்கில் சுவாசக்கருவியுடன் பொருத்திக் கொண்டு, ஒரு கையால் மண்ணைக் கிளரும் கருவியைக் கொண்டு ஆழ்கடல் மண்ணைக் கிளறுவதும் இன்னொரு கையால் தான் நிலையாக நிற்பதற்காக ஒரு நீண்ட இரும்புக் கம்பியை மண் அடிப்பரப்பில் குத்தி அதனைப் பிடித்துக் கொண்டும் ஒரு சங்கு குளிப்பவர் செயல்படுகின்றார். இது மிகக்கடினமான ஒரு தொழில். இப்படி சங்கு குளிக்கச் செல்வோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பல.

இவர்கள் சுவாசிப்பதற்காகப் படகிலிருந்து வழங்கப்படுகின்ற ஆக்சிஜன் காற்று ஒரு வித பெட்ரோலியம் கலந்த எண்ணையை இயக்குவதன் மூலம் கிடைக்கின்றது. இதனை நான் நேரில் பார்த்த போது அதிர்ச்சியுற்றேன். மிக அபாயகரமான வகையில் சுகாதாரக் கேடு நிறைந்த சூழலில் இவர்கள் பணிபுரிகின்றனர் என்பதுவும் இதனால் இப்பணியில் ஈடுபடுவோரில் பலர் மூச்சழுத்தம், நெஞ்சுவலி, சுவாசக் கோளாறு, தோல் நோய் என பல்வேறு  உடல் நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இக்கடற்கரையில் முத்துக் குளித்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் சிலரை அணுகிப் பேசியபோது அறிந்து கொண்டேன்.

சங்கு குளித்தல் மிக அபாயகரமான ஒரு தொழில் என்பதும் அதனைச் செய்யும் போது ஏற்படக்கூடிய விபத்துக்கள், உடல் ரீதியான சுகாதாரக்கேடுகள் ஆகியன பற்றிய போதிய விளக்கம் பலருக்கும் கிடைக்காமல் இருக்கின்றது என்பதும் வருந்த வைக்கும் உண்மை.  நான் சந்தித்து பேட்டி கண்ட சங்கு குளிக்கும் தொழிலாளி ஒருவர் தங்களுக்கு யாராகினும் சுகாதார விழிப்புணர்வு பற்றி விளக்கம் அளிக்க மாட்டார்களா என பல ஆண்டுகளாக காத்திருப்பதாகவும் ஏதாவது சமூக இயக்கங்கள் தங்களுக்கு ஆலோசனை வழங்க வர வேண்டும் என்றும் அதற்கு என்னால் உதவ இயலுமா, என்றும் கேட்டுக் கொண்டார். இம்மக்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது மருத்துவ ஆலோசனைகள் மட்டுமே. அவர்களுக்குப் போதிய ஆலோசனைகளை வழங்குவதற்கு சமூக நல அமைப்புக்கள் முன்வந்து உதவ வேண்டும் என்ற கோரிக்கையை இந்தப் பதிவின் வழி முன்வைக்கின்றேன்.
ஆழ்கடலுக்குச் சென்று கடலினுள்ளேயே இரண்டு மணி  நேரங்கள் இருக்கும் போது மூச்சுத் திணரல் ஏற்பட்டும் அசுத்தமான அமிலங்கள் கலந்த காற்றை சுவாசித்து மாரடைப்பும் இருதய நோயும் ஏற்பட்டு இறந்தவர்கல் பலர் இருக்கின்றனர் என்ற விபரங்களை அவர்கள் சொல்லிக் கேட்ட போது மனம் பதைக்காமல் இருக்க முடியவில்லை. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் இத்தொழிலில் இருக்கும் போதே இறந்து விடுகின்றனர் அல்லது ஏதாவது ஒரு கொடும் நோய்க்கு ஆளாகின்றனர் என்பது இத்தொழிலில் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிரமங்களை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

இத்தகைய அபாயகரமான ஒரு தொழிலாக இருந்த போதிலும் சங்கு குளிக்கும் தொழிலை எதற்காகச் சிலர் தொடர்ந்து செய்கின்றனர் என வினவிய போது தான் சங்குகளைப் பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.

இடது பக்கமாக திறந்த பகுதி அமைந்துள்ள சங்குகள் சாதாரணமானவை. இவை வீட்டு அலங்காரப்பொருட்களாக விற்பனைக்கு வருபவை. மாறாக, வலது பக்கம் திறந்த பகுதி அமைந்த சங்குகள் மிகப் பிரத்தியேகமானவை என்றும் இவை வலம்புரிச் சங்கு என அழைக்கப்படுகின்றன என்றும் அறிந்து கொண்டேன். இந்த வலம்புரிச்சங்கினை கிருஷ்ணபகவான் பாரதப்போரில் ஊதி ஓசை எழுப்புவது போல சித்திரங்களை நாம் பார்த்திருக்கலாம். இவற்றை வைத்திருப்போருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் என்றும் இதனால் பல பொருளாதார சிறப்புக்கள் ஒருவரை வந்து சேரும் என்றும் மக்கள் நம்புகின்றார்கள் என்றும் அறிந்து கொண்டேன். இந்தியா மட்டுமல்ல; உலகலாவிய அளவில் வலம்புரிச் சங்கிற்கு ஒரு தனி மதிப்பு இருப்பதால் ஒரு வலம்புரிச் சங்கு கோடிக்கணக்கில் விலை பேசப்படுகின்றதாம். ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா?

பொருளாதார வளத்தைக் கொடுக்கும் இச்சங்குகளை எடுக்கும் தொழில் கடற்கரையோர தமிழர்களின் பண்டைய தொழில்களில் சிறப்பான ஒரு தொழில். இதனைச் செய்யும் தொழிலாளர் நலனைக்காப்பதில் அரசுக்கும் சரி சமூக நலனின் அக்கறைக் கொண்டோருக்கும் சரி, நிச்சயமாக பங்கு இருக்கத்தான் வேண்டும்.