Wednesday, September 14, 2016

28. தாய் மொழியைக் கொண்டாடுவோம்



அனைத்துலக தாய்மொழிகளின் தினம் என்பது உலகில் உள்ள எல்லா  மொழிகளையும் அங்கீகரித்து சிறப்பிக்கும் ஒரு நிகழ்வு. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மொழிகளில்  சில மட்டும் உலகில் அதிக முக்கியத்துவம் பெறுகின்ற நிலை ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில், ஒவ்வொரு மொழியையும் மதித்துச் சிறப்பித்து அதன் முக்கியத்துவத்தை உணரும் வகையில் மக்கள் மனதில் சிந்தனையை உருவாக்கும் நோக்கத்துடனேயே உலக தாய்மொழிகள் தினம் என்பது கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ எனும் சர்வதேச அமைப்பினால் 1999ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி இது அறிவிக்கப்பட்டு 2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21ம் நாள் உலகமெங்கிலும் உலகத்தாய்மொழிகளின் தினம் கொண்டாடப்படுகின்றது.

இப்படி ஒரு நிகழ்வு நான் வசிக்கின்ற ஜெர்மனி நாட்டின், பாடர்ன் உர்ட்டென்பெர்க் மாநிலத்தின் தலைநகரமான ஸ்டுட்கார்ட் நகரில் கடந்த சில ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 2014ம் ஆண்டு இத்தகைய ஒரு நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையைப் பிரதிநிதித்து கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

2014ம் ஆண்டில் உலக மொழிகள் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழகம் பல மொழிபேசும் மக்களை ஒருங்கிணைத்து மொழிகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்வு 22.2.2014, சனிக்கிழமை, ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு நாள் நிகழ்வாக நடைபெற்றது.

தமிழ் மொழி பற்றிய ஒரு அறிமுக நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளைச் சார்பாக நான் தயாரித்திருந்தேன். இதில் தமிழ் மொழி பேசப்படும் நாடுகள், அதன் தொண்மை, தமிழ் எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்களின் தொண்மை என என் உரை அமைந்திருந்தது.  குறியீடுகளாக உருவாக்கப்பட்டவை பற்றியும்,  பண்டைய  தமிழி (பிராமி) கல்வெட்டுக்கள் பற்றியும் பின்னர் இந்தத்  தமிழி எழுத்துரு வட்டெழுத்தாகவும் தமிழ் எழுத்தாகவும் பரிணாம வளர்ச்சி பெற்றதையும் விளக்கிப் பேசினேன்.   இந்த உரையை ஆங்கிலத்திலும் ஜெர்மானிய மக்கள் பேசும் டோய்ச் மொழியிலும் வழங்க வேண்டிய நிலை இருந்தது. நிகழ்வில் கலந்து கொண்டோர் பன்மொழி பேசுவோராக அமைந்ததே  இதற்குக் காரணம்.

என்னுடன் இந்த உரை நிகழ்வில்   நண்பர் திரு.யோக புத்ராவும் பங்கெடுத்துக் கொண்டார். நண்பர் யோகா ஸ்டுட்கார்ட் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழர். ஏறக்குறைய கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டுட்கார்ட் நகரில் வசிப்பவர். SWR எனப்படும் பாடர்ன் உட்டெர்ன்பெர்க் மாநில தொலைக்காட்சி நிருவனத்தில் பணிபுரிபவர்.  ஸ்டுட்கார்ட் நகரில் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல சேவையாளர் என்ற நன்மதிப்பினைப் பெற்ற நண்பர் இவர். ஆக, நாங்கள் இருவருமாக இந்த உரையைத் தயாரித்து எங்களுக்கு வழங்கப்பட்ட  முப்பது நிமிடங்களில் எங்கள் உரையை இந்த நிகழ்வில்  வ்ழங்கினோம்.

நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வுகள் நடக்கும் அறைகளைத் தனித்தனியாக வெவ்வேறு நாட்டு மக்களின்  கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

அதோடு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை வங்காளதேச நாட்டு மக்களின் கலையைச் சிறப்பிக்கும் ஒரு அறை. அதனால் அந்த அறைக்கு ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் ”மோனோகொல்” என்ற ஒரு அமைப்பு பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தது. அந்த  அறையின் அலங்காரம், வரவேற்பு என அனைத்தும் வங்காள தேச முறைப்படி என ஏற்பாடு செய்திருந்தனர்.

மாலை உணவு வகை அந்த அறையில் வங்காள தேச உணவு என்பதாகவும் ஏற்பாடாகியிருந்தது.

தமிழ் மொழி பற்றிய உரையுடன் தமிழ் நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் நான் என் வீட்டு நூலகத்திலிருந்து தேர்ந்தெடுத்தச் சில நூல்களைக் கொண்டு  சிறிய அளவிலான தமிழ் நூல் கண்காட்சியையும் இதே நிகழ்வில் ஏற்பாடு செய்திருந்தேன்.  வந்திருந்தோரில் ஏறக்குறைய அனைவருமே தமிழ் எழுத்துக்களை இது வரை பார்த்திராதவர்களே. ஆகையால் பார்வையாளர்களில் அனைவருமே  நான் காட்சிப் படுத்தியிருந்த நூற்களைப் பார்த்து எழுத்துக்களின் வடிவத்தைப் பார்த்து வியந்து தமிழ் மொழி பற்றி பல கேள்விகள் கேட்டு தகவல் பெற்றுக் கொண்டனர்.

நான் உரையாற்றிய நிகழ்ச்சியை  பாடர்ன் உட்டன்பெர்க் மானில ஆட்சிக்குழுவிலிருந்து வந்திருந்த திரு.ஹெல்முட் ஆல்பெர்க் தொடக்கி வைத்து பேசினார். மொழிகளின் சிறப்பினை வலியுறுத்தும் பொதுவான ஒரு பேச்சாக அது அமைந்தது.

எங்கள் தமிழ் மொழி பற்றிய உரையில் நானும் திரு.யோகாவும் தமிழ் எழுத்துக்கள் அறிமுகம், தமிழ் மொழி பேசப்படும் நாடுகள், அதன் ஆரம்பகால எழுத்து வடிவம், தமிழ் நூல் அச்சு வரலாறு, முதல் தமிழ் நூல், குட்டன்பெர்க் அச்சு இயந்திரம், அச்சுக் கலை வளர்ச்சியில் போர்த்துக்கீஸிய தாக்கம், ஜெர்மானிய பாதிரிமார்களின் தமிழ்-ஜெர்மன் மொழி தொடர்பான செயற்பாடுகள், ஹாலே தமிழ் தொகுப்புக்கள் என பல தகவல்களை வழங்கினோம்.   இது வந்திருந்தோருக்கு புதிய தகவல்களாக அமைந்தன என்பதை அவர்களது கேள்விகள் நிரூபித்தன.

வந்திருந்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய திரு. ஆல்பெர்க் அவர்கள், ஜெர்மனியின் ஹாலே தொகுப்புக்களைப் பற்றி தாம் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றும், அதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளதாகவும், பின்னர் தேனீர் நேரத்தில் என்னிடம் குறிப்பிட்டமை மகிழ்ச்சியளிப்பதாக அமைந்தது.

அடிப்படையில் ஒரு எண்ணெய் சோதனைத்துறை எஞ்சீனியரான திரு.ஆல்பெர்க் இந்தோனீசியாவிலும் தாய்லாந்திலும் பல ஆண்டுகள் தொழில் முறையில் கழித்தவர் என்பதும் மலாய் கலாச்சாரமும் மொழியும் ஓரளவு அறிந்தவர் என்பதும் எனக்கு ஆர்வத்தை அளித்தது. எனது தமிழக தொடர்புகள், பயணங்கள், தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகள் பற்றி பின்னர் அதிக நேரம் உரையாடினோம். இது அவருக்கு ஒருமுறை தமிழகம் வந்து கட்டாயம் ஆலயங்களில் உள்ள  கல்வெட்டுக்களைக் காண ஆவலை உருவாக்கியுள்ளது.

எங்கள் உரையோடு அதற்கு பின்னர் ஹங்கேரி நாட்டின் மொழி பற்றி ஒருவர் சிறு விளக்கம் அளித்தார். அதன் பின்னர் வங்காள மொழி பற்றி ”டோய்ச்ச வெல்ல” தொலைகாட்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிருபர் ஒருவர் ஆங்கிலம், வங்காளம் என இரு மொழிகளில் உரையாற்றினார்.

அதன் பின்னர் வங்காள மொழி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மிகச் சிறப்பாகத் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களாகத் தேர்ந்தெடுத்து இவர்கள் நிகழ்ச்சியை நடத்தினர். அழகிய சேலைகளில்,  கண் கவரும் அலங்காரத்துடன் பெண்மணிகள் வந்து கலை நிகழ்ச்சியைச் செய்தது மிக அருமையாக அமைந்திருந்தது.

பல இன மக்கள் வாழும் ஜெர்மனி போன்ற நாடுகளில் இவ்வகை நிகழ்ச்சிகள் மாறுபட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளையும் மொழி கலாச்சார பண்பாட்டு விஷயங்களையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. அருமையானதொரு நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட மகிழ்ச்சி மனதில் நிறைந்திருக்கின்றது


6 comments:

  1. சிறப்பான பதிவு. வாழ்வின் ஒவ்வொரு கணமும் தமிழ், அதன் தொன்மை என வலம் வரும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உங்கள் பணிகளும்,அதைவிட உங்களின் சலியாத ஆர்வமும் வியக்க வைக்கிறது.

    மனங்கனிந்த பாராட்டுகள் !

    ReplyDelete
  3. உங்கள் பணிகளும்,அதைவிட உங்களின் சலியாத ஆர்வமும் வியக்க வைக்கிறது.

    மனங்கனிந்த பாராட்டுகள் !

    ReplyDelete
  4. உங்கள் பணிகளும், அதைவிட சலியாத உங்கள் ஆர்வமும் வியக்க வைக்கிறது

    மனங்கனிந்த வாழ்த்துகள் !

    ReplyDelete
  5. உங்கள் பணிகளும், அதைவிட சலியாத உங்கள் ஆர்வமும் வியக்க வைக்கிறது

    மனங்கனிந்த வாழ்த்துகள் !

    ReplyDelete