Thursday, February 28, 2019

97. யாழ்ப்பாணத்து மண் வாசனை





கடந்த 2018ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர் செயல்பாடுகளில் மேலும் ஒரு வளர்ச்சியைச் சந்தித்த ஆண்டு எனத் தயங்காது குறிப்பிடலாம். அதற்கு முக்கியக் காரணம் 29.10.2018 அன்று இலங்கையின் யாழ் நகரில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்றுத் துறை ஏற்பாடு செய்திருந்த  வரலாற்று ஆய்வுப் பயிலரங்க  நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று, இலங்கையின் வடக்கு, கிழக்கு, மத்திய மலையகப் பகுதி, தென்னிலங்கை ஆகிய பகுதிகளிலிருந்து பல்கலைக்கழகத்தைச் சார்ந்தோரும், கல்வித்துறையைச் சார்ந்தோரும், வரலாற்று மற்றும் சமூக ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர்களுமாக இணைந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை செயல்படத் தொடங்கியிருக்கின்றது.



கொழும்பில் தொடங்கியது எங்கள் பயணம். விமான நிலையத்திலிருந்து கொழும்பு மைய நகரம் நோக்கி டாக்சியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எல்லா கட்டிடங்களிலும், பேருந்துகளிலும், சாலைகளிலும் மூன்று மொழிகளில், அதாவது சிங்களம், தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெயர்ப்பலகைகளும் குறிப்புகளும் இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.  நாங்கள் பயணித்து வந்த டாக்சி ஓட்டுநர் ஒரு சிங்களவர். அவரிடம் மக்களுக்கிடையே நிலவும் சூழலைப் பற்றி பேச்சுக் கொடுத்து விசாரித்துக் கொண்டே வந்தோம். 'இலங்கையில் சிங்களவர் -தமிழர் என்ற பிரிவு இருந்தாலும் ஒருவருக்கொருவர் எதிரிகள் போல பார்ப்பது கிடையாது என்றும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தங்கள் சுயநலத்துக்காகப் பிரிவினையைத் தொடர்கின்றனர்',  என அவரது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது பெயர் மகேந்திரன். தமிழ்ப் பெயர் போல இருக்கின்றதே என நான் வினவ, 'இங்குப் பெயர்களில் பெரிதாக வேறுபாட்டைக் காணமாட்டீர்கள்' என கூறி சிரித்துக் கொண்டார்.

 கொழும்பு நகரில் சில மணி நேரங்கள் இருக்கும் வாய்ப்பு எங்களுக்கு அன்று அமைந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கொழும்பு நகரில் கொழும்பு-6 பகுதியில் செயல்பட்டு வரும் கொழும்பு தமிழ்ச்சங்க அலுவலக கட்டிடத்திற்குச் சென்றிருந்தோம். பெரிய வளாகத்தில் ஒரு நூலகம் மற்றும் ஒரு பெரிய மண்டபம் ஆகியவற்றோடு, மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றும் இந்த வளாகத்தில் உள்ளது. நூலகத்தில் அரிய பல தமிழ் நூல்கள் இருக்கின்றன. வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி ஆகிய ஐம்பெருங்காப்பியங்களும் இந்த நூலகத்தின் சேகரத்தில் உள்ளன.  புதிய வெளியீடுகளும் உள்ளன. சஞ்சிகைகள், புகைப்படங்கள் போன்ற வகை ஆவணங்களும் இங்குள்ளன. நாங்கள் சென்றிருந்த வேளையில் தமிழ்ச்சங்கத்தின் ஒரு பகுதியில் இசை வகுப்பும் ஒரு பகுதியில் நாட்டிய வகுப்பும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று மாலை தமிழ்ச்சங்கத்தில் பட்டிமன்றம் ஒன்றும் நிகழ்ந்தது. நிகழ்ச்சியில் பங்கு பெற்றுப் பேசிய எட்டு பேச்சாளர்களும் இருபது வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அவர்களின் பேச்சுத் திறனும் சிந்தனைத் திறனும், மொழி ஆளுமையும் கேட்போரை வியக்க வைக்கும் வகையிலமைந்திருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். சமகால அரசியல் சூழலை அலசி ஆராய்ந்து தங்கள் கருத்துக்கள் வழி வெளிப்படுத்தும் வகையில் இவர்கள் திறமையோடு பேசியது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

அன்று இரவே பேருந்து பயணத்தின் வழி யாழ்ப்பாணம் நகரை வந்தடைந்தோம்.    யாழ்ப்பாணம் நகரை எங்கள் பேருந்து வந்தடையும் போது அதிகாலை ஐந்து மணி ஆகியிருந்தது. பேருந்தை விட்டு வெளியே வந்து தமிழ்க்காற்றை சுவாசித்த தருணங்கள் மனதை விட்டு நீங்காத தருணங்கள்.  பேருந்திலிருந்து வெளியே வந்து அந்த அதிகாலை வெளிச்சத்தில் சாலையின் இரு புரமும் நோக்கியபோது முற்றிலும் தமிழில் ஒரு நகர் இருப்பதைப் பார்த்த அந்த நொடிகளில் எங்கள் மனம் அடைந்த பேருவகையை விவரிக்க வார்த்தையில்லை.  அன்று காலையே நல்லூர் முருகன் கோயிலுக்குச் சென்று நடைசார்த்தியிருந்தமையால் வெளியே இருந்தவாறு தரிசித்து விட்டு, தின்னவேலி (திருநெல்வேலி) பகுதியைக் கடந்து உரும்பிராய் வந்தடைந்தோம். யாழ்ப்பாண நகரின் சாலைகளின் இருபுறமும் செழித்து வளர்ந்திருந்த முருங்கை, தென்னை மரங்களின் பசுமையை ரசித்தவாறே உரும்பிராய் பகுதிக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டோம். அன்றைய நாளில் செய்யவேண்டிய வரலாற்றுப் பதிவுகளுக்கான நீண்ட பட்டியல் இருந்தது.

27.10.2018 அன்று காலை தொடங்கி இரவு வரை பல்வேறு வரலாற்றுப் பதிவுகளையும் ஆய்வுகளையும் எமது குழு மேற்கொண்டது. அதில் குறிப்பிடத்தக்கனவாக
-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அதன் வரலாற்றுத் தொல்லியல் துறை ஆய்வுகள் பற்றிய தகவல்கள். பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் ப.புஷ்பரட்ணம் அவர்களுடன் சந்திப்பு மற்றும் பல்கலைக்கழக வரலாறு தொடர்பான பதிவுகள்.
-யாழ்ப்பாண தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்று அங்குச் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரும்பொருள்களைப் பார்வையிட்டு ஆராய்தல்
-புதிதாகக் கட்டி எழுப்பப்பட்டுள்ள யாழ் நூலகத்திற்குச் சென்று பார்வையிடல்
-டச்சுக் கோட்டை என்றும் அழைக்கப்படும் யாழ்ப்பாணம் கோட்டைக்குச் சென்று வரலாற்றுப் பதிவு மேற்கொள்ளுதல்
-நல்லூர் கந்தசாமி கோயிலில் வழிபாடு
-108 சிவலிங்க வடிவங்கள் சூழ தட்சிணாமூர்த்தி சிலை கருவறையில் அமைக்கப்பட்ட வகையில் உருவாக்கப்பட்ட கோயிலான சிவபூமி திருவாசக அரண்மணை கோயில்
-யமுனா ஏரி
-சங்கிலியான் அரண்மனை
-சங்கிலியான் குளம்
-சங்கிலியான் மனை
-மந்திரி மனை
ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் செய்து வரலாற்றுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றாகத் தமிழ் மரபு அறக்கட்டளையில் இணைக்கப்பட்டு வருகின்றன.

மறு நாள் 28.10.2018 (ஞாயிறு) காலையே எங்களது வரலாற்றுப் பதிவு நடவடிக்கைகள் தொடங்கின.

முதலில் நாங்கள் யாழ்ப்பாணத்தின் பௌத்த சுவடுகள் இன்றும் நிலைத்திருக்கும்  வரலாற்றுப் பகுதியான  கந்தரோடைக்குச் சென்றோம். இது தமிழ் பௌத்தம் நிலைபெற்றிருந்த பகுதியாக அறியப்படும் தொல் பழங்கால மனிதர்கள் வாழ்விடமாகும். அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்பட்டு ஆய்வுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஒரு பகுதி இது. இப்பகுதியில் தற்சமயம் இலங்கை இராணுவத்தினர் நடமாட்டம் இருக்கின்றது. நாங்கள்  சென்றிருந்த சமயத்தில் இரண்டு இராணுவத்தினர் வருவோர் போவோரிடம் சிங்கள மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். எங்களிடமும் வந்து பேசினர். இப்பகுதியை விரிவாக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களுடன் வந்திருந்த  பேராசிரியர்.புஷ்பரட்ணம் அவர்களிடம்  சிங்களத்தில் கூறிச் சென்றனர். பேருந்துகளில் சிங்களவர்கள் வந்து இப்பகுதியைப் பார்த்துச் செல்கின்றனர்.

கந்தரோடை செல்லும் சாலையில் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கடந்து சென்றோம். தற்சமயம் சாலையின் இரு பக்கங்களிலும் புதிய வீடுகள் தென்படுகின்றன. இவை இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகள் என ஒருவர் குறிப்பிட்டார். வீடுகளின் தரம் மிக எளிமையானதாக உள்ளது. பத்து ஆண்டுகளாவது இவை தாங்குமா என்பதே சந்தேகம் எனும் வகையில் இவ்வீடுகள் இன்றே  காட்சியளிக்கின்றன.

அடுத்து எங்கள் பயணத்தில் அமைந்தது கீரிமலை சிவாலயம். இது சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழம் கோயில் என அறியப்படுவது. போரில் மிகுந்த சேதம் அடைந்த இக்கோயில், கடந்த ஆண்டு முழுமையாக புதிதாக கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது இவ்வாலயம். கோயிலின் உள்ளே சிவபுராணக் காட்சிகள் சுவர்களில் ஓவியங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு அருகாமையிலேயே இருப்பது மாவட்டபுரம் கந்தசாமி கோயில். இது கீரிமலை கோயில் அருகிலேயே இருக்கும் ஒரு சிவாலயம். போரினால் மிகுந்த சேதம் அடைந்த சிவாலயங்களில் ஒன்று இது. தற்சமயம் இக்கோயில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் செயல்படும் துர்க்கையம்மன் கோயிலுக்கும் வரும் வழியில் சென்று வழிபட்டோம். இங்கு போரின் போது ஏற்பட்ட பாதிப்புகளினால்  மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு இயங்கி வருகின்றது. சைவ ஆராய்ச்சி நூலகம் ஒன்றும் இவ்வளாகத்திலேயே  உள்ளது. துர்க்கைக்கான அர்ச்சனையாக இங்கு மனநலம் பாதிக்கபப்ட்ட பெண்களின் பெயர்கள் வரிசையாக வாசிக்கப்பட்டு அவர்களுக்கான போற்றி பாடல் இங்கு வழிபாட்டில் ஓதப்படுகின்றது.

அன்று மதியம் குரும்பையூர் (குரும்பசிட்டி) கிராமத்தில் ஏற்பாடாகியிருந்த பரிசளிப்பு விழா, தமிழ்த்தினவிழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் குழுவினர் கலந்து கொண்டோம். முற்றிலும் அழிக்கப்பட்ட, 30 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கிராமம் தான் குரும்பசிட்டி. இங்குத் தற்சமயம் புது குடியேற்றம் தொடங்கியுள்ளது. இங்கு ஒரு பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு அங்கு வறுமைக்கோட்டின் அடித்தளத்தில் உள்ள மக்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் ஏற்பாடாகியுள்ளது. அன்றைய நிகழ்வில்  குழந்தைகளின் நலனுக்காக பெரும் சேவையாற்றும் ஆசிரியை வலன்ரீனா, பள்ளி அதிபர் திரு.ரவிச்சந்திரன் ஆகியோருடன் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தோம். அத்தோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் சார்பாக இப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக இலங்கை ரூபாய் ஐம்பதாயிரம் நன்கொடையை வழங்கினோம். அன்றைய நாளின் மாலை வேளையில் திருமறை கலாமன்றம், கலைத்தூது அழகியல் கல்லூரியில் பன்மொழிப்புலவர் பாதிரியார் மரியசேவியர் அவர்களையும் அவரது அமைப்பின் குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடினோம். அப்போது இந்தக் கலை அமைப்பின் செயல்பாடுகள் குறித்த பேட்டி ஒன்றும் பதிவாக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் தெருக்களில் தமிழகத்தில் காண்பது போல ஆட்டோக்களைக் காணலாம். இங்கே பச்சை, சிவப்பு, நீலம், கருப்பு, ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் என பல வர்ணங்களிலான ஆட்டோ வாகனங்கள் சாலைகளில் இயங்குகின்றன.

யாழ்ப்பாணப் பயணத்தின்  முத்தாய்ப்பாய் 29.10.2018 அன்று  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை அமைப்பாக்க நிகழ்வும் தொடக்கவிழாவும், வரலாற்றுப் பயிலரங்கும் நடைபெற்றது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 200 ஆய்வாளர்களும் மாணவர்களும் இந்தப் பயிலரங்கில்  பங்கு கொண்டனர். இதே நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக்  கிளை தொடக்கி வைக்கப்பட்டது.

அன்று மதியம் யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் கலாச்சார விழா நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழுவினர் கலந்து கொண்டோம். 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இது. 1995 முதல் 2002 வரை இராணுவக்கட்டுப்பாட்டில் இக்கல்லூரியின் வளாகம் இருந்தாலும், கடும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு இன்று வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. பெருமளவில் மலையகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு ஆசிரியர் பயிற்சி மேற்கொள்வதை அறிந்து கொண்டோம். சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட எங்களைப் பயிற்சி ஆசிரியர்கள் கோலாட்டம் ஆடி  மகிழ்வித்து அழைத்துச் சென்றனர்.

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா..!
என்ற பாடலையும் மேலும் பல தமிழிசைப்பாடல்களையும் இயற்றிய வீரமணி ஐயர் ஆசிரியராகப்பணிபுரிந்த கல்லூரி என்பது  இதன் தனிச்சிறப்பு. அன்றைய நிகழ்வில் பயிற்சி ஆசிரியர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. பின்னர் யாழ்ப்பாணக் குடாபகுதியில் அமைந்திருக்கும் மாதகல் பகுதிக்குச் சென்று ஆய்வு செட்ய்ஹோம். இதுவே கி.மு3ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு  அசோகச் சக்கரவர்த்தியின் திருமகளான சங்கமித்தை வந்திறங்கிய பகுதி என அறியப்படுகின்றது.

எங்கள் யாழ்ப்பாண பயணத்தின் இறுதி நாளில் இலங்கைக்கான வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு விக்ணேஸ்வரன் அவர்களுடன் ஒரு சந்தித்து ஏற்பாடாகியிருந்து. இலங்கையின்  தற்கால அரசியல் நிலைத்தன்மை, தமிழர்களின் அரசியல் புரிதல், மற்றும் செயல்பாடுகள் பற்றியும் இந்தச் சந்திப்பில் உரையாடினோம்.

வரலாறு, சமூகம், அரசியல், கலை என பல்வகை பரிமாணங்களில் யாழ்ப்பாணத்தை உள்வாங்கிக் கொள்ள இந்த குறுகியகால யாழ்ப்பாணப்பயணம் உதவியது. நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் தனித்துவம் வாய்ந்ததோர் மாகாணம். இங்கு ஊருக்கு ஒரு நூலகம் என இருப்பதைப் பார்த்து வியந்து மகிழ்ந்தேன். கல்விக்குக் கோயில் எழுப்பி வழிபட்ட தமிழர்களுக்குச் சொந்தமான நிலம் தான் யாழ்ப்பாணம் அந்த நிலத்தில் இருந்த நான்கு நாட்களும் தூய தமிழ் மண்வாசனை எங்கள் மனதை நிறைத்தது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கை மரபுரிமை தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும் செய்திகளையும்  http://www.srilanka.tamilheritage.org/  என்ற வலைப்பக்கத்தில் காணலாம்.











Thursday, February 21, 2019

96. இலங்கைத் தீவின் ஐரோப்பிய சுவடுகள்



உலகின் பல நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு நாடும் ஒரு வகையில் என் மனதைக் கவர்வதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருக்கும். ஆனால் வஞ்சகம் வைக்காமல் இயற்கை தன் எழிலை வாரி வழங்கியிருக்கும் ஒரு நாடு இலங்கை. அந்த இயற்கை அழகோடு சேர்ந்து,  இலங்கையை ஆண்ட பேரரசுகளும், இலங்கையைக் கைப்பற்றிய பேரரசுகளும் கட்டி எழுப்பி, அதன் பின் விட்டுச் சென்ற கட்டுமானங்களின் தடயங்கள் இணைந்து இலங்கை இன்று  உலகின் மிக முக்கிய வரலாற்றுச் சான்றுகள் நிறைந்த ஒரு நாடாகவே நமக்குத் திகழ்கின்றது.

உலக வரைப்பட உருவாக்கத்தில் மேலை நாட்டார் கடந்த ஏறக்குறைய ஆறேழு நூற்றாண்டுகளில் தீவிர நாட்டம் செலுத்தினர். இதற்கு முக்கியக் காரணமாக அமைவது அவர்களது ஏனைய நாடுகளுடனான வணிகப்போக்குவரத்து. ஐரோப்பிய நாடுகளும், ஸ்கேண்டிநேவிய நாடுகளும்   கடல் வழி வணிகத்தை தீவிரப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் தாங்கள் செல்லும் நாடுகள், புதிதாக தங்கள் பயணத்தில் அவர்கள் கண்டுபிடிக்கும் நாடுகள் மற்றும் தீவுகளின் வரைப்படங்களைத் தயாரிப்பதில் பெறும் முனைப்பு காட்டினர். அத்தகைய முயற்சியில் இலங்கைத் தீவு பற்றிய வரைப்படங்களும் உருவாக்கப்பட்டன. அவை இன்று நமக்கு அன்றைய இலங்கைத் தொடர்பான செய்திகளை வழங்கும் முக்கிய ஆவணங்களாகத் திகழ்வதோடு, அக்கால இலங்கையின் அமைப்பினை நமக்குக் காட்டும் கண்ணாடியாகவும் அமைகின்றன.  

கி.பி.17ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவின் பெரும்பகுதி போர்த்துக்கீசியர்களாலும் உள்ளூர் இலங்கை மன்னர்களின் ஆட்சியின் கீழும் இருந்தது. போர்த்துக்கீசியர்களின் தாக்கத்தை எதிர்க்க உள்ளூர் இலங்கை மன்னர்கள் வணிகம் செய்ய வந்த டச்சுக்காரர்களின் உதவியை நாடினர். கி.பி.1638ம் ஆண்டு கண்டி ஒப்பந்தம் மன்னன் 2ம் ராஜசிங்கனுக்கும் டச்சு அரசு பிரதிநிதிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. டச்சு அரசின் தாக்கம் இதன்வழி இலங்கையில் காலூன்றத் தொடங்கியது. ஆனால் மன்னன் 2ம் ராஜசிங்கன் அதே வேளையில் பிரஞ்சுக்காரர்கள் உதவியையும் நாடியதோடு திரிகோணமலை துறைமுகத்தையும் அவர்களுக்கு வழங்கினார். இது டச்சுக்காரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். இப்பகுதியைத் தாக்கி திரிகோணமலையை டச்சுக்காரர்கள் கைப்பற்றி தம் வசம் வைத்துக் கொண்டனர்.

படிப்படியாக இலங்கைத் தீவு Dutch Ceylon என்ற பெயரில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் கி.பி.1640 முதல் 1796 வரை இருந்தது. கடற்கரையோர பகுதிகளை இக்காலகட்டத்தில் டச்சுப்படை கைப்பற்றியிருந்தது. ஆனால் கண்டியைக் கைப்பற்ற இயலவில்லை. 1638ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. டச்சுக்காரர்கள் தமிழர் வசம் இருந்த பகுதிகள் அனைத்தையும் தம் வசம் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர்.

இக்காலகட்டத்தில் தமிழகத்தின் தஞ்சையில் இருந்து இலங்கையின் மத்தியப் பகுதிக்குத் தோட்டங்களில் பணிபுரிய கூலித் தொழிலாளர்களாக தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஆரம்பத்தில் இலவங்கப்பட்டை தோட்டங்கள், புகையிலைத் தோட்டங்களில் பயிர்த்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இக்காலகட்டத்தில் இலங்கையில் டச்சு கடற்கரையோர அரசு (Dutch Coromandel) இயங்கிக் கொண்டிருந்தது. இதன் தலைமையகம் தமிழகத்தின் பழவேற்காடு பகுதியில் அமைந்திருந்தது. இதன் வழி தங்கள் காலணித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் தேவைப்படும் மனிதவளத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பணியாட்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தத் தலைமையகம் செயல்பட்டது என்றும் அறியமுடிகின்றது.

Insel Zeilan என்ற டச்சு மொழிப் பெயருடன் இந்த இலங்கைத் தீவின் நில  வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வரைப்படம் முழுமைக்கும் லத்தின் மொழியில் ஊர்கள் மற்றும் கடல்பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன. Insel Zeilan என்பது டச்சு மொழிச் சொல். ஆக, இலங்கைத் தீவு டச்சுக்காலணித்துவத்தின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த வரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

இந்த வரைப்படத்தின் அசல், காகிதத்தில் அச்சுப்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைப்படத்தில் மன்னார், கண்டி, மட்டக்களப்பு, திரிகோணமலை போன்ற பெயர்களை அடையாளம் காண முடிகின்றது.

Insel Zeilan என்று இலங்கைப் பற்றிய பெயர் குறிப்பு ஜெர்மானிய டோய்ச் மொழியில் வெளிவந்த ஆயிரத்து ஒர் இரவுகள் (Tausand und eine nacht) என்ற சிந்துபாத் கதையிலும், கி.பி 1755ல் வெளிவந்த ஜெர்மானிய டோய்ச் மொழி வர்த்தகம் தொடர்பான லைப்ஸிக் நகரில் அச்சிடப்பட்ட ஒரு நூலிலும் மேலும் சில 18ம், 19ம் நூற்றாண்டு நூல்களிலும் நாம் காண்கிறோம். அந்த அளவிற்கு ஐரோப்பாவின் வணிக மற்றும் இலக்கிய வட்டாரத்தில் பரிச்சயம் பெற்ற பெயராகவே இது இருந்திருக்கின்றது.

இந்த வரைப்படத்தை ஏலத்தில் வாங்கியவர் நோர்வே நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழரான திரு.வேலழகன்.  இந்த வரைப்படம் இலங்கைத் தீவின் முழுமையையும் குறிப்பதாக இதில் காட்டப்படவில்லை. குறிப்பாக இலங்கையின் தென்பகுதி இந்த வரைப்படத்தில் தென்படவில்லை. ஆக, ஆரம்பகால ஆசிய நிலப்பகுதிகளின் வரைப்பட முயற்சியாக இருக்கலாம் என நாம் ஒரு வகையில் ஊகிக்கலாம். அத்துடன் டச்சு காலணித்துவ காலகட்டத்தையும் அச்சு இயந்திரங்கள் பரவாலாக செயல்படத்தொடங்கிய நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டால், இது ஏறக்குறைய கி.பி 17ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத வாய்ப்புள்ளது. 

இலங்கைத் தீவில் ஐரோப்பியரது மேலாதிக்கம் இருந்தமைக்கு அடையாளமாக இன்றும் காட்சி அளிக்கும் நினைவுச்சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒன்று. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்பட்டாலும், இதற்கு முன்னரே இப்பகுதி வணிகத்திற்காகப் பயன்பட்டது என்பதும் கட்டுமானங்கள் இருந்தன என்பதும் தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு. யாழ்ப்பாண தீபகற்பத்திற்குத் தெற்கே, இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கோட்டையாக கருதப்படுகிறது இக்கோட்டை. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. கிபி 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பின் அதன் தொடர்ச்சியிலும் ஆட்சி புரிந்த டச்சுக்காரர்கள் இக்கோட்டையை மேலும் விரிவாக்கி தற்போது நாம் காணும் நட்சத்திர வடிவத்துடன் இக்கோட்டையை அமைத்தனர். டச்சுக்காரர்களுக்கு பின்னர் இலங்கை தீவை ஆண்ட பிரித்தானியர் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அடிப்படை தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யவில்லை . ஆகவே இக்கோட்டை டச்சுக் கோட்டை என்றும் அழைக்கப்படுகின்றது.

போர்த்துக்கீசியர் இலங்கைத் தீவிற்கு வருவதற்கு ஈராயிரத்திற்கும் முற்பட்ட காலகட்டத்திலேயே ரோமானியருடனும், இந்தியா, அரேபியா ஆகிய நாடுகளுடனும், ஏனைய கிழக்காசிய நாடுகளுடனும் வணிகப் போக்குவரத்துக்கள் இருந்தமையும், இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதி செய்கின்றன. பழமையான கற்கோவில்கள் இங்கு இருந்தமைக்கான சான்றுகளும் கிடைக்கின்றன. பிற்கால ஐரோப்பியர் வருகையின் போது அவை சிதைக்கப்பட்டிருக்கலாம் என்பது இந்த யாழ்ப்பாணக் கோட்டை உள்ள பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகளின் வழி தெரிய வருகின்றது.

தமிழகத்தை ஆண்ட சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் இலங்கைத் தீவின் பெரும்பகுதியைத் தனது ஆட்சி காலத்தில் கைப்பிற்றினான். அப்போது இலங்கையின் இன்றைய பொலநருவை உட்பட பல பகுதிகளில் அவனால் சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. இந்த யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டொன்று முதலாம் ராஜராஜன், இங்குக் கட்டப்பட்ட கோயிலுக்கு வழங்கிய தானம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றது.

இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு, இப்பகுதி சோழமன்னர் ஆட்சிகாலத்தில், அதாவது கி.பி 9, 10ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இப்பகுதி ஒரு வணிகப் பெறுநகரமாக இருந்திருக்கலாம் என்பதை விளக்குவதாக அமைகிறது. இக்கோட்டை அமைந்திருக்கும் பகுதி ஐந்நூற்றுவன் வளவு என அழைக்கப்படுகின்றது. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் புகழ்பெற்று விளங்கிய வணிகக் குழுக்களின் பெயர்களையும் நகரங்களின் பெயரையும் ஒத்த வகையில் இது அமைந்திருப்பதையும் காணவேண்டியுள்ளது. இது இப்பகுதி ஒரு வணிகப்பெருநகரமாக அக்காலகட்டத்தில் திகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றது.
டச்சுக்காரர்கள் காலத்தில் அவர்கள் எழுதிவைத்த ஆவணங்களில் யாழ்ப்பாணக் கோட்டை கட்டிய வரலாறும் கோட்டையைக் கட்டுவதற்கு அவர்கள் பயன்படுத்திய கற்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன என்ற வரலாறும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அதில் கோட்டை கட்டுவதற்கு வேண்டிய முருகக் கற்கள் (கோரல் கற்கள்) அருகில் உள்ள வேலனை, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டன என்ற செய்திகளை அறியமுடிகின்றது.

இத் தீவுகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து முருகக் கற்களைக் கொண்டு வந்த ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் 3 பணம் வழங்கப்பட்டது என்றும், கடலிலிருந்து கற்களைச் சேகரித்து தோணி ஏற்றுவதற்கு தோணி ஒன்றுக்கு அரைப் பணம் வழங்கப்பட்டது என்றும் அறியமுடிகின்றது.
டச்சுக்காரர்கள் ஆட்சியின் போது இக்கோட்டைக்குள் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. கி.பி1730ல் கட்டிமுடிக்கப்பட்ட இத்தேவாலயத்தின் அமைப்பு சிலுவை போன்ற வடிவில் அமைந்துள்ளது. தற்சமயம் இந்தத் தேவாலயம் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆலயத்தின் முழுமையான வடிவமைப்பைத் தெரிந்து கொள்ள முடியாத அளவில் ஆலயம் முற்றாக அழிந்து கல் மேடாகக் காட்சியளிக்கிறது.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற போரில் இந்த யாழ்ப்பாணக் கோட்டை பெரிய பாதிப்பை சந்தித்தது. போருக்குப் பின் இன்று இக்கோட்டையின் சில பகுதிகளைப் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் கோட்டை உள்ள இப்பகுதியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களும் பழமையான சிவாலயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் மற்றும் தூண்கள், கட்டிடத்தின் பாகங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.



இக்கோட்டைப்பகுதியில் மேலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படுமானால் இப்பகுதியின் பண்டைய நாகரிகமும் வணிகச் சிறப்பும் மேலும் ஆய்வுலகத்தினால் வெளிக்கொண்டரப்படலாம்.







Thursday, January 31, 2019

95. நோர்வே நாட்டுக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு பயணம்



தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலைக் கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னணி கொண்டது. இந்திய, இலங்கை நாடுகளில் வணிக நோக்கத்துடனும், பின்னர் கடந்த ஐந்நூறு ஆண்டுகள் காலப்பின்னனியிலும் வணிகத்துடன், சமயம் பரப்புதல், பின்னர் அரசியல் ஆளுமையைச் செலுத்தியமை என்ற வகையிலும் ஐரோப்பியரின் செயல்பாடுகளைக் காண்கின்றோம். இக்காலகட்டங்களில் ஐரோப்பியர் ஆசியா வந்தது போல தமிழர்கள் ஐரோப்பிய நிலப்பகுதிகளுக்குச் சென்றமையைப் பற்றிய தரவுகள் குறைவாகவே கிடைத்தாலும் அவற்றை ஆராய வேண்டியதும், குறிப்பிட வேண்டியதும் தமிழர் வரலாறு சார்ந்த ஆய்வுகளுக்கு அவசியமாகின்றது.

கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கானத் தமிழர் புலம்பெயர்வு என்பது இலங்கையில் நடைபெற்ற போரின் காரணத்தாலும், உயர் கல்வி ஆய்வுகள் என்ற நோக்கத்தினாலும் ஏற்பட்டதைக் காண்கின்றோம். அப்படி தமிழர் பெருவாரியாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நோர்வே குறிப்பிடத்தக்க ஒரு நாடு.

நோர்வே நாட்டிற்குத் தமிழர்கள் கடந்த நூற்றாண்டிற்கு முன்னர் வந்திருக்கலாம். ஆயினும் அது சார்ந்த குறிப்புக்கள் ஏதும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. கடந்த நூற்றாண்டில், இன்று நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில், முதலில் நோர்வே நாட்டிற்கு வந்து வாழ்ந்த தமிழர் ஒருவரைப் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ”குட்டி மாமா” என அன்புடன் அவரது உறவினர்களாலும் நண்பர்களாலும் அழைக்கப்படும் திரு.ஆண்டனி ராஜேந்திரன் தான் அவர். இலங்கையிலிருந்து தனது நண்பர் ஒருவருடன் புறப்பட்டு இந்தியா வந்து, பின்னர் ஒரு மோட்டார் சைக்கிளில் தரைவழியாகப் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றார். லெபனான், துருக்கி மற்றும் ஏனைய நாடுகளை மோட்டார் சைக்கிள் பயணத்திலேயே கடந்து பின்னர் இங்கிலாந்து சென்றிருக்கின்றார். பின்னர் பொருளாதாரச் சிரமத்தை ஈடுகட்ட அங்கு சில மாதங்கள் ஒரு தங்கும்விடுதியில் பணிபுரிந்திருக்கின்றார். அங்கு அறிமுகமான நண்பர்களுடைய ஆலோசனையின் படி 1956ம் ஆண்டு நோர்வே நாட்டிற்குச் சென்றிருக்கின்றார். நோர்வே நாட்டில் மீன்பிடித்தொழில் தொடர்பான தகவல்களைப் பெறவும் கப்பல்களைக் கட்டும் தொழில்நுட்பம் பற்றியும் அறிந்து கொள்ளலாம் என நண்பர்களின் ஆலோசனை அமைந்ததால் நோர்வேக்கு புறப்பட்டிருக்கின்றார் என்பதை அறிகின்றோம்.

மீன்பிடித்தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்ற தொழிலுக்கு நோர்வே பிரசித்திபெற்ற நாடு என்பதை அறிந்து கொண்டார். நோர்வே நாட்டிற்கு வந்த திரு.ராஜேந்திரன் நோர்வேஜியன் மொழியைக் கற்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு ஒரு நோர்வே இன பெண்மணியின் அறிமுகம் ஏற்படவே அவரையே திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதில் ஒருவர் இலங்கையில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி. திரு,ராஜேந்திரன் இலங்கைக்குத் தனது மனைவி, குழந்தைகளுடன் வந்து தங்கியிருந்ததோடு இலங்கை-நோர்வே ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான வணிக உறவுகளைத் தொடங்கியிருக்கின்றார் என்பதும் சுவாரசியமான ஒரு செய்தி.

இலங்கைக்கு வந்தவர் அங்குத் தனது நண்பர்கள் சிலருக்கு தான் நோர்வே நாட்டில் கற்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கப்பல் கட்டும் பயிற்சிகளை வழங்கியிருக்கின்றார். அவர்களில் சிலர் இவருடன் நோர்வே நாட்டிற்கு வந்து பின் நோர்வே நாட்டிலேயே தங்கிவிட்டனர். இலங்கை அரசின் அனுமதியுடன் ஒரு தொழிற்சாலையை இலங்கையில் உருவாக்கியிருக்கின்றார். SINOR என்ற பெயருடன் 1968 வாக்கில் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். இந்தத் தொழிற்சாலை நெகிழி கப்பல்களையும், மீன் பிடிக்கும் வலைகளையும் உருவாக்கும் முயற்சியுடன் தொடங்கப்பட்டது. இதன் வழி இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அங்கு இத்தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தது. முதலில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட பின்னர் இன்று கொழும்பில் இந்தத் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இலங்கையில் தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தாலும் திரு,ராஜேந்திரன் நோர்வே நாட்டிற்கே வந்து தங்கி விட்டார். இன்றைய காலகட்டங்களைப் போல கடவுச்சீட்டு கெடுபிடிகள் இல்லாத காலகட்டமாகவே அது இருந்திருக்க வேண்டும்.

இதில் மேலும் ஒரு சுவாரசியமான செய்தி என்னவென்றால், இலங்கையிலிருந்து முதன் முதலில் தரைவழி பயணத்தைத் தொடங்கியபோது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இங்கிலாந்து வரும் போது பழுதடைந்து விடவே அவரது பயணம் தடைபட்டது. அவர் நோர்வே நாட்டில் உதவி கேட்க, அவருக்கு நோர்வே நாட்டில் ஒரு மோட்டார் சைக்கிளை பரிசளித்திருக்கின்றனர். இந்த புதிய மோட்டர் சைக்கிளில் மீண்டும் நிலவழியாகவே இவர் பயணம் செய்து இலங்கைக்கு ஓரு பயணம் மேற்கொண்டிருக்கின்றார். இதனைப் பார்க்கும் போது மோட்டார் சைக்கிளில் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு வரவேண்டும் என்று அவர் மனதில் இருந்த தீவிர ஆர்வத்தை நம்மால் ஊகிக்க முடிகின்றது அல்லவா?

திரு.ஆண்டனி ராஜேந்திரன் தனது 58வது வயதில் காலமானார். நோர்வேக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் வரலாற்றில் முக்கியத்துவம் படைத்தவராக இவர் திகழ்கின்றார். இவர் பயணத்தில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இன்றும் இலங்கையில் அவரது மனைவியின் வீட்டில் இருப்பதாகவும், அவரது மனைவி சில மாதங்கள் இலங்கையிலும் சில மாதங்கள் நோர்வே நாட்டிலும் வாழ்கின்றார் என்று அறிகின்றோம்.

இவரது உறவினர் திரு.ஜெயாநந்தன் அவர்களை அண்மையில் நான் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்றிருந்த போது சந்திக்க நேர்ந்தது. திரு.ஜெயாநந்தன் நோர்வே நாட்டில் இன்று நாற்பது ஆண்டுகளாகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். அவர் கூறிய தகவல்கள் புகைப்படங்கள் ஆகியன தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் விழியப் பதிவு பேட்டியாக வெளியிடப்பட்டது. அப்பேட்டியை https://youtu.be/CpIt7les8NE என்ற யூடியூப் பக்கத்தின் வழி இணையத்தில் காணலாம்.

திரு.ஜெயாநந்தனும் அவரது சில நண்பர்களும் 1979ம் ஆண்டு நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடக்கினர். மொத்தமாக பதினேழு பேர், அதாவது ஒன்பது இலங்கைத் தமிழரும், ஐந்து இந்தியத் தமிழரும், இரண்டு மலேசியத் தமிழரும் இனைந்து இக்காலகட்டத்தில் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நோர்வே தமிழ்ச்சங்கம் நோர்வே வாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், தமிழர் கலைகளையும் பண்பாட்டையும் நோர்வே மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையிலும் செயல்பட்டது. இன்று அதன் நோக்கம் மேலும் பல செயல்பாடுகளுடன் விரிவடைந்துள்ளது.

நாற்பதாவது ஆண்டினை எட்டிப்பிடித்திருக்கும் நோர்வே தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டது இந்த அமைப்பின் செயல்பாடுகளை மேலும் விரிவாக அறிந்து கொள்ள எனக்கு வாய்ப்பாகவும் அமைந்தது. தமிழ் மொழி வளர்ச்சி, கலை, பண்பாடு, விளையாட்டுப் போட்டிகள் என்பது மட்டுமல்லாது சமூக நல நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்திச் செயல்படுகின்றது இந்த அமைப்பு. இந்த அமைப்பின் பொருளாளராகச் செயல்படும் திரு.வேலழகன் வரலாற்று ஆவணங்களைச் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். இவரது சேகரிப்பில் உள்ள ஆவணங்களுள் யாழ்ப்பாணம், மற்றும் மலையகம் சார்ந்த நூறாண்டுகளுக்கு மேலான அஞ்சல் அட்டைகள், இலங்கை வரப்படங்கள், காசுகள், ஈய, வெண்கலப் பொருட்கள் ஆகியவையும் அடங்கும். இவரது சேகரிப்புக்கள் எனது நோர்வே நாட்டிற்கான இந்த அண்மைய பயணத்தின் போது மின்பதிவாக்கப்பட்டு அவை ஒவ்வொன்றாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையப்பக்கத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன.

ஏறக்குறைழ ஐந்து லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நோர்வே நாட்டில் இன்று ஏறக்குறைய 13,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் சீரிய தமிழ்ப்பணியும் சமூகப் பணியும் வரவேற்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது; பாராட்டுதலுக்குரியது. நார்வே வாழ் தமிழ் மக்களுக்கும் நார்வே இன மக்களுக்கும் இடையிலான பாலமாகவும் இந்த அமைப்பு திகழ்கின்றது. வெற்றிகரமான நாற்பதாவது ஆண்டின் தன் பயணத்தைத் தொடரும் நோர்வோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துகள்.









Monday, January 14, 2019

94.அணிவோம் கைத்தறி.. இணைவோம் தமிழால்..!

முனைவர்.க.சுபாஷிணி





கொடிகளையும் இலைகளையும் உடலின் மேல் அணிந்து தன் உடலைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்ட மனித இனம், படிப்படியாக விலங்கின் தோலை ஆடையாக உடுத்தும் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டது. நாகரிகம் வளர வளர, நூல் உற்பத்தி செய்யும் கலையைக் கற்று தன்வயப்படுத்திக் கொண்டது மனித இனம்.

உலகில் இன்றும் வளமுடன் திகழும் பண்டைய நாகரிகங்களின் சுவர் சித்திரங்களை உற்று நோக்கி ஆராய்ந்தால், இன்றைக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித குலத்தின் ஆடை அணிகலன்கள் பற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அந்த வகையில் நமக்கு இன்றைக்கு பெருவாரியாகக் கிடைக்கக்கூடிய கிரேக்க, ரோமானிய எகிப்திய, அசிரிய ஓவியங்கள் அக்கால மக்களின் ஆடைகள் பற்றிய விபரங்களை நமக்குத் தருகின்ற சான்றுகளாக அமைகின்றன.

நீண்ட துணியால் அமைக்கப்பட்ட வெள்ளாடைகள் பண்டைய மக்களின் நாகரிக சிறப்பை உணர்த்துகின்றன. ஆடைகள் அணியும் முறை, ஆடைகளின் மேல் அவற்றை பொருத்தி அணிவதற்காக உருவாக்கப்பட்ட அணிகலன்கள், ஆகியவை மக்களின் பொருளாதார நிலையையும் சமூகத்தில் மக்களின் நிலையை வெளிப்படுத்தும் சான்றுகளாகவும் அமைகின்றன. சுவர் சித்திரங்கள் மட்டுமன்றி தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கக்கூடிய சான்றுகள் இத்தகைய ஆய்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைகின்றன.

உலகின் பெரும்பகுதி மக்கள் மரவுரி உடுத்திக் கொண்டு வாழ்ந்த காலத்தில், தறி நெய்து ஆடைகள் உடுத்தியவர்கள் தமிழர்கள். பருத்தி பஞ்சில் நூலைப் முறுக்கியெடுக்கும் முறையையும், சிக்கலான கணித செயல்பாடுகள் மிக்க கைத்தறி நெசவையும் கண்டுபிடித்து, துணிகளை நெய்து உலகின் பல பாகங்களுக்குப் பருத்தித் துணியை அனுப்பியவர்களும் தமிழர்களே. துணிகளுக்கு வண்ணமேற்றும் முறையையும் மேம்படுத்தி, காலத்தால் அழியாத வண்ணக் கலப்பு முறையையும் உருவாக்கியவர்கள் தமிழர்களே. அதனால்தான் 'உடைபெயர்த் துடுத்தல்' என தொல்காப்பியம் நெசவைப் பற்றி குறிப்பிடுகிறது.

சங்க காலத்தில் பாம்பின் சட்டை போலவும், மூங்கிலில் உரித்த மெல்லிய தோல் போலவும், பால் காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும், பால் நுரை போலவும், தெளிந்து வெண்ணிறமான அருவி நீர் வீழ்ச்சியின் தோற்றம் போலவும் பண்டைய தமிழர்கள் நுண்ணிய மெல்லிய ஆடைகளை நெய்தனர். அதனால் முப்பத்தாறு வகையான பெயர்கள் துணிக்கு சங்க காலத்திலேயே வழக்கில் இருந்துள்ளன.

தமிழர் வழக்கில்  இருந்த இந்தத் தொழில்நுட்பத்திற்கும்  தமிழர்கள் நெய்த துணிகளுக்கும் உலகம் முழுமைக்கும் பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்தன. துணிகளை மட்டுமின்றி நெய்யும் தொழில் நுட்பத்தையும் உலகிற்கு வழங்கியுள்ளனர் தமிழர்கள். அதுவே உலகின் பலநாட்டு மக்கள் ஆடை நெய்யும் அறிவியலை முன்னெடுக்க அடிப்படையாகவும் அமைந்தது.

தமிழகத்தில் உருவான கைத்தறி தொழில்நுட்பம் கடல்கடந்து பயணித்து வணிகம் வளர்த்த தமிழக வணிகர்களால் மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் கண்டது. இதில் குறிப்பாக கிழக்காசிய நாடுகளைக் கூறலாம். தமிழக தறி அமைப்பின் பிரதிபலிப்பை கம்போடிய கைத்தறி நெசவு இயந்திரங்களில் இருக்கும் ஒற்றுமை  சான்று பகர்கின்றது.

நாகரீகம் கற்று தந்ததாக பெருமை கொள்ளும் ஐரோப்பியர்களுக்கு ஆடையுடுத்தியவர்கள் தமிழர்கள். தமிழக நெசவுக்கலையின் பெருமை அறிந்த பண்டைய அரேபியர்களும் கிரேக்கர்களும், ரோமானியர்களும் நீண்ட தூரம் கடல் பயணம் செய்து தமிழகம் வந்து கைத்தறி பருத்தித் துணிகளை வாங்கிச் சென்று அணிந்தனர். வணிகம் செய்து கொழித்தனர் என வரலாறு சொல்கிறது.

உலக மக்களின் மானத்தையும், பண்பாட்டையும் மேம்படுத்திய தமிழக நெசவாளர்களின் நிலை இன்று எவ்வாறு உள்ளது? யோசிக்க வேண்டாமா நாம்? உலகம் முழுமைக்கும் பரந்து வாழும் தமிழ் மக்களாகிய நாம் நெசவாளர்களின் வாழ்க்கையைப் பற்றியும் ஓரளவு யோசிப்பது நமது கடமை அல்லவா?

எனது தமிழகத்திற்கான களப்பணியில் நெசவாளர்கள் நிறைந்த தூத்துக்குடியின் சாயர்புரம், கொல்லிமலை, சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மக்களின் உண்மை வாழ்நிலையை கண்டறியும் முயற்சி மேற்கொண்டிருந்தேன். நெசவாளர்கள் இன்று நலிந்து வாடுகின்றனர் என்பதையே இத்தகைய நேரடி பயணங்கள் உணர்த்துகின்றன.

பொதுவாகவே ஒரு நெசவாளர் குடும்பத்தின் வீட்டைக் கவனித்தால் இன்று எப்படி நாம் மேசை நாற்காலிகள் என வரவேற்பறையில் வைத்திருக்கின்றோமோ, அந்த வகையில் வீட்டின் வரவேற்பறையில் இரு தறி இயந்திரம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கின்றது. ஒரு நெசவாளர் தினம் தினம் கண் விழிக்கும் போதிலிருந்து இரவு தூங்கும் வரை தறி இயந்திரத்தை பார்த்துக் கொண்டு தான் தன் வாழ்நாளைக் கழிக்கின்றார். மனித குலத்திற்கு ஆடை நெய்து அவர்களை மானத்தோடும், பாதுகாப்போடும் வாழ வைக்க வேண்டியது தனது கடமை என்ற எண்ணம் மனதில் ஆழப்பதிந்திருப்பதன் வெளிப்பாடாகவே ஒவ்வொரு நெசவாளரின் அன்றாட இயக்கம் என்பது அமைந்திருக்கின்றது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் நெசவாளர்களின் ஓலைக் குடிசைகளும் சிறிய வீடுகளும் இன்றும் தமிழக கிராமங்களில் காட்சியளிக்கின்றன.

உலகம் முழுமைக்கும் பருத்தி துணிகளுக்கான தேவை நாள்தோறும் அதிகரித்தாலும் தமிழ் நெசவாளர்களின் வறுமையில் மாற்றமில்லை. ஏன்..? நவீன தொழிற்சாலைகளின் பேரளவிலான உற்பத்திக்கு ஈடுகொடுக்கும் வல்லமை அவர்களிடம் இல்லையென்பதல்ல.  மாறாக, விளம்பரங்களின் திசைத் திருப்பல்களுக்கு பலியாகி பெருமையையும், தன் துணியின் மாண்பையும் மறந்த தமிழர்களே இந்த நிலைக்கு மூலகாரணம்.

வெயில், மழை, பனி என எக்காலத்திலும் உடலைப் பாதுகாக்கும் துணி வகைகள் கைத்தறியில் இருக்கின்றன. வசதி படைத்தவர்களுக்கான ஆடைகள் வகையும், சாதாரண மக்களுக்கு ஏற்ற விலையில் உள்ள ரகங்களும் கைத்தறியில் கிடைக்கின்றன. இன்று மேற்கத்திய நாடுகளின் கோடைகால ஆடைகளாகத் திகழ்பவை பெரும்பாலும் பருத்தி துணி வகைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளே. இன்றைய நவநாகரிக பெண்களும் நேர்த்தியுடன் அணியும் போது கைத்தறி சேலைகள் பெண்களின் இயற்கை அழகிற்கு மேலும் பொலிவூட்டும் தன்மை படைத்தவை கைத்தறி ஆடைகள் என்பதில் மறுப்பேதுமில்லை.

இன்று பெரிய மேற்கத்திய நெசவு நிறுவனங்களின் தாக்குதல்களினால் தமிழக கைத்தறிநெசவாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. கடன், வேலையில்லா பற்றாக்குறை, வறுமை, அரசின் பாராமுகம், வெளிநாட்டிலுள்ள தமிழர்களிடையே கைத்தறி துணிகள் பற்றின விழிப்புணர்ச்சி போதாமை.. என நெசவுத் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கைத்தறியில் துணி நெய்யும் தமிழ் நெசவாளி நூலை மட்டும் திரித்து துணி நெய்யவில்லை, தமது அன்பையும், தமிழ் மீதான பற்றையும் சேர்த்து நெய்கிறார். நெடுங்காலத்துத் தமிழ் மரபை நம்மிடையே கைம்மாற்றித் தருகிறார். சங்க காலத்து அரசர்களும், பண்டைய கிரேக்க ரோமானிய அரசர்களும், அரசவைப் பெண்களும் நான் நெய்தத் துணியை அணிந்தார்கள், அதை உங்களுக்கும் தருகிறேன் என்று வரலாற்றைச் சுட்டிக் காட்டுகிறார். பண்டைய தமிழர் பெருமையை நமது உடலுக்குப் போர்த்தி விடுகிறார் ஒரு நெசவாளி.

வெயிலுக்கு இதமும், குளிருக்குக் கதகதப்பும் தரும் கைத்தறி துணிகளின் நேர்த்தியான அழகும் கண்களை உறுத்தாத நிறமும் கலை நுட்ப வேலைப்பாடுகளும் கைத்தறிதுணிகளின் சிறப்பு அம்சங்கள். எனவேதான் உள்ளத்துக்கும் உடலுக்கும் சுகமான அனுபவத்தையும் கைத்தறி துணிகளே இன்றும் சாத்தியப்படுகின்றன.

பெரும் விளம்பரங்களினால் திசைத்திரும்பி, கைத்தறி துணிகள் மீதான பார்வையை பெரும்பாலானத் தமிழகத்தின் தமிழர்கள் இழந்து விட்டதைப் போலவே உலகத் தமிழர்களும் இழந்து விட்டார்கள். தமிழர்களின் பண்டைய பெருமையை மீட்கப்படும் இக்காலத்தில் கைத்தறிநெசவும் காக்கப்பட வேண்டும். சிற்பக்கலை, நாட்டியக்கலை, இசைக்கலை ஆகியன எப்படி தமிழ் பண்பாட்டிற்கு முதன்மையோ அதைப்போலவே தமிழர் மரபுத் தொழில்நுட்பமான நெசவுக் கலையும் சிறப்பு வாய்ந்ததே.

எனவே தமிழர்களின் பெருமையை மீட்கும் நமது பெரும் முயற்சியில், நீண்ட நெடுங்காலத்து தமிழ்ப் பெருமையான கைத்தறி பருத்தி துணிகளையும் மீட்க வேண்டியதும் பருத்தி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டியது உலகத் தமிழர்களாகிய நமது கடமையாகும். இக்கருத்தை முன்னிறுத்தும் பணிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை இவ்வாண்டு ஜூலை மாதம் தொடக்கினோம். நம்முடன் Traditional India அமைப்பும் கைகோர்த்துக் கொண்டது. திருமதி புஷ்பா கால்ட்வெல் மற்றும் அவரது குழுவினரின் இக்கருத்தின் மீதான தீவிர ஆர்வம் தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த முயற்சிக்குப் பக்க பலமாகத் துணை நிற்கின்றது.

இதன் அடிப்படையில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு விழா இவ்வாண்டு ஜூலை மாதம் டல்லாஸ் நகரில் நடந்த போது கைத்தறி விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியை அந்த விழாவில் நிகழ்த்தினோம். இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் கடந்த 25.10.2018 அன்று கைத்தறி அணிவோம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தோம். கல்லூரியின் தலைவர் திரு.முரளீதரனும் நிர்வாகக்குழுவும் இந்த முயற்சி வெற்றிகரமாக அமைய பெரும் ஆதரவு நல்கினர். நிகழ்ச்சி சிறப்புற நிகழ கல்லூரி முதல்வர் முனைவர்.புவனேஸ்வரி அவர்கள் பக்க பலமாக இருந்தார். நிகழ்ச்சியை முற்றும் முழுதுமாக முழு ஈடுபாட்டுடன் நடத்திக் காட்டி மாணவர்கள் அனைவரிடையே கைத்தறி ஆடைகளைப் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தியவர் கல்லூரியின் பெண்ணியத் துறை தலைவர் முனைவர்.அரங்கமல்லிகா. கல்லூரியின் குழுவினரோடு நெசவாளர்களில் ஒருவரான ஆரண்யா அல்லி அவர்கள் கைத்தறி சேலைகளின் கண்காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் வந்திருந்தோர் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிகழ்ச்சியாக மாணவியரின் கைத்தறி ஆடை பவனி திகழ்ந்தது. எளிமையாகக் காட்சியளிக்கும் சேலைகள், விதம் விதமான வண்ண வண்ண மேலாடைகளோடு இணைத்து அணியும் போது பேரழகை வெளிப்படுத்தும் அதிசயத்தைக் காண முடிந்தது. பெண்களின் சேலை பவனி வந்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியளித்து. கைத்தறி துணிகளின் பெருமையை பறைசாற்றியது.

இத்தகைய கைத்தறி விழிப்புணர்வு தரும் மேலும் பல நிகழ்ச்சிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை தமிழகம் தவிர்த்த ஏனைய தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் ஏற்பாடு செய்ய திட்டம் வகுத்துள்ளோம். இந்த முயற்சியில் ஆர்வம் உள்ளோர் எம்மைத் தயங்காது தொடர்பு கொள்ளலாம்.

கைத்தறித் துணிகள் தமிழரின் பெருமை.
புதுயுகத்தின் அடையாளம்.
பெருகும் உலக வெப்பத்திலிருந்து பாதுகாப்பு.

தமிழர் பெருமை கொள்ள கைத்தறித் துணிகளை அணிவோம். நவீன காலத்திற்கு ஏற்ப கைத்தறித் துணிகளை மேம்படுத்த உதவி புரிவோம். உலகிற்கு நம் துணிகளை கொண்டு சேர்ப்போம். நாம் உடுத்தும் ஒரு பருத்தி சேலையோ அல்லது ஆடையோ நமது மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல, நமது பெருமைமிகு மரபான மகிழ்ச்சிக்கு, நெசவாளிகளின் குடும்ப மேன்மைக்கும் அடிப்படை என்பதை புரிந்து கொள்வோம்.

அணிவோம் கைத்தறி.. இணைவோம் தமிழால்..!























Thursday, October 4, 2018

93. ஜெர்மானிய தமிழகத் தொடர்புகள்



ஜெர்மனியை இன்று நாம் கிழக்கு மேற்கு எனப் பிரிப்பதில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் 1949லிருந்து 1990 வரை German Democratic Republic (GDR அல்லது DDR) என்ற பெயருடன் ஜெர்மனியின் கிழக்குப் பகுதி அடையாளப்படுத்தப்பட்டது. ரஷியாவிற்கு அருகாமையில் அமைந்து விட்டமையால் இங்கு ரஷியத் தொடர்புகள் அதிகமாக எழுந்தன. 1990 வரையிலான காலகட்டம் என்பது ஒரு வகையில் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஏறக்குறைய இரு தனி நாடுகளாக இயங்கும் வகையிலேயே அமைந்தது எனலாம். அதிலும் குறிப்பாக கிழக்கு ஜெர்மனியிலிருந்து மக்கள் மேற்கு ஜெர்மனிக்கோ வேறு பகுதிகளுக்கோ செல்வது தடை செய்யப்பட்டிருந்தது என்பதோடு அனுமதி வழங்கப்பட்டாலும் தீவிர சோதனைக்குப் பின்னர் வெளிவரும் கடின நிலையே ஏற்பட்டிருந்தது.

அக்காலகட்டத்தில் கிழக்கு ஜெர்மனியில் மக்கள் சுதந்திரத்திரத்தை இழந்திருந்தனர். அச்சம் அவர்கள் மனதை நிறைத்திருந்தது. உளவு பார்ப்பது என்பதும் தீவிரவாத, பயங்கரவாத செயல்பாடுகள் என்பதும் விரிவாகியிருந்தன. ஒரு குடும்பத்திற்குள்ளேயே தந்தை மகனை நம்பமுடியாது; தாய் மகனை நம்ப முடியாது; மனைவி கணவனை நம்ப முடியாது; சகோதரன் சகோதரியை நம்ப முடியாது. இப்படி குடும்பங்களுக்குள்ளே கூட உளவு என்பது வேரோடிப் போயிருந்த காலகட்டம் அது. யாரால் எப்போது என்ன துன்பம் நிகழக் கூடும் என அச்ச உணர்வு மேலிட மக்கள் வாழ்ந்த காலகட்டம் அது. கருத்துச் சுதந்திரம் தடைப்பட்டிருந்தது. தண்டனைகள் , தண்டனைகள், தண்டனைகள் - எதற்கெடுத்தாலும் தண்டனைகள். இந்தச் சூழலில் பொதுமக்கள் அமைதி காக்கவில்லை. பல கோணங்களிலிருந்து உயிரைப் பணயம் வைத்து எதிர்ப்பு வலுவாகக் கிளம்பத்தான் செய்தது. இதுவே படிப்படியாக விசுவரூபம் எடுத்து கிழக்கையும் மேற்கையும் பிரித்த பெர்லின் சுவரை இடிக்கக் காரணமாகியது. பிரிந்த கிழக்கும் மேற்கும் படிப்படியாக இணைந்தன. அக்டோபர் 3ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்த நாளைக் கொண்டாடுகின்றன. இன்று ஜெர்மனி உலக அரங்கில் ஒன்று பட்ட ஒரே நாடாக இயங்குகின்றது. உலகம் முழுவதிலுமிருந்து வாழ்விழந்து அகதிகளாக வருவோருக்கு வாழ்வளிக்கும், மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும் நாடுகளின் வரிசையில் முதல் வரிசையில் இடம் பெறும் நாடுகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.

பழைய சம்பவங்களின் நினைவுகளினால் இன்றும் கூட கிழக்கு ஜெர்மனியின் பெயரைக் கேட்டால் ஒரு வகையான அச்ச உணர்வு மேற்கில் உள்ளவர்களுக்கு எழுவது இயல்பு. அயல் நாட்டினர் மட்டுமல்ல. உள்ளூர் ஜெர்மானியர்களும் விரும்பி கிழக்கு மாநிலங்களுக்குச் செல்வது குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு ஒரு வகையில் கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதியில் பெருகி வரும் நாசி சிந்தனை ஆதரவு செயல்பாடுகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது தான்.

பொருளாதார ரீதியில் கிழக்கு ஜெர்மனியின் மாநிலங்கள் பின் தங்கியிருந்த சூழல் கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாக மாற்றத்தைக் கண்டிருக்கின்றது எனலாம். பொருளாதார ரீதியில் வலுவிழந்த பகுதி என்றாலும் அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கும், ஆய்வுகளுக்கும், தத்துவத் தேடல்களுக்கும், பதிப்பக முயற்சிகளுக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் தனிப்பெருமை வாய்ந்த பகுதி கிழக்கு ஜெர்மனி என்பதை மறுக்க முடியாது. இன்று பெர்லினில் உள்ள அருங்காட்சியகத் தீவு முழுமையும் கிழக்கு ஜெர்மனி பகுதியில் தான் உள்ளது. பல ஆய்வுக்கூடங்கள், தொழில்நுட்ப முயற்சிகள் என வியக்க வைக்கும் பிரமாண்ட கட்டிட வளாகங்கள் நிறைந்த பகுதியாக கிழக்கு ஜெர்மனி விளங்குகிறது . இங்குள்ள பல்கலைக்கழகங்களோ மருத்துவம், தத்துவம், விண்ணியல், பௌதீகம், கணிதம் , தொழில்நுட்பம் என பல துறைகளில் உலகளாவிய நன்மதிப்பையும் உயர் தரத்தையும் பெற்று விளங்கும் கல்விக்கூடங்களாக உள்ளன.

ஜெர்மனி கிருத்துவ மதத்தை அதிகாரப்பூர்வ மதமாக ஏற்ற நாடு. கி.பி.16 வரை ஜெர்மனி முழுமையும் ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவியிருந்தது. கி.பி. 16ல் கிழக்கு ஜெர்மனியில் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தியவர் மார்ட்டின் லூதர். இவர் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலே - தமிழகத்தோடு 300 ஆண்டுகளுக்கு மேல் தொடர்பில் உள்ள கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு நகரம். இங்குள்ள ஃப்ராங்கன் கல்விக்கழகத்திலிருந்து தான் கி.பி 1705ம் ஆண்டு தமிழகத்துக்குச் செல்ல 2 ஜெர்மானிய பாதிரிமார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டென்மார்க் அரசரின் அரச ஆணையைப்பெற்று நீண்ட நாட்கள் கடலில் பயணித்து வந்தனர். பாதிரியார் சீகன்பால்கும் பாதிரியார் ப்ளெட்சோவும் 1706ம் ஆண்டு தமிழகத்தின் தரங்கம்பாடி வந்தனர். அதுவே சீர்திருத்தக் கிருத்துவம் (ப்ரோட்டஸ்டண்ட் கிருத்துவம்) தமிழகத்தில் காலூன்றிய வரலாற்று முக்கியத்துவம் பெறும் நிகழ்வு.

ஜெர்மனியில் கடந்த பல ஆண்டுகளாக நான் வசித்தாலும் கிழக்கு ஜெர்மனியில் அவ்வப்போது நிகழும் நாசி ஆதரவு சம்பவங்களைக் கருதி இப்பகுதிக்கு நான் வருவதில் தயக்கம் இருந்து வந்தது. ஆயினும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஃப்ராங்கன் கல்விக்கழகத்தை நேரில் கண்டு அங்கு ஆவணப்பாதுகாப்பகத்தில் பாதுகாக்கப்படும் தமிழ் ஆவணங்கள் சிலவற்றை ஆராய அனுமதி கேட்டிருந்தேன். தமிழ்ச்சுவடிகளையும் காகித ஆவணங்களையும் காணவும் ஆராய்ந்து குறிப்பெடுக்கவும் அனுமதி கிடைத்ததன் பேரில் இரண்டு நாட்கள் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு வார இறுதி வரை ஹாலே நகரில் இருந்து இவற்றை ஆராயும் பணிக்காக கடந்த வாரம் இந்த நகரம் சென்று வந்தேன்.

ஹாலே செல்லும் முன் அலுவலக பணிக்காக லுட்விக்ஸ்ஹாஃபன் நகரம் வந்திருந்ததால் அங்கிருந்து நேரடியாக எனது பயணம் அமைந்தது. வாகனத்தில் ஐந்தரை மணி நேரப் பயணம். ரைன்லாண்ட் பால்ஸ், ஹெசன், தூரிங்கன், செக்சனி அன்ஹால்ட்..... என நான்கு மாநிலங்களைக் கடந்து எனது இந்தப் பயணம் அமைந்தது.

சில ஆண்டுகள் பல நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வாசித்து, பல மாதங்கள் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சில வாரங்கள் பயணத்தை திட்டமிட்டு
சில மணி நேரங்கள் பயணித்து, மூன்றரை நாட்கள் கிழக்கு ஜெர்மனியின் ஹாலே நகரத்து ப்ராங்கன் கல்விக்கூடத்திலும் இந்த நகரின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள என் பயண நோக்கத்திற்குத் தொடர்புள்ள வரலாற்றுச் செய்திகளையும் தரவுகளையும் நேரில் சென்று பார்த்துக் குறிப்புக்கள் சேகரித்துக் கொண்டு திரும்பினேன்.

ஹாலே நகரில் முதல் நாள் (20.9.2018) காலை 8 மணிக்கு ப்ராங்கன் கல்விக்கூடத்தின் அரிய ஆவணங்களின் பகுதி பொறுப்பாளர் திரு.க்ரோஷலைச் சந்திப்பதாகக் கூறியிருந்தேன். எனது தங்கும் விடுதியிலிருந்து ஒன்றரை கிமீ தூரத்தில் இக்கல்விக்கூடம் இருப்பதால் நடந்தே செல்வது நகரையும் பார்த்து வர சரியாக இருக்கும் என நினைத்து நடந்து சென்றேன்.

ஹாலே நகரில் சாலையில் பொது வாகனங்கள் சிறப்பாக இயங்குவதைக் காணமுடிந்தது. ட்ராம்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. சைக்கிள் பயணிகளும் அதிகமாக உள்ளனர். ப்ராங்கன் கல்விக்கூடத்தின் பின்பகுதி வழியாக நுழைந்து தோட்ட வளாகத்தைப் பார்த்தவாறு சென்று கொண்டிருந்தபோது இந்தக் கல்விக்கூடம் நடத்தும் சிறார்களுக்கான பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் பந்து விளையாட்டை ரசித்துக் கொண்டே சென்றது இனிய நிகழ்வு.

ப்ராங்கன் கல்விக்கூடத்தின் வளாகம் பெரியது. ஒரு பல்கலைக்கழகம் போன்ற அமைப்பில் இந்த நிறுவனத்தைக் கட்டியிருக்கின்றனர். கட்டிடங்கள் ஒவ்வொன்றும் எண்களால் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொரு கட்டிடமும் அல்லது பகுதியும் ஒரு தனிப்பட்ட துறைக்காக என இயங்கி வருகின்றன. இக்கல்விக்கூடத்தின் பெரும்பகுதி இன்று விட்டென்பெர்க் பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஆய்வுத்துறைகளுகுவாடகைக்கு விடப்பட்டுள்ளன என்பதையும் அறிந்து கொண்டேன்.

திரு.க்ரோஷல் எனது வருகைக்குக் காத்திருந்தார். பொதுவான அறிமுகங்கள். தமிழ் மரபு அறக்கட்டளை பற்றிய எனது விளக்கம் எனக் கேட்டபின் எனக்குப் பயன்படுமே என ஒரு கோப்பினைக் கொடுத்தார். அது லைப்சிக் மிஷனின் ஆவணங்களின் தொகுப்பு. மேலும் நூலகத்தில் ஒரு பகுதியில் உள்ள லூத்தரன் சபையின் இந்தியாவிற்கான செயல்பாடுகளைப் பற்றிய ஆய்வு நூல்கள் வரிசையைக் காண்பித்தார். சில முக்கிய நூல்கள் அந்த வரிசையில் இருந்தன. அவற்றை வாசிக்க நிச்சயமாக நான் ஒதுக்கியிருந்த மூன்று நாட்கள் போதாது தான். பின்னர் வளாகத்தின் சிறிய அருங்காட்சியகப் பகுதிக்கு நான் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தியாவில் பணியாற்றிய பாதிரிமார்கள் திரும்பி வந்த போது கொண்டு வந்த சில பொருட்களின் சேகரிப்பு அங்கிருப்பதாக அறிந்து கொண்டதோடு மதியவேளையில் அப்பகுதிக்கும் சென்று பார்த்து வந்தேன்.

மதியம் ஆய்வு மாணவர்களோடு இணைந்து மதிய உணவு பல்கலைக்கழக வளாக மென்சாவில் (உணவகம்) எடுத்துக் கொண்டேன். மருத்துவமனையில் கொடுக்கப்படும் உணவை அந்த உணவு நினைவு படுத்தியது.

மாலையில் ஹாலே நகர வீதியில் உலாவிய போது நகர மையத்தின் அழகை ரசிக்க முடிந்தது. கிழக்கு ஜெர்மனி என பொதுவாக மனதில் நான் ஏற்றி வைத்திருந்த சில கணிப்புக்களை இந்த அனுபவம் மாற்றியது. இங்கு பல இன மக்கள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்கர், இசுலாமியர், இந்தியர், அரேபியர்கள். கால மாற்றமும் அரசியல் மாற்றமும் ஏற்படுத்திய சூழலின் நல்ல விளைவு இது.

கிழக்கு ஜெர்மனியில் பொருட்களின் விலை மேற்கு மாநிலமான பாடன் உர்ட்டெம்பெர்க் விட சற்று மலிவாகவே உள்ளது.

எனது ஆய்வின் முதல் இரண்டு நாட்களும் கிழக்கு ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள ப்ராங்கன் கல்விக்கழக நூலகத்தின் ஒரு பகுதியில் நீண்ட நேரத்தைச் செலவிட்டு இங்குச் சேகரிப்பில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்களை ஆராய்ந்தேன். முப்பது தமிழ் ஓலைச்சுவடிகள்; ஏறக்குறைய 20 காகித ஆவணங்கள் என் ஆய்விற்காகப் பட்டியலிலிருந்து தேர்வு செய்து கொடுத்திருந்தேன். கேட்ட அனைத்து ஆவணங்களையும் என் ஆய்விற்கு நூலகத்தார் வழங்கினர்.இந்த ஓலைச்சுவடிகளும் காகித ஆவணங்களும் அனைத்துமே ஜெர்மானிய பாதிரிமார்கள் தானே கைப்பட எழுதிய நூல்கள் மற்றும் கடிதங்கள் தாம். இந்த ஆவணங்கள் பற்றி பெரிதாகத் தமிழாய்வாளர்கள் மத்தியில் இன்று வரை விரிவாகப் பேசப்படாதது தமிழக வரலாற்றில் ஒரு குறையாகவே கருதுகிறேன்.

இன்றைக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் தமிழகம் வந்த ஜெர்மானிய பாதிரிமார்கள் தமிழ் மொழியைப் படித்து, நூல்கள் எழுதி பயிற்சி செய்து அதனை டோய்ச் மொழியிலும் குறிப்பு எழுதி வைத்த வரலாறு ஆச்சரியம் தருவதாக அமைகின்றது.

எனது ஆய்வில் தமிழகத்தின் தரங்கம்பாடி வந்த ஜெர்மானிய பாதிரிமார்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு எழுதிய முறையில் சில குறிப்பிடத்தக்க விசயங்களை அடையாளம் காணமுடிந்தது. குறிப்பாகத் தமிழ் நெடுங்கணக்கு எழுத்து முறை, சில குறிப்பிட்ட எழுத்துக்களின் வடிவம், சொல்லாடல், பேச்சுத் தமிழ், ஓலையில் ஜெர்மானிய எழுத்து, ஓவியங்களுடன் கூடிய ஓலைச்சுவடிகள், சீர்திருத்த கிருத்துவத்துக்குப் பிரத்தியேகமாக மொழிமாற்றம் செய்யப்பட்ட கதைகளின் தமிழ் மூல நூல், தமிழ் போற்றிப்பாடல்கள், கடிதங்கள் என இவை பன்முகத்தன்மையுடன் விளங்குகின்றன.

இந்தச் சுவடிகள் ஆய்வு ஜெர்மானியர் தமிழ் கற்ற படிப்படியான வளர்ச்சி நிலை, தரங்கம்பாடி, கடலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சீர்திருத்த கிருத்துவ அமைப்பு செயல்பட்ட போது நிகழ்ந்தவை, தரங்கம்பாடி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட பிரசுரங்கள் மற்றும் கடிதங்களின் அசல் போன்றவற்றைப் பற்றிய முதல் நிலை தகவல்களை வழங்குவதாகவும் அமைகின்றன.

பாதிரிமார்கள் எழுதிய நூல்களில் காணப்படும் எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்களை அவர்கள் கையாண்ட முறை என்பன சில புதிய செய்திகளைத் தருகின்றன. இவை சுவாரசியமான ஆய்வுக்களனை நமக்கு அமைக்கின்றன. உலகின் பல இடங்களில் இயங்குகின்ற பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகள் இத்துறைகளில் மேலும் ஆராய்ந்து இவை கூறும் செய்திகளை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும். தமிழ் ஆய்வில் புதிய பார்வைகளை உட்புகுத்த வேண்டும் என விரும்பும் பல்கலைக்கழக, மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் எம்மைத் தயங்காது தொடர்பு கொள்ளுங்கள்; உங்களிடம் ஆய்விற்குத் தயாராக இருக்கும் மாணவர்களை இவ்வகைப் பணியில் ஈடுபடுத்துங்கள் .

தமிழ் மொழியையும் தமிழர் வரலாற்றையும் நமக்குக் கிடைக்கின்ற, இருக்கின்ற சான்றுகளை ஆவணப்படுத்தல் முயற்சியும் அவற்றை ஆராய்ந்து வெளியிடும் முயற்சிகளும் தான் நமக்கு இன்றைக்குத் தேவையானது. இவற்றைச் செய்வதை விடுத்து ’உலகில் தோன்றிய முதல் குரங்கே தமிழ் குரங்கு தான்’ என்பது போல பேசிக்கொண்டிருப்பதால் தமிழுக்கும் தமிழருக்கும் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஆய்வுலகில் இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட விசயங்கள் கேலிக்குட்படுத்தப்படுவதுடன் தமிழர் தம் வரலாறு பற்றிய பொய்யான தகவல்கள் பரவுவதுடன், உலகளாவிய அளவிலான ஆய்வுகளில் தமிழை தரம் தாழ்த்தும் செயல்பாடாகவும் இப்போக்கு அமைந்துவிடக்கூடிய அபாயம் இதனால் ஏற்படும் என்பதை மறக்கலாகாது!

தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த ஆய்வு முயற்சியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் நூல் வடிவில் வெளியிடப்படும். அவை ஆய்வுலகில் ஈடுபடுவோருக்கு நிச்சயம் புதிய செய்திகளை வழங்கும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.







Thursday, September 6, 2018

92. நோர்வே - பயணமும் பார்வையும்



ஐரோப்பாவில் இன்னமும் இலையுதிர் காலம் தொடங்கவில்லை. ஐரோப்பா கண்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்கேண்டிநேவியன் நாடுகளுக்குச் சென்று சுற்றிப்பார்ப்பதற்குத் தோதான காலம் கோடைதான். சற்று மத்தியிலும் தெற்கிலும் உள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் சுட்டெரிக்கும் போது ஸ்கேண்டிநேவியன் நாடுகளான நோர்வே, சுவீடன் டென்மார்க் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகளில் கோடை மிக இதமான தட்ப வெட்பத்துடன் அமைவதால் கோடைக்காலமே அயல்நாட்டினர் இந்த நாடுகளுக்குச் செல்ல மிகப் பொருத்தமான காலமாக அமைகின்றது. 

பாய்ந்துவரும் சிங்கம் போன்ற தோற்றத்துடன் உலக வரைபடத்தில் இடம்பெறும் நாடு நோர்வே. சில நாட்களுக்கு முன்னர் இதன் தலைநகரான ஓஸ்லோவில் ஒரு வரலாற்றுத் தேடுதல் பயணமாக சில நாட்களைக் கழித்து இந்த நாட்டைப் பற்றியும் இங்கு வாழும் தமிழ் மக்கள் பற்றியும் சில செய்திகள் சேகரித்து வந்தேன். 

ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு நோர்வே. நோர்வேஜியன் கடல் ஒரு புறமும் சுவீடன், பின்லாந்து, ரஷியா ஆகிய நாடுகளை நில எல்லைகளாகவும், டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைக் கடல் எல்லையாகவும் கொண்டது நோர்வே. இந்த நாட்டைப் பற்றி குறிப்பாகச் சில செய்திகளைப் பார்ப்போம். 

நோர்வே நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக நோர்வேகியன் மொழியும் சாமி (வடக்குப் பகுதியில்) மொழியும் உள்ளன. இவை தவிர குவேன், ரொமானி, ரோமானுஸ் ஆகிய மொழிகளும் இங்கு சிறுபாண்மையினத்தோரின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. நோர்வேயின் அதிகாரப்பூர்வ மதம் சீர்திருத்த கிருத்தவ மதம் (லூத்தரன் ப்ரொட்டஸ்டன்). இங்கு மக்களாட்சியுடன் கூடிய பாராளுமன்றம் உள்ளது. அதிகாரப்பூர்வ மன்னராக இன்று 5ம் ஹரால்ட் இருக்கின்றார். 2ம் உலகப்போர் காலத்தில் ஜெர்மானிய ஆட்சிக்குட்பட்டு பின் 1945ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி முதல் சுதந்திர நாடாக இருக்கின்றது நோர்வே. டென்பார்க், சுவீடன் ஆகிய இரு நாடுகளின் கீழ் பல ஆண்டுகள் இருந்து பின்னர் ஜெர்மானிய படையின் தாக்குதலுக்கும் ஆட்பட்டு பின்னர் சுதந்திரம் பெற்றது நோர்வே. 


வறுமையான நாடுகளில் ஒன்றாக அறியப்பட்ட நோர்வே, கடந்த இரு நூற்றாண்டுகளில் அதன் எண்ணெய் வள கண்டுபிடிப்பினை அடுத்து மிகத் துரிதமாக வளமானதொரு நாடாக உருமாற்றம் பெற்றது. ஓஸ்லோ உலகின் விலையுயர்ந்த நகரங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. உணவு, உடைகள், பொருட்கள், தங்கும் விடுதிகள் என எல்லாமே இங்கு விலை அதிகமாகத்தான் இருக்கின்றது. இங்குப் பணப்புழக்கம் எனும் போது அதிகமாகக் காசுகளையும் பனத்தையும் மக்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக வங்கி அட்டைகளின் மூலமாகவே இங்கு எல்லா இடங்களிலும் விற்பனை நடக்கின்றது. இதே போன்ற நிலையைத்தான் டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளிலும் காண்கின்றோம். உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழும் நோர்வேயின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய ஐந்து லட்சம் தான். இது வியப்பளிக்கலாம். ஆனால் இதே நிலையைத்தான் டென்மார்க், சுவீடன் போன்ற ஏனைய ஸ்கேன்டிநேவியன் நாடுகளிலும் காண்கின்றோம். 

நோர்வே நாட்டில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இலங்கையில் தொடங்கிய யுத்தத்தின் போது தமிழ் மக்களில் பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகப் புலம்பெயர்ந்தனர். அப்படிப் புலம்பெயர்ந்த நாடுகளில் நோர்வே நாடும் ஒன்று. இன்றைய நிலையில் ஏறக்குறைய இருபதாயிரம் தமிழர்கள் நோர்வே முழுமைக்கும் இருக்கலாம் என நான் அங்குள்ள தமிழ் நண்பர்களிடம் பேசியபோது அறிந்து கொண்டேன். தமிழர்களிலும் பெரும்பகுதியினர் நோர்வே தலைநகர் ஓஸ்லோவிலும் மற்றும் பெர்கன் நகரிலும் வாழ்கின்றனர். எனது பயணம் ஓஸ்லோவில் மட்டுமே என்பதால் அங்கிருக்கும் புராதன, வரலாற்றுச் சின்னங்கள் அருங்காட்சியகங்கள், தமிழர் அமைப்புக்கள் என்ற வகையிலேயே எனது பயணத்தில் நடவடிக்கைகள் அமைந்தன. 

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு பழமை கொண்ட நகர் ஓஸ்லோ. கி.பி 1040ம் ஆண்டு மன்னன் ஹரால்ட் ஹர்டாடாவினால் உருவாக்கப்பட்ட நகர் இது. நோர்வே நாட்டின் அரசு தொடர்பான முக்கிய அலுவல்களுக்கும் பொருளாதார தொடர்புகளுக்கும் முக்கியம் வாய்ந்த ஒரு நகர் ஓஸ்லோ தான். உலக நாடுகளில், மக்கள் வாழ்வதற்குச் சிறந்த ஒரு நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நகரம் என்ற பெருமையும் ஓஸ்லோவிற்கு உண்டு. ஓஸ்லோ நகரில் மட்டும் 106 அருங்காட்சியகங்கள் உள்ளன. இங்குச் செல்வோருக்கு இதில் எந்த அருங்காட்சியகத்திற்குச் செல்வது என்பது குழப்பமான காரியம் தான். 

இதில் தவிர்க்கப்படக்கூடாத சில அருங்காட்சியகங்களுக்குச் செல்வதை நான் கட்டாயமாக்கிக் கொண்டேன். அதில் ஒன்றுதான் அமைதிக்கான நோபல் பரிசு மையம் (Nobel Peace Center). ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசு நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தான் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ம் தேதி உலக அமைதிக்காகச் செயலாற்றியோரில் சிறந்த சேவையாளருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. ஓஸ்லோ நகராண்மைக் கழக மண்டபத்தில் அந்தப் பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெறுகிறது என்றாலும் அந்த நிகழ்வை ஒட்டி பரிசு பெறுபவரைச் சிறப்பிக்கும் நிகழ்வும் ஒரு ஆண்டு காலத்திற்கு அவரது செயல்பாட்டினைச் சிறப்பு செய்யும் கண்காட்சியும் இந்தக் கட்டிடத்தில் தான் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்தக் கட்டிடம் 2005 பழைய ரயில் நிலையத்தை மாற்றி அமைதிக்கான நோபல் பரிசினைச் சிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட நினைவு மண்டபமும் அருங்காட்சியகமுமாகும். 1901ம் ஆண்டு தொடங்கி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒவ்வொருவரைப் பற்றிய தகவல்களும் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டமைக்கான காரணங்களும் இங்கு வழங்கப்பட்டுள்ளன. 

நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃப்ரெட் நோபெல் அவர்களின் பெயரால் வழங்கப்படும் உலகின் தலைசிறந்த ஆய்வாளர்களுக்கும் சாதனை படைத்தோருக்கும் வழங்கப்படும் ஒரு உயரிய விருது. சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் பிறந்தவர் ஆல்ஃப்ரெட் நோபெல் . தனது மறைவுக்குப் பின்னர் அவரது உழைப்பில் ஈட்டிய சொத்துக்கள் அனைத்தும் ஒரு அறக்கட்டளையின் வழி திறன்படைத்த ஆய்வாளர்களைக் கவுரவிப்பதற்காகவும் சிறப்பிப்பதற்காகவும் என அவர் சட்டப்படி தமது உயிலை எழுதி வைத்தார். இதன் அடிப்படையில் 1901ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது சுவீடனிலும் நோர்வேயிலும் என இரண்டு நாடுகளில் வழங்கப் படுகின்றது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் ஓஸ்லோ நகரில் வழங்கப்படுகின்றது. அறிவியல், உளவியல், இலக்கியம், மருத்துவம் ஆகிய ஏனைய ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டோக்ஹோம் நகரில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர ஓஸ்லோவில் மிக முக்கியமாக அமைந்திருக்கும் அருங்காட்சியகங்களான ஃப்ரெம் அருங்காட்சியகம், வைக்கிங் அருங்காட்சியகம், மக்கள் அருங்காட்சியகம், கடலாய்வுகள் அருங்காட்சியகம் என சில அருங்காட்சியகங்களுக்குச் சென்று அங்குக் காட்சிப்படுத்தியிருந்த அரும்பொருட்களை காணும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன். இதில் ஃப்ரெம் அருங்காட்சியகம் சிறப்பானது. ஏனெனில் உலகில் மனிதன் உலக உருண்டையின் வடக்கு தெற்கு துருவங்களுக்குச் சென்ற வரலாற்றுச் செய்திகளையும் நோர்வே ஆய்வாளர்களின் சிறப்பையும் அந்த ஆய்வுப் பயணங்களில் பயன்படுத்தப்பட்ட மரக்கலங்களையும் பாதுகாக்கும் ஒரு அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது. 

நோர்வே நாட்டிற்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழ்மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்களில் மிகப் பெரும்பாலோர் உள்ளூர் நோர்வேகியன் மொழியைக் கற்றுக் கொண்டு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஓஸ்லோ நகர மையத்தில் ஓடுகின்ற பேருந்துகளில் பேருந்து ஓட்டுநர்களாகவும், கட்டிடங்களில் காவல்துறை அதிகாரிகளாகவும், பாதுகாப்பு அதிகாரிகளாகவும் எனது சில நாள் பயணத்திலே பல தமிழர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அவர்களின் இரண்டாம் தலைமுறையினர் உள்ளூரில் கல்வி கற்று சிறப்பான வளர்ச்சியைப் பெற்று நோர்வே நாட்டின் வளர்ச்சிக்குத் தங்கள் உழைப்பையும் தருகின்றார்கள் என்பதும் பாராட்டத்தக்கது. மிகச் சிறப்பாக மேலும் சொல்வதென்றால் ஓஸ்லோவின் துணை மேயராக இன்று பொறுப்பில் இருப்பவரும் ஒரு தமிழ்ப்பெந்தான். கம்சாயினி என்ற பெயர் கொண்ட இளம் ஈழத்தமிழ்ப்பெண் அரசியல் ஈடுபாட்டில் நாட்டம் கொண்டு நோர்வே நாட்டின் தலைநகரின் துணை மேயராக இருப்பது உலகத் தமிழர்களுக்குப் பெருமையல்லவா? 

இங்கு ஓஸ்லோ நகரில் இயங்கும் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள சூழலை அறிந்து வரும் வாய்ப்பும் அமைந்தது. ஓஸ்லோவில் மட்டும் ஐந்து தமிழ்ப்பள்ளிகள் இயங்குகின்றன. இவை ஐந்துமே அன்னை பூபதி என்ற ஒரு அமைப்பின் வழி நடத்தப்படுகின்றன. மேலும் பெர்கன் நகரிலும் இத்தகை தமிழ்ப்பள்ளிகள் இதே அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்றது. வெள்ளிக்கிழமை மாலை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்கள் இங்குப் பள்ளிகள் இயங்குகின்றன. சொந்த இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றிலேயே இயங்கும் ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடத்திற்குச் சென்று வந்தேன். அங்கு 650 மாணவர்கள் தமிழ் மொழி படிக்கின்றனர் என்பதைக் கேட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. 

ஓஸ்லோவில் மட்டுமே இரண்டு இந்துக் கோயில்களும் இருக்கின்றன. ஒரு சுப்பிரமணியர் கோவிலும் ஒரு அம்மன் கோவிலும் இருக்கின்றன. 

எனது ஓஸ்லோ வருகையை அறிந்து இணையம் வழி தொடர்பு கொண்டு நோர்வே தமிழ்ச்சங்கத்தினர் ஒரு மாலை நேரச் சந்திப்பிற்கு திடீர் அழைப்பினைத் தந்தார்கள். ஞாயிற்றுக் கிழமை மதியம் ஓஸ்லோ நகரில் இந்தச் சந்திப்பு ஒரு நால் ஏற்பாட்டில் நடைபெற்றது என்றாலும் ஆக்ககரமான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள நல்லதொரு தளமாக இந்தச் சந்திப்பு திகழ்ந்தது. 

ஐரோப்பா முழுமைக்கும் உள்ள பல்வேறு நாடுகளில் பல தமிழ்ச் சங்கங்களும் அமைப்புக்களும் இயக்கங்களும் இயங்குகின்றன. ஆனால் இவை அனைத்தையும் ஒன்றிணைத்து இயங்கும் வகையிலான ஒன்றியம் ஒன்று இது காறும் ஐரோப்பாவில் தோன்றவில்லை. உருவாக்கப்படவும் இல்லை. எதனால் இந்த முயற்சி தொடங்கப்படவில்லை என்ற கேள்வியை நான் முன் வைக்க இந்தத் தளம் பொறுத்தமானதாக எனக்கு அமைந்தது. இந்தச் சந்திப்பு நிகழ்விலேயே ஐரோப்பாவிற்கான ஒருங்கிணைந்த தமிழ்ச்சங்கங்களின் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற என் கருத்தையும் விருப்பத்தையும் முன் வைத்தேன். இதனை நோர்வே தமிழ்ச்சங்கத்து செயலைவக் குழுவினர் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு அத்தகைய முயற்சியில் தங்களது ஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்ததோடு இதில் இணைகின்ற முதல் அமைப்பாக நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பெயரை இணைக்குமாறு ஒருமித்த குரலில் என்னிடம் கேட்டுக் கொண்டனர். இதனை மிக ஆரோக்கியமானதொரு ஒத்துழைப்பாகவே நான் காண்கின்றேன். 

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுக்கிடையே நிலவும் அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தள்ளிவைத்து நமது அடுத்த தலைமுறையினர் ஐரோப்பாவில் ஊன்றிக் கால்பதித்து இங்கு வாழும் நிலையில் தமிழர் மரபு, மொழி, பண்பாட்டினை மறவாது இயங்க சீரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கலை, இசை, நடனம் என்ற குறுகிய வட்டத்திற்குள் மாத்திரம் ஐரோப்பியத் தமிழர்களின் ஆர்வத்தைக் குறுக்கிவிடாமல் பல்வேறு ஆய்வுத்தளங்களில் தமிழ்ச்சிந்தனைகள் பதிவாக்கம் பெறவும், புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றைச் சரியாக ஆவணப்படுத்தவும் இது முன்னெடுக்கப்பட வேண்டிய மிக முக்கிய ஒன்று என்பதை ஐரோப்பா வாழ் தமிழர்கள் மனதில் நிறுத்திச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!


Thursday, August 23, 2018

91. வரலாறு சொல்லும் தரங்கம்பாடி



German Tamilology (சி.மோகனவேலு) என்ற ஒரு நூல் சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு நண்பர் ஒருவரின் வழி பரிசாகக் கிடைத்தது. வித்தியாசமான தலைப்பாக இருக்கின்றதே என அதனை வாசிக்கத் தொடங்கினேன். நாம் பொதுவாக பேசாத, அறியாத பல வரலாற்றுத் தகவல்கள் அந்த நூலில் இடம்பெற்றிருந்தன. அதிலும் குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து தமிழகத்திற்குச் சென்ற ஐரோப்பியர்கள் பற்றியும் அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணிகள், கல்விப்பணிகள், மருத்துவப் பணிகள் பற்றியும் பல தகவல்களை அந்த நூல் கோடிட்டுக் காட்டியிருந்தது. இந்த நூல் வாசிப்பின் தொடர்ச்சியாக மேலும் பல நூல்களை வாங்கியும், இணையத்திலிருந்து தரவிறக்கியும், வாசிக்கத்தொடங்கியிருந்தேன். பல ஆய்வுக்கட்டுரைகளும் இந்த விசயம் தொடர்பாக எனது இடைவிடாத தேடல்களில் கிடைக்கப்பெற்றேன். இந்த ஆய்வின் வழி பல்வேறு காலகட்டங்களில் ஐரோப்பாவிற்கும் தமிழகத்திற்கும் இருந்த தொடர்புகள் பற்றியும் அவை வணிகம், சமயம், நாட்டைக் கைப்பற்றி ஆளும் முயற்சி என்ற வகையிலுமான வரலாற்றுச் செய்திகள் பல எனக்குக் கிடைத்தன. இப்படிக் கிடைத்த நூல்களிலும் கட்டுரைகளும் குறிப்பிடப்படும் செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்தின் ஒரு நகரின் பெயராக தரங்கம்பாடி என்ற கடற்கரை நகரின் பெயர் எனக்கு அறிமுகமாகியது.

ஐரோப்பாவின் ஜெர்மனி, டென்மார் ஆகிய இந்த இரு நாடுகளுக்கும் தமிழகத்தின் இந்தக் குறிப்பிட்ட தரங்கம்பாடி என்ற நகருக்கும் ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் தொடர்புகள் இருக்கின்றன என்பதை எனது தேடல்களின் வழி அறிந்து கொண்டேன். இவ்வளவு வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டிருக்கும் இந்த தரங்கம்பாடி என்னும் நகருக்குச் சென்று நேரில் இந்த நகரைக் கண்டு ஆராய வேண்டும், இந்த நகரைப் பற்றில் நேரடி அனுபவம் பெறவேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது. ஆயினும் சில ஆண்டுகள் இந்த முயற்சி தடைப்பட்டுக் கொண்டேயிருந்தது. 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வடலூருக்கு ஒரு களப்பணிக்காக நான் சென்றிருந்தபோது இந்த நகருக்குச் செல்லும் வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டேன்.

என்னுடைய தரங்கம்பாடி பயணத்தில் வடலூர் நண்பர்கள் சிலரும் இணைந்து கொண்டனர். எங்கள் பயணம் வடலூரிலிருந்து தொடங்கியது. வடலூரிலிருந்து தரங்கம்பாடிக்கு ஏறக்குறைய என்பது கிமீ தூரம். வடலூரிலிருந்து புறப்பட்டு சாத்தப்பாடி, புவனகிரி, சிதம்பரம், சிவபுரி, சீர்காழி, திருக்கடையூர், சாத்தங்குடி ஆகிய ஊர்களைக் கடந்து தரங்கம்பாடி வந்தடைந்தோம். வழியில் எங்கள் பயணத்தில் பெருமாள் ஏரியைக் கடந்து பின்னர் கொள்ளிடம் நதியைக் கண்டு ரசித்தவாறே எங்கள் பயணம் அமைந்தது. தரங்கம்பாடியிலிருந்து வடக்கு நோக்கி கடற்கரையோரத்தில் பயணம் செய்தால் இலக்கிய காலத்திலிருந்து நாம் நன்கறிந்த பூம்புகார் நகரை வந்தடையலாம். தரங்கம்பாடியிலிருந்து பூம்புகார் ஏறக்குறைய 25 கி.மீ தூரம் அமைந்திருக்கும் ஒரு கடற்கரை நகரம்.

தமிழகத்தில் உள்ள இந்தத் தரங்கம்பாடி என்னும் கடற்கரை நகரத்திற்கும் ஐரோப்பாவின் டென்மார்க்கிற்கும் ஜெர்மனிக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பது ஒரு சுவாரசியமான வரலாறு.

ஜெர்மனியில் மார்ட்டின் லூதரால் 16ம் நூற்றாண்டு உருவாகி வளர்ந்த லூதரன் அல்லது சீர்திருத்த கிருத்தவ சமயம், இந்தியாவில் முதலில் தன் தடம் பதித்தது தமிழகத்தின் தரங்கம்பாடியில் தான். தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் சில நூற்றாண்டுகள் வரை உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை துறைமுகமாக விளங்கியது. டேனீஷ் ஈஸ்ட் இந்தியா வர்த்தக நிறுவனத்தைத் தொடக்கி, தரங்கம்பாடியைத் தமது வர்த்தக அமைப்பிற்குத் தளமாக அமைத்த பின்னர், டென்மார்க்கின் பேரரசர் நான்காம் ஃப்ரெடெரிக் தமிழகத்தில் சமயப் பணிக்காக சீர்திருத்த மறைபரப்பும் பணியார்களை அனுப்பி வைத்தார். ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரான ஹாலே நகரில் இயங்கிக் கொண்டிருந்த ஹாலே கல்விக்கூடத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த பேராசிரியர் ஃப்ரான்ங்கெ தனது மாணவர்கள் இருவரை இப்பணிக்காக அனுப்பி வைக்க எடுத்த முடிவுதான் தரங்கம்பாடி லூதரன் திருச்சபை உருவாகிய நிகழ்வுக்கு வித்தாக அமைந்தது.

லூதரன் திருச்சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர் ஜெர்மானியரான பார்த்தலோமஸ் சீகன்பால்க் ஆவார். தரங்கம்பாடியில் ஜெருசலம் இலவசப் பள்ளிக்கூடத்தினைத் தொடக்கியவர்; தரங்கம்பாடியில் 1712ம் ஆண்டு ஒரு அச்சகத்தை நிறுவியவர்; தமிழ் மொழியைக் கடமைப்பாட்டுடன் கற்றுத் தமிழ் இலக்கண நூற்களை லத்தீன், ஜெர்மானிய மொழிகளில் எழுதியவர்; தமிழ் மொழியின் சிறப்பினையும் தமிழக மக்களின் இலக்கிய இலக்கண மேன்மையும், வாழ்வியல் கூறுகளையும் ஐரோப்பாவில் கி.பி18ம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் விரிவாக அளித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

தரங்கம்பாடியின் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கின்றது டேனீஷ் கோட்டை. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது டென்ஸ்போர்க் கோட்டை என்றழைக்கப்படும் இக்கோட்டை. இக்கோட்டைக்குள் இன்று தமிழக தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளோடு இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புராதனச் சின்னங்களும் இன்று பாதுகாக்கப்படுகின்றன.

1616ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி டென்மார்க்கின் பேரரசர் நான்காம் கிறிஸ்டியன், டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனத்துக்குத் தன் நாட்டை பிரதிநிதித்து ஆசியாவில் பன்னிரண்டு ஆண்டுகள் வர்த்தகம் செய்யும் உரிமையை வழங்கினார்.

1620ம் ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சையை அச்சமயம் ஆண்டு கொண்டிருந்த அச்சுதநாயக்க மன்னரின் அரசவைக்கு வந்து மன்னரைச் சந்தித்து, டென்மார்க் மன்னரின் வர்த்தகம் தொடர்பான விருப்பத்தைத் தெரிவித்து, வர்த்தக புரிந்துணர்வு உடன்படிக்கைத் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் டென்மார்க் மன்னரின் பிரதிநிதியாகிய ஒவே ஜேட். இந்தப் பேச்சு வார்த்தைகள் இரு நாடுகளுக்குமிடையே வணிக ரீதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பை உருவாக்கியது. நாயக்க மன்னர் தரங்கம்பாடியில் டேனீஷ் அரச பிரதிநிதிகள் வந்து தங்கவும், வர்த்தகத்தைத் தொடங்கவும், அங்குக் கோட்டை கட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் பட்டயம் ஒன்று கையெழுத்திடப்பட்டது . இதன் அடிப்படையில் டென்ஸ்போர்க் கோட்டை இங்கு அமைக்கப்பட்டது

1622ம் ஆண்டு வாக்கில் தரங்கம்பாடியில் டேனீஷ் வர்த்தகத்தைச் செயல்படுத்தும் முழுப் பொறுப்பையும் ரோலான்ச் க்ரெப் எடுத்துக் கொள்ள, ஓவே ஜேட் டென்மார்க் திரும்பினார். தரங்கம்பாடியில் டேனீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைத் தொடங்கிய பின்னரும் கூட, டேனீசாருக்குத் தமிழகத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது ஆரம்பகாலகட்டத்தில் சிரமமான பணியாகவே அமைந்தது.

வர்த்தக முயற்சிகள் தொடங்கிய பின்னர் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் ஏற்கனவே வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு அப்பகுதியில் வர்த்தகம் நடத்திக்கொண்டிருந்த போர்த்துக்கீசியர்களும் அரேபியர்களும் அளித்த கடும்போட்டிகளையும் பல இடையூறுகளையும் சமாளித்தே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம். இது ஒரு அரிய முயற்சிதான் எனினும் கூட, ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் அடைந்த வெற்றியைப் போன்ற வெற்றியினை இந்த வர்த்தக நிறுவனம் பெறவில்லை.

டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் முப்பத்து நான்கு ஆண்டுகள் மட்டுமே இயங்கியது. இந்த முப்பத்து நான்கு ஆண்டு காலகட்டத்தில் ஏழு முறை மட்டுமே ஆசிய நாடுகளிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் வந்தன டேனீஷ் கப்பல்கள் . ஆக, ஒரு வெற்றிகரமான வர்த்தக வாய்ப்பினை இந்த டேனீஷ் வர்த்தக முயற்சி அளிக்கவில்லை. ஆயினும் ஜெர்மனியிலிருந்து வந்தடைந்த மறைபரப்பும் பணியாளர்களின் வரவும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த சமூக மாற்றங்களும் குறிப்பிடத்தக்க சமூக, வரலாற்று மாற்றங்களைத் தரங்கம்பாடி மட்டுமன்றி தமிழகத்தின் திருநெல்வேலி, கடலூர், மதராசப்பட்டினம் போன்ற பகுதிகளில் ஏற்படுத்தியது. ஜெர்மனியில் இதன் தொடர்ச்சியாக 18ம் நூற்றாண்டில் ஹாலே கல்விக்கூடத்தில் தமிழ்மொழி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நிலைகளில் தமிழ் மொழி போதிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வும் குறிப்பிடத்தக்கது.

தரங்கம்பாடி சங்ககாலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக திகழ்ந்துள்ளது. தரங்கம்பாடிக்கு அருகில் உள்ள பொறையாறு குறித்த செய்திகள் அகநானூற்றுப் பாடல்களிலும்(100:11-12) ) நற்றிணையிலும் (131:6-8) இடம்பெறுகின்றன. வணிகம் செழித்த ஒரு பகுதியாக இப்பகுதி சங்க கால இலக்கியங்களின் குறிப்புக்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது என்பது இந்த நகரின் சிறப்பை விளக்கும் வகையில் அமைகின்றது.

இங்கு டேனீஷ் கோட்டைக்கு வருபர்கள் அதன் இடப்புறமுள்ள மாசிலாமணீஸ்வரர் கோயிலைக் காணலாம். இக்கோயில் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததொரு கோயிலாகும். இது இன்று வழிபாடுகள் இன்றி பராமரிப்பின்றி காணப்படுகின்றது. கடற்கரையை நோக்கியவாறு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது இக்கோயில். இக்கோயிலில் பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் முப்பத்தேழாவது ஆட்சியாண்டில் (கி.பி.1305)ல் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் உள்ளது. ‘சடங்கன்பாடியான குலசேகரன் பட்டினத்து உடையார் மணி வண்ணீகரமுடையார்க்கு’ என்று இக்கல்வெட்டு கூறுகின்றது. இக்கல்வெட்டின் அடிப்படையில் இன்று தரங்கம்பாடி என நாம் அறியும் இவ்வூர் அன்று சடங்கன்பாடி என அழைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது இந்த ஊரை குலசேகரப்பாண்டிய மன்னன் தன் பெயரோடு தொடர்பு படுத்தி குலசேகரப்பட்டீனம் என்று பெயர் மாற்றம் செய்த செய்தியும் இக்கல்வெட்டில்னால் அறிய முடிகின்றது.

அதே போல தஞ்சை நாயக்கமன்னன் அச்சுதநாயக்கரின் முற்றுப் பெறா ஒரு கல்வெட்டும் இவ்வூரை ”சடங்கன்பாடி” எனக்குறிப்பிடுகின்றது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை தரங்கம்பாடி “சடங்கன்பாடி” என அழைக்கப்பட்டு வந்தமை இக்கல்வெட்டின் வழி அறியப்படுகின்றது. இதே கோயிலில் உள்ள மற்றுமொரு கல்வெட்டு, ‘இதுக்கு தாழ்வு சொன்னார் உண்டாகில் பதினென் விஷயத்துக்கும் கரையார்க்கும் துரோகியாகக் கடவர்களாகவும்” என்று குறிப்பிடுகின்றது. “பதினெண் விஷயம்” என்பது வணிகக் குழுவைக் குறிக்கும் என்று ஆ.சிவசுப்பிரமணியன் தனது ‘தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இக்கோயிலுக்கு வணிகர்கள் கொடைகள் தந்து பாதுகாத்த செய்தியும் கல்வெட்டுக்களினால் அறியமுடிகின்றது.

1712ம் ஆண்டு சீகன்பால்க் உருவாக்கிய தரங்கம்பாடி அச்சுக்கூடம் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றது. காலணித்துவ ஆட்சியின் போது படிப்படியாக அச்சு நூல்கள் உலகமெங்கும் உருவாகத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழகத்தில் தரங்கம்பாடியில் ஒரு அச்சுக் கூடம் இயங்கியது என்பது சிறப்பல்லவா?

இங்கிலாந்தில் இயங்கி வந்த லூத்தரன் சமய அமைப்பு பாதிரியார் சீகன்பால்கின் பணிகளுக்கு உதவும் வகையில் ஜெர்மனியிலிருந்து ஒரு அச்சு இயந்திரத்தை வாங்கி 1711ம் ஆண்டு கப்பலில் அனுப்பியது. அக்கப்பல் பிரஞ்சுக்கடற்படையால் தாக்கிக் கைப்பற்றப்பட்டு சிலகாலங்களுக்குப் பின் அக்கப்பலும் அதில் பயணித்தோரும் விடுவிக்கப்பட்டு தரங்கம்பாடிக்கு 1712ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்தடைந்தது. இந்தத் தரங்கம்பாடி அச்சுக்கூடத்தின் முதல் வெளியீடாக ஹாலே கல்விக்கூடத்து தலைமை இயக்குநர் பேராசிரியர் ஃப்ராங்கே அவர்களின் நூல் போர்த்துக்கீசிய மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டு வெளிவந்தது. அடுத்ததாக 1713ம் ஆண்டில் மேலும் சில கிருத்துவ சமய சார்பு நூல்கள் போர்த்துக்கீசிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தத் தரங்கம்பாடி அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டன. தமிழ் மொழியில் இந்த அச்சுக்கூடம் இயங்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் உணர்ந்ததால் தமிழ் அச்சு எழுத்துகள் உருவாக்கும் பணி ஜெர்மனியில் தொடங்கியது. சீகன்பால்க் அவர்கள் உருவாக்கியிருந்த லத்தீன்-தமிழ் இலக்கண நூலின் வழி தாங்கள் அறிந்து கொண்ட தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இப்பணி தொடங்கப்பட்டு தமிழ் அச்செழுத்து உருவாக்கம் நிறைவு பெற்றது. புதிதாக உருவாக்கிய அச்சு எழுத்துக்களையும் ஒரு புதிய அச்சு இயந்திரத்தையும் கப்பல் வழி தரங்கம்பாடிக்கு ஹாலே கல்வி நிறுவனம் அனுப்பியது. இந்த முயற்சியின் வழி சீகன்பால்க் தொடங்கிய தரங்கம்பாடி அச்சகம் தமிழில் நூல்களை அச்சிட்டு வெளியிட்டது. வீரமாமுனிவர் என நன்கு அறியப்பட்ட C.J.Beschi அவர்கள் இந்த அச்சுக்கூடம் வந்தார் என்றும் அவரது நூல்களும் இங்கு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப் பல வரலாற்றுச் செய்திகளைத் தன்னுள்ளே கொண்டு இன்று பெரிதும் பேசப்படாத ஒரு நகராக தரங்கம்பாடி திகழ்வது ஆச்சரியம்தான். இப்பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள், மாசிலாமணீஸ்வரர் ஆலயம், டேன்ஸ்பூர்க் கோட்டை என இந்த நகரில் பார்ப்பதற்கு ஏராளமானவை உள்ளன. இதனை வெளிப்ப்டஹ்ட்தும் வகையில் தமிழுக்கும் ஐரோப்பாவிற்கும் உள்ள தொடர்பினை வெளிக்காட்டும் வகையிலான ஒரு விழியப் பதிவை அண்மையில் தமிழ் மரபு அறக்கட்டளை வ்ளியீடு செய்திருந்தோம். அதனை https://youtu.be/FM6Wmzkrjmc என்ற பக்கத்திலிருந்து கண்டு மகிழலாம்.

நூல்கள் மட்டும் நமக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுப்பதில்லை. நகரங்களும் நம்மோடு வரலாறு பேசக்கூடிய வல்லமை பெற்றவையே!