Wednesday, March 15, 2017

49. வைரமுத்துவின் கருவாச்சி காவியம்




கதைகளை எழுதுவது போல வரலாற்றினைச் சொல்ல முடியுமா?

வரலாறு சொல்ல  ஆய்ந்து எழுதுவது அவசியம். பொதுவாகவே கடந்த சில ஆண்டுகளில் தமிழர் தொண்மை, தமிழர் பண்பாடு பற்றிய தேடல், தமிழ் நிலத்தின் பண்டைய வழிபாட்டுக்கூறுகள், தமிழர் சடங்கு முறைகள் என்பன பற்றிய தேடல் கூர்மை அடைந்து வருவதைக் காண்கின்றேன். தன்னார்வலர்கள் பலர், அவர்கள் துறை வெவ்வேறாக இருப்பினும் கூட, அவர்கள்  தங்கள் வேர்களை அறியும் பொருட்டு தமிழக வரலாற்றை தேடுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளை வரவேற்பதும் பாராட்டுவதும் மேலும் உற்சாகத்தை அவர்களுக்கு நிச்சயம் வழங்கும். இந்த உற்சாகம் தரும் களிப்பில் மேலும் ஈடுபாட்டுடன் தன்னார்வலர்கள் சீரிய முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வர்.

எனது கடந்த 17 வருட தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்று களப்பணிகள் மற்றும் வெளியீடுகளின் போது என்னைப் பாராட்டி உற்சாகமளிக்கும் பலரையும் நான் மனதில் நினைவு வைத்திருப்பதுண்டு. சில சம்பவங்கள் மனதில் நீங்காத மகிழ்ச்சியை ஏற்படுத்தி அந்த நினைவுகள் மனதில் தங்கி விடுவதும் உண்டு. அப்படித்தான் ஒருமுறை இணையத்தில் உள்ள குழுமங்களில் தமிழர்கள் மத்தியில் கல்கியின் ”பொன்னியின் செல்வன்” நூலை பரவலாக பேசவைத்த பொன்னியின் செல்வன் குழுமத்தலைவர் திரு.சுந்தர் பரத்வாஜ் ஒரு இன்ப அதிர்ச்சியை எனக்கு அளித்தார். அவர் நண்பர்கள் முனைவர்.குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் முனைவர் பேராசிரியர் ராசவேலு இருவரையும் நேரில் அறிமுகப்படுத்தி, என்னை மூவருமாக கௌரவித்து ஒரு நினைவுச்சின்னத்தை வழங்கினர். இது சென்னையில் எதிர்பாராமல் நிகழ்ந்தது.

இதே போலத்தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடனான எனது சந்திப்பு நிகழ்ந்தது. அவரது இல்லத்தில் அவருடன் நானும் நண்பர் சுந்தரும் உரையாடச் சென்றிருந்தோம். நான் சொல்லச் சொல்ல தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி அறிந்து வியந்தார். இப்பணிகளுக்காக நான் சென்றிருந்த ஊர்களில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை நான் விவரிக்க அவற்றை ஆர்வத்துடன் கேட்டு தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். தமிழ் மரபு அறக்கட்டளையின் பணியைப் பாராட்டியதோடு எங்களுக்கு ஒரு உணவு விடுதியில் விருந்தளித்தும்  சிறப்பித்தார். இதில் மேலும் என்னை குதூகலப்படுத்திய ஒரு விசயமும் நிகழ்ந்தது. அவரது எழுத்துப் படைப்புக்களில் பத்து நூற்களைக் கொண்டு வந்து எனக்கு அவற்றை பரிசாக அளித்தார். அது மிக இனிமையான ஒரு நிகழ்வாக என் மனதில் நிறைந்திருக்கின்றது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எனக்களித்த அவரது நூல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பானவையே.

  1. இதுவரை நான்
  2. சிகரங்களை நோக்கி
  3. பாற்கடல்
  4. வைகறை மேகங்கள்
  5. வடுகபட்டி முதல் வால்கா வரை
  6. மௌனத்தின் சப்தங்கள்
  7. இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  8. கருவாச்சி காவியம்
  9. கள்ளிக்காட்டு இதிகாசம்
  10. வைரமுத்து கவிதைகள்

..இந்தப் பத்தும் என் வீட்டு புத்தக அலமாரியில் இடம் பிடித்திருக்கின்றன.

அவ்வருடம் சென்னையிலிருந்து ஜெர்மனிக்கு திரும்பும் போது லுஃப்தான்சா விமானத்தில் கருவாச்சி காவியம் நூலைத்தான் வாசித்துக் கொண்டே வந்தேன். அந்தப் பத்து மணி நேரங்களும் வானில் பறக்கின்றோம் என்பதை மறந்து  இந்த நூல்  தமிழகத்தின் தேனி பகுதிக்கு என்னை அழைத்துச் சென்று விட்டது.

இந்த நூலின் பாயிரத்தில் வைரமுத்து இப்படி எழுதுகின்றார்.
"டைக்ரிஸ் யூப்ரடிஸ் நதிக்கரைகளிலும், நைல்நதி தீரத்திலும், சிந்து சமவெளி ஆழத்திலும் வாழப்பட்ட மனித வாழ்க்கையைத் துழாவு துழாவென்று துளையிட்டுத் துருவுகின்ற ஆய்வாளர்கள் வையை ஆற்றங்கரையில் வாழப்பட்ட வாழ்க்கையை ஆவணப்படுத்தியதுண்டா? அப்படிப்பட்ட பண்பாட்டு ஆவணத்தின் கலை வடிவம்தான் கருவாச்சி காவியம் "

இப்படித்தான், எங்கெங்கோ உள்ள நாகரிகத்தையும் வரலாற்றுச் செழுமைகளையும், அங்கு உள்ள பண்பாட்டு மாண்புகளையும் பேசும் நம்மில் பலருக்கு நமது ஊரின் சிறப்பு அறியாதிருக்கின்றோம். நமது ஊரின் வரலாற்று சிறப்புக்களை அறிந்தோமா என்பது ஒரு புறமிருக்க, நம்மோடு வாழும் சக மக்களின் வாழ்வியல் கூறுகளை மதிக்கும் மனோ நிலையை வளர்த்திருக்கின்றோமா என்பதே ஒரு கேள்வி தானே!

வைரமுத்து அதே பகுதியில்  மேலும் சொல்கின்றார்.
"ஒரே பண்பாடு ஒரே நாகரிகம் மானுடப்பரப்பில் இதுவரை இல்லை. பூமிக்கெல்லாம் ஒரே பகலைச் சூரியன்கூடக் கொண்டுவர முடியவில்லை. கலாசாரக் கூறுகள் இனத்துக்கு இனம் மட்டுமல்ல இடத்துக்கு இடம்கூட வேறுபடுகின்றன."

உண்மைதான்.  உலக நாகரிகங்களைப் பார்க்கும் போது எத்தனை எத்தனை முயற்சிகளை மனிதர்கள் மேற்கொள்கின்றன. எவ்வகை வேறுபாடுகளுடன் அந்தந்த நாகரிகங்கள் உருவாகி நின்று நிலைத்து பின் சிலகாலங்களுக்குப் பின் மடிந்தன, மறைந்தன என்பதை அகழ்வாய்வுகளும் ஆவணங்களும் அறிக்கைகளும் நமக்குக் காட்டுகின்றன.

தொடர்ச்சியாக .." பண்பாட்டு அடையாளங்களும் ஆவணங்களும் மெல்ல  மெல்லத் திரிந்தோ அழிந்தோ வருகின்றன. விரைந்த நகர்மயமும் பூமியில் விழும் எரிகல் வேகத்தில் நிகழும் உலகமயமாதலும் பழைய பண்பாட்டு அடையாளங்களைச் சுவடே இல்லாமல் துடைத்தெறியப் போகின்றன. அந்த அழிமானங்களுக்கிடையில் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பும் படைப்புக்களுண்டு" என்றும் வைரமுத்து வலியுறுத்துகின்றார்.

ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்த மன்னர்களோ தங்கள் செய்திகளையெல்லாம் கல்வெட்டுக்களாகக் கோயில் சுவர்களில் எழுதிவிட்டும், செப்புப் பட்டயங்களில் எழுதுவித்தும் அவர்கள் புகழை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் நாம் நினைத்துப் பார்க்கும் வழியைச் செய்து வைத்துச்சென்றிருக்கின்ரனர். கல்வி கற்ற சான்றோரோ இலக்கியங்களையும் நீதிகளையும் பனை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துச் சென்றனர். சாமானிய மக்களின் வாழ்க்கை நிலையைக் கூறும் வரலாற்றினை யார் எழுதினர்? சாமானிய மக்களின் வாழ்வும், தாழ்வும்,  வலியும், இன்பமும் முக்கியத்துவம் பெறாமலே எழுத்து வடிவம் பெறாமலேயே சென்றன என்பதை நினைத்துப் பார்க்கும் போது நாம் இழந்தவை தான் எத்தனை எத்தனையோ என மனம் பதைக்கின்றது.

இப்படி   சிற்றூர்களின் சின்னச் சின்ன கிராமங்களில் படிந்திருக்கும் பண்பாட்டு செழுமைகளையெல்லாம் ஆவணப்படுத்தி பாதுகாப்பதும் எழுத்தாளர்களின் கடமை என்பதை தனது கருவாச்சி காவியத்தின் பாயிரத்தில் சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குறிய ஒரு விசயமாக நான் காண்கின்றேன்.

அன்று விமானப்பயணத்தில் கருவாச்சி காவியத்தை முழுமையாக வாசித்து முடித்தேன். மதுரையின் ஒரு சிறு கிராமத்தில் நான் இந்த கருவாச்சி காவியத்தினூடாக வலம் வந்தேன். இயல்பாக மக்களின் பேச்சு. கிராமத்து வழக்குகள், பஞ்சாயத்து, கல்யாணம், சண்டைகள், பொறாமை, ஏமாற்றம், வஞ்சம், துன்பம், சின்ன சின்ன சந்தோஷங்கள், ஆடுகள், மாடுகள், கருவேலம் முட்கள், மனிதர்கள், கிழவர்கள், கிழவிகள், பிறப்பு, இறப்பு என முழுமையாக என் மனம் அந்த நூலுக்குள் ஒன்றிப்போயிருந்தது. படித்து முடித்தபோது கணத்த மனத்துடன் கருவாச்சியை நினைத்தவாறே சில நிமிடங்கள் என்னை மறந்திருந்தேன்.

இந்த நூலில் மக்கள் பேசும் நாட்டார் வழக்கிலேயே தன்  எழுத்தின் ஊடாக மனக்கண்ணில் முழு நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் வைரமுத்து என்று சொன்னால் அது பொருந்தும். மக்கள் வாழ்க்கை தானே இலக்கியம் உருவாக ஆதாரமாகின்றது!
இராஜவம்சத்து கதைகள் மட்டும் தான் இலக்கியம் என்ற அதிகாரத்தைப் பெற வேண்டுமா?
கிராமத்து கருவாச்சிகளின் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு இலக்கியத்தன்மை இருக்கக்கூடாதா என்ன ? என்ற கேள்வியை நம் முன்னே எழுப்புகின்றது இந்தக் காவியம்.

வைரமுத்துவின் பல பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். அவரது கவிதைகளில் சில வாசிக்கும் போது மனதில் பளிச்சென்று ஒரு மின்னலை தோற்றுவிப்பதை அனுபவிப்பதுண்டு. அப்படி சில கவிதைகளை அவரது கவிதை தொகுப்பு நூலில் உள்ளன.

இலையுதிர் காலமும்
வசந்தமும் இங்கே
கிளைகளுக்குத்தான்
வேர்களுக்கல்லவே

நான்கே வரிகளில் சிந்தனைக்கு விருந்து இந்தக் கவிதை

பறவைக்கும் விலங்குக்கும்
மரம் தரும் உத்தரவாதம்
மனிதர் நாம் தருவோமா?

கொள்கை பிடிப்பற்ற மனிதர்களோடு ஒப்பிடும் போது மரங்கள் சிறப்பல்லவா?

தற்கொலையை நாடிச் செல்லும் ஒரு இளைஞனைப் பார்த்து இப்படிச் சொல்கின்றார்.

தம்பீ

சாவைச்
சாவு தீர்மாணிக்கும்
வாழ்க்கையை
நீ தீர்மானி

புரிந்து கொள்

சுடும்வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி

போராடும் வரைக்கும் மனிதன்

நீ மனிதன்.


வைர வரிகள் அல்லவா? கவிப்பேரரசு வைரமுத்துவுடன் நிகழ்ந்த அச்சந்திப்பும் உரையாடலும் எனது தமிழ் மரபு அறக்கட்டளை பயணங்களில் நட்சத்திரப்பூப்போல மிளிரும் இனிய அனுபவங்களாக அமைகின்றன!

Wednesday, March 8, 2017

48. வீரவிளையாட்டு - தமிழகத்திலும் ஸ்பெயினிலும் எப்படி மாறுபடுகின்றன



வாசித்தோ, தொலைக்காட்சியில் பார்த்தோ, ஏனைய பொது ஊடகங்களில் பார்த்தோ தெரிந்து கொள்வதை விட நேரடியாகப் பெறும் அனுபவங்கள் தரும் பாதிப்பு மிக ஆழமானதாக அமைந்து விடும். இவ்வகை அனுபங்கள் பல நாட்கள், வாரங்கள் மாதங்கள் வருடங்கள் என மனதை விட்டு அகலாமலும் அமைந்து விடும். எனக்கு மனதைக் கவரும் ஏதாவதொரு விஷயம் ஒன்றைப் பற்றி நான் கேள்விப் பட்டால் என் மனம் அதனைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். ஆவல் ஒரு புறமிருக்க அதனை நேரடியாகப் பார்த்து அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணம் தோன்றி ஞாபகப் படுத்திக் கொண்டேயிருக்கும். தக்க வேளை அமையும் போது இவ்விதம் அமைந்த தேடல்களை நான் சென்று பார்த்தோ, நேரடியாக உணர்ந்தோ இவ்வனுபங்களைப் பெற்று அவற்றைப் பற்றி சிந்திப்பதை வாய்ப்பமையும் போதெல்லாம் ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றேன்.

ஜல்லிக்கட்டு, காளை விரட்டு, மஞ்சி விரட்டு போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களைப் பற்றி அறிந்திருக்கின்றோம். அண்மைய ஜல்லிக்கட்டுக்கான மக்கள் போராட்டம் காளை அடக்குதல் எனும் விளையாட்டு தமிழர் பாரம்பரியத்தில் உயரிய இடத்தைப் பெற்றிருப்பதை மேலும் உறுதி செய்வதாகவே அமைந்தது. என் இளம் பிராயத்து மலேசிய வாழ்வில் ஒரு முறை இவ்வகை காளை விரட்டு போட்டி ஒன்றைப் பார்த்த ஞாபகம் மனதில் நிழலாடுகின்றது. காளை மாட்டை நன்கு குளிப்பாட்டி கொம்பிற்கு வர்ணம் தீட்டி கழுத்தில் மணி கட்டி, கொம்புகளில் பூக்களைச் சுற்றி அழைத்து வந்து பின்னர் இளைஞர்கள் அந்தக் காளை மாட்டை விரட்டிப் பிடிப்பது போன்ற வீர விளையாட்டைத் தைப்பொங்கல் காலத்தில் நிகழும் சில பாரம்பரிய நிகழ்வுகளில் பார்த்திருக்கின்றேன்.

தமிழர் வாழ்வியலில் அதிலும் விவசாயிகளின் வாழ்வில் பசுவும் காளையும் குடும்ப உறுப்பினர்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. வீட்டு விலங்குகளான இவை குடும்பத்தாரோடு அன்னியோன்னியமாக ஒன்றித்து வாழ்வதை இன்றும் கூட கிராமங்களில் காண்கின்றோம். சிறு பெண்கள் கூடப் பெரிய காளை மாட்டினை இழுத்துக் கொண்டு செல்லும் இனிய காட்சிகள் தமிழக கிராமங்களில் இயல்பானதுதான். இதற்கு முற்றிலும் மாறுபட்ட கொடூரமான காளை விரட்டும் வீர விளையாட்டினை ஸ்பெயினில் இன்றும் காண்கின்றோம்.

ஐரோப்பிய சூழலில் பால், பாலைக்கொண்டு தயாரிக்கப்படும், சீஸ், பட்டர்மில்க், தயிர் வகைகள் பயன்பாடு என்பது மிக ஏராளம். தற்கால சூழலில் ஐரோப்பிய மக்களின் அன்றாட உணவுத் தேவையில் பால், பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் இல்லாத ஒரு நிலையை மக்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்குப் பால் மக்கள் வாழ்வில் அத்தியாவசியப் பொருளாகி விட்டது. இதனால் மாடுகள் இங்கே மிகப் பிரபலமான விவசாயிகளின் வளர்ப்பு மிருகங்களில் மிக முக்கியமான ஒன்றாகின்றது.

இப்படி அடிப்படை உணவுத் தேவைக்கு ஆதாரமாக அமையும் மாடுகள் சம்பந்தப்பட்ட திருவிழாக்கள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நிகழ்கின்றன. சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ரோமானியா, டென்மார்க், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் சில நாடுகளிலும் ஏதாவது ஒரு வகையில் பசு மாடுகளையோ அல்லது காளை மாடுகளையோ முக்கியப்படுத்தும் ஏதாவது ஒரு திருவிழா வருஷத்தில் ஒரு முறையாவது இடம்பெறுவதுண்டு. இவ்வகைத் திருவிழாக்களின் போது பாரம்பரிய உடையணிந்து மக்கள் இத்திருவிழாக்களில் கலந்து கொள்வதும், கேளிக்கை விஷயங்கள் இடம்பெறுவதும் வாடிக்கை.

மற்ற நாடுகளிலிருந்து வித்தியாசமாக ஸ்பெயின் நாட்டில் காளை மாடுகள் சம்பந்தப்பட்ட வீர விளையாட்டினைப் பார்க்கலாம். Corrida de Torros (கொரிடா டி டோரோஸ்) என ஷ்பேனிஷ் மொழியில் அழைக்கப்படும் இவ்வீர விளையாட்டு மிக கொடூரமான ஒரு விளையாட்டு என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இப்பாரம்பரிய விளையாட்டு ஸ்பெயின் நாட்டின் பல நகரங்களில் குறிப்பிட்ட சில நாட்களிலோ திருவிழாக்களின் போதோ நடைபெறுகின்றன.

இந்தப் பாரம்பரிய வீர விளையாட்டைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதேச்சையாக நான் அறிந்திருந்த போதிலும் 2012ம் ஆண்டில் எனக்கு இந்த விளையாட்டினை நேரில் காணும் வாய்ப்பு அமைந்தது. பல மாதங்களாக ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மட்ரிட் நகரில் எனக்குப் பணி நிமித்தம் ஒவ்வொரு வாரமும் இருக்கின்ற சூழல் அமைந்தது. 13 -19 மே மாதம் மட்ரிட்டின் (ஸ்பெயின் தலைநகர்) சிறப்பு திருவிழா காலம். இதற்காக ஏற்பாடாகி ஒவ்வொரு நாளும் கலைவிழாக்கள், நடனம், நாடகம், பாரம்பரிய விளையாட்டு, வான வேடிக்கை எனப் பல விஷயங்கள் நடந்தன. அதில் கொரிடா டி டோரெஸ் காளை அடக்கல் போட்டியும் நிகழ்ந்தது. இது பாரம்பரிய விளையாட்டுக்களில் தலையாய ஒன்றானதாகவும் மிக உயர்வான கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட ஒரு விளையாட்டாகவும் ஷ்பேனிஷ் மக்களால் கருதப்படும் விளையாட்டு.கொரிடா டி டோரெஸ் நடைபெற்ற ப்லாஸா டி டொரெஸ் மண்டபம் ஸ்டேடியம் போன்ற அமைப்பில் அமைந்தது. அலுவலகப் பணி முடிந்து நிகழ்ச்சிக்கு என் ஷ்பேனிஷ் நண்பர்களுடன் சென்றிருந்தேன். 14 யூரோவிலிருந்து 1,200 யூரோ வரை டிக்கெட்கள் விற்பனைக்கு இருந்தன. அன்று இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்க்கையிலே ஏறக்குறைய 20,000 பேர் இங்கு இவ்விளையாட்டைப் பார்க்க வந்திருந்தனர் என்பது தெரிந்தது.

இது விளையாட்டல்ல.. விபரீதம் என்பதை உள்ளே சென்று நண்பர்கள் விளக்க ஆரம்பித்ததும் தான் தெரிந்து கொண்டேன்.காளை மாட்டை அடக்கித் தள்ளுவது இந்த விளையாட்டின் நோக்கமல்ல. மாறாக அக்காளை மாட்டைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் போராடி கொல்வது தான் நோக்கம். ஒரு விளையாட்டின் போது 6 காளை மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக என வர ஒவ்வொன்றையும் அடக்கி அதைக் கொல்பவர்கள் வீரர்களாகக் கருதப்படுகின்றனர். நம் தமிழர் பாரம்பரியத்தில் உள்ள ஜல்லிக்கட்டிற்கும் இந்த விளையாட்டிற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது, பாருங்கள்!

காளை மாடு முதலில் வரும் போது அது ஓடிவரும் வேகம், அதன் தலையைத் திருப்பிப் பார்க்கும் விதம் இதனை வைத்தே இது வீரம் மிகுந்த அல்லது வீரம் குறைந்த மாடு என்று மக்கள் புரிந்து கொள்கின்றனர். வீரம் குறைந்த மாடு என்றால் ஷ்பேனிஷ் மக்கள் விசில் அடித்தும் கூக்குரலிட்டும் கேலி செய்கின்றனர். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் இதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.முதலில் வரும் காளை அதனை எதிர்த்து போராட நிற்கும் 5 பேரை பார்த்து மோதத்தொடங்குகின்றது. இந்த மோதுதலின் போதே இந்தக் காளை வீரம் நிறைந்ததா, அல்லது மிகச் சாதுரியமானதா, அதன் போரிடும் தன்மை என்ன என்பதை இந்த 5 விளையாட்டாளர்களும் பார்த்து அறிந்து கொள்கின்றனர். சிறிது நேரம் இந்த மோதல் நடைபெறுகின்றது. ஏறக்குறைய 5ம் நிமிடத்தில் 2 பிக்காடோரஸ் (Picadores இவர்கள் இரும்புக் கவசத்தால் சுற்றிலும் கவசம் அணியப்பட்ட குதிரையில் அமர்ந்து வருபவர்கள்) மைதானத்திற்கு உள்ளே நுழைந்து காளையை அடக்க வருவர். ஒருவர் தூரத்திலேயே நின்று கொள்ள ஒருவர் மாத்திரம் இந்தப் போராட்டத்திற்கு தயாராவார்.

இதுவே இந்தக் காளையைக் கொல்லும் போராட்டத்தின் முதல் பகுதி. இதனை ஷ்பேனிஷ் மொழியில் Tercio de Varas என்று அழைக்கின்றனர். Tercio என்பதன் பொருள் இறப்பு என்பது. ஆகக் காளைமாட்டின் மீதான தாக்குதலின் முதலாம் பகுதி இது எனலாம்.
பிக்காடோரெஸ் குதிரையின் மேலமர்ந்து இடது கையில் குதிரையைப் பிடித்துக் கொண்டு வலது கையில் உள்ள ஈட்டியால் தன்னை நோக்கித் தாக்க வரும் காளைமாட்டினை ஒரே தாக்குதலில் நடுமுதுகில் குத்தித் தாக்குவார். இந்தத் தாக்குதலைச் செய்ய மிகுந்த பலம் தேவை. இதனை எதிர்த்து காளைமாடு உடனே குதிரையை முட்டி பிக்காடோரெஸை தொடர்ந்து தாக்கும். இது மிகப் பயங்கரமான ஒரு நிலை. சுற்றிலும் இரும்புக் கவசம் போடப்பட்டும் கண்கள் மூடப்பட்டும் குதிரை இருப்பதால் அதற்குச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இருக்காது. ஆனால் பிகோடோரெஸ் லாவகமாக இந்தத் தாக்குதலைச் சமாளித்து மாட்டை பலம் இழக்கச் செய்து விடுவார். இத்துடன் இவரது பணி முடிய இவர் வெளியே சென்று விடுவார். தனித்திருக்கும் காளை மாடு தன்னைக் கொஞ்சம் சுதாகரித்துக் கொள்ள முனைந்தாலும் கூட ஈட்டித் தாக்கியதால் இரத்தம் முதுகிலிருந்து வழிய அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.

இரண்டாவது கட்டமாக மூன்று பண்டரிலாஸ் இக்காளையைத் தாக்க வேண்டும். இதற்கு Tercio de Banderillas என்று பெயர்.  கைகளில் மறைக்கும் துணி இல்லாமல் இரண்டு கூர்மையான ஈட்டியைத் தாங்கிக் கொண்டு ஓடிவந்து தக்க சமயத்தில் ஒருவர் பின் ஒருவராகக் காளையின் முதுகில் ஈட்டியைப் பாச்சி அதனை நோகச் செய்வர். இது காளையின் தோள் பகுதி கழுத்துப் பகுதிகளை வலிமை இழக்கச் செய்து விடும். இந்த நேரத்தில் காளை எதிர் தாக்குதல் நடத்தினால் நேருக்கு நேர் இருக்கும் பண்டரிலாஸ் நிச்சயமாகக் கொம்பில் முட்டி இறக்க நேரிடும். இது அவ்வளவு பயங்கரமான ஒரு தருணம்.

மூன்றாம் பகுதி Tercio de Muerte எனப்படுவது. இதன் பொருள் இறப்பின் மூன்றாவது பகுதி எனக் கொள்ளலாம்.இந்தப்பகுதியின் போது அக்காளையுடன் ஒரே ஒரு மெட்டடோர் (இவர் தான் தானே ஒரு காளையைக் கொல்வதாக உறுதி எடுத்துக் கொண்டு சபையை வணங்கி அவர்களின் கைதட்டல் ஆரவாரத்தை ஏற்றுக் கொண்டு போட்டியிட வருவார். காளையைக் கொல்லும் வரை இவரே ஒருவராகப் போராட வேண்டும். காளையை அடக்கச் சிவப்பு நிறத்துணியை அதன் கண்முன்னே காட்டி அழகிய நடையில் அதனை தாக்கச் செய்வார் இந்த மெட்டாடார். உண்மையில் காளைமாடு வர்ணங்களைக் கண்டு எதிர்ப்பதில்லை. மாறாக அசைவுகளே மாட்டின் எதிர்த்துத் தாக்கும் தன்மைக்குக் காரணமாகின்றன. ஆனால் இன்றும் பலர் சிவப்பு வர்ணங்களைக் கண்டால் காளை மாடு ஆத்திரம் கொண்டு தாக்கும் என்ற தவறான புரிதலைக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் மெட்டாடார் காளைமாடு இருவருமே காயங்களுக்குள்ளாவர்.

இந்த மெட்டாடார் ஏறக்குறை 10 நிமிடங்கள் வெவ்வேறு வகையில் காளையை எதிர்த்துப் போராடி, தனக்கு அடங்கச் செய்து பின்னர் தக்க சமயம் வருகையிலே ஒரு கூர்மையான நீளமான வாளால் அக்காளை மாட்டை முதுகில் குத்துவார். ஒரு அனுபவம் நிறைந்த வீரர் என்றால் முதல் தாக்குதலிலேயே அந்த வாள் முதுகில் பாய்ந்து நேராக இருதயத்தைத் தாக்கி மாட்டினை விழச் செய்ய வேண்டும். இப்படிச் செய்பவர் மிகச் சிறந்த வீரராகக் கருதப்பட்டு பார்வையாளர்களால் கூக்குரலிடப்பட்டும் விசில் அடித்தும் பாராட்டப்படுவார்.
கீழே அயர்ந்து விழும் காளை உயிரை விட ஒரு 4 குதிரைகள் பூட்டிய வண்டி மைதானத்திற்குள் நுழையும். பார்வையாளர்கள். காளையை அடக்கிய மெட்டாடோர் மிகச் சிறப்பாக போராடியிருக்கின்றார் என நினைத்தால் வெள்ளை நிறக் கைத்துண்டால் விசிறிக் கூவ நிகழ்ச்சிக்குப் பிரத்தியேகமாக வந்திருக்கும் ஆளுநர் அதனை ஏற்று அந்த மெட்டாடோரின் புகழை மேலும் பெரிதாக்க இறந்த அந்த மாட்டின் ஒரு காதையும் அதன் வாலையும் அந்த மைதானத்திலேயே வெட்டித் தர அனுமதி அளிப்பார். இது மிகப் பெரிய ஒரு சம்பிரதாயமாகக் கருதப்படுகின்றது.

இத்தகைய பரிசு பெற்றவர்கள் மிகச் சிறந்த மெட்டாடோர்களாக மக்களால் அங்கீகரிக்கப்படுகின்றனர்.ஆக மொத்தம் 25 நிமிடத்திற்குள் ஒரு காளையை அடக்கிக் கொன்று விடுகின்றனர். இவ்வகையில் ஒரு விளையாட்டின் போது 6 காளை மாடுகள் அடக்கிக் கொல்லப்படுகின்றன. இந்த கொரிடா டி டோரோஸ் காளை மாடுகளைத் துன்புறுத்தும் ஒரு கொடூரமான விளையாட்டு என்ற அடிப்படையில் பல அமைப்புக்கள் இந்த விளையாட்டிற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஸ்பெயினிலேயே பல பகுதிகளில் இவ்விளையாட்டு நடத்தப்படுவதில்லை. உதாரணமாக கட்டலானியா பகுதிகளில் இது 2011ம் ஆண்டிலிருந்து தடைசெய்யப்பட்ட விளையாட்டாகிவிட்டது.


தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாகிய ஜல்லிக்கட்டு இளைஞர்களின் வீரத்தையும் காளையின் வீரத்தையும் எடை போடுவதாகத்தான் அமைகின்றதே தவிர காளை மாட்டினை துன்புறுத்தும் ஒரு நிகழ்வல்ல. நமது வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு தொடர்ந்து சிறப்பாக நடைபெறவேண்டும். தமிழர் மரபின் வீர விளையாட்டுக்களின் ஒரு அங்கம் தான் ஜல்லிக்கட்டு என்பதைப் புரிந்து ஆதரிப்போம்!. 

Wednesday, March 1, 2017

47. நடுகற்கள்




நடுகற்களா?
என்ன அவை?
என்ற கேள்வி மலேசிய சூழலில் பலருக்கும் எழலாம். தமிழக நிலப்பரப்பில் இன்றும் கிடைக்கின்ற புராதனச் சின்னங்களில் ஒன்று தான் நடுகற்கள் எனப்படுபவை.

பண்டைய தமிழர் வரலாற்றில் வீரச்செயல் புரிந்தோரை மக்கள் காலந்தொரும் நினைத்திருக்கும் வகையில் அவர்கள் செயலைப் பெருமைப்படுத்தும் நோக்கத்துடன் அவ்வீரனது சிற்பத்தைக் கல்லில் செதுக்கி வைப்பார்கள். இன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இவை காணக்கிடைக்கின்றன. பரவலாக ஆங்காங்கே இவை நமக்குத் தென்பட்டாலும், இந்த நடுகற்கள் அனைத்தும் ஒரே தன்மையானவை அல்ல. பெரும்பாலானவை ஒரு வீரன் தன் ஒரு கையில் வாள் ஒன்றினை ஏந்தியவாறு நிற்பது போலவோ அல்லது ஒரு கையில் வாளினை ஏந்தி தன் மறு கையால் தன் தலையை உயரப் பிடித்து தன் கையாலேயே தன்னைப் பலிகொடுத்துக் கொள்ளும் காட்சியாகவோ அல்லது வீரனுடன் புலி ஒன்று இருப்பது போலவும் அதனை அவர் தாக்குவது போலவோ, அல்லது ஒரு குதிரையை வீரன் குத்துவது போலவோ அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சில நடுகற்களில் வீரனுடன் பெண் ஒருத்தியின் சிற்பமும் இணைக்கப்பட்டிருக்கும். சில நடுகற்களில் வீரனின் தலைப்பகுதியின் இரு பக்கங்களிலும் தேவதைகள் மலர் தூவுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கிக்கும்.

பெரும்பாலான நடுகற்களில் உருவங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஆயினும் சில நடுகற்கள் எழுத்துக்களுடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் காணப்படுகின்ற எழுத்துக்கள் அவ்வீரனது பெயரைக் குறிப்பிடுவதாக அமைகின்றன.

இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் கொங்குமண்டலத்திலும் நாம் பரவலாக காணக்கூடிய வகையில் கிடைக்கின்ற நடுகற்களில் பல, ஒரு அரசனுக்காகப் போர் நிமித்தம் தன் உயிரைத் தானே பலிகொடுத்துக் கொண்ட வீரனுக்காக அமைக்கப்பட்ட நடுகற்களாகவே இருப்பதைக் காணலாம். தன்னைத் தன் அரசனின் வெற்றிக்காக மாய்த்துக் கொள்ளும் வீரன், கொற்றவை அல்லது காளி தெய்வத்தின் முன் தன் தலையைத் தானே தூக்கிப் பிடித்து தன் மற்றொரு கையில் ஒரு வாளை ஏந்தி தன் தலையை வெட்டி தன் தலைவன் போரில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு தன்னைப் பலி கொடுத்துக் கொள்வான். இத்தகைய நடுகற்கள் தலைபலி நடுகற்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை நவகண்டம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

இன்று நடுகல்லுக்கும் தெய்வச் சிற்பங்களுக்கும் வித்தியாசம் தெரியாது பலர் இருக்கின்றனர். நடுகற்களை ஏதாவது ஒரு வகையில் ஒரு வீரச்செயல் புரிந்த மனிதர்களுக்கான நினைவுச்சின்னம் என அறியாது, சிற்பத்தின் உருவத்தைக் கூட ஆராயாமல் இவற்றை வேடனாக வருகின்ற முருகன் சிலை என நினைத்துச் சிலரும், ஆஞ்சநேயர் என சிலரும், கருப்பண்ணசாமி என சிலரும் பெயர் வைத்து அழைத்து வழிபடுகின்றனர். நடுகற்கள் என்பவை யாது எனத் தெளிவு பிறந்தால் இத்தகைய சந்தேகங்கள் எழ வாய்ப்பிருக்காது.

இறந்தோருக்காக நடுகல் அமைக்கும் முறை பண்டைய தமிழர் மரபில் இடம் பெறும் ஒன்று. ஒரு நடுகல் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்ற இலக்கணத்தை தொல்காப்பியம் வரையறை செய்திருக்கின்றது.

வெவ்வேறு விதமான நடுகற்கள் பண்டைய தமிழகத்தில் வழிபாட்டில் இருந்தன. சில இன்னமும் வழிபாட்டில் தொடரப்படுகின்றன. அப்படிக் காணக்கிடைக்கின்ற வெவ்வேறு விதங்களில் அமைந்த நடுகற்களைப் பற்றி சில தகவல்கள் தெரிந்து கொள்வதும் நமக்குச் சுவாரசியமான அனுபவமாகத்தானே அமையும்.

எனது ஒவ்வொரு ஆண்டு தமிழகத்துக்கான வரலாற்றுப் பயணங்களிலும் நான் தேடிச்செல்லும் இடங்களில் ஆங்காங்கே மாறுபட்ட நடுகற்களைப் பார்த்ததுண்டு.

மிகச் சாதாரணமாக உருவங்கள் யாதுமன்றி நெடிய கல் ஒன்று மட்டும் வைக்கப்பட்டு அதுவே வழிபாடு பொருளாக இருக்கும். இதுவும் ஒருவகை நடுகல் தான்.

நடுகற்களில் புலியுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தவருக்காக எழுப்பப்படுவதை "புலி குத்திக் கல்" என வகைப்படுத்தி அழைக்கின்றார்கள். அண்மையில் திருப்பூர் மாவட்டம் கொடுவாய் எனும் சிற்றூரின் அருகே ஏறக்குறைய 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறியப்படும் புலிக்குத்திக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கிராமத்தில் சேதங்களை ஏற்படுத்திய புலியுடன் சண்டையிட்டு மரணமடைந்து விட்ட வீரனுக்காக அவனது தாயார் எழுப்பிய கல்வெட்டு இது. இந்த நடுகல்லில் மேலும் சிறப்பாக மேற்பகுதியில் 3 வரிகளில் ஒரு செய்தி கல்வெட்டாகப் பதியப்பட்டிருக்கின்றது. “கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“ என்பது தான் அச்செய்தி. பெரும்பாலான நடுகற்கள் கல்வெட்டுக்கள் இல்லாமலேயே அமைந்து விடுகின்றன. அதனால் இது யாருக்கு யாரால் எழுப்பப்பட்டது எனக் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகின்றது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட நடுகல்லில் எழுத்துக்கள் மிகத் தெளிவாக அமைந்திருப்பதனால் இதனை உருவாக்கியவரின் பெயரையும் எதனால் இது எழுப்பப்பட்டது என்ற காரணத்தையும் 700 ஆண்டுகளுக்குப் பின்னரும் நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

இதே போல கரூர் அருங்காட்சியகத்திலும் ஒரு புலிக்குத்திக் கல் ஒன்றினை நான் எனது அண்மைய பயணத்தில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. பெண்ணையாற்றின் கரையில் ஆங்காங்கே கிடைக்கின்ற நடுகற்களில் புலிக்குத்தி நடுகல் ஒன்றும் இருக்கின்றது. இதனை எனது 2012ம் ஆண்டு பயணத்தில் பார்த்து புகைப்படம் எடுத்து வந்தேன்.

நடுகல்லில் மற்றொரு வகையும் உண்டு. கரூர் அருங்காட்சியகத்தில் இருக்கின்ற ஒரு நடுகல் வீரன் ஒருவன் தன் கையில் ஒரு வாளைப் பிடித்து குதிரையைத் தாக்குவது போல அமைந்திருக்கின்றது. இதனை "குதிரைக் குத்தப்பட்டான் கல்" என அழைக்கின்றனர். ஒரு போரில் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையைத் தீர்க்க குதிரையை வாள் கொண்டு தாக்கிய வீரன் இறந்து போய்விடுகின்ற நிலையில் அவன் நினைவாக எழுப்பப்படுவது தான் இந்த வகை நடுகல்.

2012ம் ஆண்டு நான் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது பெண்ணையாற்று நதிக்கரையோரம் அமைந்திருக்கும் பெண்ணேஸ்வரர் சிவாலயத்திற்குச் சென்றிருந்தேன். இக்கோயிலின் வாசலிலேயே சில நடுகற்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. வெளியே சாலையின் இரு புறமும் நடுகற்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்துக் கொண்டே வந்தோம். சாலையின் வலது புறத்தில் உள்ள அடர்ந்த புதர் பகுதிகளில் பராமரிப்பு அற்ற நிலையில் ஆங்காங்கே நடுகற்கள் புதர்ச்செடிகளால் மூடிய படி கிடந்தன. அப்படி புதர் மூடிய ஒரு நடுகல்லைச் சென்று பார்த்து புகைப்படம் எடுப்போம் என நாங்கள் அருகில் சென்று சிறு கொடிகளையும் செடிகளையும் இழுத்து அப்புறப்படுத்தி அந்த நடுகல்லைப் பார்வையிட்டோம். அது ஒரு வீரன் வாளுடன் நின்ற வடிவில் அமைக்கப்பட்ட ஒரு நடுகல். கிராம மக்களுக்காக வீரச்செயல் புரிந்து மரணம் எய்திய அந்த வீரன் தெய்வமாக வழிபடப்படுவதைக் காட்டும் ஒரு நடுகல் தான் அது. இந்த அழகிய நடுகல் புதர் மண்டி பாதுகாப்பற்ற நிலையில் காட்டுக்குள் கிடப்பது தான் கொடுமை. இத்தகைய புராதனச் சின்னங்களை மீட்டெடுத்துப் பாதுகாத்து வைக்க வேண்டியது அவசியமல்லவா?

அதே சாலையில் நாங்கள் மேலும் பயணித்தபோது சிறு ஓடை ஒன்றின் அருகே மக்கள் வழிபாட்டில் இன்றும் இருக்கும் ஒரு நடுகல்லைப் பார்வையிட்டோம். அதில் ஒரு வீரனோடு அவன் மனைவியும் இணைந்து செல்வது போலச் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது. அப்பெண்ணின் கையில் ஒரு பானை இருப்பது போலவும் வீரனின் கையில் அவன் வாள் ஏந்தி நடப்பது போலவும் சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது. வழிபாட்டில் இடம்பெறுவதால் மஞ்சள் சந்தனம் குங்குமம் என அலங்கரிக்கப்பட்டு நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது.

பெண்ணையற்றுக் கரை நடுகற்களுக்குப் பிரசித்தி பெற்ற பகுதியாக இருப்பது போல கொங்கு மண்டலத்தின் கரூர், சேலம் போன்ற பகுதியிலும் பல இடங்களில் நடுகற்கள் கிடைப்பதைக் காணலாம்.

கொங்குமண்டலத்தின் அந்தியூர் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் மிகப்பிரசித்தி பெற்ற ஒரு கோயில். இங்கே கோயிலின் பின் பக்க கொல்லைப்புறத்தில் நவகண்டம் ஒன்றினை தற்செயலாக நான் காண நேர்ந்தது. கோயிலின் பழமையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது கோயில் குருக்கள் ஒரு நவகண்டம் ஒன்று கொல்லைப்புறத்தில் இருப்பதாகக் குறிப்பிட, உடனே அதை தேடிச் சென்றேன். கோயில் அலுவலகத்தில் விசாரித்த பின்னர் அவர்களும் அதனை எடுஹ்ட்து காண்பிக்க முன் வந்ததால் கொல்லைப்புரம் சென்று மண்ணிற்குள் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அண்டஹ் நவகல்லை திருப்பிப் பார்ஹ்ட்த போது வியந்தோம்.

மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு நவகண்டம் வகையிலான ஒரு நடுகல் அது. வீரனின் கையில் வாளுடன் தன்னை பலியிட்டுக் கொள்ளும் நிலையில் தன் மற்றொரு கையால் தலையைப் பிடித்தவாறு அமைக்கப்பட்ட சிற்பட்துடன் இந்த நடுகல் காட்சியளிக்கின்றது. இந்த நடுகல்லைப் பாதுகாக்கும் முயற்சியில் தற்சமயம் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு பாதுகாவலர் குழு ஈடுபட்டுள்ளது.

இதே போல தமிழகத்தின் பல சிற்றூர்களில் பொதுமக்கள் கண்டுபிடிக்கும் நவகண்டங்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின. வயல்களில் புதையுண்டு பாதிப்பகுதி மட்டுமே தெரியும் வகையில் உள்ள நவகண்டங்களைப் பார்த்தவர்கள்புகைப்படங்கள் எடுத்துப் பகிர்ந்து கொள்கின்றனர். சாலை ஓரத்தில் கவனிப்பாரற்று சிதிலமடைந்து போன நடுகற்களும் கிடைக்கின்றன. இவை தமிழர் புராதனச் சின்னங்கள். இத்தகை புராதனச் சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் சீறிய முறையில் மேற்கொள்ளப்படும் போது விடுபட்டுப் போன பல வரலாற்றுச் செய்திகளை நாம் மீட்டெடுக்க வாய்ப்பு கிடைக்கும்! 

Sunday, February 26, 2017

46.டெக்சாஸ் மாநிலத்தில் தமிழ் வளர்கின்றது




டெக்ஸாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரிலிருந்து ஸ்டுட்கார்ட் நகருக்குத் திரும்பி வரும் வழியில் விமானப்பயணத்தின்போது  இப்பதிவை எழுதுகின்றேன். இம்மாதம் 10ம் தேதி தொடங்கி ஒரு வார காலம் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரிலும் மற்றும் அதன் தலைநகரமான ஆஸ்டின் நகரிலும், மற்றுமொரு அழகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரான சான் அந்தோனியோவிலும் இருந்து, இப்பகுதிகளில் இயங்கும் அமைப்புக்கள், தமிழ்ப்பள்ளிகள் மற்றும்  தமிழ்ச்சங்கங்களின்  நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு வரலாற்றுப் பாதுகாப்புப் பணிகளைப் பற்றிய செய்திகளை இங்கே வாழ்கின்ற தமிழ் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நல்லதொரு  வாய்ப்பாகவும் இது எனக்கு அமைந்தது.

கடந்த பத்து ஆண்டுகளாகத் திருக்குறள் போட்டிகளை நடத்தி, விரிவான வகையில் தமிழ் குழந்தைகளுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தும் பணியை டல்லாஸ் நகரில் இயங்கும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை செய்து வருகின்றது. கடந்த ஆண்டு, அதாவது 2016 ஜூலை மாதம் நான் நியூ ஜெர்ஸி நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்து நடத்திய ஆண்டு நிகழ்வில்  உரையாற்றும் வாய்ப்பு அமைந்த போது, இந்த சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர்களாகிய திரு.வேலு, திருமதி.விசாலாட்சி வேலு ஆகிய இருவருடனும் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இந்த ஆண்டு இந்த அமைப்பின் பத்தாவது ஆண்டு விழா நடைபெற உள்ளதாகவும் அதில் சிறப்பு விருந்தினராக  நான்  கலந்து கொள்ளவேண்டும் என்றும் என்னை இவர்கள் இந்த நிகழ்விற்காக அழைத்திருந்தனர்.

ஜனவரி 28ம் தேதி அன்று திருக்குறள் மனனப் போட்டி, திருக்குறள் கட்டுரை எழுதும் போட்டி ஆகியன நடத்தப்பட்டு ஏறக்குறைய இந்த நிகழ்விற்காக 8600 முறை திருக்குறள் ஓதப்பட்டுள்ளது என்பதை அறிந்த போது வியக்காமல் இருக்க முடியவில்லை.  11.2.2017 அன்று  காலை தொடங்கி நான்கு படி நிலைகளில் திருக்குறள் பேச்சுப் போட்டி நடைபெற்றது. பின்னர் திருக்குறளின் பொருள் விளக்கமாக   பொருட்காட்சி போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெற்றோரின் துணையுடன் குழந்தைகள் இக்காட்சிப் பொருட்களை ஏற்பாடு செய்திருந்தாலும், மிக அழகாக தாங்கள் கற்ற குறளையும் அதனைத் தாங்கள் எவ்வாறு பொருளுடன் புரிந்து கொண்டு விளக்க முடியும் என்றும் நிகழ்த்திக் காட்டினர்.

குழந்தைகளில் பெரும்பாலோர் தட்டுத்தடுமாறி தமிழில் பேசினாலும், திருக்குறளைத் தமிழிலேயே எழுதி வாசித்ததைப் பார்த்தபோது நான் உண்மையில் மனம் மகிழ்ந்தேன். அதுமட்டுமன்றி அக்குறளின் பொருளைத் தக்க உதாரணங்களோடு அவர்கள் விளக்கும் போது எவ்வகையில் திருக்குறளைப் பற்றிய அவர்களது புரிதல்  இருக்கின்றது என்பதனையும் என்னால் அறிய முடிந்தது. பொருளுணர்ந்து சொல்வது தானே பயன். இதனை சாஸ்தா அறக்கட்டளைச் சாதித்துக் காட்டியிருக்கின்றது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

இந்தப் போட்டிகளுக்குப் பின்னர் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கத்தில், மூன்று சொற்பொழிவாளர்களின் உரைகள் நிகழ்ந்தன. பெரும்பாலும் பெரியோர்கள் வந்து கலந்து கேட்டு பங்கெடுத்துக்கொண்டனர் . இந்த கருத்தரங்கில் கலிபோர்னியாவைச் சேர்ந்த திரு.நா.உதயபாஸ்கரன், ஹூஸ்டனைச் சேர்ந்த திரு.கரு.மலர்ச்செல்வன் ஆகியோருடன் எனது சொற்பொழிவும் இடம்பெற்றது.

எனது உரையில் திருக்குறளின் ஐரோப்பிய மொழிகளிலான மொழிபெயர்ப்புக்கள் பற்றிய தகவல்களைக் காட்சிப்படங்களுடன் விளக்கமளித்தேன். எனது உரைக்குப் பின்னர் எழுந்த கேள்விகளும், கருத்துக்களும் வந்திருந்தோர் இத்தகவல்களை மிகுந்த ஆர்வத்துடன் உள்வாங்கிகொண்டிருப்பதை எனக்குப் புலப்படுத்தியது. இது எனக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் நான் டெக்ஸாஸ் மானிலத்தில் இருந்த  ஒரு வார காலத்தில் இங்கு தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழிக்காக எடுக்கப்படுகின்ற முயற்சிகளைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ப்ளேனோ தமிழ்ப்பள்ளி, மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளின் அமைப்பாளர்களுடன் உரையாடியபோது அவர்கள் தொடர்ச்சியாக தமிழ்ப்பள்ளிகளைத்  தொய்வின்றி வாரா வாரம் நடத்தி வருவதைப்பற்றியும், குழந்தைகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் பற்றியும், பயன்படுத்தப்படும் பாட நூற்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது.

ஆஸ்டின், சான் அந்தோனியோ ஆகிய பகுதிகளில் அங்கு இயங்கும் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்ச்சங்கங்கள் என்னை சொற்பொழிவாற்ற அழைத்திருந்தன. அந்த  சந்தர்ப்பங்களில் இப்பள்ளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் சில தகவல்களைப் பெற முடிந்தது.

வட அமெரிக்காவைப் பொருத்தவரையில் பொதுவாகவே இங்கே தமிழ்ப்பள்ளிகளைத் தமிழகத்திலிருந்து இங்கு தொழிலுக்காக வந்து  இங்கேயே தங்கி விட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்னெடுத்து நடத்துகின்றனர். இப்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிவோர் தன்னார்வலர்களாக தம்மை இப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் பெற்றோர்களே. ஒருங்கிணைக்கப்பட்ட பாட நூற்கள் என்ற வகையிலான முயற்சிகள் தொடர்கின்றன என்ற போதிலும் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் ஏதாவது ஒரு வகையில் சிறப்பான முயற்சிகளை முன்னெடுத்துச் செயல்படுகின்றன. இந்த முயற்சிகளில் தன்னார்வலர்களாகச் செயல்படும் பெற்றோர்களின் பங்கு வியக்கத்தக்கதாயிருக்கின்றது.

மிகுந்த அர்ப்பணிப்புத் தண்மையுடன் சில பெற்றோர்கள் செயல்படுகின்றனர். தம் பிள்ளைகள் மட்டுமல்லாது ஏனைய குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் பயன்படும் வகையில் நடமாடும் நூலகத்தைச் சிலர் நடத்துகின்றனர். சிலர் வாரம் ஒரு வாசிப்பு பகுதி என தேர்ந்தெடுத்து அவற்றை வாட்ஸப் தொடர்பு சாதனம் வழி பகிர்கின்றனர். சிலர் திருக்குறள் விளக்கங்களை வாட்ஸப் செய்திப்பகிர்வாக தமக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.

தன்னார்வலர்கள் முயற்சிதான் என்ற போதிலும் அதில் கட்டுக்கோப்பும், பொறுப்புணர்ச்சியும் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர்களாகப் பலர் செயல்படுகின்றனர். அயல் நாட்டிற்கு, அதிலும் அமெரிக்கா என்ற பொருளாதார வளர்ச்சியும் பலமும்  பெற்ற நாட்டிற்கு தாங்கள் புலம்பெயர்ந்து விட்ட போதிலும், தமிழ் மொழி தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என்ற முனைப்புடன் இவர்கள் செயல்படுகின்றனர். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ஈடுபாடு அல்லது பெற்றோருக்கு மட்டும்தான் ஈடுபாடு என்ற நிலை அன்றி குழந்தைகளும் இவ்வகை நடவடிக்கைகளில் முழு மனதுடன் ஈடுபடும் அழகான அனுபவத்தை இங்கே நேரில் கண்டு மகிழ்ந்தேன். அத்தகைய அழகிய குடும்பம் தான் நண்பர் விசாலாட்சி வேலு தம்பதியரின் குடும்பமும். தங்கள் பெற்றோரின் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை மற்றும் அவர்கள் மேற்பார்வையில் இயங்கும் ப்ளேனோ தமிழ்ப்பள்ளி ஆகியற்றில் இவர்களது இரு குழந்தைகளான ரம்யா, ராமு ஆகிய இருவரின் ஈடுபாடும் முழுமையாக இருக்கின்றது. இப்படி மேலும் சில குடும்பங்களையும் காணும் வாய்ப்பு கிட்டிய போது நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற முதுமொழி நினைவில் எழுந்தது.

திருக்குறள் மனனப் போட்டியில் இந்த ஆண்டு 1330 குறளையும் ஒப்புவித்து சிறப்பு பரிசினைத்தட்டிச் சென்ற செல்வி சீதா அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த குழந்தை என்பது சொன்னால் தான் நமக்குத் தெரியும். மிகச் சரளமாகத் தமிழில் உரையாடவும், மேடையில் பேசவும் திறமைப்பெற்ற இப்பெண்ணிற்கு அவள் தமிழ் மொழி வளர்ச்சியில் மிக உறுதுணையாக இருந்து வரும் அவளது பெற்றோர்கள் சாந்தி, பாலாஜி தம்பதியர் பாராட்டுதலுக்குறியோர். இப்படி தங்கள் குழந்தைகளின் தமிழ் மொழிக்கல்விக்காகச் செயல்படும் பெற்றோரைச் சந்திக்கும் போது அயல் நாட்டிற்குச் சென்றாலும் தமிழை அவர்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார்கள்  என்ற நம்பிக்கை உரம் பெறுகின்றது.

வட அமெரிக்காவில் இயங்கக்கூடிய தமிழ்ப்பள்ளிகள் மட்டுமன்றி ஐரோப்பா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளிலும் தமிழ்ப்பள்ளிகளில் நடத்தப்படுகின்ற பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு தொடர்பான செய்திகளை உட்புகுத்த வேண்டியது மிக அவசியம். சான் ஆஸ்டின் தமிழ்ப்பள்ளியும் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய எனது சொற்பொழிவு நிகழ்வில் இந்தச் செய்தியை நான் முன்வைத்து உரையாற்றினேன்.

தமிழ் எழுதவும் வாசிக்கவும் படிக்கும் குழந்தைகள் தமிழர் வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில் செய்திகள் பாடத்திட்டங்களில் அமைய வேண்டும். உதாரணமாக தமிழ் மொழியின் எழுத்தின் ஆரம்பகால வடிவங்களான தமிழி எழுத்துக்கள், வட்டெழுத்துக்கள் ஆகியன பற்றியும் அவை படிப்படியாக இக்காலத்தில் நாம் அறியக்கூடிய வகையில் அமைந்திருக்கும் தமிழ் எழுத்து வடிவம் பற்றியும் சிறிய அறிமுகத்தை உயர் படிநிலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். அத்தோடு, தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்த ஆரம்பகால அச்சுப்பதிப்பு முயற்சிகள் பற்றி விவரித்து எவ்வகையில் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் நூல்கள் படிப்படியாக அச்சு வடிவம் பெற்றன என்ற தகவல்களையும் பாடத்திட்டங்களில் ஓரளவு புகுத்தலாம். தமிழ் மண்ணில் ஆட்சி செலுத்திய பாண்டிய, சேர, சோழ, பல்லவ மன்னர்களின் ஆட்சி பற்றியும், கட்டப்பட்ட கோயில்களைப் பற்றியும் சுவாரசியமான சிறிய கதைகளை உருவாக்கி அவற்றைப் பாடத்திட்டத்தில் இணைக்கலாம். சங்கப் பாடல்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து   அக்காலத்தில்  தமிழகத்துடன் ரோமானிய, கிரேக்க யவனர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்புகள் பற்றியும் அக்காலத்தில் புகழுடன் இயங்கிய கடற்கரை துறைமுகப்பட்டினங்கள் பற்றியும் தமிழர்களின் பண்டைய கடல் மார்க்கப் பயணங்கள் பற்றியுமான செய்திகளைத் தங்கள் பாடத்திட்டத்தில் இணைக்க முயற்சி எடுக்கலாம்.

தமிழ் மொழியை மட்டும் கற்கும் இளையோர் ஓரளவு பேசும் திறனைத் தக்க வைத்துக் கொள்வர். ஆனால், தமிழ் மொழியோடு தமிழர் வரலாற்றையும் சேர்த்தே கற்கும் குழந்தைகள் தமிழ் மொழி அறிந்தவர்களாகவும் தமிழ் உணர்வு நிறைந்தவர்களாகவும் வளர்வார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற கூற்று இன்று பொய்யாகிவிட்டது. உலகின் பல நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களில் குறிப்பிடத்தக்கோர் மேற்கொள்கின்ற சீரிய முயற்சிகளால் தமிழ் அழகாக வளர்ந்து  விரிவான வளர்ச்சியைக் கண்டு வருவதை எனது பல நாடுகளுக்கானப் பயணங்களின் போது நான் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களின் வழி அறிகின்றேன்.

டெக்ஸாஸ் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் வழியாக  அடுத்த  தலைமுறைக்குத்  தமிழ் மொழியை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தன்னார்வலர்களையும் பாராட்டி வாழ்த்துவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கின்றோம். தங்கள் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாற்றுச் செய்திகளை இணைக்க விரும்பும் தமிழ்ப்பள்ளிகள், எமது தமிழ் மரபு அறக்கட்டளையின்  முகநூல் பக்கமான Tamil Heritage Foundation, மற்றும் Subashini THF வழியாகத் தயக்கமின்றி தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் மொழியும் தமிழர் வரலாறும் நம் இரு கண்கள்!!

Wednesday, February 15, 2017

45. உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் மலேசியக் கிளை



மலேசியாவிற்கு வந்து சில வாரங்கள் அங்கிருந்து இப்போது மீண்டும் ஜெர்மனி திரும்பி விட்டேன். 2016ம் ஆண்டு தமிழகத்திற்கு களப்பணிக்காகச் செல்வதற்கு முன்னர் ஆறு நாட்கள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் வந்து அங்கு சில நாட்கள் தங்கி தமிழ் மரபு அறக்கட்டளையின் மலேசியக் கிளைக்கான சில பணிகளைச் செய்து விட்டு பின்னர் தமிழகம் புறப்படுவதாக நான் திட்டமிருந்தபடியால், டிசம்பர் 1ம் தேதி ஸ்டுட்கார்ட்டிலிருந்து புறப்பட்டு டிசம்பர் 2ம் தேதி காலையில் கோலாலம்பூர் வந்தடைந்தேன். நண்பர்கள் சந்திப்புடன் மலேசிய உணவுகளைச் சுவைப்பதே அலாதியான மகிழ்ச்சிதானே. அந்த வகையில் முதல் சில நாட்கள் மிக இனிமையானதாக எனக்குக் கழிந்தன.

நான் கோலாலம்பூரில் இருந்த அந்தக் குறுகியகால இடைவெளியில் நான் துணைப்பொதுச்செயலாளராக அங்கம் வகிக்கும் உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் ஒரு சந்திப்பு நிகழ்வினைச் செய்வது நன்மை பயக்கும் என்ற எண்ணத்தில் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். கடந்த ஆண்டு புதிய நிர்வாகம் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் செய்யப்படும் ஒரு சொற்பொழிவு நிகழ்வாக இதனை அமைக்கலாம் என இயக்கத்தின் தலைவர் திரு.ப.கு.சண்முகம் அவர்களும் அவரைச் சார்ந்த மலேசியக் கிளையின் குழுவினரும் ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். அதன் பலனாக, குறுகிய கால இடைவெளியில் டிசம்பர் ஆறாம் தேதி கிள்ளான் நகரில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியை ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் எனது உரை மைய நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் வரவேற்புரைக்குப் பின்னர் நிகழ்ச்சியைத் தலைமை ஏற்றுச் சிற்றுரை ஆற்றினார் செந்தமிழ்ச்செல்வர் திரு.ஓம்ஸ் தியாகராஜன் அவர்கள்.

2016ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது டென்மார்க் நகரின் தலைநகரான கோப்பன்ஹாகனில் உள்ள அரச நூலகத்தில் இருக்கும் தமிழ் ஓலைச்சுவடிகளின் மின்னாக்கப்பணி. 2016 மே மாதத்தில் ஐந்து நாட்கள் பயணமாக நான் சென்றிருந்த வேளையில், இந்த அரச நூலகத்தில் உள்ள முப்பத்தெட்டு ஓலைச்சுவடி நூல்களை, அதாவது, ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஓலைகளை மின்னாக்கம் செய்திருந்தேன். இவை தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஓலைச்சுவடிகளில் அடங்குவன. காரணம், இந்த ஓலைச்சுவடிகள், 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு லூத்தரன் கிறித்துவ மத போதகர்களாகச் சென்ற ஜெர்மானிய பாதிரிமார்கள் அங்கேயே தமிழ் மொழியைக் கற்று ஓலைச்சுவடியில் எழுதவும் கற்றுக் கொண்டு தங்கள் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி நூல்களும் குறிப்புக்களுமாகும்.

இந்த விபரங்களை விளக்கும் வகையில் இந்த ஓலைச்சுவடிகள் பற்றியும், அவை எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது பற்றியும், பின்னர் இவை எவ்வாறு இந்த அரச நூலகத்தில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன போன்ற செய்திகளையும் இந்த நிகழ்வில் வந்து கலந்து கொண்ட பார்வையாளர்களிடம் குறிப்பிட்டுப் பேசினேன். கோப்பான்ஹாகன் அரச நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் அனைத்தும் டென்மார்க் அரசிடம் ஜெர்மானிய மதபோதகர்களாக தமிழகத்தின் தரங்கம்பாடிக்குப் பணியாற்ற வந்த ஜெர்மானிய பாதிரிமார்கள், மற்றும் அவர்களது உதவியாளர்களாகப் பணியாற்றிய சிலர் கைப்பட எழுதியவையாகும். அவற்றுடன் தங்கள் பணிக்காலத்தில் இவர்கள் உள்ளூர் மக்களிடம் சேகரித்த சில சுவடி நூல்களும் இந்தச் சேகரிப்பில் அடங்கும். இந்தச் சுவடி நூல்கள் அனைத்துமே மிகக்கவனமாகத் தூய்மை செய்யப்பட்டு நூல் கட்டப்பட்டு வெள்ளைத்துணியினால் சுற்றப்பட்டு ஒரு காகிதப்பெட்டிக்குள் தனித்தனியாக வைக்கப்பட்டுச் சரியாக பெயர் ஒட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காணும் போது அவை அங்கே அந்த நூலகத்தில் பாதுகாக்கப்படும் முறைக்காக அவர்களைப் பாராட்டியது பற்றியும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களிடம் பகிந்து கொண்டேன்.

ஏறக்குறைய நூற்று இருபது பேர் இந்த நிகழ்வில் வந்து கலந்து சிறப்பித்தமை கிள்ளான் வாழ் மக்களில் பலருக்கு தமிழ் ஆய்வு தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வம் இருப்பதைக் காட்டுவதாக அமைந்தது. எனது உரைக்குப் பின்னர் பல கேள்விகள் எழுந்தன. அவற்றிற்குப் பதில் சொல்லும் வகையில் எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டேன். நல்ல பல செய்திகளை வந்திருந்தோரிடம் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியும் மன நிறைவும் எனக்கு ஏற்பட்டிருந்தது. இதனை என்னுடன் இணைந்து செயல்படுத்திய உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகத்தின் மலேசியக் கிளையின் பொறுப்பாளர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து பாராட்டுவது அவசியமே!

உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் ஏறக்குறைய நாற்பத்து இரண்டு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு இயக்கம். தமிழர் பண்பாட்டுக் கூறுகளை மையப்படுத்தும் வகையில் சீரிய நற்பணிகளைச் செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகு தழுவிய ஒரு மாபெரும் இயக்கம் இது. இடைப்பட்ட காலத்தில் நிர்வாகக் கோளாறுகள் சிலவற்றினால் நடவடிக்கைகள் ஏதும் செய்யப்படாமல் இருந்த சூழலில், கடந்த 2015ம் ஆண்டு புதிய செயலைவைக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, மலேசியாவைச் சேர்ந்த திரு.ப.கு சண்முகம் அவர்களைத் தலைவராகக் கொண்டும் டென்மார்க்கைச் சேர்ந்த திரு.தருமகுலசிங்கம் அவர்களைச் செயலாளராகக் கொண்டும் இந்த இயக்கம் இப்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்கியுள்ளது.

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கமானது உலகின் பல நாடுகளில் கிளைகளை அமைத்து தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சார விழுமியங்களை விரிவாக்கும் முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்றி வருகின்றது. தமிழ் மக்கள் வாழ்கின்ற ஒவ்வொரு நாடுகளிலும் அம்மக்களின் நிலைக்கேற்ற வகையில் இம்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மலேசிய சூழலில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்கச் சமுதாய நலனைக் குறிக்கோளாகக் கொண்ட பல நிகழ்ச்சிகளைக் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது. சர்வதேச கருத்தரங்கங்கள், பொங்கல் திருவிழா நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் மொழியின் சிறப்பினை வலியுறுத்தும் சந்திப்புக்கள், மலேசிய மண்ணில் தமிழ்ப்பணியாற்றிய தமிழ்ச் சான்றோர்களுக்கு சிறப்புச் செய்தல் என்ற வகையில் பல நடவடிக்கைகள் இந்த இயக்கத்தால் கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டமை நினைவு கூர்தல் அவசியம்.

மலேசியா மலாய், சீன, இந்தியர்கள் என்ற மூன்று பெரிய இனங்கள் கூடி வாழும் ஒரு நாடு. இங்கு மலாய் மற்றும் சீன இனித்தவர்களோடு சகோதரத்துவத்துடன் பழகும் தமிழ் மக்கள் அதே வேளையில் தமது தமிழ் இனத்தின் பண்பாட்டு கலை கலாச்சார விழுமியங்களை மறக்காதும் ஒதுக்காதும் தக்க வைத்துப் போற்றி வளர்த்து வருகின்றனர். இந்த முயற்சியில் மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை, ஒதுக்கப்பட முடியாதவை.

தமிழ் மொழி கல்வியை, மலேசியாவில் பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் பெறுகின்ற வாய்ப்பு என்பது அமைந்திருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறிதான். ஓரளவு கல்வி கற்று நிலையான தொழிலுக்கு வந்து விட்ட பெரும்பாலோர் தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை. தமிழ்ப்பள்ளிக்குத் தங்கள் குழந்தைகள் கல்வி கற்கச் செல்வதைச் சமூக அந்தஸ்து பாதிக்கும் ஒரு விசயமாகக் கருதி தேசிய ஆரம்பப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்கள் பெருகிக் கொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம், சமூகத்தில் தமிழ் இளைஞர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் நம் கண் முன்னே நிற்கின்றன. இளம் வயதிலேயே தகாத போதைப்பழக்கம், குண்டர் கும்பலில் தம்மை இணைத்துக் கொள்வது என்பது போன்ற தகாத நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளும் இளம் தலைமுறையினரின் நிலை பரிதாபகரமானது. இது ஒரு புறமிருக்க படிப்படியாக வளர்ந்து வரும் நாகரிக மோகத்தில் தமிழர் பண்பாட்டு இசை, நடனம், கூத்து ஆகியக் கலைகள் மைய நீரோட்டத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு உயர் கலைகள் என வர்ணிக்கப்படும் கர்நாடக சங்கீதமும், பரதமும், காப்பிய நாடகங்கள் மட்டுமே தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளில் மைய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. தமிழர் பாரம்பரிய நடனக்கலைகளான ஒயிலாட்டம், பறையிசை, கும்மி, கோலாட்டம், கரகாட்டம், கூத்து ஆகியன பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டுவிட்ட நிலையைப் பெருவாரியாக மலேசியச் சூழலில் காண்கின்றோம்.

ஆக, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மலேசியக் கிளை, மலேசிய சூழலில் தமிழ் மொழி, தமிழர் கலை பண்பாட்டு அம்சங்கள் ஆகியவை புத்துணர்ச்சி பெற்றுப் பொலிவுடன் மீண்டும் மக்கள் மத்தியில் வலம் வரத் தீவிர முயற்சிகள் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. இப்போது அமைந்திருக்கின்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் புதிய செலவைக் குழுவினர் ஒவ்வொருவருமே நீண்ட கால அனுபவமும் தமிழ் மக்களுக்குத் தொண்டாற்ற தீவிர ஆர்வமும் முனைப்பும் கொண்டவர்கள் என்பதோடு இந்த அமைப்பை முன்னெடுத்துச் செல்லக் கூடிய தகுந்த தகுதி கொண்டவர்களாக இருப்பது கூடுதல் பலமாக அமைகின்றது. மலேசிய சூழலில் தமிழ் மற்றும் கலாச்சாரப்பணி என்பதோடு உலகளாவிய அளவில் ஏனைய நாடுகளில் அமைந்திருக்கும் அமைப்புக்கள் வளர்வதற்கு உதவிக்கரம் நீட்டி மேலும் உலகளாவிய அளவில் உலகத் தமிழ்ப்பண்பாடு இயக்கத்தினை வளர்த்திட மலேசியக் கிளையினால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

தமிழால் ஒன்றிணைவோம்!

Wednesday, February 1, 2017

44. தூத்துக்குடி – கடலும் வாழ்வும்



தூத்துக்குடி பல வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்த ஒரு மாவட்டம். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அருகாமையில் இருந்தாலும் கூட, இந்த ஊரின் நில அமைப்பு இதற்கென்று சில தனித்துவமான தன்மையை வழங்கியிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.  2009ம் ஆண்டில் இரண்டு நாட்கள் பயணமாக தூத்துக்குடிக்கு நான் சென்றிருந்தேன். அச்சமயம் கடலோர மக்களின் தொழிலான உப்பு தயாரிப்பு பற்றி சில தகவல்களை நான் சேகரிக்க முடிந்தது. அதனைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக வெளியிட்டிருந்தேன். தூத்துக்குடியின் வரலாற்றுச் சின்னங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழும் பனிமயமாதா  திருக்கோயிலுக்கும் சென்று அந்தக்கோயிலின் சமய குருவை பேட்டி செய்து  தூத்துக்குடி பரதவர்கள் பற்றிய சில கட்டுரைகளைச் சேகரித்து அவற்றையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கட்டுரைகள் தொகுப்பு பகுதியான மரபு விக்கியில் இணைத்து வெளியிட்டோம். இவை விரிவான பல தகவல்களை ஆய்வு மாணவர்களுக்கு வழங்கும் கட்டுரைகளாகத் திகழ்கின்றன.

கடந்த ஆண்டு, 2016 டிசம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு நான் களப்பணிக்காகச் செல்ல திட்டமிட்டபோது என் பட்டியலில் தூத்துக்குடியின் பெயரையும் இணைத்திருந்தேன்.  கடல் சார்ந்த தொழில் என்பதுவும் நெசவுத் தொழிலும் தூத்துக்குடியின் பண்டைய தொழில்களில் மிக முக்கியம் பெருபவை. இந்த இரு வேறு தொழில்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சேகரிப்பது எனது நோக்கங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.

தூத்துக்குடி துறைமுகம் அயல்நாட்டவர்களுக்குப் பல ஆண்டுகளாக வணிகத்திற்கான மிக முக்கியப் பகுதியாக விளங்கியிருக்கின்றது. இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டே இப்பகுதிகளில் அயல்நாட்டாரின் கடல் வணிகம் தொடர்பான போக்குவரத்துக்கள் மற்றும் அதனை உறுதி செய்யும் வகையிலான இம்மாவட்டத்தில் உள்ள ஊர்களில் நிகழ்ந்த தொல்லியல் அகழ்வாய்வுகள் இக்கருத்துக்கு நல்ல சான்றுகளைத் தருகின்றன. இன்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்டால், இப்பகுதி அரேபிய மூர் இனத்தவரால் மிக விரும்பப்பட்ட ஒரு வணிகத்தலமாக விளங்கியமையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இக்காலகட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து தென் இந்தியாவிற்கு வாணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்களின் வருகை   தமிழக வரலாற்றில் மிக முக்கிய தாக்கத்தை  படிப்படியாக ஏற்படுத்தியது.  தூத்துக்குடியில் கடலில் மூழ்கி எடுக்கப்பட்ட முத்துக்களும் சங்குகளும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பணம் படைத்தோரால் விரும்பி வாங்கப்பட்டன. தென் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட மிளகு ஏலக்காய் போன்றவைகளும் ஐரோப்பாவில் மக்களின் உணவில் படிப்படியாக இடம் பிடிக்க ஆரம்பித்ததன் விளைவாக ஐரோப்பியர்கள் பெருமளவில் தமிழகத்திற்கு, அதிலும் குறிப்பாக கடற்கரை துறைமுகப்பட்டனமான தூத்துக்குடிக்கு வருவது முக்கியமாக கருதப்பட்டது.

அப்படி வருகை தந்த போர்த்துக்கீசியர்கள், உள்ளூர் பரதவ சமூக மக்களோடு இணைந்த வகையில் வணிகத்தில் ஈடுபட்டதோடு கத்தோலிக்க மதப்பிரச்சாரம் செய்து உள்ளூர் மக்களை தாங்கள் கொண்டு வந்த புதிய மதத்திற்கு மதமாற்றம் செய்த நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெறுகின்றன. அக்காலத்தில் ஏற்பட்டிருந்த  அரசியல் மாற்றமும், பலமிழந்த உள்ளூர் ஆளுமைகளும், சமூக நிலையும் இவ்வகை நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைந்தன. படிப்படியாக மதமாற்றம் செய்யப்பட்ட உள்ளூர் தமிழ் மக்களில் பலர் ஐரோப்பாவிலிருந்து கத்தோலிக்க  சமயத்தை ஏற்றுக் கொண்டனர். அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கிருத்துவ இயக்கங்கள் பல ஐரோப்பாவின் முக்கிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வந்ததன் விளைவாக இப்பகுதியில்  படிப்படியாக மதமாற்றம் என்பது நிகழ்ந்தது என்பதோடு அது சமூகத்தளத்தில் விரிவான முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்தியது.

அத்தகைய மாற்றங்களில் மிக முக்கியமானதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதக்கூடியதாகவும் அமைந்தது அக்கால கல்வி நிலை.  ஒரு சில சமூகத்திற்கு மட்டுமே கல்வி என்ற நிலை மாறி அனைவருக்கும் கல்வி என்ற ஒரு சமூக மாற்றம் இந்த வேளையில் நிகழ்ந்தது.  இந்த முயற்சியைத்  தூத்துக்குடியில் தம்மை நிலை நிறுத்திக் கொண்ட கிருத்துவ சமய அமைப்புக்கள் முன்னெடுத்தன.  இதற்கு ஒரு உதாரணமாக ஜி.யூ.போப் அவர்களது முயற்சிகளையும் அவர் பெயரில் இன்றும் இருக்கின்ற ஜி.யூ போப் உயர் நிலைப்பள்ளியைக் குறிப்பிடலாம்.

ஆரம்ப நிலைக்கல்வி, உயர் நிலைக்கல்வி என்பதோடு கல்லூரிகளை அமைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வெற்றி கண்டன இந்த கிறித்துவ சமய இயக்கங்கள். பொருளாதார ரீதியாக பெரிய மாற்றத்தை அளிக்கவில்லை என்ற போதிலும் கல்வி வாய்ப்பு கிட்டியமையால் அதனால் பலனடைந்து உயர்கல்வி கற்று தூத்துக்குடியின் குக்கிராமங்களிலிருந்து பெயர்ந்து நகரங்களுக்கு சென்றடைந்து அங்கு அரசு மற்றும் தனியார் துறையில் பணி புரியச் சென்றோர் பலர் உள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.

தூத்துக்குடியின் பண்டைய தொழில்களான முத்துக் குளித்தல் என்பது பரவலாக இன்று வழக்கில் இல்லை. கடலோர மீனவ மக்கள் மீன் பிடித்தலையும் சங்கு குளித்தலையும்தான் முக்கிய தொழில்களாகச் செய்து வருகின்றனர்.   மீனவர்களுக்கு இன்று பெரும் சவாலாக இருப்பது இலங்கை கடற்படையினர் வழியாக அவர்கள் சந்திக்கும் அபாயங்கள் எனலாம்.  தூரக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் நலமுடன் திரும்பி வருவார்களா என்பது தினம் தினம் ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் இருக்கின்ற சந்தேகமும் அச்சமும் தான்.

சங்கு குளித்தல் தொழிலை எடுத்துக் கொண்டால் பொதுவாக இத்தொழிலைச் செய்வோர் தூரக்கடலுக்குச் செல்வதில்லை. கடலின் உள்ளே பாய்ந்து தரை மட்டம் வரை சென்று மண்ணைக் கிளறி முத்தெடுக்கும் தொழில் மிகச் சிரமமானது. சங்கு குளிக்கும் ஒருவர் ஆழ்கடலில் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் இருக்கின்றார்.  படகிலிருந்து ஒரு குழாய் வழியாக வழங்கப்படுகின்ற ஆக்சிஜன் காற்றினை மூக்கில் சுவாசக்கருவியுடன் பொருத்திக் கொண்டு, ஒரு கையால் மண்ணைக் கிளரும் கருவியைக் கொண்டு ஆழ்கடல் மண்ணைக் கிளறுவதும் இன்னொரு கையால் தான் நிலையாக நிற்பதற்காக ஒரு நீண்ட இரும்புக் கம்பியை மண் அடிப்பரப்பில் குத்தி அதனைப் பிடித்துக் கொண்டும் ஒரு சங்கு குளிப்பவர் செயல்படுகின்றார். இது மிகக்கடினமான ஒரு தொழில். இப்படி சங்கு குளிக்கச் செல்வோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பல.

இவர்கள் சுவாசிப்பதற்காகப் படகிலிருந்து வழங்கப்படுகின்ற ஆக்சிஜன் காற்று ஒரு வித பெட்ரோலியம் கலந்த எண்ணையை இயக்குவதன் மூலம் கிடைக்கின்றது. இதனை நான் நேரில் பார்த்த போது அதிர்ச்சியுற்றேன். மிக அபாயகரமான வகையில் சுகாதாரக் கேடு நிறைந்த சூழலில் இவர்கள் பணிபுரிகின்றனர் என்பதுவும் இதனால் இப்பணியில் ஈடுபடுவோரில் பலர் மூச்சழுத்தம், நெஞ்சுவலி, சுவாசக் கோளாறு, தோல் நோய் என பல்வேறு  உடல் நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இக்கடற்கரையில் முத்துக் குளித்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் சிலரை அணுகிப் பேசியபோது அறிந்து கொண்டேன்.

சங்கு குளித்தல் மிக அபாயகரமான ஒரு தொழில் என்பதும் அதனைச் செய்யும் போது ஏற்படக்கூடிய விபத்துக்கள், உடல் ரீதியான சுகாதாரக்கேடுகள் ஆகியன பற்றிய போதிய விளக்கம் பலருக்கும் கிடைக்காமல் இருக்கின்றது என்பதும் வருந்த வைக்கும் உண்மை.  நான் சந்தித்து பேட்டி கண்ட சங்கு குளிக்கும் தொழிலாளி ஒருவர் தங்களுக்கு யாராகினும் சுகாதார விழிப்புணர்வு பற்றி விளக்கம் அளிக்க மாட்டார்களா என பல ஆண்டுகளாக காத்திருப்பதாகவும் ஏதாவது சமூக இயக்கங்கள் தங்களுக்கு ஆலோசனை வழங்க வர வேண்டும் என்றும் அதற்கு என்னால் உதவ இயலுமா, என்றும் கேட்டுக் கொண்டார். இம்மக்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது மருத்துவ ஆலோசனைகள் மட்டுமே. அவர்களுக்குப் போதிய ஆலோசனைகளை வழங்குவதற்கு சமூக நல அமைப்புக்கள் முன்வந்து உதவ வேண்டும் என்ற கோரிக்கையை இந்தப் பதிவின் வழி முன்வைக்கின்றேன்.
ஆழ்கடலுக்குச் சென்று கடலினுள்ளேயே இரண்டு மணி  நேரங்கள் இருக்கும் போது மூச்சுத் திணரல் ஏற்பட்டும் அசுத்தமான அமிலங்கள் கலந்த காற்றை சுவாசித்து மாரடைப்பும் இருதய நோயும் ஏற்பட்டு இறந்தவர்கல் பலர் இருக்கின்றனர் என்ற விபரங்களை அவர்கள் சொல்லிக் கேட்ட போது மனம் பதைக்காமல் இருக்க முடியவில்லை. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் இத்தொழிலில் இருக்கும் போதே இறந்து விடுகின்றனர் அல்லது ஏதாவது ஒரு கொடும் நோய்க்கு ஆளாகின்றனர் என்பது இத்தொழிலில் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிரமங்களை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

இத்தகைய அபாயகரமான ஒரு தொழிலாக இருந்த போதிலும் சங்கு குளிக்கும் தொழிலை எதற்காகச் சிலர் தொடர்ந்து செய்கின்றனர் என வினவிய போது தான் சங்குகளைப் பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.

இடது பக்கமாக திறந்த பகுதி அமைந்துள்ள சங்குகள் சாதாரணமானவை. இவை வீட்டு அலங்காரப்பொருட்களாக விற்பனைக்கு வருபவை. மாறாக, வலது பக்கம் திறந்த பகுதி அமைந்த சங்குகள் மிகப் பிரத்தியேகமானவை என்றும் இவை வலம்புரிச் சங்கு என அழைக்கப்படுகின்றன என்றும் அறிந்து கொண்டேன். இந்த வலம்புரிச்சங்கினை கிருஷ்ணபகவான் பாரதப்போரில் ஊதி ஓசை எழுப்புவது போல சித்திரங்களை நாம் பார்த்திருக்கலாம். இவற்றை வைத்திருப்போருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் என்றும் இதனால் பல பொருளாதார சிறப்புக்கள் ஒருவரை வந்து சேரும் என்றும் மக்கள் நம்புகின்றார்கள் என்றும் அறிந்து கொண்டேன். இந்தியா மட்டுமல்ல; உலகலாவிய அளவில் வலம்புரிச் சங்கிற்கு ஒரு தனி மதிப்பு இருப்பதால் ஒரு வலம்புரிச் சங்கு கோடிக்கணக்கில் விலை பேசப்படுகின்றதாம். ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா?

பொருளாதார வளத்தைக் கொடுக்கும் இச்சங்குகளை எடுக்கும் தொழில் கடற்கரையோர தமிழர்களின் பண்டைய தொழில்களில் சிறப்பான ஒரு தொழில். இதனைச் செய்யும் தொழிலாளர் நலனைக்காப்பதில் அரசுக்கும் சரி சமூக நலனின் அக்கறைக் கொண்டோருக்கும் சரி, நிச்சயமாக பங்கு இருக்கத்தான் வேண்டும்.

Wednesday, January 18, 2017

43. பாபநாசம் – காணி மலைவாழ் மக்கள்


மலைப்பகுதிகளில்  காடுகள் நிறைந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை நிலை ஏனைய மக்களின் வாழ்க்கைச் சூழலிலிருந்து பெரிதும் மாறுபாடு கொண்டது. கிழக்கு மலேசியாவின் அடர்ந்த காடுகளிலும் மேற்கு மலேசியாவின் கேமரன் மலை போன்ற மலைப்பகுதிகளிலும் வசிக்கும் மூரூட், கடாசான், டூசூன், செனோய், நெக்ரித்தோ போன்ற பூர்வ குடி மக்களின் வாழ்க்கை முறையில்  நகர்ப்புற மக்களின் தாக்கம் என்பது மிகக் குறைவு என்பதை நாம் அறிந்திருப்போம். இந்தப் பூர்வ குடிமக்களின் வாழ்வாதார நிலையில் மாற்றம் ஏற்படும் வகையில் கல்வி, தொழில் ஆகியவற்றில் அரசு சார்ந்த பிரத்தியேக நலத்திட்டங்களின் வழி படிப்படியாக பல மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இவ்வகை மாற்றங்கள் இவர்களின் சமூக அமைப்பின் தனித்தன்மைகளில் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது.

மலேசிய பூர்வகுடி மக்களைப் போல தமிழகத்தின் மலைப்பிரதேசங்களில் இன்னமும் பூர்வகுடியினர் வாழ்கின்றனர். அவ்வகை பூர்வகுடியினரான காணி மக்களை சில வாரங்களுக்கு முன்னர் சந்தித்து அவர்களுடன் ஒரு சில மணி நேரங்களைச் செலவிட்டு, அவர்களுக்கே உரித்தான பண்பாடு, வாழ்வியல் அம்சங்கள், மொழி, தற்கால சூழல் ஆகியனபற்றி கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

எனது அண்மைய தமிழக பயணத்தில் ஒரு நாள் நெல்லை மாவட்டத்தில் இருக்கின்ற பாபநாசம் நகருக்குச் சென்றிருந்தேன். இந்த பாபநாசம் அமைந்திருப்பது அடர்ந்த மலைப்பகுதிக்கு மிக அருகாமையில் தான். நெல்லை மாவட்டம், காரையர் அகத்தியர் காணி பழங்குடியின மக்களின் குடியிருப்பு பற்றி நான் சில தகவல்களை நெல்லை மாவட்ட ஆட்சியர் முனைவர். கருணாகரன்  வழி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டிய போது இப்பகுதிக்கு நேரில் சென்று இவர்களைப் பற்றிய பதிவு ஒன்றினை தமிழ் மரபு அறக்கட்டளைக்கான வரலாற்றுப் பதிவாகச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது. இதனை ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்த போது தாமும் இப்பதிவின் போது இணைந்து கொள்வதாகக் கூறி இப்பயணத்திற்கான ஏற்பாடுகளில் மிக உதவினார்.

காணி மக்கள் அடிப்படையில் கேரளாவின் மலைப்பகுதியிலிருந்து பெயர்ந்து இப்பகுதிக்கு  வந்தவர்கள். இவர்களுக்கென்று பிரத்தியேகமான ஒரு மொழி இருக்கின்றது. அதன் பெயர் காணி மொழி,  இந்தக் காணி மொழிக்கு எழுத்துரு இல்லை, பேச்சு வழக்கு மட்டும்தான். காணி மக்களில் வயதில் மூத்தோர் இந்த மொழியை அறிந்தோராக இருக்கின்றனர். இம்மொழியில் பாடல்களும் இறைவழிபாடுகளும் இன்றும் வழக்கில் இருந்தாலும் கூட இளைஞர்களோ சிறார்களோ இந்த மொழியை அறியாதவர்களாகவே உள்ளனர். ஆக வழக்கொழிந்து வரும் மொழிகளில் ஒன்றாக இந்த மொழி உள்ளது.   இவர்களில் பலர் தமிழும் மலையாளமும் கலந்த வகையில் அமைந்த  ஒரு மொழியையும் பேசுகின்றனர். ஆனால்,  பள்ளிகளில் சிறார்கள் தமிழ் மொழி கற்பதால் அவர்கள் தமிழ் பேசுவதை நடைமுறையில் கொண்டிருக்கின்றனர்.

காணி குடியிருப்பில் நான் உலாவிக்கொண்டிருந்த போது அங்கு 107 வயதுடைய பெண்மனி ஒருவர் இருப்பதாகவும் அவருக்குக் காணி மொழி பேசத்தெரியும் என்பதோடு பாடவும் தெரியும் என்றும் அம்மக்கள் எனக்கு தகவல் வழங்கினர். அந்த மூதாட்டியைச் சென்று சந்தித்தோம். அவரிடம் பேசச்சொல்லி கேட்டு பாடல்கள் பாடத்தெரியுமா என்று கேட்ட போது காணி மொழியில் திருமண நலுங்குப் பாடல்களும் தமிழ் மொழியில் கிருத்துவ மறை பாடல்களயும் பாடிக்காட்டினார். அவரிடம் நேரில் சென்று நாங்கள் சந்தித்ததில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. மறைந்த அவரது கணவர் அந்தக் கிராமத்தின் தலைவராக இருந்தவராம். அவர்கள் காலத்திலேயே கிறித்துவ மதத்திற்கு மாறிக்கொண்டதால் கிறித்துவ இறைப்பாடல்களையும் கற்றிருக்கின்றார் இம்மூதாட்டி. அவர் கணவர் பற்றி குறிப்பிடும் போது அவர் நிரம்பப்படித்தவர் என்றும் தானும் ஒரு சில ஆண்டுகள் பள்ளியில் படித்ததாகவும் அதனால் தமக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியும் என்றும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்தவாறே எங்களிடம் தெரிவித்தார்.

காணி மக்களின் இறை வழிபாட்டு அம்சங்களை அறிந்து கொள்வதும் மலைவாழ் மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளின் தன்மைகளைப் புரிந்து கொள்ள உதவும் என்பதால் அம்மக்களை அவர்களது வழிபாட்டு முறைகள், கடவுள் பெயர்கள், உருவம் என சில தகவல்களைக் கேட்டு பதிந்து கொண்டேன்.

காணி மக்கள் தாய் தெய்வ வழிபாட்டை கடைபிடிப்பவர்கள். இவர்கள் வழிபடும் தெய்வம் காணி அம்மன் என்றே அழைக்கப்படுகின்றார். காணி அம்மன் இருக்கும் கோயிலுக்குச் சென்று கோயிலையும் இவர்கள் வணங்கும் தெய்வத்தையும் பார்த்த போது சற்றே ஆச்சரியம் மேலோங்கியது. ஏனெனில் தமிழகத்தின் பல பழமையான வழிபாட்டு மையங்களில் இருப்பதைப் போல ஒரு கல்லை வைத்து அதனை மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரித்து அதன் அருகில் ஒரு தட்டில் எலுமிச்சை பழங்களும் சூடம் போன்றபொருட்களையும் வைத்து வழிபடுகின்றனர்.  எனது தமிழகப்பயணத்தில் பற்பல இடங்களில் கற்களை பெண் தெய்வங்களாக, அம்மனாக வைத்து வழிபடும் வழக்கம் இருப்பதைப் பார்த்து புகைப்படம் எடுத்திருக்கின்றேன். சப்த கன்னிகள் வழிபாட்டில் பெண் தெய்வங்களின் உருவங்கள் அமைந்திருப்பதைச்  சிலர் பார்த்திருக்கலாம். பல இடங்களில் இந்த சப்த கன்னியர்கள் வெவ்வேறு அளவிலான கற்களை வரிசையாக வைத்து அவற்றை ஏழு கன்னியர்களாக உருவகித்து வழிபடும் வழக்கம் இருக்கின்றது.

தாய் தெய்வ வழிபாடு என்பது மிகப் பழமையானது.  மனித நாகரிகத்தின் தோற்றத்தை ஆராய முற்படுகையில் மக்களின் கடவுள் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகின்ற இடங்களில் எல்லாம் பண்டைய தெய்வங்களாக நமக்கு அகழ்வாய்வுகளில் கிடைப்பவையாக அமைப்பவை தாய் தெய்வங்கள் தாம். மனிதகுலம் இயற்கையை கடவுளாக நினைத்து தங்களைப் பாதுகாக்கும் கடவுளாக ஒரு உருவத்தை உருவாக்க முனைந்தபோது அவர்கள் சிந்தனையில், குழந்தையைப் பெறுகின்ற உருவத்துடன் அல்லது கற்பம் தரித்த வடிவில் அமைந்த பெண் உருவம் அல்லது கையில் குழந்தையை ஏந்திக்கொண்டிருக்கும் ஒரு தாயின் உருவம் என்பன முக்கியமானவையாக அமைந்தன. இதனை உலகின் பல நாடுகளில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளின் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. இதற்கு ஒரு உதாரணமாக தற்சமயம் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரமான வியன் நகரில் இருக்கும் 40,000 ஆண்டு பழமையானது எனக்குறிப்பிடப்படும் தாய்தெய்வத்தின் சிலையைக் குறிப்பிடலாம். இத்தகைய அடிப்படையில் தான் பாபநாசம் காரையார் குடியிருப்பில் வாழும் காணி மக்களின் வழிபாட்டுக் கடவுளாக ஒரு பெண் தெய்வமும் அமைந்திருக்கின்றது என்பது சிறப்புடன் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது.

காணி குடியிருப்பு அமைந்திருக்கும் சூழல் காட்டின் மையப்பகுதி. நாங்கள் அங்கு சென்றிருந்த போது வனத்துறையின் பாதுகாப்பு அதிகாரிகளும் எங்களுடன் துணையாக வந்திருந்தனர். காட்டிற்குள் வெவ்வேறு இடங்களில் மக்கள் குடியிருப்பு என்பது அமைந்திருக்கின்றது. மக்கள் இன்னமும் ஓலையால் நெய்யப்பட்ட கூரைகளும் மண்ணைக் குழைத்து உருவாக்கிய சுவர்களைக் கொண்ட வீடுகளிலும் வாழ்கின்றனர். ஒரு சிலர் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கின்றனர். போக்கு வரத்துக்கு மோட்டார் சைக்கிள் அவர்களுக்கு மிக உதவுவதாக இருக்கின்றது. காட்டிற்குள்ளே கடைகள் ஏதும் இல்லை. மலையிலிருந்து கீழ் பகுதிக்கு வந்துதான் அவர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கின்றது. மருத்துவ தேவைகள் எனும் போது பெரும்பாலும் அவர்கள் மூலிகை வைத்தியங்களை வழக்கில் கடைபிடிப்பவர்களாக இருக்கின்றனர். நான் அங்கிருந்த வேளையில் என்னை ஒரு மூலிகை மருத்துவரின் குடிலுக்கு அழைத்துச் சென்று அவர் மருந்து இடிக்க பயன்படுத்தும் உரலைக் காட்டில் சில மூலிகை இலைகளையும் மூலிகை மரங்களையும் அவற்றை எவ்வகையான  வியாதிகளுக்கும் உடல் சுகவீனத்திற்கும் பயன்படுத்துகின்றனர் என விளக்கிக் கூறினர்.

இந்தக் காணி மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதி தூய்மையாக இருக்கின்றது. குப்பைகள் இல்லை. மரங்களுக்கிடையே குடில்கள் அடுத்தடுத்தார்போல அமைந்திருக்கின்றன. இவர்கள் இல்லங்களில் கழிப்பறைகள் இல்லை. இதனை கருத்தில் கொண்டு இவர்கள் வீடுகளுக்கு தனித்தனி கழிப்பறைகளை வழங்கும் நிகழ்வும் நான் சென்றிருந்த வேளையில் நிகழ்ந்தது. இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் முனைவர்.கருணாகரன் அவர்களே செயல்படுத்தினார். அதுமட்டுமன்றி நாங்கள் சென்றிருந்த போது அங்கே வாழ்கின்ற எட்டு முதியோருக்கு ஓய்வூதியத்தொகையையும் மாவட்ட ஆட்சியர் செய்தார் என்பதோடு அங்குள்ள பள்ளி விரிவாக்கம் பற்றியும் அங்கு தேவைப்படும் நடமாடும் விரைவு மருத்துவ வண்டி பற்றியும் மக்களிடம் தகவல் கேட்டறிந்து உடன் இவை செயல்படுத்தத் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார்.

இங்கு இளையவர்கள் படிப்பதற்காக ஒரு சிறிய பள்ளிக்கூடம் இருக்கின்றது. உயர் நிலைக்கல்வி படிக்க இளையோர் மலையிலிருந்து கீழே வந்து பாபநாசம் நகருக்குத்தான் வரவேண்டிய சூழல் இருக்கின்றது.  இங்கு ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமம் செல்ல ஒரு மரத்தாலான தொங்கு பாலம் அமைத்திருக்கின்றார்கள். அதில் நடந்து ஆற்றைக்கடந்துதான் நாங்கள் அடுத்த கிராமத்தைச்சென்றடைந்தோம்.

காரையார் காணி குடியிருப்பு அமைந்திருக்கும் இடம் இயற்கை சூழல் நிறைந்த, இதமான சீதோஷ்ணம் நிறைந்த ஒரு பகுதி. பல காட்டு விலங்குகள் இங்கே உலவுகின்றன. எங்கள் பயணத்தில் கூட கூட்டமாக வந்த ஒரு காட்டெருமைக் கூட்டத்தை தூரத்திலிருந்து பார்த்து ரசித்தோம்.  இதனை நோக்கும் போது வன விலங்குகளின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும்   இயற்கை சேதமடையாத முறையிலும் இந்தக் குடியிருப்பு மக்களின் வாழ்வாதார தேவைகளும் கல்வித்தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டியது மிக முக்கியம். இந்த காரையார் காணி மக்களைப் போல இன்னமும் தமிழகத்தின் காட்டுப் பகுதிகளில் வாழ்கின்ற மலைவாழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்கள் ஆவணப்படுத்தப்பட்டு பதியப்படுவதோடு அவை பற்றிய தொடர் ஆழ்வுகளும் நிகழ்த்தப்பட வேண்டியது மிக மிக அவசியம்.