Thursday, June 22, 2017

61. பிரான்சில் தமிழ் ஓலைச்சுவடிகள்



14 மில்லியன் ஆவணங்களைத் தன்னகத்தே கொண்ட மாபெரும் நூலகம் பிரான்சு தேசிய நூலகம். உலக மொழிகள் பலவற்றின் பழம் நூல்களும் ஆவணங்களும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. இந்திய மொழிகளில் தமிழ் மொழிகளில் எண்ணிக்கையில் அதிகம் கொண்ட சேகரத்தைக் கொண்டுள்ளது இந்த நூலகம். இதன் அரிய ஆவணச் சேகரங்கள் பகுதியில் 578 தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த தமிழ்ச்சுவடிகளையும் ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து குறிப்பிட்ட சில ஓலைச்சுவடிகளையும் கையெழுத்து ஆவணங்களையும் மின்னாக்கம் செய்து வர, கடந்த வாரம் அதாவது ஜூன் மாதம் 15ம் தேதி பிரான்சின் தலைநகரமான பாரீசுக்கு நான்கு நாட்கள் சென்றிருந்தேன்.

பிரான்சு தேசிய நூலகம் Bibliothèque nationale de France என்று பிரஞ்சு மொழியில் அழைக்கப்படுகின்றது. இந்த நூலகத்தின் நான்கு தனிப்பகுதிகள் பாரீசின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருக்கின்றன. நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக மின்னாக்கம் செய்யச் சென்றிருந்த பகுதி அரிய சுவடிகள் ஆவணப்பாதுகாப்பகம் அமைந்திருக்கும் ஐந்து மாடிக் கட்டிடம். இங்கு மூன்றாம் தளத்தில் தான் அரிய ஆவணங்களின் சேகரங்கள் ஆய்வாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இங்குச் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஆவணங்கள் வெவ்வேறு காலகட்டத்தைச் சார்ந்தவை. சில நூல்களைப் பார்த்த போது இவ்வளவு பெரிய அளவில் நூல்களைச் செய்தனரா, என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

உலகின் பல நாடுகளில் பல கால கட்டங்களில் நூல்கள் உருவாக்கப்பட்டன. பழமையான இந்த நூல்கள் உலக வரலாற்றின் முக்கியச்சான்றுகளாக அமைந்திருப்பவை. இத்தகைய அரிய நூல்களையும் ஆவணங்களையும் பெறுவதில் உலகின் முன்னணி நூலகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். பிரித்தானிய நூலகம், ஹார்வர்ட் நூலகம், பெர்லின் நூலகம் போன்று இந்த பிரான்சு தேசிய நூலகமும், அத்தகைய பழம் நூல்களை ஏதாவது ஒரு வகையில் பெற்று பாதுகாத்து வருகின்றது. இந்த நூல்களைப் பார்த்து ஆய்வு செய்ய இவை அனுமதிக்கின்றன என்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பெறும் பேறு எனக் கருதுகின்றேன்.

தமிழகத்திற்கு வெளியே பல்வேறு காரணங்களால் கொண்டு செல்லப்பட்ட தமிழ் நூல்கள் ஆங்காங்கே பாதுகாக்கப்படுகின்றன என்ற செய்திகளை சில ஆய்வறிக்கைகளில் காணமுடிகின்றது. இந்த பிரான்சு தேசிய நூலகத்தின் சேகரிப்புக்களை  இணையத் தேடலில் நான் அறிய வந்த பின்னர் இந்த நூல்களை வந்து பார்த்து ஆராய்ந்து அவற்றில் சிலவற்றை மின்னாக்கம் செய்ய வேண்டும் என அனுமதி கோரி நூலகப் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் அனுப்பினேன். எனது கோரிக்கையை ஏற்று, தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி அறிந்து இவற்றை வந்து பார்த்து ஆராய அனுமதி வழங்கிய நூலகப் பொறுப்பாளர்களுக்கு நிச்சயம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

நூலகப் பட்டியலில் 578 தமிழ் நூல்களின் பெயர்கள் இருந்தன. பெரும்பாலானவை ஓலைச்சுவடிகளாகவும் மற்றும் சில கையெழுத்து நூல்களாகவும் காணப்பட்டன. அவற்றில் திருவள்ளுவர் குறள், குறள், வீரமாமுனிவர் குறளுறை, பரிமேலழகர் உரை, அவ்வைப்பாடினகுறள், மூதுரை, நீதிசாரம், விவேகசாரம், உலகநீதி, சுகிர்தமனிமாலை, கொலைமறுத்தல், சந்தனக்கொறடு, சாமுத்திரிகாபலாபலன், வயித்தியம், தன்மாதிரி உடற்கூறு, மணிமேகலை மூலம், பரதம், மாரியம்மன் பாடல்கள், சாதி நூல், மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், எண் சுவடி, பிரசங்கம் எனப் பல நூல்கள் உள்ளன. இவற்றில் 15 சுவடி நூல்களை அங்கிருந்த வேலையில் நான் மின்னாக்கம் செய்து வந்துள்ளேன். அவை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் படிப்படியாக வலையேற்றப்படும் என்ற செய்தியை வாசகர்களுக்கு அறியத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் பார்வையிட வேண்டிய நூல்களின் பட்டியலை என் வருகைக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே நூலக அதிகாரிக்கு நான் அனுப்பி வைத்து விட்டேன். என் பெயரில் நான் பட்டியலிட்டிருந்த 15 நூல்களும் எனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த மின்னாக்கப் பணியில் என்னுடன் இணைந்து கொண்டு உதவி செய்வதற்காக பிரான்சில் வசிக்கும் நண்பர் சாம் விஜய் அவர்களும் உடன் வந்து முதல் நாள் இணைந்து கொண்டார். எங்களுக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு அரிய ஆவணங்கள் உள்ள மூன்றாம் தளத்திற்குச் சென்று அங்கு சில அடிப்படை சோதனைகளை முடித்த பின்னர் எங்களுக்காக வைக்கப்பட்டிருந்த ஓலைகளை அங்கிருந்த ஒரு ஊழியர் காட்டினார். அனைத்து ஓலைக்கட்டுக்களையும் எடுத்துப்பார்க்க அனுமதி வழங்கப்படுவதில்லை. மாறாக ஒரு நேரத்தில் ஒரு சுவடிக்கட்டு என்ற வகையில் தான் அனுமதி அளிக்கின்றனர். முதலில் நமக்கு வேண்டிய சுவடிக்கட்டை ஒரு ஊழியரிடமிருந்து பெற்ற பின்னர் இன்னொரு ஊழியர் நாம் எடுத்துச் செல்லும் அந்தச் சுவடிக்கட்டின் குறிப்பு எண்ணைக் கணினியில் பதிகின்றார். அவர் அனுமதி அளித்த பின்னரே சுவடிக் கட்டு நம் கைக்குக் கிடைக்கின்றது.

சுவடிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தூய்மையான பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பெட்டிக்கும் அதன் குறிப்பு எண் வழங்கப்பட்டுள்ளது. சுவடிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒரு மென்மையான வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்டிருக்கின்றன. சுவடிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் வெவேறு வகை பனை ஓலைகளால் வெவ்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டவை என்பதை ஒவ்வொன்றையும் தொட்டு ஆராயும் போதே அறிய முடிகின்றது. தமிழ் எழுத்தர்கள் எழுதி உருவாக்கிய பனை ஓலைச் சுவடி நூல்களோடு தமிழகத்துக்கு வந்து அங்கே தமிழ் கற்று வாழ்ந்த ஐரோப்பிய பாதிரிமார்களின் கையெழுத்தில் அமைந்த சுவடி நூல்களும் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன என்பதும் ஒரு சிறப்பு.

இங்குள்ள சேகரத்தில் குறிப்பிடத்தக்க மூன்று நூல்கள் உள்ளன. ஒன்று 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வழக்கில் இருந்த தொழில்கள், அத்தொழில்களைச் செய்த மக்களின் சமூகக் குறிப்புக்கள், ஆண் பெண் அவர்களின் உடையலங்காரத்துடன் கூடிய 200க்கும் மேற்பட்ட கையால் தீட்டப்பட்ட ஓவியங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று இங்கிருக்கின்றது. இன்றைக்குப் பதிவு செய்ய நாம் பயன்படுத்தும் கேமரா போன்ற கருவிகள் இல்லாத அக்காலகட்டத்தில் மிகத் தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்கள் இவை. இவற்றை 1830ம் ஆண்டில் வரைந்து உருவாக்கியவர் Mr. Philippe Etienne Ducler (1778-1840) என்பவர். இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்களின் உடையலங்காரம் எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டறிய உதவும் மிகச் சிறந்த ஆவணங்களுள் ஒன்று இது என நாம் தாராளமாகக் குறிப்பிடலாம்.

அதே போல, தமிழகத்தில் தாம் பார்த்த இறைவடிவங்களின் தோற்றத்தை ஓவியங்களாக வரைந்து அத்தெய்வங்களின் பெயர்களைத் தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும் வழங்கியிருக்கின்றனர். இது கோயில்களில் இருக்கின்ற சிற்பங்களின் பல்வேறு வடிவங்களைப் பதிந்து வைத்த சிறப்பானதொரு ஆவணம் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்துக்கு கிருத்துவ மதம் பரப்பும் நோக்கில் வந்த பாதிரிமார்களில் இத்தாலியிலிருந்து தமிழகம் வந்த வீரமாமுனிவர் என்ற கொண்ஸ்டான்சோ பெஸ்கி அவர்களைப் போல ரோபெர்ட்டொ டி நோபிலி அவர்களும் குறிப்பிடத்தக்கவர். இவர் இன்று கிருத்துவ மறை நூல்களில் மறை, வேதம், அருள் போன்ற சொற்கள் இடம்பெறக் காரணமாக இருந்தவர். அவர் கைப்பட தமிழில் எழுதிய நூலான "ஞானயுபதேசம்" என்ற தமிழ் நூல் இந்த நூலகத்தில் இருக்கின்றது. இதில் 16ம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த தமிழ் எழுத்து முறையை நன்கு காணலாம். இப்படிப் பல அரிய பொக்கிஷங்களைக் கொண்டிருக்கின்றது பிரான்சின் தேசிய நூலகம்.

இந்தச் சுவடி நூல்கள், அவை எழுதப்பட்ட நிலமான தமிழகத்தில் இன்று இல்லை என்றாலும்,  ஐரோப்பாவில் மிகப் பாதுகாப்பாக இவை வைக்கப்பட்டுள்ளன என்பது ஆறுதல் அளிக்கும் செய்தியே. ஆர்வம் உள்ள ஆய்வாலர்களுக்கு இவை ஆய்வு நோக்கத்திற்காகப் பார்வையிட  வழங்கப்படுகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளை  இத்தகைய அரிய ஆவணங்களைத் தொடர்ந்து மின்னாக்கம் செய்வதோடு உலகளாவிய அளவில் இந்த அரிய தமிழ் பழம் ஓலைச் சுவடிகள் இணையத்தின் வழியாக பார்வையிட இலவசமாகவும் வழங்குகின்றது என்பதைத்   தெரிவிப்பதில் பெருமையும் மகிழ்வும் கொள்கின்றோம்.

Wednesday, June 14, 2017

60. தென்னாப்பிரிக்காவில் தமிழ்​



உலக நாடுகள் பலவற்றில் தமிழர் குடியேற்றம் என்பது பன்னெடுங்காலமாக நடந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழர்கள் குடியேற்றம் என்பது இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டது. அப்போதைய தென்னாப்பிரிக்க ஆங்கிலேய காலணித்துவ அரசின் ஆட்சியில் கரும்புத் தோட்டங்களில் பணி புரிய தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களில் பெரும்பாலோர் தமிழக நிலப்பரப்பைச் சார்ந்தோர். ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த இவர்களில் ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினாலும் பலர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்று தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்.

தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் உள்ளூர் சூலு இன மக்கள். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து உழைக்க வந்த இந்தியர்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை உள்ளூரில் ஆரம்பக் காலம் முதல் நிகழ்ந்த பல சம்பவங்கள் சாட்சிகளாக நமக்குக் காட்டுகின்றன. தற்போதும் கூட டர்பன் நகரத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் இந்தியர்கள் வாழும் பகுதி என்று பீனிக்ஸ் பகுதியும் அதற்கு எதிர்புறமாக உள்ள பகுதி சூலு மக்கள் வாழும் பகுதி என்றும் அமைந்திருப்பதைக் காணமாம். ஆயினும் பெரிய அளவிலான பிரச்சனைகளோ, இனக்கலவரமோ என்பது இங்கு இல்லை என்பது ஒரு மிக நல்ல விசயம்.

தென்னாப்பிரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் மேல் அதிகப் பற்று கொண்டவர்கள். தமிழ் உணர்வாளர்கள். பலருக்குத் தமிழ் மொழி பேசத்தெரியாது ந்ராலும் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் ஓரளவு தமிழ் பேசவும், பிறர் பேசுவதை நன்கு புரிந்து கொள்ளவும் முடியும் வகையில் தங்கள் தமிழ் அறிவை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தமிழர் விழாக்களை நடத்துவதைப் பெருமையாக நினைக்கின்றனர். இங்கு சில இந்து சமயக் கோயில்களும் இருக்கின்றன. தமிழர் பண்பாட்டு உடைகளை அணிவதையும், கலைகளைக் கற்பதையும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதையும் மகிழ்வுடன் செய்கின்றனர்.
2015ம் ஆண்டு உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தேன். அன்று பட்டமளிப்பு விழாவின் விருந்து நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒரு பெரியவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்தான் திரு.செல்வன். டர்பன் நகரில் இயங்கும் மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையின் தலைவராகச் செயலாற்றுபவர். அவரோடு உரையாடியதில் மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலை பற்றி சில தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த எம்டிடிஎஸ் மண்டபத்தின் வலது புறத்தில் இந்தப் பாடசாலையைக் கட்டி அமைத்திருக்கின்றார்கள் . கட்டிடத்தின் இரண்டு மாடிகளில் தமிழ்ப்பாடசாலையின் வகுப்புக்கள் நடக்கின்றன.

பாடசாலையைச் சென்று பார்க்கலாமா, என நான் வினவிய உடன் சற்றும் தயங்காது என்னை அழைத்துக் கொண்டு சென்றார் திரு.செல்வன். இந்தப் பள்ளி வகுப்பறையைத் திரு.நடேசன் என்பவர் திறந்து வைத்தார் என்ற தகவலை முன்வாசல்பகுதியில் உள்ள அறிவிப்பில் காண முடிந்தது. மாடியில் ஏறிச்சென்று பள்ளியின் அறைகளைப் பார்வையிட்டோம். அடுத்தடுத்ததாக சில அறைகள் அந்த முதல் தளத்தில் இருந்தன. பிறகு மேல்மாடியில் இருக்கும் அலுவலக அறைக்கும் என்னை அழைத்துச் சென்று அங்குள்ள புகைப்படங்களைக் காட்டி இந்த மியர்பேங் பள்ளிக்கூடத்தின் ஆரம்பக் கால முயற்சிகள், பின்னர் படிப்படியான வளர்ச்சி, இன்றைய நிலையில் தமிழ் கற்க வருகின்ற தமிழ் மக்களின் ஆர்வம் ஆகியவற்றைப் பற்றி விளக்கினார்.

1936ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையும் அதற்கு அடிப்படையாக இருக்கும் தமிழ்ச்சங்கமும். தொடர்ந்து பல தமிழார்வளர்களின் முயற்சியால் தமக்கென்று ஒரு கட்டிடம், மண்டபம் என மிகச் சிறப்பாக இன்று வளர்ந்திருக்கின்றது இந்த மியர்பேங்க் தமிழ்ச்சங்கமும் தமிழ்ப்பாடசாலையும். இது இப்பாடசாலைக்கு மட்டுமன்றி உலகத்தமிழர்களும் பெருமை சேர்க்கும் ஒரு விசயமல்லவா?

அன்றைய விருந்து நிகழ்வில் தமிழிசைப் பக்திப்பாடல்கள் முடிந்து தமிழ் திரைப்பட பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர் இசைக் கலைஞர்கள். பாடகர்கள் அனைவருமே தமிழ் பேசத்தெரியாத நிலையிலும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு பாடுகின்றார்கள். ஆனாலும் உச்சரிப்பில் தவறுகளை அதிகமாகக் காணமுடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் இத்தகைய இசைக்கலை ஆர்வம் நிறைந்த இளைஞர்களைக் காண்பதில் மனதிற்கு உவப்பாகவே இருந்தது. தமிழைப் பிழையின்றி பேச முடியாவிட்டாலும் கூட தமிழ்ப்பாடல்களும் தமிழிசையும் இந்த இளைஞர்களை ஈர்த்திருப்பதைக் காணமுடிகின்றது.

பட்டமளிப்பு விழாவும் ஏனைய அதிகாரப்பூர்வ நிகழ்வுகளும் முடிந்த பின்னர் டர்பன் நகரைச் சுற்றிப் பார்க்கவேண்டும் எனத் திட்டமிட்டோம்.. என்னோடு மலேசிய நண்பர்கள் திரு.ப.கு.சண்முகம் தலைமையிலான குழுவினர், இந்து, சாம் விஜய், கனடா நண்பர் திரு,ராஜரட்ணம் ஆகியோரும் இருந்தமையால் அனைவரும் இணைந்தே பயணம் செய்தோம்.

தென்னாப்பிரிக்கத் தோழி கோகியும் அவர் கணவர் திரு.சின்னப்பனும் திங்கள் கிழமை, அதாவது புனித வெள்ளி முடிந்த வாரத்தின் முதல் திங்கள்கிழமை, அருகாமையில் இருக்கும் புற்று மாரியம்மன் ஆலயத்தில் விசேசம் இருப்பதாகவும் அங்கு வந்து பார்க்க விருப்பம் இருக்கின்றதா என்றும் கேட்டனர். வேறு இடங்களுக்குச் செல்வதற்கு முன்னர் ஆலயம் சென்று பார்த்து விட்டு வரலாமே என்று எனக்கும் அது சரியான யோசனையாகவே தோன்றியது. மாரியம்மன் ஆலயத்தைப் பார்த்து விட்டு அருகாமையில் இருக்கும் முருகன் கோயிலும் சென்று வரலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். திரு.சின்னப்பன் அவர்களின் மகள் சிவானியும் ஒரு கார் வைத்திருக்கின்றார்.ஆக எங்களை இவர்கள் இருவரும் ஹோட்டலிலிருந்து கோயிலுக்குத் தங்கள் காரிலேயே அழைத்துச் சென்று விட்டனர். நாட்டியப்பள்ளி வைத்து நடத்தி வரும் சிவானி ஒரு வக்கீலாகவும் படித்து பட்டம் பெறும் நிலையில் இருக்கின்றார்.

கோயிலை நெருங்கும் போதே தூரத்திலிருந்தே கோயில் கோபுரம் கண்களுக்குப் புலப்பட்டது. ஆலயத்தின் வாசல் முழுக்க வாகனங்கள் நிறைந்து இருந்தமையால் வாகனத்தை நிறுத்துவதில் சற்றே சிரமம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க தமிழர்கள் ஆலயத்தில் நிறைந்திருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சியாக அது அமைந்திருந்தது.

மாரியம்மன் ஆலயம் என்பது மனதில் ஒலித்துக் கொண்டிருந்ததால் அம்மன் சிலை எவ்வகையில் இருக்கும் என்ற ஒரு கற்பனை மனதில் ஓட ஆரம்பித்திருந்தது. காமாட்சியம்மன் அல்லது துர்கை வடிவில் அம்மன் சிலை இருக்குமோ? அல்லது மலேசியாவில் இருக்கும் மாரியம்மன் வடிவில் இங்கு மூலஸ்தான தெய்வ வடிவம் இருக்குமோ என மனதில் கேள்விகள் ஓட உள்ளே சென்று பார்க்க மனதில் ஆவல் அதிகரித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆலயத்திற்கு வெளிப்பகுதி வழியாகச் சுற்றிக் கொண்டு வந்து ஆலயத்தின் நேர் வாசல் பகுதியை அடைந்தோம்.

நடுப்பகுதியில் இருப்பது பிரதான ஆலயம். அதற்கு இடப்புறமும் வலப்புறமும் மேலும் ஒரு மாரியம்மன் ஆலயமும் ஒரு விநாயகர் ஆலயமும் இருக்கின்றன. மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஆலயத்தின் முன் வாசல் பகுதிக்கு வந்தேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை அதிசயத்தில் மலைக்க வைத்தது.கற்பகிரகம் மூலஸ்தானம் என இல்லாமல் ஆலயத்தின் நடுப்பகுதியில் பிரமாண்டமான மணல் புற்று நேராக நிமிர்ந்து நிற்க அதன் மேல் மாலைகள் குவிந்து கிடக்க மையப்பகுதியில் வெள்ளியால் ஆன அம்மன் வடிவத்து முகம் மட்டும் வைத்தார்போன்ற ஒரு அமைப்பு அங்கே கண்முன்னே காட்சியளித்தது. நான் எதிர்பாராத ஒரு காட்சி அது. ஆச்சரியத்திலும் அக்காட்சியின் அழகிலும் மெய்மறந்து போனேன் என்று தான் சொல்ல வேண்டும்.

இக்கோயிலில் வழிபாடு செய்து வைக்க என்று தனியாக குருக்கள் இல்லை. பொதுமக்களே கோயில் வழிபாட்டினை முழுமையாகச் செய்கின்றனர். ஆண் பெண் என்ற பேதமின்றி தூபம் காட்டுதல், மங்கல நீர்வழங்குதல் என்பது போன்ற பணிகளைப் பொதுமக்கள், கோயில் நிர்வாகத்தினர் ஆகியோர் செய்கின்றனர்.

டர்பன் புற்றுமாரியம்மன் ஆலயம் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கின்றது. நடுப்பகுதியில் மிகப்பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் புற்றையே அம்மனாக வைத்து மக்கள் வழிபடும் இடம் இருக்கின்றது. இப்புற்றில் அம்மன் வடிவமாக அமைக்கப்பட்ட வடிவம் இந்த மண்டபத்தின் நடுப்பகுதியில் இருக்குமாறு செய்திருக்கின்றார்கள். நடுப்பகுதியில் அமைந்திருப்பதால் பக்தர்கள் அம்மன் வடிவத்தின் முன் நின்று தாமே தீபாராதனைக் காட்டி தாமே பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல இலகுவாக அமைந்துள்ளது. இக்கோயிலில் அர்ச்சனை செய்து வைக்க என்று தனியாக அர்ச்சகர்களோ குருக்கள்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கூட்டம் நிறைந்திருந்த அன்றும் கூட பொது மக்கள் வரிசையாக நின்று ஒவ்வொருவரும் யாரையும் இடித்து தள்ளிக் கொள்ளாமல் தங்கள் வழிபாட்டினைச் செய்து விட்டுச் சென்று கொண்டிருந்தனர்.

புற்று வடிவத்தின் முன் பக்தர்கள் தாங்களே தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த வழிபாட்டுப் பொருட்களை வைத்து சூடம் ஏற்றி குடும்பத்தோடு நின்று வழிபட்டு பின்னர் தங்கள் பொருட்களைக் கையோடு எடுத்துக் கொண்டு ஆலயத்தைச் சுற்றி செல்கின்றனர். அப்படிச் செல்லும் போது முதலில் ஒரு பெண்மணியிடம் மங்கலப் பொருட்களைப் பெற்றுக் கொள்கின்றனர். பின்னர் அங்கு நிற்கும் இரண்டு பெண்களிடம் வேப்பிலை போன்ற வடிவம் கொண்ட ஒரு இலையால் உடல் முழுவதும் படுவது போலச் செய்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து அடுத்த இடம் செல்கின்றனர். இங்கே இருக்கும் ஒரு பெண்மணி அவர்களுக்குப் புனித நீரை ஒரு பெரிய கரண்டியில் எடுத்துக் கொடுக்க அதனைப் பக்தர்கள் பருகிச் செல்கின்றனர்.

இந்த மையப்பகுதியை அடுத்தார் போல வலது புறத்தில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி இருக்கின்றது. இங்கேயும் மக்கள் வரிசையாக வருகின்றனர். முன்னால் நிற்கும் ஊழியர்கள் பக்தர்கள் கொண்டு வரும் தட்டில் சூடம் ஏற்றித் தர குடும்பத்தோடு மக்கள் விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர். வெளியேறும் போது அங்கு நிற்கும் ஒருவர் விபூதியை அவரே தாமாக நமது நெற்றியில் இட்டு விடுகின்றார். ஆலயத்தின் எல்லா இடங்களிலும் அவசரம், தள்ளிப்பிடித்தல் என்ற வகையில் இல்லாமல் மிக ஒழுங்காகக் காரியங்கள் நடைபெறுகின்றன.

இங்குள்ள விநாயகர் சிலையின் வடிவம் நம் கண்கள் பார்த்துப் பழகிய விநாயகர் சிலையிலிருந்து மாறுபட்ட வடிவில் அமைந்திருக்கின்றது. ஒல்லியான உடம்புடன் தொந்தியில்லாத விநாயகர் நமக்கு வித்தியாசமாகவே படுகின்றார். ஆயினும் அலங்காரங்களுடனும் பக்தர் கூட்டத்துடனும் பார்க்கும் போது நம் மனதைக் கவரத் தவறவில்லை. நான் என் வழிபாட்டை முடித்துக் கொண்டு கோயில் இடப்புறம் கச்சேரி நடந்து கொண்டிருந்த பகுதிக்குச் சென்றேன். அங்கே திரு.கார்த்திகேயன் இசைக்குழுவினர் தமிழிசை கச்சேரி செய்து கொண்டிருந்தனர்.

இடையில் எங்களை அழைத்துச் சென்ற திரு.சின்னப்பன் தம்பதியர் எங்கள் வருகையைப் பற்றிச் சொல்ல, உடனே எங்களில் யாரேனும் பாட விருப்பம் உள்ளதா என வினவினர். என்னுடன் வந்திருந்த திரு.நயினை விஜயன் அவர்கள் அற்புதமாக ஒரு தமிழைப்பாடலைப் பாடினார். அதனை அடுத்து நானும் பாடுகின்றேன் எனச் சொல்ல என்னையும் பாட அழைத்தனர். நான் ஒரு தேவாரப் பாடலை பாடினேன். அதற்குப் பக்க வாத்தியம் மிக அருமையாக அமைந்திருந்தது. மத்தளம், ஆர்மோனியம் வயலின் இசை கலந்ததும் எனக்கு முன்னர் கச்சேரி செய்த நினைவுகள் மனதில் தோன்றின. ஆகையால் பாடலை சற்றே விரிவாக்கிப் பாடி முடித்து எழுந்த போது மீண்டும் ஒரு பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டனர் இசைக்குழுவினர். எனக்கு இது மேலும் ஆர்வத்தையும் மகிழ்ச்சியும் அளித்ததால் மேலும் ஒரு தமிழிசைப்பாடலை பாடினேன். பாடி முடித்து கீழே வரும்போது நண்பர்களின் புன்னகை கலந்த பாராட்டுதல்கள் எனக்கு நிறைந்த மன மகிழ்ச்சியை அளித்தன.

தென்னாப்பிரிக்கா மட்டுமன்றி முழுமையான ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இந்திய நாட்டிற்கும் அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு இருக்கின்றது. ஆயினும் இன்று உலக மக்களால் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் என்று குறிப்பிடப்படுவோர் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது கரும்புத்தோட்டங்களில் பணிபுரிய வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாரிசுகளே. 1860 முதல் ஆரம்பித்த இந்த நிகழ்வு படிப்படியாக தென்னிந்திய மக்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள் ஆப்பிரிக்கா புலம்பெயர காரணமாகியது. அதிலும் குறிப்பிடத்தக்க முக்கிய வரலாற்று விஷயமாக நாம் கருத வேண்டிய ஒன்றாக அமைவது, ஒப்பந்தத் தொழிலாளர்களாக முதலில் டர்பன் வந்தடைந்தவர்கள் அப்போதைய மதராஸிலிருந்து வந்த 342 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தாம்.

இன்றைய நிலையில் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிலையான ஓரிடத்தைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். அரசுப் பணிகளிலும் நாடாளுமன்றத்திலும் இடம் வகிக்கும் நிலையையும் சிலர் பெற்றவர்களாக இருக்கின்றனர். இது தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த மண்ணில் காலூன்றி விட்டமையைக் காட்டும் அடையாளங்களாக இருக்கின்றன. ஆங்காங்கே இருக்கும் இந்து சமய ஆலயங்கள் இத்தமிழ் மக்கள் தங்கள் சமய வழிபாட்டுச் சடங்குகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் மறவாமல் வழி வழியாக தமது இளம் தலைமுறையினருக்கும் வழங்குவதில் காட்டும் ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆயினும் மனதை உறுத்தும் ஒரு விசயம் இல்லாமலில்லை.

தென்னாப்பிரிக்கத் தமிழர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே தமிழ் மொழியை ஓரளவேனும் சரளமாகப் பேசக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனையோர் ஒரு சில வார்த்தை பேசுபவர்களாகவும் பெரும்பாலோர் தமிழ் மொழியின் தொடர்பு அற்ற வகையிலும் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கின்றது. தமிழ் மொழியில் பயிற்சி பெற வேண்டும், பாண்டித்தியம் பெற வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் இவர்கள் மனதில் ஆழ வேரூன்றி இருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆயினும் எவ்வகையான முயற்சிகள் இவர்களுக்குப் பலனளிக்கும் என்பது தான் மிக முக்கிய விடயமாக இருக்கின்றது. அர்த்தம் புரியாமலேயே தமிழ்ப்பாடல்களைப் பிழையின்றி பாடக்கூடியவர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமா பாடல்கள் தமிழை இவர்கள் மத்தியில் வழக்கில் தக்க வைக்க உதவுகின்றன என்பதனை மறுப்பதற்கில்லை.

எளிமையான முறையில் தமிழ் மொழி சொல்லித்தரக்கூடிய வழிமுறைகளைக் கையாளவேண்டியது அவசியமாகின்றது. இன்னிலையில், பேச்சுத்திறனை வளர்க்கும் வகையிலான தமிழ் மொழி பாடத்தினை திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் உதவ வேண்டியது தான் தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு நாம் செயலாற்ற வேண்டிய அதி முக்கிய, அதி அவசர தேவை என நான் கருதுகின்றேன். ​

Wednesday, June 7, 2017

59. சேர்மன் மாணிக்கவாசகம் அரசு நடுநிலைப்பள்ளி



தேவகோட்டையில் உள்ள சேவுகன் அன்ணாமலை கல்லூரியில் 2015ம் ஆண்டு ஒரு கருத்தரங்கத்தில் பேச என்னை அழைத்திருந்தார்கள். காலை தொடங்கி மதியம் வரை என அந்தக் கருத்தரங்கம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. நிகழ்ச்சியின் போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது பள்ளியில் உள்ள மாணவர்களையும் நான் வந்து சந்தித்து அவர்களுடன் உரையாடி விட்டுச் செல்ல வேண்டும் என ஒரு அன்பர் என்னிடம் வந்து கேட்டுக் கொண்டார். அவரது அழைப்பைத் தட்டிக் கழிக்க எனக்கு மனம் வரவில்லை. அது தேவகோட்டை நகரிலேயே உள்ள ஒர் அரசு பள்ளி. அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடிவிட்டு  வருவோமே என என் உள்மனம் ஒப்புதல் அளிக்க, சரி எனச் சொல்லி கல்லூரி ஏற்பாடு செய்திருந்த காரிலேயே அங்கு சென்று சேர்ந்தேன்.

வயதில் மூத்த மாணவர்களிடம் பேசுவதென்றால் சற்று எளிது. விரைவில் புரிந்து கொள்வார்கள். தைரியமாகக் கேள்வி கேட்பார்கள்.  தயக்கமோ பயமோ விருந்தினர் மீது இருக்காது. ஆனால் வயதில் குறைந்த பள்ளிச் சிறார்கள் பொருமையாக உட்கார்ந்து நாம் பேசுவதைக் கேட்பார்களா.. அவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய செய்திகள் மனதில் சென்று சேருமா..  என்பன போன்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருக்க நாங்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் அப்பள்ளியைச் சென்றடைந்தது.

இந்தப்  பள்ளியின் பெயர் சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உயர் நிலைப்பள்ளி. என்னை வரவேற்று அழைத்துச் சென்ரவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம்.   நான் உள்ளே வரும் முன் வாசலில் என் பெயர் எழுதி அறிவிப்புப் போடப்பட்டருந்ததைப் பார்த்தேன். அந்த குறுகிய நேரத்திற்குள் நான் வருவது அறிவிக்கப்பட்டு ஆசிரியர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

மிக எளிமையான பள்ளிக்கூடம். பழமையான கட்டிடம். பள்ளிக்கூடத்தின் எல்லா பகுதியும் மிகத் தூய்மையாகக் காட்சியளித்தது. என்னோடு என் உடன் வந்திருந்த தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களையும், அங்கிருந்த ஆசிரியர்களும் ஏனையோரும் முகமலர்ச்சியுடன் வந்து வரவேற்று அழைத்துச் சென்று அமர வைத்தனர். குறுகிய நேர அறிமுகத்துக்குப் பின்னர் நான் பேச ஆறம்பித்தேன். என்னுடைய இளைமை காலத்தில் மலேசியாவில் எனது பள்ளி அனுபவங்களை சிறிது விவரித்து விட்டு ஜெர்மனியில் எனது தொழில், நாட்டு நிலவரம், இயற்கை சூழல் என ஏறக்குறைய இருபது நிமிடங்கள் பேசி அமர்ந்தேன். தலைமை ஆசிரியர் மாணவர்கள் இப்போது உங்களிடம் கேள்வி கேட்பார்கள் எனச் சொல்ல, எவ்வகை கேள்விகளை இச்சிறார்கள் கேட்கப்போகின்றார்கள் என்ற ஆர்வம் எனக்கு மிகுந்தது.

அடுத்த ஒரு மணி நேரம் அங்கு அமர்ந்திருந்த ஏறக்குறைய ஐம்பது மாணவர்களில் ஏறக்குறைய அனைவருமே ஒரு கேள்வி என விடாது கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டனர். நான் அவர்களுக்குக் கூறிய செய்திகளைக் கவனம் சிதறாது கிரகித்துக்  கொண்டு நான் சொன்ன செய்திகளோடு மேலும் அது சார்ந்தவகையிலான சில கேள்விகளையும் கேட்டனர். மாணவர்களின் சுறுசுறுப்பும் , விசயங்களை உடனுக்குடன் உள்வாங்கி யோசித்து அது பற்றிய வேறு கோணத்திலான விசயங்களை கேட்டு அறிதலில் இருந்த நாட்டமும் என்னை வியப்படைய வைத்தது. மாணவர்களின் புறத்தோற்றம்  அவர்களில் பொரும்பாலோர் வறுமை கோட்டிற்கும் கீழ் இருப்பவர்கள் என்பதைக் காட்டியது. ஆனால் அவர்களுக்குள்ளேயிருக்கும் உத்வேகமும் சுறுசுறுப்பும் அளப்பறியது என்பதை நான் உணர்ந்தேன்.

அன்று அப்பள்ளியில் நான் நினைத்ததற்கும் மேலாக கூடுதலாக நேரம் செலவிட்டு விட்டு பின்னர் திரும்பிச் சென்றேன். 2015ம் ஆண்டு தமிழகப் பயணத்தில் தேவகோட்டைக்கு வந்த பின்னர் நான் சென்னைக்கும் செஞ்சிக்கும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. எதிர்பாராத விதமாக மீண்டும் காரைக்குடிக்கு வரவேண்டிய ஒரு வாய்ப்பு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் வந்தது. அதற்காக காரைக்குடிக்குச் சென்றிருந்தேன். அந்த சமயத்தில் தேவகோட்டையில் நான் சந்தித்த சேர்மன்  மாணிக்க வாசகம் பள்ளியின் அந்த சுறுசுறுப்பும் அறிவுத்தாகமும் நிறைந்த குழந்தைகளின் முகம் என் மணக்கண்னில் வந்து போய்க்கொண்டிருந்தது. பக்கத்தில் தானே இருக்கின்றோம். அந்தப் பள்ளிக்குச் சென்று வருவோம் என நினைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கத்தைத் தொலைபேசியில் அழைத்து விசயத்தைச் சொன்னேன். அவருக்கும் மகிழ்ச்சி. நான் நிச்சயம் வரவேண்டும் என அவரும் அழைக்க, ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டு பள்ளிக்குச் சென்று சேர்ந்தேன்.

இரண்டாம் முறை சென்றபோதும் அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன்`. இவ்வளவு கெட்டிக்கார மாணவர்களாகிய உங்களுக்குப் பரிசு கொடுப்பது அவசியம் எனச் சொல்லி, எனது அடுத்த தமிழக வருகையின் போது அப்பள்ளி மாணாக்கர்களுக்கு ஒரு கணினியை அன்பளிப்பாக அளிக்கின்றேன் எனச் சொல்லி விடைபெற்று வந்தேன்.

சென்ற ஆண்டு நான் தமிழகம் சென்றிருந்த போது இப்பள்ளிக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து உரையாடி ஒரு புதிய கணினியை வாங்கி பள்ளிக்குப் பரிசளித்தேன். மாணவர்களின் உற்சாகத்தை முகத்தில் பார்த்தபோது எல்லையில்லா ஆனந்தம் எனக்கு ஏற்பட்டது.

அவர்களிடம் அக்கணினியைப் பரிசளித்தபோது ஒரு செய்தியைக் குறிப்பிட்டு சொன்னேன். அதாவது, தேவகோட்டை, அதன் சுற்று வட்டார சூழலை மட்டும் அறிந்திருக்கும் உங்களுக்கு கணினியும் இணையத் தொடர்பும் உலகின் ஏனைய பாகங்களையும் மக்களையும் காட்டும் ஒரு ஜன்னலாக அமையும். வறுமை என்றுமே உங்கள் அறிவின் விரிவாக்கத்திற்கும் விசாலப்படுத்துதலுக்கும் தடையை ஏற்படுத்தி விடக்கூடாது. கல்வி கற்கவும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் என்றுமே நீங்கள் தயங்கக்கூடாது. மன உறுதியுடன் கல்வியைக் கற்றுக் கொண்டு வாழ்வில் மிகப்பெரிய சாதனைச் செய்ய வேண்டும் என்ற கனவும் என்றும் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் எதிர்காலத்தைக் கல்விதான் வடிவமைக்கும், என்று நான் கூறிய செய்தியை மாணவர்கள் இன்முகத்துடன் கேட்டு கல்வியில் கவனம் வைத்து முன்னேற்றம் காண்போம் என உறுதி கூறினர். இந்த நாள் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை என்னுள் ஏற்படுத்திய நாள்.

இந்தப் பள்ளிக்கூட மாணவர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகைச்சூடி வருகின்றனர். இந்த மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர் ஒரு தன்னலமற்ற ஒரு பண்பாளர், சேவையாளர். அவர்தான் அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.சொக்கலிங்கம். இவரது ஆலோசனையிலும் வழிகாட்டுதலிலும் இவருக்குத் தோள்கொடுத்துப் பயணிக்கும் இப்பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியரும்  நற்சேவையாளர்கள். இவர்களது அளப்பறிய சேவையே இந்தப் பள்ளியின் பெயர் அடிக்கடி செய்தித்தாட்களில் வருவதற்குக் காரணமாக இருக்கின்றது என்று சொல்வது மிகைக்கூற்றல்ல. மாதம் முடிந்தால் சம்பளம் வாங்கினோம், எனச் செயல்படும் எத்தனையோ ஆசிரியர்களுக்கிடையே இத்தகைய ஆசிரியர் பெருந்தகைகள் மாணிக்கங்களாக மிளிர்கின்றார்கள். இவர்களது சேவை எளிய குழந்தைகளும் கல்வி எனும் ஏணிப்படியில் ஏறி தனது வாழ்க்கைப் பயணத்தில் உயர்ந்த இடத்தை பெறுவதற்கு அடிப்படையை வகுத்துக்கொடுக்கும் ஆதாரத்தளங்களாக அமைந்திருக்கின்றன.

தானத்திலேயே சிறந்த தானம் கல்வி தானம் தான். ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பையும் பொது உலக வாய்ப்பையும் சிறப்புடன் அமைத்துக் கொடுக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் போற்றிப்பாராட்டத்தக்கவர்கள்.

Wednesday, May 31, 2017

58. குவா கெலாம் - பெர்லிஸ் குகை



ஈய வளமுள்ள தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை பள்ளியில் படிக்கும் போதே நாம் வரலார்றுப் பாட வகுப்பில் படித்திருப்போம். 18ம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பாக 19ம் நூற்றாண்டில் பல சீனர்கள் மலேசியா நோக்கி ஈயம் கண்டெடுக்கும் பணிக்காக வந்தனர் என்பது வரலாறு. ஆண்களும் பெண்களுமாக ஈயம் தோண்டும் தொழிலில் ஈடுபட்ட தகவல்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெர்லிஸ் மானிலத்தில் காக்கி புக்கிட் பகுதியில் (இது தாய்லாந்துக்கு மிக அருகாமையில் உள்ள அடர்ந்த காடுகள் கொண்ட ஒரு பகுதி) ஈயம் கண்டெடுக்கும் தொழிலில் ஈடுபட்ட சீனமக்களின் கதை கேட்பவர் மனதை உருக்கும் தன்மை வாய்ந்தது.

உலகில் வேறெங்கு ஈயம் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் மலேசியாவில் பெர்லிஸ் மானிலத்திலும், சபா சரவாக் காடுகளில் உள்ள குகைகளிலும் ஈயம் கண்டெடுக்கும் தொழில் மிக விரிவாக 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் இருப்பதை யார் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள் எனபது ஒரு புதிர். ஆங்கிலேயர்களின் மூலமாகவா, அல்லது உள்ளூர் மற்றும் சயாமிய (தாய்லாந்து) மக்களா, அல்லது வணிகத்துக்கு வந்த சீனர்களா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், இங்கு ஈயம் உள்ளது என்ற செய்தி கிடைத்ததுமே சீனாவிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இப்பகுதிக்கு வந்து குவிந்திருக்கின்றனர்.

இந்த குகைகளுக்குள் சென்று,  ஈயம் தோண்டி எடுத்துக் கொண்டு வெளியே  வருவது என்பது சாதாரண காரியமல்ல. குகைக்குள் மிக நீண்ட தூரம் சென்று உள்ளே குழிகளைத் தோண்டி, அங்கே ஈயத்தை கண்டெடுத்துத் தூய்மை செய்து, அங்கிருந்து கொண்டு வருவது மிகக் கடிணமான ஒரு தொழில். இதனைச் சீன ஆண்களும் பெண்களும் அக்காலத்தில் செய்திருக்கின்றனர். ஈயம் அக்கால கட்டத்தில் செல்வம் தரும் ஒரு பொருளாக இருந்திருக்கின்றது. யார் ஈயம் உள்ள இடத்திற்குச் சொந்தக்காரராக இருக்கின்றாரோ அவர் மிக விரைவில் செல்வந்தராகி விடலாம் என்ற சூழலே இங்கு சீனர்கள் பலரை இந்தக் கடினமான வேலைக்கு வருவதற்கு ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கின்றது.

இந்த குவா கெலாம் குகைப்பகுதியின் ஒரு பகுதியில் இப்பகுதியின் வரலார்றைக் கூறும் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது. இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்தக் குகைகௌக்குள்ளேயே பல மாதங்கள் ஆண்களும் பெண்களும் தங்கியிருந்து பணி புரிவார்களாம். இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குகைக்குள்ளேயே உள்ளே  இருந்து பணியாற்றிவிட்டு சிறிய இடைவெளிக்கு மட்டும் வெளியே வருவார்களாம். சூரிய ஒளியே தெரியாமல் பல நாட்கள் இருட்டில் இருந்து வேலை செய்வார்களாம். நம்மால் இதனை இப்போது நினைத்துப் பார்க்க முடிகின்றதா? குகைக்குள் இருக்கும் போது பலர்  பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு இறந்திருக்கின்றனர். இக்குறிப்புக்கள் குவா கெலாம் அருங்காட்சியகத்தில் உள்ள விளக்க அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஈயம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதன் முக்கியத்துவம் தொழில்மயமாக்கத்திற்கு அவசியமான தேவையாகியதால், இப்பகுதி  சற்று பிரபலமானவுடனேயே அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் இப்பகுதியிலும் தனது ஆளுமையை செலுத்தியிருக்கின்றது. ஈயம் உள்ள பகுதிகளை தங்கள் வசமாக்கிக் கொண்டு அங்கு உழைப்பதற்காக பல சீனர்களை சீனாவிலிருந்து இப்பகுதிக்கு ஆங்கிலேயர்கள் வரவழைத்து வந்திருக்கின்றனர். எப்படி மரக்காடுகளை அழித்து ரப்பர் தோட்டங்களையும் செம்பனைத் தோட்டங்களையும் உருவாக்க தென் தமிழகத்திலிருந்து தமிழ் மக்களைக் கப்பல்களில் ஆங்கில காலணித்துவ அதிகாரிகள் கொண்டு வந்தார்களோ அதே போன்ற ஒரு காரணம் தான் ஈயம் தோண்டுதல் தொழில் அடிப்படையில் சீனர்கள் இங்கே கூட்டம் கூட்டமாக வந்து சேர காரணமாகியிருக்கின்றது.

உள்ளூர் மலாய் மக்கள் ஈயம் கண்டெடுக்க பயன்படுத்திய டூலாங் தட்டை தான் முதலில் சீனர்களும் பயன்படுத்தி ஈயம் தோண்டி கண்டெடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்து வந்திருக்கின்றனர். பின்னர் ஆங்கிலேயர்களின் நாட்டம் இப்பகுதியில் அதிகரிக்க பல புதிய கருவிகளை இத்தொழிலில் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். சர்.ஜே. கேம்பல் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒருவரும் திரு.ஈ.க்ராஃப் என்ற சுவிட்சர்லாந்துக்காரர் ஒருவரும் இவ்வகையில் புதிய நவீனக் கருவிகளை இப்பகுதியில் இத்தொழிலில் அறிமுகப்படுத்தியதில் மிக முக்கியமானவர்கள். இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்னர் ஜப்பானியர்கள் இப்பகுதிக்கு வந்து தங்கள் வசமாக்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டிருந்த சமயத்தில் சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று விட்டார்.  ஆனால் திரு.ஈ.க்ராஃப் தொடர்ந்து இருந்து இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். இரண்டாம் உலகப் போரின் போது இப்பகுதி முழுவதும் முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது. காக்கி புக்கிட் பகுதியில் எந்த ஈயம் தோண்டும் பணிகளும் நடைபெறவில்லையாம். ஆனால் போர் முடிவுற்ற பின்னர் மீண்டும் ஈயம் தோண்டும் பணிகள் தொடங்கிய போது திரு.ஈ.க்ராஃப் தானே முன்னின்று இப்பணிகளை மேற்பார்வை செய்து மீண்டும் தொடக்கி வைத்திருக்கின்றார். அத்துடன் ஈயம் கண்டெடுக்கும் பணியாளர் குழுவின் தலைவராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

இந்தக் கால கட்டத்தில் சர்.ஜே. கேம்பலின் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த லோ ஆ தோங், சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்து திரும்பியவுடன் அவருடைய சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவை தனது உடைமையாக்கிக் கொண்டார். இவர் லோ செங் ஹெங் என்ற போராட்டவாதியின் மகனுமாவார். இவரது கூர்மையான மதியினாலும், திறமையினாலும் அபார உழைப்பினாலும் காக்கி புக்கிட் பகுதியில் மிகப்பெரிய ஈய உற்பத்தி சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தினார். பின்னர் டத்தோ என்ற உயர்நிலை பட்டமும் கூட இவருக்கு வழங்கப்பட்டது. டத்தோ லோ ஆ தோங்கின் குடும்பத்தினர் பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியின் மிக முக்கியஸ்தர்களாக இருகின்றனர். டத்தோ லோ ஆ தோங் சுதந்திர மலேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் சில காலங்கள் பதவி வகித்தார். இவரது குடும்பத்தினர் ஏறக்குறைய 600 பேர் இன்னமும் காக்கி புக்கிட் பகுதியில் இருக்கின்றனர் என்பது தகவல்.


தற்சமயம் இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் கண்டெடுக்கும் பணிகள் நடைபெறவில்லை. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தற்சமயம் சுற்றுப்பயணிகள் பார்ப்பதற்காக மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் தோண்டும் தொழில் நடைபெற்ற குவா கெலாம் குகையை எத்தனை பேர் இதுவரை பார்த்திருப்பார்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள் என்பது கேள்விதான். ஆக, பெர்லிஸ் சென்றிருந்தபோது இக்குகையை நேரில் பார்த்து பல வரல்லார்றுச் செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.  குவாலா பெர்லிஸிலிருந்து ஏறக்குறைய 28 கிமீட்டர் தூரம் வடக்கு நோக்கி பயணிக்க வேண்டும். குகைக்குள் சென்று பார்வையிடமும் அருங்காட்சியகத்தைப் பார்க்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே செல்வதற்கு ஒரு ரயில் பெட்டி உள்ளது. அதில் ஏறி ஏறக்குறைய 2 கி.மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதன் பின்னர் குகையின் உட்பகுதிக்குப் பயண வழிகாட்டி அழைத்துச் செல்கின்றார்.

ஈயம் தோண்டும் பணி நடைபெற்ற இடங்கள், சிறிய குகைப் பாதைகள், சீனர்கள் குகைகளில் எழுதி வைத்த எழுத்துக்கள், நீர் தேங்கிக் கிடக்கும் சிறு குளங்கள் ஆகியவற்றைக் காட்டி பயண வழிகாட்டி மலாய் மொழியில் விளக்கம் அளிக்கின்றார். ஈயம் தோண்டும் பணியில் உபயோகப்படுத்திய கருவிகள் அங்கே உள்ளேயே காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குகையில் பல சிறிய குகைப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வெளியே நிலப்பகுதிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அதில் ஒரு குகைப்பகுதி ஏறக்குறைய 3 கி.மீட்டர் தூரம். இதன் வழியாக நடந்து சென்றால் தாய்லாந்து நாட்டிற்குச் சென்று விடலாம் என்றும் பயண வழிகாட்டி விவரித்தார்.  மிக வியப்பாகவும் இருந்தது.




இவற்றையெல்லாம் நேரில் பார்த்து விளக்கங்களையும் கேட்டு பின்னர்   மீண்டு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்து வெளியே வந்தேன். குகையின் உள்ளே அரை மணி நேரம் இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அறிந்து கொண்டபோது இங்கே மாதக் கணக்கில் இருந்து உழைத்த மனிதர்களை நினைத்து என் மனம் கணத்தது.

இந்த குவா கெலாம் குகையைப் பார்க்க வருபவர்கள் முக்கியமாக நுழைவாயிலின் வலது புறத்தில் உள்ள அருங்காட்சி நிலையத்திற்கும் வந்து செல்ல வேண்டும். காக்கி புக்கிட் பகுதி பற்றி நல்ல பல தகவல்கள் இங்கு உள்ளன. ஈயத்தொழிலில் பயன்படுத்திய நவீன கருவிகளையும் இங்கே வைத்திருக்கின்றனர். இவையனைத்தையும் பார்த்து விட்டு அங்கேயுள்ள சிறு உணவகத்தில் காப்பி அருந்தி அவற்றோடு சுவையான மலாய் பலகாரங்களையும் சுவைத்து வர சுற்றுப்பயணிகள் மறக்கக் கூடாது.

Wednesday, May 24, 2017

57. செங்கம் லம்பாடி பழங்குடிமக்கள்



இயற்கையோடு இயைந்த வாழ்வியலை நினைத்துப் பார்க்கும் போது நமக்குப் பழங்குடி மக்களைப் பற்றிய சிந்தனைகள் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலாது. பண்டைய காலத்தில் பழங்குடிகளாக நாம் இருந்த காலத்தில் அமைந்திருந்த எளிமையான வாழ்க்கை முறையை நாம் நினைத்துப் பார்த்தாலும் அதனை மீண்டும் பெற முடியாது. ஆடம்பரமற்ற, மன அழுத்தமற்ற, எளிமையான வாழ்க்கை நிலையே அடிப்படையாக இருந்தது. மனித உறவுகளுக்குள் நெருக்கம், இயற்கையோடு சேர்ந்து அதனைக் கெடுக்காமல் இயற்கையோடு இயற்கையாகத் தன்னையும் இணைத்துக் கொண்டு வாழும் ஒரு வாழ்க்கையாகப் பண்டைய பழங்குடி மக்கள் வாழ்வு என்பது இருந்தது. இன்று இந்தப் புவிக்கு ஆபத்து விளைவிக்கும் எண்ண ற்ற நாசச்செயல்களெல்லாம் இல்லாத ஒரு சூழல் அது. நினைத்துப் பார்த்தால் இப்போது நமக்குச் சாத்தியமற்ற ஒரு வாழ்க்கை நிலை தான். ஆனால் இந்த உலகில் இன்னமும் கூட சில குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர் என்பதும் உண்மையே. மலேசிய சூழலில் செமாங் அல்லது நெக்ரித்தோ சமூக மக்கள், செனோய் சமூகத்து மக்கள் ஆகியோரை மலேசிய நிலப்பகுதியின் பழங்குடி மக்கள் என்ற வகையில் கூறலாம். இவர்களது வாழ்க்கை முறை இன்றைய நாகரிக வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. காடுகளுக்குள் வேட்டையாடி உணவைத்தேடுதல் என்பதும், திருமணச் சடங்குகள், குழந்தைப்பெறுதல், இறப்பு ஆகியனவும் குழுக்களுக்கு குழு குறிப்பிடத்தக்க வகையில் வேறுபாட்டுடன் திகழக்கூடியது எனலாம்.

தமிழர்களின் தொல்குடிகளின் ஆய்வுகளில் இன்று நமக்குக் கிடைக்கும் சில குறிப்பிடத்தக்க ஆய்வுகள் எனக் கூறுவதென்றால் எட்கர் தர்ஸ்டன் அவர்களது ஆய்வுகளை நாம் கூறலாம். ஆங்கிலேய காலணித்துவ இந்தியாவில் அரசுப்பணியில் தமிழகத்தில் பணியாற்றிய ஒரு அரசு அலுவலகர் இவர். 1885ம் ஆண்டில் தமிழகத்தின் சென்னை அருங்காட்சியகத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மிகப்பெரிய அளவில் இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இந்தப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் இவர் லண்டன் கிங்ஸ் கல்லூரி அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனக்கு வழங்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது என ஒரு எல்லைக்குள் தன்னை முடக்கிக் கொள்ளாமல் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் தனது உதவியாளர்களுடன் பயணித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுத்தரவுகளைச் சேகரித்து மானுடவியல் தொடர்பான மிகச் சிறந்த ஆய்வு நூல்களை வழங்கியவர் இவர். இவரது Castes and Tribes of South India என்ற பெரிய ஆய்வு நூல் இன்றளவும் மானுடவியல், சமூகவியல் ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு மிக முக்கிய அடிப்படை நூலாக அமைந்திருக்கின்றது. தான் மேற்கொண்ட பல பயணங்களில் தாம் நேரில் பார்த்து பதிந்த எல்லா வகைச் செய்திகளையும் பதிந்து ஆய்வு நோக்கில் அவை அலசப்படும் நல் வாய்ப்பினை ஏனைய ஆய்வாளர்களுக்கு எட்கர் தர்ஸ்டன் வழங்கியிருக்கின்றார். இது மகத்தானதொரு பணியாகும்.

ஒரு நிலப்பகுதியின் தொல் பழங்குடிகளின் வாழ்க்கை முறையை அலசும் போது சில மையக்கூறுகளைச் சுற்றியே அவர்களின் வாழ்க்கை அமைந்திருப்பதை நாம் அறியலாம். உதாரணமாகப் பழங்குடி மக்களின் வாழ்வில் மிக முக்கிய இடம் வகிப்பவையாக அமைபவை சடங்குகளாகும். சடங்குகள் எனப்படும் போது அது திருமணச் சடங்கு, பிள்ளை பெற்றதும் நடத்தும் சடங்கு, இறப்பின் போது நடத்தப்படும் சடங்கு, கடவுளுக்கானச் சடங்கு என வகைப்படுத்தலாம். இந்தச் சடங்குகள் அனைத்துமே ஒவ்வொரு இனக்குழுவுக்கும் தனித்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன. ஒரு பழங்குடி இனத்தின் சடங்கிலிருந்து மற்றொரு பழங்குடி இனத்தின் சடங்குகள் மாறுபடுகின்றன. இறைவழிபாடு தொடர்பான சடங்குகள் ஏராளமான நுணுக்கமான பல மாறுபட்ட அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. சாமிக்குப் போடப்படும் படையல், வழிபாட்டின் போது கொடுக்கப்படும் உயிர்ப்பலி, பூசையில் இடம்பெறுகின்ற உணவு என்பன மாறுபட்ட தன்மைகளைக் கொண்டனவையாக இருக்கின்றன.

இதே போல தனித்துவம் கொண்ட மற்றொரு அம்சம் என்னவென்றால் இப்பழங்குடி மக்களின் கலை. இசை, நடனம் என்பவை குறிப்பாக ஒலிக்கப்படும் ஒலிகள், உடல் அங்கங்களின் அசைவுகள் என்பன சிறப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. அதே போல உடலில் ஏற்படுத்திக் கொள்ளும் அல்லது தீட்டிக்கொள்ளும் வர்ண ஓவியங்கள், அணியப்படும் அணிகலன்கள் ஆகியவை குழுக்களுக்கு குழு மாறுபாடான வடிவத்தைக் கொண்டவையாக இருப்பதையும் நாம் காணலாம். பழங்குடி மக்களின் இன்றைய நிலை சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போன்று இன்று இல்லை. பலர் காடுகளை விட்டு கிராமப்புறங்களுக்கு இறங்கி வந்துவிட்டதோடு நகர்ப்புற மக்களோடு கலந்து விட்ட நிலையையும் காண்கின்றோம். இது இக்காலச் சூழலில் மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒரு அம்சமே என்பதில் ஐயமில்லை.

எனது தமிழகத்துக்கானச் சில பயணங்களில் நான் சில பழங்குடி இன மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்படி ஒரு பழங்குடி இனம் தான் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் வாழும் லம்பாடி பழங்குடிகள்.லம்பாடி இன மக்கள் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இஸ்லாமிய படையெடுப்பின் போது இவர்களின் மன்னர் போரில் தோற்றவுடன் இம்மக்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து வெளியேறி பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். பின்னர் இப்போதைய ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாடோடிகளாக வந்து குடியேறினர். ஆரம்பக் காலத்தில் உப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு உழைத்தனர். கழுதைகள் மேல் உப்பை ஏற்றி ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் சென்று அவற்றை விற்பனை செய்து வருவதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆனால் படிப்படியாக இவர்கள் தொழில், வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இவர்கள் வாழ்க்கையில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட சிலர் சொந்தமாக நிலம் வாங்கி ஓரிடத்தில் நிரந்தரமாகக் குடியேறி அங்கே தொழில் செய்தும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் தங்கள் சமூகத்தினருடன் சேர்ந்து குழுவாக ஓரிடத்தில் இருப்பதையே காண முடிந்தது.

காலவோட்டத்தில் சமூக இயக்கத்தில் இனங்களுக்கே உரித்தான தனித்துவமான கூறுகளில் மாறுதல் ஏற்படுவது என்பது எல்லாச் சமூகத்திலும் நடக்கின்ற ஒன்றுதான். ஆனால் அவை படிப்படியாக வழக்கில் இல்லாது போவது மட்டுமின்றி அச்சமூக மக்களே அறியாத நிலை ஏற்படுவதையும் காண்கின்றோம். லம்பாடி இனமக்களின் வாழ்க்கையிலும் இந்த நிலை தான் ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்திலிருந்து வேறொரு இடம் பெயர்ந்து செல்லும் வகையில் தங்கள் கூடாரங்களையும் கையோடு கொண்டு செல்லும் வழக்கம் கொண்டவர்கள் லம்பாடி இன மக்கள். இந்தப் போக்கும் தற்சமயம் மாற்றம் கண்டுள்ளது. நிலையாக ஒரே இடத்தில் இருந்து அங்கேயே விவசாயம், கைத்தொழில்கள், கூலி வேலை எனச் சிறு சிறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் இம்மக்கள். இதனால் நிலையான குடிசை, சிறு வீடுகள் என்று இவர்களின் அடிப்படை வாழ்க்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சமூகத்து மக்களும் மிகக் குறைந்த அளவில் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்று சற்று மேம்பாடு அடைந்தும் வருகின்றனர் என்பதைக் காண முடிந்தது.

நாங்கள் பேட்டி காணச் சென்ற கிராமத்தின் பெயர் பரிசல் பட்டு பி.எல்.தண்டா. இங்கு ஏறக்குறைய 450 குடும்பத்தினர் வாழ்கின்றனர். அனைவருமே லம்பாடி இன மக்கள் தான். இவர்கள் இங்கேயே குடியேறி திருமணம் செய்து குழந்தைகள் ஈன்று வாழ்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று சிலர் அரசாங்க வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இங்கேயே பிறந்து வளர்ந்து இங்குள்ள பள்ளியிலேயே கல்வி கற்று நன்கு தேறி திருவண்ணாமலை நகராண்மைக் கழகத்தில் பணியாற்றும் திருமதி. லதாமம்மா எங்களைக் காண வந்திருந்தார்.

லம்பாடி பழங்குடியினர் மராத்தியும் குஜராத்தி மொழியும் கலந்த வகையில் அமைந்த கோரெர் (Gorer) என்னும் ஒரு மொழியைப் பேசுகின்றனர். பொதுவாக வீட்டில் இவர்கள் தாய்மொழியில்தான் உரையாடுகின்றனர். ஆனாலும் குடும்பத்தை விட்டு வெளியே வரும் போது தமிழ்மொழி முக்கியமாகிப் போவதால் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் தாய் மொழியை இளம் குழந்தைகள் மறக்கும் நிலையும் உருவாகி உள்ளது. தற்சமயம் இம்மக்கள் தமிழகத்தில் வாழ்கின்ற மக்களோடு கலந்து இச்சூழலுக்கேற்றவாறு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளமையால் இவர்கள் தங்கள் தாய்மொழியை விடத் தமிழை பேசுபவர்களாக உள்ளனர். இளைஞர்களோ குழந்தைகளோ இம்மொழியைப் பேச அவசியம் இல்லாத நிலை இருக்கின்ற காரணத்தால் இம்மொழி இம்மக்களின் அன்றாட வழக்கிலிருந்து குறைந்து தற்சமயம் அரிதாகி விட்ட நிலை இருப்பதை உணர முடிகின்றது. வயதான சில பெண்களும் ஆண்களும் மட்டும் தங்களுக்குள் இம்மொழியில் உரையாடிக் கொள்கின்றனர்.

திருமணம் தான் இவர்கள் வாழ்கையில் மிக முக்கிய நிகழ்வாக இருக்கின்றது. திருமணச் சடங்கைப் பற்றி விசாரித்த போது மிக ஆர்வத்துடன் தங்கள் வழக்கத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர். பொதுவாகவே இவர்கள் திருமணம் 4 நாட்கள் நடக்கின்றது. மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாள், அதன் பின்னர் பெண் வீட்டில் இரண்டு நாள். மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாட்கள் சடங்குகளைச் செய்து முடித்த பின்னர் மாப்பிள்ளையைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். அதற்குப் பிறகு வீட்டிற்குள் அவர் திருமணம் முடிவதற்கு முன் வருவதற்கு அனுமதி இல்லை.

பெண் பார்க்கும் சடங்கு என்பது தமிழர் சமூகத்தில் உள்ளது போன்று நிச்சயதார்த்தம் இல்லாமல் வேறு விதமாக நிர்ணயிக்கப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டார் 5 கிலோ வெல்லம் கொண்டு செல்வர். அத்தோடு சாராயமும் வெற்றிலை பாக்கும் கொண்டு செல்வர். சாராயம், வெல்லம், வெற்றிலை பாக்கை பெண் வீட்டாரிடம் கொடுத்து விட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்று முடிவாகின்றது. திருமணத்தில் மாப்பிளை பெண்ணுக்கு ஜாதகம் பார்க்கும் வழக்கமும் இவர்களுக்கு இல்லை. இந்த மூன்று பொருட்களையும் கொடுத்து 1 ரூபாய் (பரியா பணம்) கொடுத்து விட்டால் கல்யாணம் உறுதி செய்யப்பட்டு விட்டது என முடிவாகின்றது. பின்னர் பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் ஒத்து வராமல் போய் பிரிய வேண்டும் என அவர்கள் நினைத்தால் அந்த ஒரு ரூபாய் பணத்தைத் திருப்பித் தந்து விடுவார்களாம். இப்படித் தந்தால் விவாகரத்து நடந்ததற்குச் சமம். அதற்காகத் திருமணத்திற்காகக் கொடுத்த அதே ஒரு ரூபாயைக் கணவன் மனைவி இருவரும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதாவது ஒரு 1 ரூபாயைக் கொடுத்தே மண வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்ளலாம். இதனைக் கணவன் மாத்திரம் தான் செய்வது வழக்கம். மனைவி செய்யும் வழக்கமில்லை. பஞ்சாயத்தில் ஊர் பெரியவர்களின் முன் கணவன் மனைவி வந்து 1 ரூபாயைக் கணவன் கொடுத்து மணவிலக்கு வேண்டும் என்று கேட்டால் மனைவியிடமிருந்து விலகிச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது.

இவர்களின் திருமணச் சடங்கு மிக வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. திருமண தினத்தின் முதல் நாள் இரவில் பெண் வீட்டில் உள்ள அனைவரும் அழ வேண்டுமாம். தங்கை எப்படி அழவேண்டும் அண்ணன் எப்படி அழ வேண்டும் என முறை வைத்திருக்கின்றனர். எப்படி ஒவ்வொருவரும் அழ வேண்டும் என்று அந்த நேரத்தில் தான் அனுபவசாலி பெரியவர்கள் கற்றுத் தருவார்களாம். அதனைக் கற்றுக் கொண்டு குடும்பத்தினர் ஒவ்வொருவராக அழ வேண்டும்.

திருமணத்திற்கு முதல் நாள் வீட்டின் மூலையில் ஒரு உலக்கையை வைத்து அதில் கங்கணம் கட்டு விடுவார்கள். பக்கத்தில் ஒரு பானையை வைத்து அதில் நீரை ஊற்றி நிறைத்து வைத்து விடுவார்கள். திருமண ஏற்பாட்டுச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் புது மாப்பிள்ளை இந்தத் தண்ணீரில் குளிக்க வேண்டும். இது கட்டாயமாகச் செய்ய வேண்டிய ஒரு சடங்கு. பிறகு மறு நாள் காலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் தனித் தனியாகத் தயார் செய்து அலங்கரித்துக் கொண்டு வந்து திருமணச் சடங்கில் தாலி போட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் பெண் வீட்டில் தான் நடக்குமாம். தமிழ் சமூகத் திருமணங்கள் போலக் கோயில்களில் இவர்கள் திருமணங்கள் நடப்பதில்லை. இக்கால லம்பாடி இனத் திருமணங்கள் தமிழர்கள் வழக்கம் போல கழுத்தில் தாலி கட்டி நடைபெறுகின்றது. கையில் அணியும் தாலி இப்போது வழக்கில் இல்லை. கணவன் உள்ள வயதான மூதாட்டிகள் மட்டுமே இந்த வகைத் தாலியை அணிந்திருக்கின்றனர்.

திருமணச் சடங்குகள் முடிந்த பிறகு மதிய வேளையில் ஆடு வெட்டி விருந்து தயாரித்து மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் திருப்திகரமாக விருந்தளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். பின்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் விட்டாரை அழைத்துச் சென்று இதேபோல விருந்து கொடுத்து அனுப்பி வைப்பார்கள். இதே போல மூன்று முறை மாற்றி மாற்றி இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறுமாம்.

கணவர் இறந்த பெண்கள் தங்கள் கையில் அணிந்துள்ள தாலியை எடுத்து விட வேண்டும். இந்தத் தாலி திருமணம் நடந்த நாள் முதல் கணவர் இறக்கும் வரையிலும் கையில் அணிந்திருக்க வேண்டும்.


இவர்களின் கடவுள் மூடுபுக்கியா என அழைக்கப்படுகின்றது. ஆண் பெண் என உருவமில்லாத ஒரு கல் வடிவில் அமைந்த ஒரு வடிவமே இவர்கள் கடவுள்.

முன்னர் திருமணம் என்று வரும் போது மானின் கொம்பை வெட்டி எடுத்து அதைப் பதம் செய்து அதனை யானைத் தந்தம் போன்ற வடிவில் ஒரு வளையல் செய்து அதனைப் பெண்ணுக்கு அணிவித்துத் தான் திருமண நிகழ்வு நடக்குமாம். இது இப்போது வழக்கில் இல்லை. அதேபோல பெண்கள் திருமணத்திற்கு அணியும் முழு ஆடையையும் அப்பெண்ணே முழுதாகத் தயாரிப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒரு ஆடையை முழுமையாக்க ஏறக்குறைய ஆறு மாத காலங்கள் எடுக்குமாம். திருமணத்தில் தாலியை அணிந்து திருமணச் சடங்கு முடிந்த பின்னர் மணப்பெண்ணைக் காளைமாட்டின் மேல் அமர வைத்து ஊர்வலமாக வீட்டிற்குக் கொண்டு வருவார்களாம்.

இன்னொரு சுவாரசியமான தகவலும் இவர்களுடன் உரையாடும் போது அறிந்து கொள்ள முடிந்தது. அதாவது குழந்தைகள் பிறக்கும் போது எந்த நாளில் ஒரு குழந்தை பிறக்கின்றதோ அந்த நாளைப் பிரதிநிதிக்கும் பெயரைத்தான் குழந்தைகளுக்குச் சூட்டுவார்களாம். திங்கள் கிழமை பிறந்த குழந்தைக்கு சோமார் என்றும், செவ்வாய் என்பது மங்களவார் என அழைக்கப்படுவதால் இந்த நாளில் பிறக்கும் பெண் குழந்தைக்கு மங்கினி என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் மணி என்றும் அந்தக் கிழமையின் ஆரம்பச் சொல்லை எதிரொலிக்கும் வகையில் பெயர்கள் அமையுமாம். புதன்கிழமை பிறந்த ஆண் குழந்தை பத்தியா என்றும் பெண்குழந்தை பத்தி என்றும் பெயரிடுவதும், வழக்கமாக இருக்கின்றது. முக்கியமாக அந்தக் கிழமையின் முதல் எழுத்து குழந்தையின் பெயரில் இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் இவர்கள் கடைப்பிடித்து வந்த வழக்கங்களில் ஒன்று.

ஆண் குழந்தைகள் இச்சமூகத்தில் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றனர். ஒரு தாயாருக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்தால் அப்பெண்மணி தன் கழுத்தில் ஒரு சங்கிலியில் இரண்டு பொட்டு இருக்கும் வகையில் ஒரு அட்டிகை போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளது. 5 ஆண் குழந்தைகள் என்றால் ஐந்து பொட்டு, 6 ஆண் குழந்தைகள் என்றால் ஆறு பொட்டு என தனக்கு பிறந்துள்ள ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை மற்றவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்ள இவ்வகை அட்டிகையைக் கழுத்தில் அணியும் வழக்கமும் இவர்கள் சமூகத்தில் உண்டு. ஆனால் இளம் பெண்கள் இதனை அணிவதைத் தவிர்த்து விட்டனர் என்பதை நேரிலேயே காண முடிந்தது. இந்தத் தகவல்களெல்லாம் ஒலிப்பதிவுகளாகவும் விழியப் பதிவுகளாகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் வாழ்வியலில் ஆர்வம் உள்ளோர் இவற்றைப் பார்த்தும் கேட்டும் பயன்பெறலாம்.


Wednesday, May 17, 2017

56. குல தெய்வங்கள்



தாமிரபரணி ஆற்றினை  ரசிக்காதவர்கள் கிடையாது எனலாம். இந்த ஆறு என்னைக் கவர்வதற்கு ஒரு பிரத்தியேகமானக் காரணம் இருக்கின்றது. இந்த ஆற்றின் கரையோரங்களில் ஆங்காங்கே சின்னச்சின்னதாய் கோயில்கள் பல  இருக்கின்றன. பெண் தெய்வமாகவும் ஆண் தெய்வமாகவும் வெவ்வேறு பெயர்களுடன் இந்தத் தெய்வங்களின் சிறு கோயில்கள் அமைந்திருப்பதையும் இங்குச் சென்று வந்தவர்கள் நேரில் அறிந்திருக்கலாம்.

ஒரு முறை நான் இந்தப் பகுதியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது ஆற்றங்கரையில் கிராம மக்கள் கூட்டமாக நின்று பூசைக்கு தயாராகிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். மஞ்சள் நிறத்தில் ஆடையணிந்த பெண்களும் ஆண்களும் தலையில் குடங்களை ஏந்தியவாறு இருக்க, அருகில் மத்தளம் நாதஸ்வரம் என இசைக்கருவிகளை ஒரு குழு வாசித்துக் கொண்டிருக்க, அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தோர் சிலர் பக்கத்தில் நின்று கொண்டு குதூகலம் பொங்க சில சடங்குகளைச் செய்து கொண்டிருந்தனர். அதற்குச் சற்று தூரத்தில் சிறிய கோயில் ஒன்று பூமாலையும் வன்ண வண்ண காகித மாலைகளின் அலங்காரமும் செய்யப்பட்டு திருவிழா கோலம் பூண்டிருந்ததையும் காண முடிந்தது.

அங்கிருந்து பயணித்து தொடர்ந்து வரும் போது ஆற்றங்கரையின் இரு பக்கமும் ஆங்காங்கே இன்னும் பல சிறு கோயில்கள் இருப்பதையும் கண்டேன். ஒரு கோயிலின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கிச் சென்று பார்த்தோம்.  அங்கே மண்ணால் செய்யப்பட்ட சிலாரூபங்கள் குவியலகாக் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. அதே கோயிலில் செல்லி அம்மன், இசக்கி அம்மன் என்ற தெய்வங்களின் சிலைகளும் வழிபாட்டில் வைக்கப்படிருந்தன. குள்ளமாக அமைக்கப்பட்ட சிறிய சன்னிதிகளில் சாமி உருவங்கள் இருந்தன. வெளியே குவியலாக மண்ணால் செய்யப்பட்ட வண்ணப்பூச்சுக்களால் ஆன கண்களைக் கவரும் பொம்மைகளின் குவியல் பார்ப்பதற்கு ஆச்சரியம் தருவதாக இருந்தது.

தாமிரபரணி கரையோரம் மட்டும் இந்தக் காட்சி என்றில்லாமல் தமிழகத்தின் பல ஊர்களில் இத்தகைய கிராம தெய்வங்களை காணக்கூடியதாக உள்ளது. நாட்டார் தெய்வங்கள் எனும்போது நாம் நன்கறிந்த  காளியம்மன், மாரியம்மன், சுடலை மாடன், காத்தவராயன், மதுரை வீரன். வீரபத்திரன், முனியாண்டி சாமி, பேச்சாயி அம்மன் என்று மட்டும் இல்லாமல் ஊருக்கு ஊர் மாறுபாட்டுடன் வெவ்வேறு பெயர்களுடன் நாட்டார் தெய்வங்கள் அமைந்திருப்பதுதான் நாட்டார் வழிபாட்டின் சிறப்பு. இத்தகைய நாட்டார் தெய்வங்களே மக்களின் மனதோடு அணுக்கமாக அமைந்தவை. இவ்வகை வழிபாடுகளைச் சிறு தெய்வ வழிபாடு என தரம் அமைத்து நாட்டார் தெய்வ வழிபாட்டினை ஏளனப்படுத்தியும், குறைத்து மதிப்பிட்டும் பிரச்சாரம் செய்வது போன்ற செய்ல்கள் நடப்பதையும்  காண்கின்றோம். தெய்வத்துள் சிறு தெய்வம் பெருந்தெய்வம் எனத்தரம் பிரிப்பதே மனிதர்களின் அறியாமையைக் காட்டுவதுதான் என்பது ஒரு புறமிருக்க, இது மேன்மையைப் பிரதிபலிக்கும் மேட்டிமைத்தன்மையின் ஒரு வகை வெளிப்பாடே எனும் உளவியல் கூற்றினையும் ஒதுக்கி விட முடியாது.

நாட்டார் வழிபாடுகள் என்பன மனித குலம் தோன்றிய காலம் தொட்டு வழி வழியாக வருபவை. வரலாற்றை நன்கு ஆராய முற்படுவோர் தெய்வங்களின் தோற்றத்தையும் உருவாக்கத்தையும் அதன் கால அளவினையும் அறிந்து கொள்ள முடியும். காலத்துக்குக் காலம் புதிய தெய்வங்கள் உருவாக்கப்படுதலும் மக்கள் வழிபாட்டில் ஆழமான இடத்தைச் சில தெய்வ வழிபாடுகள் பெறுவதும் சில தெய்வங்கள் கால ஓட்டத்தில் அதன் சிறப்பு குறைந்து துணை நிலை தெய்வமாகக் கருதப்படும் நிகழ்வையும் ஆய்வுக்கண்கொண்டு பார்க்க முற்படுவோர் அறியலாம்.

சராசரி மனிதர்களைப் போல இயல்பான வாழ்க்கை அமையப்பெற்று பின்னர் ஒரு காலகட்டத்தில் வாழ்வில் நிகழும் ஒரு போராட்டத்தில் உயிரை இழக்கும் மாந்தர்கள் சாமிகளாக மக்களால் அங்கீகாரம் பெறும் நிகழ்வானது நாட்டார் வழிபாட்டியலில் ஒரு முக்கியக் கூறு.  இன்று சாமிகளாக அறியப்படுகின்ற பல தெய்வங்களின் இறப்புக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கும். அதனைச் சுற்றிய நாட்டார் கதைகளும் இருக்கும். சில வேளைகளில் இக்கதைகள் திரிந்து விரிவாக்கம் பெற்று வேறொரு கோணத்தில் மாறி இருக்கும். சிறிய கோயிலாக கல்லை மட்டும் வழிபாட்டினில்  வைத்து ஆரம்பித்து பின்னர் மிகப் பெரிய கற்கோயிலாக மாற்றம் கண்ட கோயில்களும் உண்டு.

நாட்டார் தெய்வங்கள் எனப்படுபவை தமக்கென ஒரு எல்லையை அமைத்துக் கொண்டிருப்பதை இதன் முக்கியக் கூறாகக் காணலாம். நாட்டார் தெய்வங்கள் ஒரு குடும்பத்தினருக்குச் சொந்தமானதாகவோ அல்லது ஒரு இனக்குழு, அல்லது ஒரு சாதி சார்ந்த  அல்லது ஒரு கிராமத்துக்கென்றே உரிய கோயிலாக, என ஒரு எல்லைக்குள் அமைவதாக இருப்பதை இதன் பண்பாட்டுக்கூறுகளின் மைய அமைப்பாகக் காணலாம். ஒரு குலத்துக்கே உரித்தான  குலக்குறிகளை  மற்றொரு குலக்குறிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளச்சின்னங்களாக நாட்டார் தெய்வங்கள் அமைகின்றன. ஒரு ஊரைச் சொல்லி, சாமியின் பெயரைச் சொன்னால், எந்த சமூகம் எனக் கண்டறியும் அடையாளக் குறியீடாகவும் நாட்டார் தெய்வங்கள் அமைந்திருக்கின்றன. ஊரை விட்டு தூரம் சென்றவர்களும் கூட வருடத்திற்கு ஒரு முறை தன் கிராமத்திற்குத் திரும்பி வந்து குலதெய்வத்திற்குப் பொங்கலிட்டு படையல் வைத்து குலதெய்வ வழிபாடு செய்து செல்வது இன்றும் நடைமுறையில் இருக்கும் ஒரு விசயமாக இருக்கின்றது.

வீட்டில் நடைபெறும் சுபகாரியங்கள் அனைத்திற்கும் குலதெய்வ வழிபாடு செய்வது போலவே துக்க காரியங்களைத் தங்கள் குலதெய்வத்திடம் முறையிட்டு படையலிட்டு வழிபட்டுச் செல்வதும் நாட்டார் வழிபாட்டில் ஒரு அங்கமாக இருக்கின்றது.

எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் இறைவன் தன் கைகளால் தானே சமைத்து தயாரித்த உணவைச் சாப்பிடுவார் என்ற நம்பிக்கையும், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சாமிக்குப் படையலிட்டு மனமகிழ்வுடன் வழிபட்டுச் செல்வதுமே நாட்டார் தெய்வ வழிபாட்டின் சிறப்பு. சாமிக்கும் தனக்கும் இடையில் குருக்கள் என்ற இடப்பட்ட மனிதரின் தேவையை அத்தியாவசியமாக்கி,  கடவுளை மனிதருக்கு நெருக்கமாக உணர வைக்கும் பண்புடன் நாட்டார் தெய்வ வழிபாட்டியல் இயங்குகின்றது.

இறை உணர்வு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவது. மனிதர்களின் விருப்பங்களும் வேண்டுதல்களும் அவர்களிடம் இல்லாத ஒன்றினை   வெளிப்படுத்துவன என்பதோடு, அந்த இல்லாத ஒன்றினை வழங்கி வேண்டுதலை நிறைவடையச் செய்யும் என்ற நம்பிக்கையே மனிதர்களை வேண்டுதலை நோக்கி செயல்பட வைக்கின்றது.  எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடிந்தால் அதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபடுவதும் இத்தகைய நாட்டார் வழிபாட்டில் இடம்பெருகின்றது.


ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம், வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபட்ட தன்மைகளுடன், தனித்துவத்துடன் நாட்டார் தெய்வங்கள் மக்கள் வாழ்வியலில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக அமைந்துள்ளார்கள். தமிழ் மரபு அறக்கட்டளை இத்தகைய நாட்டார் வழிபாட்டில் உள்ள சாமிகளைப் பற்றிய வரலாற்றையும் அதன் பின்னனியில் இயங்கும் கதைகளைப் பற்றியும் தகவல்களைச் சேகரித்து அவற்றைத் தொகுத்து ஒரு பிரத்தியேக வலைப்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றோம்.  இச்செய்திகளை http://www.tamilheritage.org என்ற வலைத்தளத்தின் ஊடாகக் காணலாம்.

தமிழர் வரலாறு, பண்பாட்டியல், சமூகவியல், மானுடவியல் ஆய்வுகளைச் செய்ய முனைவோர்,  நாட்டார் வழிபாட்டுக்கூறுகளுக்குத் தம் ஆய்வுகளில் தக்க இடமளித்து, அவற்றை சிறுதெய்வங்கள் எனக் கூறி ஒதுக்கி விடாமல்,   ஆய்வுகளில் இணைத்துச் செயல்படுத்துதல் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்வதில் பெரிதும் துணை புரியும்.


Thursday, May 11, 2017

55. பேருந்து பயணத்தில் சந்தித்த மனிதர்கள்




பயணங்களில் நாம் பார்க்கும் நிகழ்வுகளும் நாம் சந்திக்கும் மனிதர்களும் புதிய விசயங்களை நம் அனுபவங்களாக விட்டுச் செல்கின்றன.  எத்தனை எத்தனையோ சிறிய பயணங்கள் எனது நெடிய வாழ்க்கைப் பயணத்தில் வந்து செல்கின்றன.  அப்படி அமைகின்ற பயணங்கள் வாழ்க்கையின் பார்வையை விசாலமாக்குகின்றன. புதிய மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன. புதிய நிகழ்வுகளை நம்மைக் காணச் செய்கின்றன. இப்படித்தான்  2012ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காகத் தமிழகம் வந்திருந்த போது காரைக்குடிக்குச் சென்று அங்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் ஒரு கருத்தரங்கினை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தோம். அங்கு செல்வதற்கு முன்னர் களப்பணிக்காக கிருஷ்ணகிரிக்குச் சென்றிந்தேன். கிருஷ்ணகிரியில் சில பதிவுகளை முடித்து விட்டு தருமபுரி சென்று அங்கும் ஓரிரு பதிவுகளை முடித்து பின்னர் ஈரோடு சென்று அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடிக்குச் செல்வது என திட்டமாகியிருந்தது.

நான் காரைக்குடி செல்வதாக ஏற்பாடாகியிருந்த அந்த நாள் காலையில் திருச்செங்கோடுக்குச் சென்று அங்கு முருகன் ஆலயத்தை தரிசித்து அங்கு அக்கோயிலின் வரலாற்றுப் பதிவுகளும் செய்து விட்டு தோழி பவளா, மற்றும் நண்பர் ஆரூரன் ஆகியோருடன் காரில் புறப்பட்டு கொடுமுடி வந்து அங்கிருந்து நானும் டாக்டர்.நா.கண்ணனும் காரைக்குடிக்குச் செல்லலாம் என நினைத்திருந்தோம். கொடுமுடி வந்து சேர்ந்து அங்கே காவேரிக்கரையில் பதிவுகளை முடித்து  விட்டு புறப்படும் சமயம் சற்றே தாமதமாகிவிட்டதால் கரூர் சென்று அங்கிருந்து எங்களைத் திருச்சிக்குப் பேருந்தில் ஏற்றிவிடுவதாக ஆரூரன் சொல்லிக் கொண்டிருந்தார். காரைக்குடியில் ஏற்கனவே அங்கு நண்பர் முனைவர்.காளைராசன் திருச்சியில் இருக்கும் அவரது மாணவர் ஒருவருக்கு எங்கள் வருகையைப் பற்றி சொல்லியிருந்தமையால் அந்த மாணவர் திருச்சி பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து என்னையும் டாக்டர்.நா.கண்ணனையும் காரைக்குடிக்கு பேருந்தில் அழைத்துச் செல்ல வருவதாக இருந்தது. மறுநாள் காலை காரைக்குடியில் நிகழ்ச்சிகள் காலை 6 மணியிலிருந்து தொடங்குவோம் என நான் யோசித்திருந்தேன். அங்கு பதிவு செய்யவேண்டிய வரலாற்றுச் சின்னங்களைப் பற்றிய பட்டியல் ஒன்றினை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தேன். ஆக,  மனதில் எப்படியும் பேருந்தைத் தவற விடாமல் சரியான நேரத்தில் எடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

நாங்கள் கரூரை அடைந்து பேருந்து நிலையம் சென்று காரைக்குடி செல்லும் பேருந்து எப்போது புறப்படும் என்று ஆரூரனும் கண்ணனும் தேடிக் கொண்டு சென்றனர். ஒரு பேருந்து அப்போதுதான் கிளம்பியிருப்பதாகவும் அந்தப் பேருந்தினைக் காரில் விரட்டிக் கொண்டு சென்றால் பத்து நிமிடத்தில் நிச்சயமாகப் பிடித்து விடலாம் என்று பேருந்து நிலையத்தில் யாரோ சொல்ல அதை நம்பிக் கொண்டு ஆரூரனும் கண்ணனும் காருக்கு ஓடி வந்தனர்.
கரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆரூரனின் வாகனம் திருச்சி செல்லும் பேருந்தைத் தேடிக் கொண்டு வேகமாக பயணித்தது. நாங்களும் பேருந்து கண்ணில் தென்படுமா என முன்னால் செல்லும் ஏதாவது ஒரு பேருந்தை நோக்கி எங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தோம். சில இடங்களில் வேகமாக ஆக்ஸலேட்டரை அழுத்தியதில் ஆரூரனின் வாகனம் முன்னே செல்லும் வாகனங்களை எல்லாம் முந்திக் கொண்டு சென்று கொண்டேயிருந்தது. 15 நிமிடங்கள் பயணித்தும் அந்தத் திருச்சி சென்று கொண்டிருந்த பேருந்தை எங்களால்  கண்டுபிடிக்கமுடியவில்லை.
இப்படியே தேடிக்கொண்டே போனால் திருச்சிக்கே போய் சேர்ந்துவிடுவோம் என்பது வாகனத்தில் இருந்த எங்கள் நால்வருக்குமே தெரிந்தது. சரி. மீண்டும் கரூர் பேருந்து நிலையத்துக்கே திரும்பி அங்கிருந்து திருச்சி செல்லும் அடுத்த பேருந்தைப்  பிடித்துச் செல்வோம் என்று சொல்லிக் கொண்டு திரும்பினோம். வந்து சேர்ந்த நேரம் சரியாக ஒரு பேருந்து கிளம்பிக் கொண்டிருக்கவே அதில் அவசர அவசரமாக எங்கள் பொருட்களை ஏற்றி வைத்துக் கொண்டு நண்பர்கள் பவளாவிடமும் ஆரூரனிடமும் விடை பெற மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டு பேருந்தில் நானும் கண்ணனும் ஏறினோம்.

நகராண்மைக் கழக பேருந்து அது.  பேருந்து நிறைய மக்கள் பலர் அமர்ந்திருந்தனர். கண்ணன் பேருந்தின் முன் வரிசையில் ஒரு இடம் இருக்க அங்கே சென்று விட்டார். அவரிடம் மிகச் சிறிய ஒரு பெட்டி மாத்திரம் இருந்தது. என்னிடம் எனது பெரிய பயண ட்ரோலியோடு கணினி, கேமரா மற்ற ஏனைய பொருட்கள் வைத்திருந்த தோள்பை ஒன்றும் கையில் இருந்தன. இவை இரண்டையும் வைத்துக் கொண்டு கடைசி இருக்கையிலேயே இருந்து விட்டேன். என் அருகில் ஒரு இளைஞர், மற்றும் ஒரு பெண்மணியும் ஒரு நபரும், மேலும் ஒரு பெண்மணி, அவர் கணவர் ஆகிய ஐவர் அமர்ந்திருந்தனர்.

பேருந்தின் பின் இருக்கையில் நான் குறிப்பிட்ட ஐவரோடு நானும் அமர்ந்திருந்தேன். எனது பெரிய பயணப் பெட்டியை எப்படியோ சமாளித்து பேருந்து சீட்டின் கீழ் தள்ளி வைத்து விட்டு எனது கணினி தோள்பையை மட்டும் கையில் வைத்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்தில் ஒருவர், ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். ஒல்லியான உடல்வாகு கொண்ட மனிதர். அவர் அருகில் ஒரு பெண்மணி அவருக்கும் அதே வயதுதான் இருக்கும். இருவரும் ஏதோ ஒரு  அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்பவர்களாக இருக்குமென்பது அவர்கள்    உரையாடல்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

இருவரும் இடைவிடாது அலுவலகத்தில் உள்ள நபர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பிறகு பேச்சு மாறி,  அந்தப் பெண்மணியின் பிள்ளைகள், குடும்ப விஷயம் என்று போய் கொண்டிருந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் கேட்பார்களே என்ற தயக்கம் இல்லாமல், கவலையில்லாமல் தொடர்ந்து இந்தப் பேச்சு சுவாரசியமாகப் போய்கொண்டிருந்தது. திடீரென்று யாரையோ கைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அந்த மனிதரின் கைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.  சில முறை முயற்சி செய்து பார்த்தார்.  நான் பேருந்து பயணத்தில் இருந்த போது எனக்கு வந்து கொண்டிருந்த  தொலைபேசி அழைப்புக்களை எடுத்து பேசிக்கொண்டிருந்தேன். இதனைக் கவனித்திருப்பார் போல அந்த மனிதர். உடனே என்னைப் பார்த்து, சற்று தொலைபேசி தரமுடியுமா. ஒரு நபருக்கு போன் பேச வேண்டும், என்று கேட்டார். என்னுடைய கைபேசியைக் கொடுத்தேன். அவர் பேச ஆரம்பித்தார். ஏதோ ஒரு விஷயமாக யாரையோ ஓரிடத்தில் மறு நாள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பது பற்றி அந்தப் பேச்சு இருந்தது.

ஏறக்குறைய பத்து நிமிடங்கள் பேசி முடித்த பின் என்னிடம் என் கைப்பேசியை அவர் திருப்பி தரவில்லை. தன் கையிலேயே வைத்திருந்தார். என்னிடமிருந்து வாங்கிய என் கைத்தொலைபேசியை எனக்குத் திருப்பி தரவேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல் மீண்டும் அந்தப் பெண்மணியிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். அவராகத் திருப்பித் தரமாட்டார் என்பது தெரிந்து விட்டது. ஆக நானே அவரைக் கூப்பிட்டு என் கைபேசியைத் தரும் படி கேட்டேன். அவர், மீண்டும் அவர் நண்பர் அவரை என் கைபேசியில் கூப்பிடுவார். அதனால் தான் தானே கையில் வைத்திருப்பதாக எனக்கு விளக்கம் அளித்தார். அப்படி போன் அழைப்பு வந்தால் நான் அவருக்குத் திரும்பத் தருவதாகச் சொல்லி என் கைபேசியை நான் வாங்கிக் கொண்டேன். அந்த பெண்மணியின் அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது இளைஞன் நாங்கள் என் கைத்தொலைபேசி பற்றி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பார் போல. அவருக்கு முகத்தில் புன் சிரிப்பு.

இடைக்கிடையே எங்களின் நீளமான பின் இருக்கையின் இறுதியில்  அமர்ந்திருந்த ஒரு மனிதர் அவ்வப்போது உளறிக் கொண்டு இருந்தார். அவர் அதிகமாகக் குடித்திருந்தார். உடம்பில் போட்டிருந்த சட்டை ஒழுங்காகப் போடப்படவில்லை. மெதுவாக ஏதாவது உளறுவார். திடீரென்று சத்தமாகக் கத்துவார். தன் குடும்பத்துப் பெண்மணிகளைப் பற்றி மிக மோசமான விவரணைகள்; கெட்ட சொற்களில் பெண்களைத் திட்டிக் கொண்டு புலம்பிக் கொண்டேயிருந்தார். ஆனால் கண்களைத் திறந்து அந்த மனிதர் யாரையும் பார்த்ததாகத் தெரியவில்லை. அவர் அருகில் இருந்தவர் அவர் மனைவி என்று இருவர் நடவடிக்கைகளிலிருந்தும் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் கத்தும் போது அவரை திட்டி அடக்கி அமைதியாக வைத்திருக்க பெரிய முயற்சி செய்து கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. அவர் முகத்தில் அதிகமாக கவலை, வருத்தம், அவமானம் எல்லாம் தெரிந்தது. இப்படி எத்தனை எத்தனை முறை தன் கணவனின் நடவடிக்கைகளினால் அவமானப்பட்டு தலையை கவிழ்த்துக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்குமோ, தெரியாது.

நாங்கள் அந்தக் குடிகாரர் கூறும் மோசமான சொற்களைக் கேட்டு ஏனையோர்  கோபப்படுவோமோ என்ற பயம் அவர் முகத்தில் தெரிந்தது . எங்களைச் சமாதானப்படுத்தும் வகையில், தன் கணவர்  அதிகமாகக் குடித்து விட்டு உளறுவதாகச் சொல்லி, முகத்தில் இல்லாத  சிரிப்பை வரவழைத்துக் கொண்டு எங்களிடம் சமாளித்துச் சொல்லி வைத்தார். அவர் நிலை பரிதாபம்.

குடித்து விட்டு உளறும் ஆண்களில் சிலர்  ஏன்  குடித்து விட்டால் மிகக் கேவலமாகப் பேசுகின்றனர் ? அதிலும் தங்கள் குடும்பத்து பெண்களை ? மனதிலே அவ்வளவு வெறுப்பும் குரோதமும் ஏன் ஏற்படுகின்ரது? அந்தக்  குடிகாரனை அழைத்துக் கொண்டு செல்லும் அந்த மனைவியை அந்தக் குடிகாரக் கணவன், தெய்வமாக அல்லவா கருத வேண்டும்? அப்படிப்பட்ட அந்த குடிகார மனிதனையும் சகித்துக் கொண்டும் இருக்கின்றாரே, என நினைக்கும் போது அப்பெண்ணின் நிலையை நினைத்து மனம் கலங்கியது எனக்கு.

தொடர்ந்து அந்தக் குடிகார மனிதரின்  பேச்சும் உளறலும் குறையவில்லை. திடீரென்று எழுந்து நின்று பேருந்தில் முன் பக்கம் போகப் பார்த்தார் அந்த மனிதர். பேருந்து ஆடிய ஆட்டத்தில் தலையில் முட்டிக் கொண்டு விழுந்தார்.  கண்டக்டர் வந்து நன்றாகத் திட்டித் தீர்த்தார். பார்ப்பதற்கு எல்லாமே நாடகம் போல இருந்தது எனக்கு.
எத்தனை விஷயங்கள் ஒரு பேருந்திற்குள்ளேயே நடக்கின்றன. எத்தனை கதைகளுக்கான கரு பேருந்திலேயே கிடைக்கின்றன என்று நினைத்தபோது சுவாரசியமாகவும் இருந்தது.
ஏறக்குறைய அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இந்த நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது. என் அருகில் இருந்த அந்த இருவரும் வழியில் இறங்கி விட்டனர். பேருந்தில் என் அருகில் இப்போது மூவர் மட்டுமே. அந்த இளைஞன். அவர் அருகில் குடிகாரரின் மனைவி, அந்தக் குடிகாரர். பேருந்திலும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
அவ்வப்போது அந்தக் குடிகார மனிதர் சத்தமாகப் பேசுவதும், அதனை  கண்டெக்டர் வந்து கண்டிப்பதும் என்ற வகையில் போய் கொண்டிருந்தது.  நாங்கள் பின் இருக்கையில் மூன்று பேர் மட்டுமே. குடிகாரரின் மனைவி என்னிடம் பேச ஆரம்பித்தார். ஒரு உறவினர் வீட்டுச் சடங்கு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு வருவதாகவும் அவரோடு  இவர்களது பெண் குழந்தைகள் இருவருமாக, ஆக நான்கு பேரும் இப்போது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உறவினர் இல்லத்தில் நண்பர்களும் உறவினர்களும் கூடிவிட்டதால் மகிழ்ச்சியில் அளவுக்கு மீறி குடித்து விட்டாராம். அதனால் அவரை பேருந்திற்குள் கொண்டு வந்து ஏற்றி உட்கார வைத்ததே பெரிய பாடாகி விட்டது என்று விபரம் தெரிவித்தார். அவரது இரண்டு பெண் குழந்தைகளும் சில இருக்கைகளுக்கு முன்னால் அமர்ந்திருப்பதாகவும் இந்த மூன்று பெண்களும் சேர்ந்து தான் இந்த மனிதரை பேருந்தில் ஏற்றியதாகவும் சொன்னார். பேருந்திலிருந்து இந்த மனிதர் எழுந்து ஓடிவிடக்கூடாதே என்பதற்காக அவரை இருக்கையின் மூலைக்குத் தள்ளிவிட்டு இந்தப் பெண்மணி உட்கார்ந்து கொண்டார் என்பதை அவர் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிந்தது. இந்த மனிதரால் மனைவிக்கு மட்டுமல்ல மகள்களுக்கும் அவமானம்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்த போது அந்த மனிதரை அவர் மனைவி எழுப்பிப் பார்த்தார். அவர் நகர்வதாகத் தெரியவில்லை. கண்டக்டர் வந்து விட்டார். கண்டக்டர் அவருக்கே உரிய சத்தமான தொணியில் அவரை விரட்ட, அந்தக் குடிகார மனிதர் ஒரு வகையாக தனக்குத்தான் இந்த  அழைப்பு என்பதைப் புரிந்து கொண்டு எழுந்தார். எழும்போது அவர் கட்டியிருந்த வேட்டி கழன்று விழப் போக, அவர் மனைவி உடனே அதனை சிரமப்பட்டு சரி செய்து வைத்தார். என் அருகில் இருந்த இளைஞர் உடனே எழுந்து அவரை திட்டிக்கொண்டே  உடையை சரி செய்து படிகளில் கைத்தாங்கலாக அக்குடிகாரரின் மனைவிக்கு உதவியாக அம்மனிதரை கீழே இறக்கி விட்டார். இரண்டு பெண்களும் முன் பகுதியிலிருந்தவர்கள் இவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது தான் பார்த்தேன். 14 அல்லது 15 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தைகள். தலையைக் குனிந்து கொண்டே அந்தப் பெண்கள் கீழே இறங்கி தங்கள் தந்தையின் கைகளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றனர். அந்த அம்மாள் ஏதோ பேசிக் கொண்டே செல்வது பேருந்து புறப்படும் வரை கேட்டது.

இப்போது நானும் அந்த இளைஞனும் மட்டுமே அந்தக் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தோம். அந்த இளைஞன் அந்தக் குடிகார மனிதரைப் பற்றி சொல்லி என்னுடன் பேச ஆரம்பித்தார். அப்படியே எங்கள் பேச்சு குடிகாரரின் கதையிலிருந்து மாறி எங்களைப் பற்றியதாக அமைந்தது. நான் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றியும் மின்தமிழ் பற்றியும் எனது தமிழக வருகைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொன்னேன். அந்த இளைஞர் ஆர்வத்துடன் வலைப்பக்க முகவரிகளைக் குறித்துக் கொண்டார். தான் ஒரு அச்சகம் வைத்திருப்பதாகவும் அதன் தொடர்பாக திருச்சி சொல்வதாகவும் தெரிவித்து விட்டு, அச்சகத் தொழில் பற்றி சில விபரங்களையும் சொல்லிக் கொண்டே வந்தார். அவரும் திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது. பேருந்தோ குலுங்கி குலுங்கி ஆடிக் கொண்டே போய்கொண்டிருந்தது. காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. பேருந்திலிருந்து கேட்பதற்கு பலத்த சத்தமாக அது இருந்தது. ஆனாலும் பயணம் அலுப்புத்தருவதாக இல்லை. திருச்சி வந்தடைந்தபோது குறிப்பிட்ட நேரத்தை விட சற்று நேரமாகிப்போயிருந்தது. என்னையும் டாக்டர்.நா.கண்ணனையும் அழைத்துச் செல்ல வந்திருந்த கல்லூரி மாணவர் எங்களுக்காக வந்து காத்திருக்க அவருடன் அடுத்த திருச்சி செல்லும் நகராண்மைக் கழக பேருந்தினைப் பிடித்து அதில் அந்த நள்ளிரவில் காரைக்குடிக்கானப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

இன்று தமிழகத்தின் சிற்றூர்களிலும் பெரு நகரங்களிலும் பெண்கள் மதுபானக்கடைகளுக்கு எதிரான தமது போராட்டத்தைத் தொடக்கியிருக்கின்ரனர். இது பாராட்டுதலுக்குறியது. இவர்கல் போராட்டம் வெற்றியடைய தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்த்துகின்றது!