Thursday, November 3, 2016

35. திருமலை - மனித உருவ பாறைச் சித்திரங்கள்




தமிழகத்தில் எனக்குத் தனிப்பட்ட வகையில் என் மனதைக் கவரும் சில ஊர்கள் உண்டு. அதில் காரைக்குடியும் அடங்கும்.

2012ம் ஆண்டு தான் முதன் முறையாக காரைக்குடிக்கு நான் சென்றிருந்தேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அதனை முடித்து சில வரலாற்றுப் பதிவுகளைச் செய்வதற்கு திட்டமிட்டிருந்தேன். மூன்று நாட்கள் காரைக்குடியில் இந்தப் பயணத்தின் போது நான் இருந்தேன். எனது காரைக்குடிக்கானப் பயணத்தின் இறுதி நாளில் சில இடங்களுக்குச் சென்று வரலாற்றுப்பதிவுகள் ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன். இந்தப் பயணத்தின் போது முழு ஏற்பாட்டு உதவிகளையும் நண்பர் முனைவர். காளைராசன் செய்து உதவினார். அன்று மாலை 8:30 அளவில் எனக்கு சென்னைக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டை ஏற்கனவே திரு.காளைராசன் எடுத்து வைத்திருந்தார். ஆக இரவு எட்டுக்குள் அருகாமையில் உள்ள ஏதாகினும் முக்கிய இடங்களுக்குச் சென்று வரலாற்றுப் பதிவுகள் செய்து வர வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.

இருக்கின்ற நேரத்தில் எங்குச் செல்லலாம் என யோசித்த போது தகுந்த இடங்களைக் கண்டறிய வரை படத்தை வைத்துக் கொண்டு ஆராய்ந்தோம். அருகாமையில் உள்ள சில இடங்களைப் பரிசீலித்தோம். திருப்பத்தூர் செல்லலாமா என்ற எண்ணமும் வந்தது. இறுதியில் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு நேராகத் திருமலை செல்வது. பின்னர் அதனை முடித்து விட்டு எப்படி வசதி அமைகின்றதோ அதன் படி செய்வோம் என முடிவு செய்து கொண்டோம். எங்களுடன் இப்பயணத்தில் இனைந்து கொண்ட பேரா.முனைவர்.நா.கண்ணனுக்கு அவரது சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்கும் சென்று வர வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் அதனையும் அன்றே முடிந்த வரை பார்ப்போம் என்று முடிவானது. பயணம் எங்குச் செல்வது என முடிவானதும் சற்று நேரத்தில் எங்களை அழைத்துச் செல்ல தனது வாகனமோட்டியுடனும் வாகனத்துடனும் வந்து சேர்ந்தார் டாக்டர். வள்ளி. டாக்டர்.வள்ளி இப்பகுதியில் கல்வெட்டாய்வுகள் செய்தவர் என்பதனை இவ்வேளையில் குறிப்பிடுவது அவசியம்.

திருமலை என்ற ஊரின் பெயரைக் கேட்டால் பெரும்பாலோர் குழம்புவது இயல்புதான்.
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருமலையோ என சிலர் நினைக்கக்கூடும்.
இன்னும் சிலர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமணத்தலமோ என்றும் நினைக்கலாம். ஆனால், இந்தத் திருமலை இருப்பது காரைக்குடிக்கு ஏறக்குறைய 49 கிமீ மேற்குப்பக்கத்தில். காரைக்குடியிலிருந்து புறப்பட்டு பிள்ளையார் பட்டி வந்து பின்னர் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர் ஆகிய நகரங்களைக் கடந்து வந்தால் திருமலையை வந்தடையலாம். திருமலையை நாங்கள் வந்தடைவதற்குச் சற்று அதிக நேரம் எடுத்தது என்றே சொல்வேன். ஆனால் வழி நெடுக பேசிக் கொண்டே நாங்கள் செபயணித்ததால் நேரம் போனதே தெரியவில்லை.

இயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமம் இது. வயல்வெளியின் பசுமை கண்களுக்குக் குளிர்ச்சி. மனதிற்கு இதம். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலன நெற்பயிர்கள். தாமரை மலர்கள் நிறைந்த குளம். அக்குளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தாமரை மலர்கள். வயலில் உழைத்து விட்டு நடந்து செல்லும் மூதாட்டி. துள்ளித் திரிந்து விளையாடும் சிறுவர்கள். அழகான பாறைகள் நிறைந்த குன்றுகள். அங்கே ஒரு ஆலயம். இப்படி நகரங்களின் சாயம் ஏதும் பூசப்படாத எளிமையான கிராமம் தான் திருமலை.

தமிழகத்திலேயே இருக்கின்ற பலர் கூட இன்னமும் இந்தப் பகுதிக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதை நான் பயணம் முடிந்து சென்னைக்கு வந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்து கொண்டேன். இந்தத் திருமலைப்பகுதியில் இந்தப் பதிவின் போது நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவுகளாக குறிப்பிடத்தக்க விசயங்களைப் பதிந்து வந்து வெளியீடு செய்தேன். அதில்


  • பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் 
  • மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உட்பகுதியில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயில் 
  • குகைகளிலும் பாறைச் சுவர்களிலும் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள் 
  • மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் முன் பகுதி கோயிலைக் கட்டிய கருவபாண்டியன் 
  • கோயிலுக்கு மேலே குன்றில் உள்ள பாறைகளில் இருக்கும் பாறை ஓவியங்கள் 
  • பாறைகளுக்குக் கீழே குகைகளுக்குள்ளே சமணப் படுகைகள் 
  • அங்குச் சுற்றுப்புறத்தில் வாழும் யாதவர் குல மக்கள் 
  • அந்த யாதவர் குல மக்களின் கருப்பண்ண சாமி குல தெய்வம் 

என்பன இடம் பெற்றிருக்கின்றன.

எங்களின் இந்தக் களப்பணி குன்றின் அடிவாரத்தில் தொடங்கியது. படிகளில் ஏறிச் செல்லும் போதே கீழே மூலையில் இருக்கும் இரண்டு சிதைந்த சிலைகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். கோயிலின் வாசலில் ஒரு ஆத்தி மரம் இருக்கின்றது. இந்த ஆத்தி மரம் நூறு வருஷங்களுக்கும் மேல் வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டோம். (குறிப்பு : மண்ணின் குரல் - ஜனவரி 2013 : திருமலை யாதவர்கள் குலக் கண்ணன்)

முதலில் கோயிலுக்குள் சென்று இறை தரிசனத்தை விரைவாக முடித்து விட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தோம். கோயிலுக்கு இடது புறமாக உள்ள பாறைகளில் தான் முன்னர் இந்தப் பாறை ஓவியங்களைத் தாம் பார்த்ததாக டாக்டர் வள்ளி குறிப்பிடவே அங்கே நடக்கலானோம். டாக்டர்.வள்ளி கால் வலியினால் வருந்திக்கொண்டிருந்தமையினால் அவரை கீழே அமரச் சொல்லி விட்டு காளைராசன். நா.கண்ணன், நான் மூவரும் மேலே செல்ல ஆயத்தமானோம். எங்கள் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலரும் ஓடி வந்து இணைந்து கொண்டனர். முதலில் கோயிலில் எங்களைச் சந்தித்த இரண்டு இளைஞர்களும் எங்களுடன் இணைந்து கொண்டனர். இப்படித்தான் பல முறை எனது களப்பணிகளில் நிகழ்ந்துள்ளது. நான் பதிவுகளைச் செய்து கொண்டிருக்கும் போது ஆர்வத்துடன் இப்பதிவுகளைக்கவனிக்கும் சிறார்களும் இளையோரும் பெரியோரும் தாமும் இணைந்து கொள்வார்கள். அவர்களுக்குத் தெரிந்த செய்திகளையும் கதைகளையும் சொல்லிக் கொண்டே வருவார்கள். சிலர் வேடிக்கைப்பார்த்துக் கொண்டு மட்டும் வருவார்கள். எப்படியாகினும் அன்று என்னுடன் வந்து இணைந்து கொள்வோர், ஏதாவது ஒரு வகையில் தாமும் புராதன வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற செய்தியை புரிந்துகொள்வர்.

பாறைகளில் ஏறிய பின்னர் சுற்றுச் சூழலை பார்க்க மனதிற்கு மிக ரம்மியமாக இருந்தது. குன்றில் ஏறுவது சுலபமான காரியமாக இருந்தாலும் மேலே செல்லச் செல்ல உடைந்த கற்களைக் கடந்து மிகச் சிறிதான பாறைகளில் பயணித்து பின்னர் மண்டிக் கிடக்கும் செடிகளைத் தாண்டி செல்வது என்பதாகப் பயணம் இருந்தது. அதிக நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அடிக்கடி மேற்கொள்வதால் எனக்கு இவ்வகை பயணங்களில் சிரமம் பொதுவாகவே இருப்பதில்லை. ஆனாலும் மண்டிக்கிடக்கும் புதர்களைச் தாண்டிச் செல்லும் போதும் பாறைகளில் கைகளில் சில கீறல்கள் படுவதை தவிர்க்க இயலவில்லை.

முதலில் ஒரு பாறையைக் கண்டோம். அதில் நான் அதே ஆண்டு கிருஷ்ணகிரியில் பார்த்த வகையில் அமைந்த குறியீடுகள் என்றில்லாமல் முழு மனித உருவத்தின் சிலை பதித்த உருவங்கள் வரையப்பட்டிருந்தன. தலைப்பகுதியில் மிருகங்களின் தலையை வைத்துக் கொண்டு இருப்பதைப் போன்ற மனித வடிவங்கள் அவை. எகிப்தில் இரண்டு வாரக் கால பயணம் மேற்கொண்டு பல பழம் ஆலயங்களைச் சென்று பார்த்து வந்த அனுபவம் எனக்கு இருந்தமையால் இந்த உருவங்கள் அதே வடிவில் இருப்பதை உணர்ந்தேன். வித்தியாசம் இல்லாமல் அதே வகையிலான உருவம். எகிப்திய பண்டைய தெய்வங்களின் உடல் கூறு என எடுத்துக் கொண்டால் அவை மெல்லிய உடலும் நீண்ட கை கால்களும், தலையில் ஏதாகினும் ஒரு மிருகத்தின் தலையும், உதாரணமாகக் கழுகு, எருது, முதலை என அமைந்திருக்கும். அதே வகையில் இங்கே ஓரிரண்டு சித்திரங்கள் பாறைகளில் இருந்தன. ஆச்சரியப்பட்டுப் போனேன்.

பின்னர் அவற்றைப் பார்த்து அவ்வகைக் குறியீடுகள் வேறு எங்குள்ளன என தேடிக் கொண்டுமேலும் நடந்தோம். இடது பக்கம் முழுதும் பார்த்து விட்டு வலது பக்கம் வந்தோம். அங்கே பாறைகள் கூட அழகாக இருக்குமா என வியக்க வைத்த பிரமாண்டமான வடிவத்தில் அமைந்த பாறைகள் இருந்தன. அதன் அடியிலே சமணப் படுகைகள் இருப்பதைக் கண்டோம். மழை நீர் வடியாமல் இருக்க அமைக்கப்பட்ட காடி, பாறைக்குள்ளேயே நீர் வடியச் செய்யப்பட்டிருக்கும் சிறு வாய்க்கால், வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த படுகைகள் என அனைத்தையும் பார்த்து அறிந்து வீடியோவிலும் கேமராவிலும் பதிந்து கொண்டேன்.

சமணப் படுகைகள் இருந்த தரைப்பகுதியைப் அங்கு வரும் மக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கின்றனர். பாறை ஓவியங்கள் இருந்த பாறைகளின் மேல் பலர் தங்கள் பெயர்களை எழுதிக் கீறி வர்ணம் அடித்து வைத்திருக்கின்றனர். மனம் பதைத்து விட்டது எங்களுக்கு. இது என்ன கொடுமை? நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால் கண்முன்னேயே தற்காலத்திலேயே நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்? எனச் சொல்லி வருந்தினோம்

இப்படி யோசித்து பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களை நோக்கி பாறைகளில் ஏறி காவல்துறை உடையணிந்த போலீஸ்காரர்கள் இருவர் வந்து கொண்டிருந்தனர். ஏன் இவர்கள் இங்கு வருகின்றனர் என்று ஆச்சரியத்துடன் பார்த்து நின்றோம்.

அப்போது காலை ஏறக்குறை 11 மணியிருக்கலாம். எங்களை நோக்கி வந்த காவல்துறை அதிகாரிகளிடம் காரணம் விசாரித்தோம். அன்றைக்கு முதல் நாள் தான் திருமலை சுற்று வட்டாரத்தில் வாழும் குடும்பத்தினர்கள் சேர்ந்து திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயச் சுற்றுச் சூழலில் உள்ள பாறை ஓவியங்களையும் மரபுச் சின்னங்களையும் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்குரிய இடமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என மனு கொடுத்திருப்பதாகவும் அதற்காகக் கூட்டமாக அங்கு வந்து தங்கள் கோரிக்கையை வைக்கப் போவதாகவும் அதனைக் கண்காணிக்க அங்கே வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்கள் இரண்டு காவல் அதிகாரிகளும்.

அவர்கள் சொன்னதை நிரூபிப்பது போன்று ஒரு வெள்ளை நிற ஜீப் வண்டியும் 2 அம்பாஸிடர் கார்களும் வந்து சேர்ந்தன. ஏறக்குறைய 30 பல தரப்பட்ட வயதுடைய ஆண்கள் வந்திறங்கினர்.

நாங்கள் அந்தக் காவல் துறை அதிகாரிகளிடம் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விளக்கி நாங்கள் அங்கு வந்திருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டோம். அவர்கள் இருவருக்குமே ஆச்சரியம். எங்களோடு சேர்ந்து நாங்கள் புகைப்படமும் வீடியோவும் எடுத்த இடங்களுக்கெல்லாம் வந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் கீழேயிருந்து வந்தவர்களில் சில இளைஞர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

நாங்கள் பொதுமக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கும் சமணப் படுகைகளையும் பாறை சித்திரங்களையும் காவல் அதிகாரிகளிடம் காட்டி இவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுச் சின்னங்கள் என அவர்களுக்கு விளக்கினோம். அவர்களும் நாங்கள் சொல்வதை ஆமோதித்தனர்.

நான் முதல் நாள் டாக்டர் வள்ளியிடம் கற்றிருந்த சமணப்படுகைகள் பற்றிய விளக்கத்தைக் காவல் அதிகாரிக்கும் சொல்லி விளக்கினேன். இப்படிவரலார்றுத் தகவல்கள் ஒருவர் வழியாக மற்றவருக்கு என்று செல்வதன் வழி பல விஷயங்களைப் பொதுமக்களிடம் சேர்க்க முடியும் என்பதை அன்று நேரில் அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.
பாறைக்கு மேலே பதிவுகளை முடித்துக் கொண்டு கீழே கோயிலுக்கு வந்தோம். கீழே வந்திருந்த பொதுமக்களுக்குக் திரு.காளைராசன் எங்களையும் நாங்கள் அங்கு வந்ததற்கான காரணத்தையும் எடுத்து விளக்கினார். அவர்களின் முகத்தில் மலர்ச்சி. எங்களுக்கும்!

அவர்கள் காவல்துறையினரிடம் பேசி தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தனர். பின்னர் நாங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே செல்ல ஆயத்தமானோம். நால்வராக இருந்த நாங்கள் 40 பேருக்கு மேல் என்றானோம். எங்களுடன் அந்த 2 காவல் அதிகாரிகளும் குடைவரை கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இணைந்து கொண்டனர். இதனைப் பற்றிய விபரங்களை மற்றொரு பதிவில் விளக்குகின்றேன். 

No comments:

Post a Comment