Wednesday, May 3, 2017

54. சென்னை புறநகர்ப் பகுதியில்- ஒரு நாள் வரலாற்றுப் பயணம்



தமிழகத்தின் கோவையில் 2010ம் ஆண்டு செம்மொழி மாநாடு கோவையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றதைப் பலரும் இன்னமும் நினைவில் வைத்திருப்போம். அந்த நிகழ்வுக்காக நான் தமிழகம் சென்றிருந்த போது கோவை செல்வதற்கு முன்னர் சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள அழிந்து வரும் அல்லது சிதலப்படுத்தப்பட்ட வரலாற்றுப் புராதன சின்னங்களைச் சென்று பார்த்து வரலாம் என ஏற்பாடு செய்திருந்தோம். இதில் முழு ஆர்வத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்திருந்தார் சென்னையில் வசிக்கும் ரீச் அறக்கட்டளையின் செயற்குழுவினர்களில் ஒருவரான திரு.சந்திரா. அந்த ஏற்பாட்டின் படி தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களும் வரலாற்று ஆர்வலர்களும் என 21 பேர் கொண்ட குழுவாகச் சென்னைக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள சில வரலாற்றுப் புராதன சின்னங்களைக் கண்டு வந்தோம். எங்களுக்கு வரலாற்றுத் தகவல்களைத் தருவதற்காக முன்னாள் தமிழக தொல்லியல் துறை ஆய்வாளர் திரு.எஸ் ராமச்சந்திரன் அவர்களும் இணைந்து கொண்டனர். அத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் ஒரிசா பாலு, திரு.இன்னம்பூரான், திரு.தேவ், செல்வமுரளி என மேலும் சில நண்பர்களும் இனைந்து கொண்டனர்.

எங்களின் பயணப் பட்டியலில் சில முக்கிய பகுதிகளின் பெயர்களைக் குறித்து வைத்திருந்தோம். காலை 9மணிக்குக் கூடி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் முதலில் சோமங்களம் எனும் ஊருக்குச் செல்வது. இது நவக்கிரக ஸ்தல குறிப்பின் படி சந்திரனுக்கு உரிய ஸ்தலம் என்ற சிறப்பைப் பெற்றது. பின்னர்அங்கிருந்து புறப்பட்டு நாவலூர் வந்து அங்கே ஜேஸ்டா தேவி சிலையைப்பார்த்து அந்தத் தெய்வ வடிவத்தின் உருவ அமைப்பின் தன்மைகளை அறிந்து கொள்வது என்பது எங்கள் பட்டியலில் இட்டிருந்தோம். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கருங்கற்கால காலம், வரலாற்றுக்கு முந்திய காலத்தின் சான்றுகள் உள்ள குண்டு பெரும்புதூர் பகுதிக்கு வருவது. அங்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை கொண்ட கல் ஃபாசில்களைக் காணுதல், கல்திட்டையைக் காணுதல் என்பதைக் குறித்திருந்தோம். அது முடித்து மாகாணி எனப்படும் பகுதிக்கு வந்து அங்கே பெருங்கற்கால ஈமக்கிரியை சடங்குகள் செய்யப்பட்டதற்கான சான்றுகளைப் பார்வையிடல். அதனை முடித்து இறுதியாக மாகண்யம் கிராமம் வந்து அங்குள்ள பல்லவ காலத்து கோயில் ஒன்றினை சென்று காண்பது, அதன் சிற்ப அமைப்பைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது பட்டியலில் இருந்தது.

காலையில் குறிப்பிட்ட படியே நாங்கள் பேருந்து ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். நண்பர்களையெல்லாம் ஒரே இடத்தில் சந்திப்பது மிகுந்த குதூகலமாக இருந்தது. 21 பேர் இரண்டு சிறிய பேருந்துகளில் என எங்கள் பயணம் தொடங்கியது. பலவாறான செய்திகளை கலந்துரையாடிக் கொண்டு மகிழ்ச்சியாக இப்பயணம் தொடங்கியது.

பட்டியலில் உள்ள இடங்களுக்குச் சென்று அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு தொல்லியல் ஆய்வாளர் விளக்கிக் கூறிய குறிப்புக்களைப் பகிர்ந்து கொண்டோம். குறிப்பாக வழிப்போக்கர் மண்டபம் ஒன்றில், மண்டபத்தின் ஒவ்வொரு கல் தூணிலும் உள்ள சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் பார்த்து அறிந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

நாவலூர் பகுதியில் இருக்கும் ஜேஷ்டா கோயில் எங்கள் பட்டியலில் இருந்தது. இது 8ம் அல்லது 9ம் நூற்றாண்டு சிற்பம் உள்ள கோயில். இக்கோயிலில் ஒரு இடம்புரி விநாயகர் சிற்பமும், சப்த கன்னிகள் சிற்பங்களும், ஜேஸ்டா தேவியின் சிற்பமும் வழிபாட்டில் உள்ளது. இது கல்லால் கட்டப்பட்ட ஒரு கோயில் அல்ல. ஓலையால் பின்னப்பட்ட ஒரு குடிசைக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு கோயில். அங்கு ஜேஷ்டாதேவி சிலையைக் குழுவில் உள்ள அனைவரும் பார்க்க, தொல்லியல் அறிஞர் திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் எங்களுக்கு ஜேஷ்டாதேவியின் சிலையைப் பற்றியும் இந்தத் தெய்வ வடிவத்தோடு வருகின்ற பல்வேறு நம்பிக்கைகளையும் சடங்குகளையும் விளக்கிச் சொன்னார்.

ஜேஷ்டா வழிபாடு என்பது இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முக்கியமான பெண் தெய்வ வழிபாடாக இருந்து காலத்தால் அதன் சிறப்பு படிப்படியாகக் குறைந்து இன்று வழிபாட்டில் இல்லாத தெய்வங்களில் ஒன்று என்ற நிலையை அடைந்துள்ளது.

இந்த விளக்கங்களைச் சொல்லிக் கொண்டு வரும்போது தனது அனுபவம் ஒன்றையும் திரு.எஸ்.ராமச்சந்திரன் பகிர்ந்து கொண்டார். பறவை எனக் குறிப்பிடப்படும் மதுரைக்கு அருகே உள்ள ஒரு ஊரில் ஒரு ஜேஷ்டாதேவி சிலையை தமது ஆய்வின் போது பார்க்க நேர்ந்ததாகவும்., அப்பொழுது அவ்வூர் மக்களிடம் இந்தத் தெய்வத்தை வழிபடுகின்றார்களா, என விசாரித்த போது, அவருக்கு வித்தியாசமான பதிலை ஊர் மக்கள் அளித்திருக்கின்றனர். அது என்னவென்றால், அந்த ஊரில் மழை வரவில்லையென்றால் அந்த ஜேஷ்டா தேவி சிலையைக் கவிழ்த்து போட்டு விடுவார்களாம். அப்படி கிடத்திப் போட்டால் ஊரில் மழை பெய்யும் என்பது அவ்வூர் மக்களின் நம்பிக்கை என அவர்கள் சொல்லியிருக்கின்றனர். அனைத்து வளங்களின் தாயாகவும் பழங்காலத்தில் வழிபாட்டில் இருந்த ஒரு தெய்வ வடிவம் இன்று அதன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு மக்களால் சடங்குகளுடன் பின்னப்பட்ட ஒரு சூழலில் இருப்பதைக் காண முடிகின்றது. சங்கம் மருவிய காலத்திலேயே இந்தத் தெய்வம் மூதேவி என்று வழக்கில் மாறியது என்றும் அறிகின்றோம்.

காலத்துக்குக் காலம் தெய்வ வடிவங்களின் தன்மைகளும் அவர்கள் அளிக்கும் பலன்கள் பற்றிய நம்பிக்கைகளும் மக்களால் மாற்றப்படுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

​பண்டைய சமூகங்களின் வழிபாட்டில் மிக முக்கிய உயர்ந்த அங்கம் ​வகிப்பது தாய்தெய்வ வழிபாடே. பண்டைய தமிழகம் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாகரிகங்களிலும் இதனை அறியமுடிகின்றது. குழந்தையை ஈன்று பாலூட்டும் தாயின் வடிவமே உலக விருத்திக்குக் கடவுள் என்ற பார்வையில் தாய் தெய்வ வழிபாட்டுத் தத்துவம் அமைகின்றது. ஜேஸ்டா தேவியே சங்க இலக்கியத்தில் பழையோள் என குற்ப்பிடப்படும் தெவம் என்கின்றார் தொல்லியல் அறிஞர் எஸ்.ராமச்சந்திரன். இப்படி ஜேஸ்டா தேவியைப் பற்றிய பல வரலாற்றுச் செய்திகளைப் பார்த்து அத்தெய்வத்தின் உருவ அமைப்பின் காரணங்களை புரிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

மதிய உணவினை முடித்துக் கொண்டு மேலும் சிஅல் இடங்களுக்குச் சென்ற அதன் பின் மாகாணிக்குச் சென்றிருந்தோம். இது ஒரு வனப்பகுதி குன்றுகள் நிறைந்த ஒரு பகுதியும் ஆகும். பசுமையான சூழலில் சுற்றுப்பகுதியில் எங்குப் பார்த்தாலும் மனிதக் குடியிருப்பு இல்லாத ஒரு பகுதி என்பது தெரிந்தது.

மாகாணி மலைப்பகுதி என்பது இதன் பெயர். இதனை விவரித்துச் சொல்வதென்றால் மிகப்பெரிய நிலப்பகுதி எனச் சொல்லலாம். இந்தப் பகுதியில் ஒரு சில இடங்கள் மட்டுமன்றி முழுமையாக எல்லா இடங்களிலும் தோண்டிப் பார்த்தால் முதுமக்கள் தாழிகள் கிடைக்கும். ஏனெனில், இது பண்டைய தமிழ் மக்களின் இறந்தோரைக் கிரியைகள் செய்து புதைத்து வைக்கும் இடமாக இருந்து வந்துள்ளது. மனிதக் குல நாகரிகத்தின் பல்வேறு காலகட்டங்களில் இப்பகுதி மக்கள் குடியேற்றம் இருந்த பகுதியாகவும், குறிப்பாக இறந்தோரை ஈமக்கிரியைகள் செய்து முதுமக்கள் தாழிக்குள் அவர்கள் உடலை வைத்துப் புதைத்த இடங்கள் எனச் சொல்லலாம். செல்லும் பாதைகளில் முதுமக்கள் தாழிகள் வரிசை வரிசையாகப் பாதி உடைந்த நிலையில் இங்குக் காணப்படுகின்றன.

இப்பகுதியில் முறையான தொல்லியல் ஆய்வுகள் என்பன நடத்தப்படவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்தியே. குறிப்பிடத்தக்க அகழ்வாய்வுகள் என்பன நிகழவில்லை என்றாலும் சில நடவடிக்கைகளின் போது இங்குக் குழிகள் தோண்டப்பட்டு இங்கு இந்தத்தாழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து பெய்த மழையினாலும் இப்பானைகளின் மேல் ஒட்டியிருக்கும் செம்மணல் பகுதி கரைந்து விட, பானைகள் மேலே தெரியும் படி காட்சியளிக்கின்றன. பார்க்கும் இடங்கள் யாவும் இந்த ஈமக்கிரியைகள் செய்யப்பட்ட இடங்களில் வரலாற்றுச் சான்றுகள் நிறைந்திருக்கின்றன. நிலத்தடியில் இருக்கும் முதுமக்கள் தாழிகள் மட்டுமல்ல. நிலத்திற்கு மேலே உள்ள வட்டக்கல் அமைப்புக்களையும் இங்கே காண முடிகின்றது.

1894ம் ஆண்டு காலகட்டத்தில் இப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சியில் இது ஒரு முக்கிய வரலாற்றுத் தடயங்கள் நிறைந்த நிலப்பகுதி என்று அறியப்பட்டிருக்கின்றது. அந்தச் சமயத்தில் இப்பகுதியில் ஆங்கிலேயர்களின் ராணுவ முகாம் ஒன்று இருந்திருக்கின்றது. அதன்பொழுது புவியியல் அறிஞர்கள் இங்கு வந்து இப்பகுதியை ஆராய்ந்து, இது வரலாற்றுப் புராதன சான்றுகள் உள்ள நிலப்பகுதி என அடையாளம் கண்டு குறித்துச் சென்றனர் என்று எங்களுடன் வந்திருந்த திரு.ஒரிசா பாலுவும் திரு.அண்ணாமலையும் குறிப்பிட்டனர். இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த பகுதியே என்றாலும் கூட, இங்கு அகழ்வாய்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை என்பது வியப்பளிக்கின்றது.

திரு.அன்ணாமலையும் ஏனைய சில ஆராய்ச்சி மாணவர்களும் தான் இந்த இடத்தை மீண்டும் அடையாளம் கண்டு தொல்லியல் துறைக்கு 2005ம் ஆண்டில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆயினும் இப்பகுதியைப் பாதுகாக்கும் நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.
குறைந்தது ஈராயிரம் ஆண்டு பழமையானவை என இந்த முதுமக்கள் தாழிகளைக் குறிப்பிடலாம். ஆயினும் இப்பகுதி இதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே மனிதக் குலம் வாழ்ந்ததற்கான அடையாளங்களைக் கொண்ட ஒரு நிலப்பகுதி என்பதில் ஐயமில்லை.

முதுமக்கள் தாழிகளை பார்த்து விட்டு மேலே சென்ற போது வட்ட வடிவில் வைக்கப்பட்டிருந்த கற்களின் தொகுதிகளைப் பார்வையிட்டோம். இவை வட்டக்கல் என அறியப்படுபவை. இறந்தோரைத் தாழிக்குள் வைத்துப் புதைத்து பின் அதன் மேல் மண்ணால் முடி அதன் மேல் குறியீடாக வட்ட வடிவில் கற்களை வைத்து விடுவார்கள். இதுவே வட்டக்கல் என அழைக்கப்படுவது. தமிழகத்தில் மட்டுமல்ல. உலகின் வேறு சில நாகரிகங்களிலும் இந்த வட்டக்கல், முதுமக்கள் தாழி, கல்திட்டைகள் போன்ற ஈமக்கிரியைச் சின்னங்களைக் காண முடிகின்றது.

மாகாணியில் ஏறக்குறைய மூன்று மணி நேரத்தைக் கழித்து விட்டு அங்கி ருந்து புறப்பட்டு ஒரு பல்லவர் கால ஆலயம் வந்து சேர்ந்தோம் .அ]ங்கு பல்லவர் கால கோயில் சிற்பங்களைப் பற்றி விளக்கம் பெற்ற பின்னர் அன்று எங்களது வரலாற்றும் பயணம் முடிவுற்றது.

ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட இந்த வரலாற்றுப் பயணம் மனதில் இனிமையான ஒரு நினைவாக இருக்கின்றது. சென்னைக்கு சற்று புறநகர்ப் பகுதியிலேயே இத்தனை வரலாற்றுச் சான்றுகளா என நான் வியந்து போனேன். இங்கே தரையில் மிகச்சாதாரணமாக் கிடைக்கின்ற இலைகளின் படிமங்கள் கொண்ட ஃபாசில்கள் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை என அறிகின்றோம். செல்லுமிடமெல்லாம் முக்கிய வரலாற்றுச் செய்திகளா என என்னை வியக்க வைத்த பயணங்களில் இதுவும் ஒன்று.

3 comments:

  1. Thank you for your valuable information

    ReplyDelete
  2. உங்கள் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது - லட்சுமணன் சேலம்

    ReplyDelete
  3. Navalur jeshta devi koil location please

    ReplyDelete