Thursday, March 29, 2018

85. மகளிர் மட்டும்



ஒரு பெண்ணுக்கு பலம் அவள் பெரும் கல்வியும் அவள் மன உறுதியும் தான். தெளிந்த சிந்தனையும், சீரான கருத்துக்களும், தன்னைப்பற்றிய சரியான புரிதலும் கொண்ட பெண்கள் சாதனைகளைச் செய்தோராகப் பரிமளிக்கின்றனர்.

பெண்கள் என்றால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பெண்களைப் பற்றிப் பேசினால் அது அவர்களது பலகீனத்தை முன்வைத்து எழுப்பப்படும் நிகழ்வுகளுக்கு எழும்பும் எதிர்வினைகளும் செயல்பாடுகளும் எனக் காண்பது ஒரு வித கண்ணோட்டம். இது இன்றைய அளவில் இன்னமும் தொடர்கின்ற ஒரு தேவை என்பதை மறுப்பதற்கில்லை.  ஆனால் இக்காலத் தமிழ்ப்பெண்கள் பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டவர்களாக இருக்கின்றனர். வீடு என்ற நான்கு சுவர்களுக்குள் முடங்கிவிடுபவர்களாக இவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களல்ல. தன்னையும் வளர்த்துக் கொண்டு, தன் குடும்பத்தையும் அரவணைத்துக் கொண்டு, தன் குடும்ப பொருளாதாரத் தேவைகளையும் முன்னெடுத்துச் செயல்படுத்தும் செயல்திறன் மிக்கோராக இக்காலப் பெண்கள் வளர்ச்சி கண்டிருக்கின்றனர்.

அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாம் உலக ஐயை மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்க வந்த பெண்டிர் பலர் சமூகப் பார்வையைக் கொண்ட ஆளுமைகளாகத் தம்மை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் படைத்த கட்டுரைகள் பெண் இனத்தின் பல்வேறு கோணங்களை ஆய்வுப்பூர்வமாக அலசுவதாக அமைந்திருந்தது. மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வு மலரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

ஐயை சிவசித்ரா “ சின்னப்பிள்ளை – தமிழக கிராமப் புறப்பெண்களின் தன்னெழுச்சி வரலாறு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வழங்கியிருந்தார். எழுதவும் வாசிக்கவும் தெரியாத ஒரு கிராமத்துப் பெண்பிள்ளை தான் சின்னப்பிள்ளை. இவர் தன் முயற்சியால் நட்ட விதை இன்று ஆலமரமாகச் செழித்து வளர்ந்து பல கிராம மகளிருக்கு உதவும் கரமாக விரிந்திருக்கின்றது. “தன்” என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி ஆறு லட்சம் உறுப்பினர்களுடன் இன்று இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் 12 மாநிலங்களில் தற்சமயம் இந்த அமைப்பு கிளைவிட்டுப் பரவி விரிந்திருக்கின்றது. இந்தக் களஞ்சியத்தின் இன்றைய சேமிப்பு 281 கோடி இந்திய ரூபாய் என்பதைக் கட்டுரை விவரிக்கின்றது.

சின்னப்பிள்ளை கள்ளந்திரி என்ற கிராமத்தில் பிறந்தவர். 18 வயதில் திருமணம். புல்லுச்சேரி கிராமத்திற்கு வருகின்றார். சில பண்ணையார்களுக்குச் சொந்தமாக இருக்கும் விளைநிலங்களில் வேலை செய்து கூலித் தொழிலாளியாக அவர் வாழ்க்கை தொடர்கின்றது. 1990 வாக்கில் இத்தகைய கூலித்தொழிலாளிகளின் மேற்பார்வையாளராக இருந்த போதிலும் தன் சக தொழிலாளர்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படத்தொடங்கினார். அந்தச் சூழலில் அந்தக் கிராமத்திற்கு திரு.வசிமலை அவர்கள் வருகின்றார்கள். இவர் கிராமப்புற மேம்பாட்டிற்காகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர். அவரது வழிகாட்டுதலுடன் சின்னப்பிள்ளை சேமிப்புத் திட்டத்தை தொடங்குகின்றார்.

முதலில் 20 பெண்கள், மாதம் 20 ரூ முதலீட்டில் ஆரம்பித்த இந்த முயற்சி படிப்படியாக கிராமம் கிராமமாக விரிவடைந்தது. இந்த முயற்சி வெற்றியடைய முக்கியக் காரணமாக இருந்தது சின்னப்பிள்ளையின் நேர்மை, உதவும் மனம், எதிர்காலத்தைப் பற்றிய தூரநோக்குச் சிந்தனை மற்றும் இதில் உறுப்பினர்களாக தம்மை இணைத்துக் கொண்ட பெண்களின் கடும் உழைப்பும் நம்பிக்கையும் தான். இப்படி படிப்படியாக வளர்ந்து இன்று பல கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு நிழல் தரும் குடையாக இருக்கின்றது இந்த “தன்” அமைப்பு. சின்னப்பிள்ளையின் சேவையைப் பாராட்டி இந்தியப் பிரதமர் மத்திய அரசின் விருதான “ஸ்த்ரீசக்திபுஷ்கர்” விருதினை 1999ம் ஆண்டு வழங்கினார் என்பது பெருமையளிக்கும் செய்தி அல்லவா.

அடுத்து நாம் காணவிருப்பது கடந்த ஆண்டு மதத்தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ் பற்றிய ஒரு கட்டுரை.

தமிழகத்தின் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றும் ஐயை முனைவர்.கு.உமாதேவி “கௌரி லங்கேஷின் தாய்மொழி தார்மீகம்” என்ற கட்டுரையின் வழி இந்த ஆளுமையின் தன் தாய்மொழி சார்ந்த செயல்பாடுகளை விவரிக்கின்றார்.

கௌரி கர்நாடகா மாநிலத்தில் 1962ம் ஆண்டு பிறந்தவர். 1985ம் ஆண்டு முதல் 1990 வரை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் பணியாற்றியவர். நவீன கன்னட எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும் லங்கேஷ் என்ற பத்திரிக்கையைத் தொடக்கியவருமான ப்ரகதி ரங்காவின் மகள். ஆங்கிலக் கல்வியை கற்றவர். தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு லங்கேஷ் பத்திரிக்கையை நடத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். ஆங்கில வழிக்கல்வி கற்றவருக்குக் கன்னட மொழி பத்திரிக்கையை நடத்துவது, அதிலும் கொள்கை மாறாத வகையில் திறம்பட நடத்துவது என்ற சவால் இருந்தது. விமர்சனங்கள் எழுந்தன. ஆகினும் தன் தாய்மொழி மீது கொண்ட தீவிர ஈடுபாட்டினாலும், சமூக அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கடப்பாட்டுடனும் தனது பணியைத் தீவிரமாக முன்னெடுத்தார் கௌரி லங்கேஷ். கன்னட மொழியைக் கற்கத் தொடங்கிய இவர், தன் பத்திரிக்கை வாயிலாக 850க்கும் மேற்பட்ட திரை-புத்தக விமர்சனங்கள், சுயவரலாறு கட்டுரைகள், விளையாட்டுத் தொடர்பான கட்டுரைகள் என எழுதியிருக்கின்றார். தாய்மொழிப் பற்று, தாய்மொழி அடையாளம், தாய்மொழி பேணுதல் என்ற வகையில் தனது கருத்துக்களை முன் வைத்து மிகத் தீவிரமாக செயலாற்றியவர் இவர்.

இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதன் பிரதிநிதியாக கௌரி மதச்சார்பற்றவராக, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராக தன் செயல்பாடுகளைத் தொடர்ந்தார்.

தாய்மொழியில் கற்கும் போது ஏற்படும் புரிதல் ஆழமானது. ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்கும் திறன் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. தாய்மொழியை மறந்தவர்களாக இருப்பது பெருமையல்ல. எனக்குத் தமிழ் தெரியாது என ஆங்கிலத்தில் சொல்லிச்சிரிக்கும் பலரை நாம் இன்று காண்கின்றோம். அது தாழ்வு மனப்பான்மையுடன் கூடிய ஒரு வித உளவியல் பிரச்சனையே. எந்த வயதிலும் ஒரு மொழியைக் கற்க விரும்புவோர் முயற்சி செய்தால் நிச்சயம் கற்றுக் கொள்ள முடியும். அதிலும் ஒருவர் தனது தாய்மொழியை இளம் வயதில் கற்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் மனம் தளராது முயற்சித்தால் நிச்சயம் மொழித் திறனைப் பெறலாம். தன் தாய்மொழியில் சீரிய பங்காற்றலாம் என்பதற்குக் கௌரி லங்கேஷ் ஒரு உதாரணமாகத் திகழ்கின்றார் என்பதை இக்கட்டுரையின் வழி ஆசிரியர் முன்வைக்கின்றார்.

அடுத்த கட்டுரை மௌனமாகப் பெண்கள் அனுபவித்து வரும் பாகுபாடு, அதனால் ஏற்படும் சமூக வலிகள் பற்றி பேசுகின்றது. ஐயை கி.உமாமகேஸ்வரி “மௌனப் பெருங்கடல்” என்ற தலைப்பில் சமூகப்பார்வையை ஆழமாகத் தன் கட்டுரையில் முன்வைக்கின்றார். பெண் சமத்துவம், பாரதி கண்ட புதுமைப்பெண் என்றெல்லாம் நாம் பேசிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நம் தமிழ்ச்சமூகத்தில் பெண்களைத் தொடர்ந்து வரும் சில கொடுமைகளின் சுவடுகளை ஒதுக்கித் தெள்ளிவிட்டுச் செல்ல முடியாதல்லவா?

இந்தக் காலகட்டத்திலும் விதவைகள் என அடையாளப்படுத்தப்பட்டு அவமானங்களையும் இன்னல்களையும் அனுபவிக்கும் பெண்கள் நம்மில் இருக்கவே செய்கின்றனர். அப்படி விதவை என அடையாளமிட்டு அழைக்கப்படுவோர் அனுபவிக்கும் வலிகள் பன்முகத்தன்மை கொண்டவை. தனிமை தரும் வேதனை, பொருளாதாரச் சார்பு நிலை, உலகம் என்ன சொல்லுமோ என எதிலும் பயம், பதற்றம், பாலியல் ரீதியான பிரச்சனைகள், பழமைவாத சமூகம் தரும் தாக்கம், குடும்ப சுமை என இவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். சமூகத்தில் மனைவியை இறந்த கணவனை சடங்கு ரீதியாக நம் சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் கணவனை இழந்து விட்டாலோ விதவை என்ற ஒரு பட்டம் தானே கிடைத்து விடுகின்றது. இந்தக் காலத்திலும் கூட மங்கல காரியங்களிலிருந்து விலக்கப்பட்டவளாக அத்தகைய பெண்கள் வாழ்கின்றார்கள். ஆதலால், நம் சமூகத்தில் “விதவை” என்ற சொல்லாடே புழக்கத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றார் கட்டுரை ஆசிரியர்.

இப்படி பல்வேறு கோணங்களில் பெண்களின் சமகால சமூக, பொருளாதார சிந்தனைகளை முன் வைத்து கட்டுரைகள் இந்த நிகழ்வில் படைக்கப்பட்டன.

அயலகத்திலிருந்து வந்து கலந்து கொண்டு பங்களித்த ஆய்வாளர்களுடன் மலேசியாவின் கல்விக்கழகங்கள் சிலவற்றிலிருந்தும் ஆசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் திரளாகப் பங்கு கொண்டு பயன்பெற்றனர். பல நாடுகளைச் சார்ந்த மகளிர் இதுவரை வாட்சப் குழுமம் வாயிலாக மட்டுமே சந்தித்தவர்கள் நேரிலே சந்தித்து ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி மகிழ்ந்தனர்.

பெண்கள் எனப் பேசத்தொடங்கினால் பிரச்சனைகள் தானே முன் நிற்கின்றன என்ற கருத்திற்கு மாற்றாக இருந்தது இந்த ஆய்வுக் கருத்தரங்க நிகழ்வு. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் ஒலித்தன. ஆக்கப்புர்வமான நட்புச் சூழல் விதைக்கப்பட்டது இந்த நிகழ்வில். இது வளர்ந்து ஆலமரமாகி விழுதுகள் விட்டு வளரும்.

மகளிர் மேன்மை காக்கும் இந்த ஐயை குழுமத்திற்கு என் நல்வாழ்த்துகள்!







Thursday, March 22, 2018

84. உலக ஐயை ஒன்றுகூடல்



பெண்களுக்கென ஒரு மாநாடு..
அது பெண்களைச் சிறப்பித்த ஒரு மாநாடு..
ஆளுமை நிறைந்த பெண்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்த ஒரு மாநாடு..
ஆய்வுலகில் ஈடுபட்டிருக்கும் பெண்களை மேலும் ஊக்குவித்த ஒரு மாநாடு..
ஆம். முதலாம் உலக ஐயை மாநாடு கடந்த 17.03.2018 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.

தமிழகம், இலங்கை, மலேசியா, ஜெர்மனி, சுவிஸர்லாந்து, துபாய், வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பெண் ஆளுமைகள் இந்த ஆய்வுக்கருத்தரங்கில் வந்து கலந்து கொண்டனர். இணையத்தின் வழியே நல்ல செயல்பாடுகளை முன்னெடுக்கலாம்; திறமையாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதனை வெற்றிகரமானதாகச் செயல்படுத்திக் காட்டலாம் என்பதற்கு உதாரணமாக இந்த மாநாடு நடைபெற்றது.

ஈராண்டுகளுக்கு முன்னர் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களால் துவக்கப்பட்டு, இணையவழி ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்படும் குழு “ஐயை வாட்சப் குழுமம்”. ஆய்வுத் தளத்தில் இயங்கும் பெண்களை ஒருங்கிணைத்து பெண்களின் அளப்பறியச் சக்தி, ஆக்ககரமான செயல்பாடுகளையும் தரமான ஆய்வுகளையும் முன்னெடுக்க ஒரு அமைப்பு தேவை என சிந்தித்து இக்குழுமத்தைத் தொடக்கியதால் இன்று உலகின் 145 நாடுகளிலிருந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுமமாக இக்குழு செயல்பட்டு வருகின்றது. இக்குழுமத்தின் முதல் ஆய்வு மாநாட்டில் பெண் ஆய்வாளர்களே முற்றும் முழுதுமாக வழங்கிய 23 கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் “தீ இனிது” என்ற பெயருடன் ஆய்வுக்கருத்தரங்கம் நடைபெற்ற நாளில் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வுக்கருத்தரங்கத்தை இந்தியத் தூதரகத்தின் கலை கலாச்சாரப் பிரிவுத் தலைவர் திரு.அய்யனார் அவர்கள் தொடக்கி வைத்தார். தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க.சுபாஷினி வழிநடத்த, பேராசிரியர்.நா.கண்ணன் திறனாய்வு செய்ய, பேராசிரியர் அரங்க மல்லிகா முறைப்படுத்த, திரு.ஒரிசா பாலு நெறிப்படுத்த இந்த ஆய்வுக் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பெண்கள் தொடர்பான, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பெண் ஆளுமைகள் பற்றின, பெண் சாதனைகளை விளக்கும், வரலாற்று, சமூகவியல், மானுடவியல், ஊடகவியல் எனப் பன்முகத்தன்மையில் அமைந்த கட்டுரைகளை ஆய்வாளர்கள் முன் வைத்தனர். அவற்றில் சில கட்டுரைகளைப் பற்றிய சிறிய குறிப்புக்களோடு அவை சொல்லும் செய்திகளைக் காண்போமே!

முனைவர் அரங்க மல்லிகா ”ஔவையும் பௌத்த மீளாய்வும்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை இந்த ஆய்வு மாநாட்டிற்காக வழங்கியிருந்தார். தமிழகத்தின் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகவும், அக்கல்லூரி மகளிர் மையத்தின் இயக்குநராகவும் பொறுப்பில் இருப்பவர் இவர்.

தனது கட்டுரையில் இவர், மக்கள் இயற்கையோடும் சமூகத்தோடும் இணைந்து வாழ்வதற்குரிய அறநெறிகளை வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த உலகச் சிந்தனையாளர்களான சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், காண்ட், ஹெகல் முதலிய அறச்சிந்தனையாளர்களோடு வள்ளுவர் சிந்திக்கத்தக்கவர் என்று குறிப்பிட்டு அவர்களூடே பெண்பாற் புலவரான அவ்வையாரும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியவர் எனக் குறிப்பிடுகின்றார்.

நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே (மூதுரை-8)

பௌத்தத்தின் ஐவகை சீலங்களைக் கடைப்பிடித்து வாழும் நெறியை அவ்வையின் இந்த மேற்குறிப்பிட்ட செய்யுள் நன்கு வெளிப்படுத்துகின்றது. தமிழ்ச்சூழலில் புத்தர் கற்பித்த பௌத்த அறக்கருத்துக்கள் அவ்வையின் எழுத்துக்களிலும் பின்பற்றப்பட்டிருப்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை முன் வைக்கின்றது. எவ்வுயிர்க்கும் துன்பம் தராத நினைவுகளும் சொற்களும், செயல்களும் பஞ்ச சீலங்களாகிய பொய்யாமை, களவாமை, கள்ளுண்ணாமை, காமம் கொள்ளாமை, கொலை செய்யாமை என்ற ஐந்தையும் மனதில் கொண்டு அறத்துடன் வாழ வழி வகுத்த பௌத்தக் கருத்துக்களை அவ்வையார் தன் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை எனப் பிரித்து விளக்குவதை இவ்வாய்வுக் கட்டுரை தெளிவு படுத்துகின்றது. அவ்வை தமிழ் இலக்கிய சங்கப்பாடல்களில் 59 பாடல்களைப் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் வழங்கியுள்ளார்.அவற்றில் 33 புறப்பாடல்களும் 26 அகப்பாடல்கலும் அடங்கும்.

எது அறம்? எது அறமல்ல? எது நல்லது? எது கெட்டது? என்ற வாதமும் நவீனத்திறனாய்வுக்கு அடிப்படை தத்துவங்களாகக் காணப்படுகின்றன. இக்கட்டுரையில் ஆசிரியர், அயோத்திதாசர் அவ்வையை அம்பிகாதேவி எனக் குறிப்பிடுவதை விளக்கி அதற்கான சான்றுகளை முன் வைக்கின்றார். அவ்வையின் இலக்கியக் கருத்தியலை அறம் சார்ந்த சிந்தனைகளோடு விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கான விடுதலை வரலாற்றின் மறு உருவாக்கக் கருத்தியலை அயோத்திதாசர் சிந்தனை வழியாக இந்திய வரலாற்றை மாற்ற, இந்தியத் தொன்மைகளில் ஒன்றான பௌத்தத்தை அவ்வையார் தமிழகமெங்கும் எடுத்துச் சென்று அறப்புரட்சியை விதைத்திருக்கின்றார். என தன் கருத்தை இவ்வாய்வுக் கட்டுரையின் வழி பதிந்திருக்கின்றார் முனைவர் அரங்க மல்லிகா.

கோயம்பத்தூரைச் சேர்ந்த ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் சிந்தியா லிங்கசாமி, “பழந்தமிழ்ப் பெண்களின் அரசியல் மற்றும் நிர்வாகத்திறன்” என்ற தலைப்பில் தமிழ் மண்ணிற்கும் கொரியாவிற்கும் உள்ள தொடர்பினையும் அத்தொடர்பு உருவாகக் காரணமாயிருந்த ஒரு பெண்மணியைப் பற்றியும் தனது ஆய்வுக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். கடல் பயணம் மேற்கொண்டு ஒரு அரசியாக, நாட்டின் தலைவியாக நிர்வாகம் செய்த ஆய்வேளிர் நாட்டு தமிழ்ப்பெண் செம்பவளத்தின் நிர்வாகத் திறனை ஆராயும் வகையில் இக்கட்டுரை அமைந்திருக்கின்றது.

பழந்தமிழ்ப் பெண்களின் வீரத்தை மீட்டெடுத்து, அவர்களின் ஆளுமைத் திறன், விவேகம், துணிச்சல், வீரம், போன்ற குணங்களை இக்கால பெண்கள் கற்றுக் கொண்டு துணிச்சலுடன் செயலாற்ற வேண்டியதை இக்கட்டுரையின் வழி கட்டுரையாசிரியர் முன் வைக்கின்றார்.

தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித்துறையின் முனைவர்பட்ட ஆய்வாளர் வே.ரேகா, தொட்டி நாயக்கர் வாழ்க்கை முறை என்ற கட்டுரையை வழங்கினார். தனது கட்டுரையில் இவர் தொட்டி நாயக்கர்கள் எனப்படும் சேலம் அருகே சிற்றூரில் வாழும் ஒரு சமூகத்தில், பெண்களின் நிலையைப் பற்றி விவரித்து இவ்வாய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.

இச்சமூக மகளிர் இன்றும் ரவிக்கை அணிவதில்லை. பெண்கள் ரவிக்கை அணிவது ஒரு தெய்வக்குற்றம் என்ற மூட நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களாக இவர்கள் இன்றும் இருப்பதை நேரடி களப்பணி வழியாக இவர் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஏனைய சமூகத்தைவர்களிடையே உள்ளது போலவே பெண்களுக்கான சில உரிமைகள் தடை செய்யப்பட்டிருப்பதை இவரது ஆய்வுக் கட்டுரை வெளிச்சப்படுத்துவதாக உள்ளது. அவற்றுள் சில.
பெண்கள் சைக்கிளில் செல்லும் வழக்கம் இல்லை.
பெண் பூப்பெய்தியதும் அவளுக்கென்று தனி வீடு வைத்து அங்கு அவள் தனிமைப்படுத்தப்படுகின்றாள். மாதவிடாய் முடிந்த பின்னரே வீட்டிற்குள் வர அப்பெண் அனுமதிக்கப்படுகின்றாள்.
பூப்பெய்திய பெண் ரவிக்கை அணியத்தடை உள்ளது. இது தெய்வக் குற்றமாகின்றது.
பெண் தலையைப் பின்னி சடை போட்டுக் கொள்ளக்கூடாது. கொண்டை தான் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிற ஆடவர்கள் வீட்டிற்கு வந்தால் பெண்கள் அப்போது வீட்டினுள் நுழையக் கூடாது. அவர்கள் சென்ற பின்னரே வீட்டிற்குள் வர வேண்டும்.
பெண்கள் ரவிக்கை போடாமல் இருப்பதால் பல பொது இடங்களுக்குச் செல்லத் தயங்குகின்றனர். சேலையை சுற்றிக் கொண்டு கூனிக் குறுகி அமர்ந்திருக்கின்றனர்.

இச்சமூகத்தில் உள்ள இவ்வகை மூட நம்பிக்கைகளினால் பெண்கள் கல்வி அறிவு இன்றியும் வெளி உலக அனுபவம் இன்றியும் முன்னேற்றம் காண முடியாது தவிப்பதை கட்டுரையாசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கியிருக்கின்றார்.

தமிழகத்தின் பாத்திமா கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளரான சே.சலோமி இராஜரீகம் “ஜானகி ஆதிநாகப்பனின் ஆளுமைத்திறன்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வழங்கியிருந்தார். பத்மஸ்ரீ ஜானகி அவர்கள் 1925ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் தேதி கோலாலம்பூரில் பிறந்தவர். இந்திய சுதந்திர விடுதலைக்கான போராட்டம் தலைதூக்கியிருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் படையில் தன்னை இணைத்துக் கொண்டு அப்படையின் துணைத்தளபதியாகப் பொறுப்பேற்றுக் களமிறங்கி போராடிய பெண்மணியாவார். பர்மா இந்தியா எல்லையில் நிகழ்ந்த போரில் இவர் களத்தில் இருந்து செயலாற்றினார்.

இந்தியாவிற்கு வெளியே பத்மபூஷன் விருதுபெற்ற முதல் பெண்மணி இவர் என்ற சிறப்பும் இவருக்குண்டு. 1946ம் ஆண்டு மலேசிய இந்தியர் காங்கிரசை அதன் முதல் தலைவர் ஜான் திவி அவர்கள் தொடங்கிய போது அவருடன் இணைந்து செயலாற்றினார். மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகி மலேசிய இந்தியர் காங்கிரசின் மகளிர் பகுதி சார்பில் மேலவை உறுப்பினராகவும் இவர் சேவையாற்றினார் என்பதை ஆய்வாளர் தமது கட்டுரையில் குறிப்பிடுகின்றார். தமது கணவர் டான்ஸ்ரீ ஆதிநாகப்பனுடன் இணைந்து தமது இறுதி மூச்சு உள்ளவரை இவர் பொதுத்தொண்டாற்றினார்.

தன் இளம் வயதில் தேசிய இராணுவத்தில் சேர்ந்து ஜான்சிராணி படையில் துணைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றவர்; மன உறுதியும் மன வலிமையும் நாட்டுப்பற்றும் கொண்ட பெண்மணியாக உதாரண மகளிராகத் திகழ்ந்தார் என்பதைக் கட்டுரை ஆசிரியர் தமது கட்டுரையில் சிறப்பாக வழங்கியுள்ளார்.

இப்படி வெவ்வேறு கோணங்களில் பெண்கள் பற்றின ஆய்வுத் தகவல்களை முன் வைக்கும் வகையில் உலக ஐயை மாநாட்டில் கட்டுரைகள் படைக்கப்பட்டன. பெண் என்பவளது உலகம் ஆண் வரையறுக்கும் அல்லது சமூகம் கட்டமைக்கும் எல்லைகளுக்குள் முடங்கி விடுவதல்ல; மாறாக பெண் தன் ஆற்றலை வெளிப்படுத்தி திறமையுடன் செயல்பட்டால் உலகை ஆளலாம் என்ற ஊக்க மந்திரத்தை வழங்கிய நிகழ்வாக இந்த உலக ஐயை மாநாடு நடைபெற்று முடிந்தது. இந்த அமைப்பின் அடுத்த மாநாடு ஐரோப்பாவில் நடைபெறும் என்ற நற்செய்தியும் இந்த மாநாட்டில் வழங்கப்பட்டது. இந்த அமைப்பில் இணைந்து மேலும் தம் திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மகளிர், ஐயை மலர்விழி பாஸ்கரன் அவர்களை +60166236471 என்ற வாட்சப் எண் வழி தொடர்பு கொண்டு தம்மை இணைத்துக் கொள்ளலாம்.