Thursday, August 24, 2017

68. பெர்லிஸ் மாநிலக் கோயில்கள்


கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று எண்ணம் கொண்டு செல்லும் இடங்களிலெல்லாம் கோயில்களை அமைத்து கலாச்சார வளம் சேர்ப்பவர்கள் தாம் நம் தமிழ்மக்கள். மலேசியாவை எடுத்துக் கொண்டால் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற கிள்ளான், கோலாலம்பூர், பினாங்கு, பேராக் மாநிலம், ஜொகூர், கெடா ஆகிய மாநிலங்களில் ஏராளமான இந்து சமயக் கோயில்கள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியும். ஆனால் மலேசியாவிலேயே மிகக் குறைவாக தமிழர்கள் வாழும் சிறிய மாநிலமான பெர்லிஸிலும் ஆலயங்கள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளும் போது மனம் பரவசமடைகின்றது இல்லையா?

பெர்லிஸ் மாநிலத்தில் 4 கோயில்கள் இருக்கின்றன. அவை,
- கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயம்
- கங்காரிலேயே உள்ள ஸ்ரீ வீர மகா காளியம்மன் ஆலயம்
- ஆராவ் நகரிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்
- பாடாங் பெஸார் நகரிலுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்
ஆகிய நான்குமாகும்.

ஆராவ் பெர்லிஸ் மாநிலத்தின் அரச நகரம். இங்கு தான் பெர்லிஸ் சுல்தானின் அரண்மனையும் ஏனைய அரசாங்க அலுவலகங்களும் உள்ளன. இங்குச் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குள் தான் புதிதாக ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.


பாடாங் பெஸார் நகர் தாய்லாந்தின் எல்லையில் அமைந்த நகரம் . இங்கு மீனாட்சியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை என்பதனால் விரிவாக இப்பதிவில் குறிப்பிட இயலவில்லை.

அடுத்ததாக, கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயத்தைச் சொல்லலாம் . இந்த ஆலயத்தின் பக்கத்திலேயே தான் ஸ்ரீ வீர மகா காளியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. ஆக இரண்டையுமே பக்கத்திலேயே பார்க்கலாம்.


கங்கார் ஒருமுக்கிய நகரம் என்ற போதிலும் பசுமை எழில் கொஞ்சமும் குறையாத ஒரு நகரம் என்பதை இங்கு சென்றிருக்கும் அனைவரும் அறிந்திருப்போம். இந்த ஆறுமுக சாமி கோயில் பசுமையான சிறு குன்று போன்ற ஒரு பகுதியில் தான் அமைந்துள்ளது. கங்கார் நகரின் முக்கிய சாலையைக் கடந்து உள்ளே சென்றால் சுலபமாக இக்கோயிலை நாம் கண்டுபிடித்து விடலாம்.


கங்காருக்கு நான் சென்ற போது மதியமாகியிருந்தது. ஆக ஆலயம் பூட்டப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனாலும் ஆலயத்தின் வாசல் திறந்திருந்தது. அத்துடன் வாசலில் வந்து நின்ற என்னைப் பார்த்த ஆலய பொறுப்பாளர் ஒருவர் ஆலயத்தின் அலுவலகத்துக்கும் அழைத்துச் சென்று தேநீர் பானமும் பழங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தார். இதுதானே மலேசியர்களுக்கே உள்ள தனித்துவமான விருந்துபசாரப் பண்பு!

அவருடன் மேலும் சிலரும் என்னுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் கோயில் பற்றிய தகவல் அடங்கிய சிறு கையேடு, மாசி மகம் திருவிழா அழைப்பிதழ் ஆகியவற்றோடு ஒரு தேவார பாடல்கள் அடங்கிய நூல் ஒன்றையும் எனக்கு வழங்கினர்.

பெர்லிஸ் நகரில் அமைந்திருக்கும் ஒரே முருகன் கோயில் இது தான். ஆறு முகங்களுடன் கூடிய ஆறுமுகசாமியாக இங்கே இறைவன் கருவறையில் வள்ளி தேவயானையுடன் அமைந்திருக்கின்றார். மூலமூர்த்தியின் சிலை கருங்கல்லால் அமைக்கப்பட்ட சிலையாகும்.

பெர்லிஸ் மாநிலத்தில் இக்கோயில் அமைக்கும் எண்ணம் முதலில் 1965ம் ஆண்டு வாக்கில் தான் எழுந்துள்ளது. இப்பணியில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில், மறைந்த திரு.எம்.கே.கோவிந்தசாமி அவர்கள், மறைந்த திரு.எஸ்.சதாசிவம் அவர்கள், மறைந்த திரு.வி.கோவிந்த சாமி நாயுடு அவர்கள், மறைந்த திரு.கே.ஜி.ராவ் அவர்கள் மற்றும் மறைந்த திரு. அழகுமலை ஆகியோர் மிக முக்கியமானவர்கள். இக்கோயில் அமைப்பதற்கான முதல் சந்திப்பினை இவர்கள் ஆராவ் நகரிலிருக்கும் மறைந்த திரு. எஸ் சதாசிவம் அவர்கள் இல்லத்தில் 3.6.1965 அன்று நடத்தினர். கங்கார் நகரில் ஒரு இந்து ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இச்சந்திப்பின் வழி முதன் முதலாக அக்கலந்துரையாடலின் போது உருவாக்கம் கண்டது.


இதனை அடுத்து 2.7.1965 அன்று பெர்லிஸ் மாநிலத்திலுள்ள இந்துக்கள் பெர்லிஸ் இந்தியர் சங்கத்தில் ஒன்று கூடி இந்தக் கருத்து பற்றி விரிவாக கலந்தாலோசித்தனர். இக்கூட்டத்தினை மறைந்த டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கின்றார். இதற்கு அடுத்த சில நாட்களிலேயே டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் பினாங்கு மாநிலத்திற்குத் தொழில் நிமித்தம் மாற்றலாகிச் சென்றதால் மறைந்த திரு.வி.கே.கோவிந்தசாமி நாயுடு அவர்கள் கோயில் கட்டுமான குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு கோயில் கட்டும் இப்பணியை ஆரம்பித்திருக்கின்றனர். ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் என பதிவு செய்யப்பட்டு கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்தக் கோயில் எப்படி படிப்படியாக மாநில அரசின் உதவியுடனும் பொது மக்களின் பெரும் உழைப்பினாலும் வளர்ந்து இன்று பெர்லிஸ் மாநிலத்தில் மிக முக்கிய இந்து ஆலயமாகத் திகழ்கின்றது என்பது போன்ற தகவல்களை கோயில் கையேட்டு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் எனப் பதிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட போது கோயிலை அமைப்பதற்காகத் திரு.எஸ்.பி.எல்.பி.பழனியப்பா செட்டியார் அவர்கள் தனது நிலம் ஒன்றினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்கள். அந்த இடம் கோயில் அமைப்பதற்கு ஆகம முறைப்படி சரியான இடமாக அமையாமல் போனதால் வேறு வகையில் உதவும் பொருட்டு இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள மூலமூர்த்தி ஸ்ரீ ஆறுமுக சுவாமி, வள்ளி, தேவயானை, மயில் வாகனம், பலி பீடம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கான அனைத்துச் செலவுகளையும் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். அத்துடன் தனது மூதாதையர் பர்மாவில் வழிபாட்டுக்கு வைத்திருந்த தேக்கு மரத்தில் சட்டமிடப்பட்ட தண்டாயுதபாணி படம் ஒன்றினையும் இவ்வாலயத்தில் வைப்பதற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

தற்போது ஆலயம் எழுப்பப்பட்டுள்ள இடம் பெர்லிஸ் மாநில அரசுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருந்ததால் இந்த இடத்தை பெறுவதற்காக மாநிலத்தின் முதலமைச்சரை இந்த ஆலயப் பணிக் குழுவினர் அணுகினர். மத்திய அரசிடமிருந்து $25,000.00 (மலேசிய வெள்ளி) நன்கொடையும் இக்கோயிலை அமைப்பதற்காகக் கிடைத்தது. இதற்கு மாநில முதலமைச்சர் டத்தோ ஷேக் அஹமத் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றார். இடம் கிடைத்ததும் சேற்றுப் பகுதியாக இருந்த அவ்விடத்தை மணலால் கொட்டி நிரப்பி அதனைச் சரியான நிலைக்கு மாற்றினர் கங்காரிலும் ஆராவ் பகுதியிலும் வாழ்ந்த இந்து மக்கள்.

இக்கோயிலின் அடிக்கல் நாட்டு விழா 11.7.1968ம் ஆண்டு துன் வீ.தீ.சம்பந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இக்கோயில் கட்டுமாணப்பணிகள் தொடங்கப்பட்டதும் பொருளாதாரப் பிரச்சனைகள் எழுந்த போது மாநில முதலமைச்சர் அவர்கள் மேலும் $15,000 (மலேசிய வெள்ளி) மாநில பொறுப்பிலிருந்து ஏற்பாடு செய்து உதவியிருக்கின்றார். அத்துடன் நாடு முழுவதுமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளிலிருந்து மேலும் கிட்டிய தொகையில் கோயிலின் முழு கட்டுமானப்பணியும் நிறைவு பெற்றிருக்கின்றது.

கட்டுமாணப்பணிகள் முடிவுற்று 14.6.1970 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆறுமுகசாமி ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இவ்வாலயத்தை அதிகாரப்பூர்வமாக பெர்லிஸ் மாநில முதலமைச்சர் டத்தோ ஷேக் அகமது அவர்கள் காலை மணி 11.15க்கு திறந்து வைத்துச் சிறப்பு செய்திருக்கின்றார்.

28.1.1972 அன்று இவ்வாலயத்தின் முதல் பொதுக் கூட்டம் நடைபெற்று அதில் மறைந்த திரு.வீ.கோவிந்தசாமி நாயுடு அவர்கள் முதல் ஆலயத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இவர் தலைமையிலான குழு முக்கியப் பணியாக ஆலயத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பும் திட்டத்தை திறம்பட செய்து முடித்துள்ளனர். அத்துடன் ஆலயத்தின் வைகாசி விசாகத் தேர் திருவிழாவிற்காக ஸ்ரீ ஆறுமுகசாமியின் பஞ்சலோக சிலை ஒன்றினை வாங்க முடிவு செய்து அதனை இந்தியாவிலிருந்து தருவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியும் அமைக்கப்பட்டது.

இக்கோயிலுக்குத் தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளும் வந்து சிறப்பித்திருக்கின்றார் என்பதுவும் ஒரு பெருமை தரும் செய்தி. 15.12.1981 அன்று முதன் முதலில் தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு இவ்வாலயத்தில் நிகழ்ந்துள்ளது. 1983ம் ஆண்டு திரு.வி. கோவிந்த சாமியின் மறைவுக்குப் பின்னர் மறைந்த திரு.அழகுமலை அவர்கள் ஆலய தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதற்குப் பின்னர் 1987ம் ஆண்டு நடைபெற்ற ஆலயப் பொதுக்கூட்டத்தில் திரு.ராமையா நரசிம்மலு நாயுடு அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இவ்வாலயத்திற்கு மீண்டும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1982ம் ஆண்டு வருகை புரிந்து ஆன்மீகச் சொற்பொழிவாற்றியிருக்கின்றார்.

2002ம் ஆண்டு இக்கோயிலின் பெயர் ஸ்ரீ ஆறுமுகசாமி தேவஸ்தானம் எனப் பெயர் மாற்றம் கண்டது. அதே ஆண்டு இக்கோயில் முழுதும் சீரமைக்கப்பட்டு 11.9.2002ம் அன்று மூன்றாவது கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. இக்கோயில் சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்பட்ட $200,000.00 (மலேசிய வெள்ளி) பொது மக்கள் வழங்கிய நன்கொடையின் வழி சேகரிக்கப்பட்டது.

இக்கோயிலின் தேர் இலங்கையிலிருந்து (கொழும்பு) ஆகம முறைப்படி தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது. தேக்கு, மஹொகானி, சந்தன மரத்தினால் உருவாக்கப்பட்ட தேர் இது. இலங்கையிலிருந்து தயாரித்து கொண்டுவரப்பட்ட தேரின் தனித்தனி பாகங்களைத் திரு.ஜெயகாந்தன் என்பவர் ஆலயத்திலேயே இருந்து அவற்றை பொறுத்தி முழுமைப்படுத்தி முடித்திருக்கின்றார். 31.5.2004 அன்று ஆலயத்தில் ஒரு பொன்னாலான வேல் மட்டும் வைத்து இத்தேரினை ஆலயத்தைச் சுற்றி வலம் வரச் செய்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 2.6.2004 அன்று ஆலயத்தில் மிகச் சிறப்பான முறையில் ஷண்முக அர்ச்சனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் திருமதி.சுசீலா ராமையா என்பவர் இவ்வாலயத்தில் தற்போதுள்ள 250 கிலோ எடையுள்ள பஞ்சலோக ஸ்ரீ ஆறுமுகசாமி, வள்ளி தெய்வானை சிலைகளை நன்கொடையாக வழங்கியிருக்கின்றார். இச்சிலைகள் இலங்கையில் தயாரிக்கப்பட்டவை. இந்தச் சிலைகளே தற்சமயம் வைகாசி விசாகத் தேர் திருவிழாவில் ஊர்வலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உற்சவ மூர்த்தி சிலைகளை வைத்து முதன் முதலாக 2.6.2004 அன்று முதல் முறையாக இத்தேர் கங்கார் நகரை வலம் வந்தது. பினாங்கு மாநிலத்திலிருந்து ஏற்பாடு செய்து கொண்டுவரப்பட்ட இரண்டு காளைகள் இந்தத் தேரினை இழுத்துச் சென்றன. இத்திருவிழாவும் ஆலய பூஜை வைபவங்களும் ஆலய ஆகம முறைப்படி செய்விக்கப்பட்டிருக்கின்றன.

வைகாசி விசாக விழாவோடு, கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் இவ்வாலயத்தில் சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன.

மலேசியாவைப் பொறுத்தவரை பொதுவாகவே ஆலயத்திருப்பணிகளுக்கு ஆதரவு தர பொது மக்கள் என்றும் தயங்குவதில்லை என்பதை நாம் அறிவோம். ஆலயங்களில் நடைபெறும் பல திருவிழாக்கள், கலாச்சாரப் போட்டிகள் போன்றவை மக்கள் தரும் நன்கொடைகள் சமூக ஆர்வலர்களின் உழைப்பு ஆகியவற்றால் நிகழ்த்தப்படுபவை தான். பெரும்பாலான ஆலயங்களில் ஆலயப் பொதுக் குழு, இளைஞர் குழு, மகளிர் குழு என தனித்தனி பிரிவுகளை அருகாமையில் உள்ள மக்களாகவே சேர்ந்து உருவாக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அதில் குறிப்பாக ஆலயத் துப்புரவுப் பணி, திருவிழா ஏற்பாடுகள், கலாச்சார போட்டிகள், பொங்கல் திருவிழா ஏற்பாடுகள், ஆலய பஜனைக் குழுவினர் என அமைந்திருக்கும். பலர் தங்கள் வார இறுதி நாட்களையும் வெள்ளிக் கிழமையையும் இவ்வகை பணிகளுக்காக ஒதுக்குவதும் உண்டு. முன்னர் மலேசியாவில் இருந்த காலகட்டத்தில் எனது அனுபவத்திலேயே இவ்வாறு பல நடவடிக்கைகளில் நானும் ஈடுபட்டிருக்கின்றேன். அவை அனைத்தும் மனதை விட்டு அகலாத இனிய நிகழ்வுகளாக இருக்கின்றன.

பெர்லிஸ் மலாய்க்காரர்கள் வாழும் மாநிலமாயிற்றே என நினைக்கும் நம்மில் பலருக்கு இச்சிறிய மாநிலத்திலேயே இத்தகைய சிறப்பு மிக்க ஆலயங்களும் உள்ளன. அவற்றைப் பேணிக்காக்கும் தமிழர்கள் இங்கே வாழ்கின்றனர் என்ற செய்து மகிழ்ச்சி தரும் செய்தி அல்லவா?






Tuesday, August 22, 2017

67. மந்திரவாதிகளும் சாமியாடிகளும்



மந்திரவாதிகள், தந்திரவாதிகள், குறி சொல்வோர்கள், சாமியாடிகள் என்ற பெயர்களைக் கேட்ட மாத்திரத்தில் நம்மில் பெரும்பாலோருக்கு இவர்கள் அதீத சக்திகளோடு தொடர்புடையோர் என்ற சிந்தனை எழுவதுண்டு.மலேசிய தமிழ்  சமூகத்துச் சூழலில் இத்தகைய குறி சொல்வோரும் சாமியாடிகளும் மக்களின் வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.   குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவென்றால் கோயிலுக்கு எடுத்துச் சென்று அங்கே மந்திரித்துத் தரும் நீரை குழந்தைக்குத் தருவதும், ஏதாவது மனச் சங்கடங்களென்றால் மந்திரவாதியையோ சாமியாடியையோ சந்தித்து அருள் வாக்கு கேட்பதும் தமிழ்ச் சமூகத்துச் சூழலில் வழி வழியாக வருகின்ற வாழ்க்கை முறைகளில் கலந்து காணப்படுவது தான்.

என் இளமைக் காலத்து மலேசிய பின்னனியில், அங்கு பிறந்து வளர்ந்த காலங்களிலேயே தமிழ்ச் சமூகம் மட்டுமல்லாது, மலாய் சமூகமும் மந்திரம் தந்திரம் என்ற வகையில் ஆர்வம் காட்டும் நிலையை அனுபவத்தில் பார்த்ததுண்டு.  பயத்தின் அடிப்படையில் தமக்குத் தேவைப்படும் சில விஷயங்களை வேற்றுலக சக்திகளின் துணை கொண்டு அறிந்து கொள்ளவும் அச்சக்திகள் தமக்கு உதவும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் சில குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகவும் மக்கள் இவ்வகை மந்திரவாதிகளை நோக்கிச் செல்வது வழக்கமாக உள்ளது.

இந்திய கிராமப்புரங்களில், கிராம தெய்வ வழிபாட்டில் குறி சொல்பவர் வருவது போல மலேசியாவின் பல மாகாணங்களில் அதிலும் தமிழர்கள் அதிகமாக குடியேறி வாழ்கின்ற பகுதிகளில் இவ்வகைச் சாமியார்கள் ஓரிருவர் இருப்பது வழக்கம். சாமியாடிகளை மாதத்திற்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை மாலையில் அல்லது நள்ளிரவில்  பார்க்கச் சென்று அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்தையும் பரிசுப் பொருட்களையும் கொடுத்து வருபவர்கள் பலர் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். இத்தகைய வழக்கங்கள் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதால் தான் இத்தகைய சாமியாடிகளும் குறி சொல்வோரும் இன்றைய காலகட்டத்திலும் மிக அதிகமாக மலேசியாவில் இருக்கின்றனர்.

சாமியாடிகள் என அழைக்கப்படும் இவ்வகைச் சாமியார்கள் பொதுவாக முனீஸ்வரன், காளியம்மன், வீரபத்திரன், பேச்சியம்மன் போன்ற கிராம தெய்வங்களின் கோயிலைக் கட்டி அக்கோயிலின்  அருகாமையிலேயே ஒரு சிறு அலுவலக அறை போல ஒன்றினை உருவாக்கி வைத்திருப்பார்கள். இந்த அலுவலக அறையில் வாரத்திற்கு ஒரு நாளோ இரண்டு நாட்களோ இவர்கள் பொது மக்களுக்குக் குறி சொல்லும் நாட்களாக அறிவித்திருப்பார்கள். குறிப்பாக செவ்வாய் வெள்ளிக் கிழமைகளாக இவை இருக்கும்.

குறி பார்த்து தனது தேவைகளை அறிந்து கொள்ளவோ செயல்படுத்திக் கொள்ளவோ விரும்புபவர்கள் முன் கூட்டியே தங்கள் வருகையைப் பற்றி இந்தச் சாமியாடி பூசாரிக்குத் தெரிவித்து விட வேண்டும். இது தற்காலம் நாம் உளவியல் மருத்துவரைச் சென்று பார்க்க அப்போய்ண்மெண்ட் ஏற்பாடு செய்து விட்டுச் செல்வது போல. சாமியாடியைப் பார்க்க வர விரும்புபவர்கள் என்னென்ன பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது ஒரு சுவாரசியமான விஷயம். பட்டியல் அங்குள்ள கோயிலின் தெய்வ வடிவத்திற்கு ஏற்ற வகையில் மாறுபடும்.

உதாரணமாக முனியாண்டி சாமி கோயில் பூசாரி சாமியாடியாக இருப்பார் என்றால் அவருக்குக் காணிக்கையாகக் கொண்டு செல்ல வாழைப்பழங்கள், எலுமிச்சைப்பழங்கள், வேஷ்டித்துண்டு, கள், மதுபாணம்,சுருட்டு,  வெற்றிலை பாக்கு என ஒரு பட்டியல் இருக்கும். மாரியம்மன் அல்லது காளியம்மன் கோயிலாக இருந்தால் காணிக்கையாகப் பூ பழங்களுடன், சேலை, பூமாலை என  பெண் தெய்வத்திற்கு ஏற்ற பொருளும் சூடம், சாம்பிராணி, வெற்றிலை போன்ற பொருட்களையும் கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.  இதற்கு மேல் கட்டணமாக பணமும் வைக்க வேண்டும்.

பொதுவாகவே சாமியாடி எனப்படுபவர் குறி சொல்லவருவதற்கு முன்னரே ஒரு உதவியாளர் வழியாக வந்திருப்பவரின் நிலமையை நன்கு கேட்டறிந்து கொள்வார். சில வேளைகளில் நேரடியாகவே தன் பக்தர்களின் குறையைக் கேட்க ஆரம்பித்து விடுவார். பக்தர்களும் தங்கள் மனக்குறையைச் சொல்லி தங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் இருப்பார்கள்.  சாமியாடிகளாக இருப்போருக்கு முதலில் தன்னிடம் அருள்வாக்கு பெற வந்திருப்பவர் எந்த வகை மனக்கஷ்டத்தைக் கொண்டிருக்கின்றார் என அறிய வேண்டியது மிக அவசியம். ஆரம்பத்தில் அவர் சேகரிக்கும் தகவல்களைக் கொண்டுதான் அவர் வந்திருப்பவருக்கு தனது தீர்வுகளைச் சொல்ல முடியும்.

சாமியாடி குறி சொல்ல தயாராகுமுன் அவர் அருள் நிலைக்குச் செல்ல உதவும் வகையில் இசைக் கருவிகள் இசைக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வில் தவறாமல் உடுக்கை ஒலி எழுப்புதல் இடம்பெறும். சாமியாடி அருள் நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை உணர்த்தும் வகையில் அவரது உடலின் அங்க அசைவுகள் இருக்கும். அருள் நிலைக்கு வந்த பின்னர் அருள் வாக்கு கேட்க வருபவரிடம் அவரது தேவையைக் கடவுளிடம் தாம் கூறுவதாக சாமியாடி பாவனை செய்வார். பின்னர் கடவுள் தம் உடலில் ஏறி விட்டது போன்று ஒரு பாவனையைச் செய்வார். உடலைச் சிலிர்த்துக் கொள்வார். பேச்சு மிக ஆக்ரோஷமாகவும் உரத்த ஒலியுடனும் இருக்கும்.  வந்திருப்பவருக்கு என்ன பதிலைச் சொன்னால் அவரிடம் தன் மேல் ந்மபிக்கையை மேலும் மேலும் உயர்த்தலாம் என்ற வித்தையை சாமியாடி மிக நன்றாகவே அறிந்து வைத்திருப்பார். அந்தத் திறமையினைக் கொண்டு, சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லி, அதனை சாமியே நேராக தன் உடலில் வந்து அமர்ந்து கொண்டு கூறியதாகச் சொல்லிவிடுவார்.  அதோடு அந்தத் தீர்வுக்குப் பரிகாரமாக  அவர் செய்ய வேண்டிய பரிகாரங்களைப் பற்றிய விளக்கங்களையும் தந்து முடிப்பார். 


இந்த முழு நிகழ்வினையும் உற்று நோக்கினால் இது  ஒரு வகையில் தற்கால  சைக்கோ தெராபி போன்ற ஒரு விஷயம்தான் என்பது புலப்படும். மனிதர்கள் தம் மனதில் உள்ள வேதனையான, ரகசியமான சில செய்திகளைக் கூறி ஆறுதல் தேட நம்பிக்கையான நபர்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் பல நேரங்களில் நம் மனக்குறைகளைக் காது கொடுத்துக் கேட்டு ஆறுதல் சொல்ல தக்க உறவினர்களோ நண்பர்களோ நமக்குக் கிடைப்பதில்லை. அவ்வாறான சூழலில் பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுக்கும் வழிதான் ஜோதிடம், குறி சொல்லுதல், சாமி பார்த்தல் என்பவை. 
தங்கள் மனக்குறைகளைக்  கடவுளிடம்  பறிமாறிக் கொள்ளும் வகையான  நம்பிக்கையில் சாமியாடியை இறைவனாகப் பாவித்து வணங்கி தங்கள் குறைகள் தீரும் என இத்தகையோர் நினைக்கின்றனர்.

இதே போல ஆனால் சற்று மாற்றங்களுடன் அமைந்ததுதான் மலாய் இன மக்களின் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்து காணப்படும் போமோ (Bomoh)  எனப்படும் மந்திரவாதிகள். இந்த போமோக்களை ஆங்கிலத்தில்  medicine man  எனக் கூருவது பொருந்தும்.


இந்த மலாய் போமோக்களில் வெவ்வேறு விதமான போமோக்கள் இருக்கின்றனர். சிலர் தங்கள் தொழிலை மிகக் கவனமாக கையாள்வதுடன் பொறுப்பு மிகுந்தவர்களாகவும் தம்மை நாடி வருபவர்களின் குறை தீர்க்கும் முயற்சிகளை மட்டுமே செய்பவர்களாகவும் இருப்பர். ஒரு சிலரோ மந்திர தந்திர சக்திகளை தீமைகளுக்குத் தயாரித்து உருவாக்கி பிறருக்கு  கெடுதல் ஏற்படுத்த இவர்களை  நாடி வருவோருக்கு உதவுபவர்களாக தீய சிந்தனைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். மலேசிய நாடு முழுமைக்கும் இத்தகையோர் பலரை ஆங்காங்கே காணலாம். அதிலும் குறிப்பாக வளர்ச்சி குன்றிய மாநிலங்களான கிளந்தான் திரங்கானு, பஹாங் ஆகிய மாநிலங்களில் கிராமத்துக் கிராமம் போமோக்கள் இருக்கின்றனர். இன்றைய காலச் சூழலில் கூட பலர் போமோக்களுக்கு    முக்கியத்துவம் கொடுத்து மரியாதை செலுத்துவதையும் அவர்கள் மேல் அச்சத்துடன் இருப்பதையும் காணமுடிகிறது .  இத்தகையோர்  கிராமங்களில் சமூகத்தின் பார்வையில் முக்கிய அங்கத்தினர் என்ற கௌரவத்துடன் வலம் வருபவதையும் அறிய முடிகின்றது.


போமோக்களாகும் தகுதி அனைவருக்கும் கிடையாது எனவும் அத்தகைய சக்தி படைத்தோர் மட்டுமே போமோ தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கை மலாய் மக்களிடையே உண்டு. இது கற்று பயிற்சியின் மூலம் பெறப்படும் ஒரு சக்தி இல்லையென்றும் கடவுளே சிறப்பான ஒரு சக்தியை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே அளித்திருக்கின்றார் என்றும் அவர்களே போமோக்களாக அமைய முடியும் என்பது இத்தகையோர் நம்பிக்கை. 


இந்த போமோக்களும் தமிழக பாரம்பரிய மந்திரவாதிகளைப் போல ஏதாவது ஒரு தாள இசைக்கருவியைப் பயன்படுத்தி ஒளி எழுப்பி ட்ரான்ஸ் எனப்படும் அருள் நிலைக்குச் செல்வதையே முதல் படியாக வைத்திருக்கின்றனர். சாம்பிராணிப் புகை,  வாசணைத்திரவியங்கள் என போமோக்கள் பொது மக்களுக்குக் காட்சியளிக்கும் அறை வித்தியாசமான, அதே வேளை அச்சமூட்டும் தன்மையுடன் அமைந்திருக்கும். இந்த வாசனைத்திரவியங்களின் சுகந்தமும் தாளக்கருவியின் இசையும் போமோவை ட்ரான்ஸ் நிலைக்கு இட்டுச் செல்லும். போமோக்களைப் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் உடல் நலக்குறைவுக்குத் தீர்வு காணவும், போமோக்கள் தருகின்ற மருந்துகளை வாங்கி தங்கள் பிணிகளைத் தீர்த்துக் கொள்ளவும் வருவதே சகஜம். சில போமோக்கள் குறிப்பிட்ட சில உடல் உபாதைகளை மட்டுமே போக்கும் திறன் படைத்தவர்கள் எனப் புகழ் பெற்றிருப்பர். ஒரு சிலரோ பிணிகளைத் தீர்ப்பதோடு துயரத்திற்கு வடிகால் தேடும் முயற்சிகளுக்கு உதவுபவர்களாகவும் அமைந்திருக்கின்றனர். 


தற்கால விஞ்ஞான மருத்துவ முன்னேற்றத்தில் நோய்களுக்குப் பல தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இவ்வகை சாமியாடிகளையும், போமோக்களையும் மட்டுமே நம்பியிருக்கும் மக்களும் இருக்கின்றனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையே. நம்பிக்கையே வாழ்க்கைக்கு அடிப்படை. இவ்வகை நிகழ்வுகளில் மக்கள் எதனை நம்புகின்றார்களோ அதிலேயே அவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வினைத் தேடி மன அமைதி அடைந்து விடுகின்றனர். 

 நேஷனல் ஜியோகிராபி இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் மங்கோலியாவில் இன்னமும் வழக்கத்தில் உள்ள ஷமான் வழக்கங்களைப் பற்றி மிக விரிவாக ஒரு கட்டுரை வந்திருந்தது. தமிழக, மலாய் இனத்து மக்களின் சமூகத்தில் கலந்து ஒன்றாகிவிட்ட சாமியாடிகள் போன்றோர் மங்கோலிய இன மக்களின் வாழ்க்கையிலும் இருக்கின்றனர்.  இங்கு மட்டுமல்ல. உலகின் பல கலாச்சாரங்களிலும் பண்பாட்டிலும் அதிலும் குறிப்பாக நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு அம்சங்களிலும் தென்படும் ஒரு கூறாக இது அமைகின்றது.  சாமியாடிகளும் மந்திரவாதிகளும் உலகின் அனைத்து இன சமூகத்திலும் அங்கம் வகிக்கும் ஒரு குழுவினர் என்பதை எனது அனுபவத்திலும் வாசிப்பிலும் அவ்வப்போது காண்கின்றேன். மனிதர்களும் அவர்களது தேவைகளும் உலகின் எந்த மூலையாகட்டும்.. ஆழ ஆழ தேடிச் சென்றால் அடிப்படையில் ஒன்று தான் என்பதை தான் இவை நமக்கு உணர்த்துகின்றன.

சாமியாடுபவர்களும் மந்திரவாதிகளும் சாதாரண மனிதர்கள் தான். இத்தகையோரில் பெரும்பாலோருக்கு இது தான் வருமானம் கொடுக்கின்ற தொழில். ஆக, ஒவ்வொரு முறையும் தன்னிடம் குறி கேட்க வரும் பக்தர்களின் வழி இச்சாமியாடிகள், பெரும்பாலான மனிதர்களைத் தாக்கும் பிரச்சனைகளைப் பற்றிய விரிவான தகவல்களைத் தங்கள் தினசரி அனுபவங்களினால் பெருகின்றனர். அந்த அனுபவங்களைக் கொண்டு தம்மிடம் நல்ல ”பலன்” கேட்க வருவோரிடம் அவர்களுக்குத் தேவையான பதிலை அளிக்கின்றனர். பதில் ஒரு சில  வேளைகளில் சாதகமாகவும் சில வேளைகளில் எதிர்மறையாகவும் அமைவதுண்டு. எதுவாகினும் பரிகாரம் செய்ய வேண்டும் எனச் சொல்லி  பணத்தை பறிப்பதே பெரும்பாலான சாமியாடிகளின் செயலாக அமைந்து விடுகின்றது. இதற்கு மேல் போ குழந்தை வருழ்ம் தருவதற்காக சிறப்பு பூசை செய்கின்றோம் எனச் சொல்லி இளம் பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றிச் செல்லும் சில சாமியாடிகளும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை அவ்வப்போது நமக்குக் கிட்டும் செய்திகள் வழியாகவும் அறிகின்றோம். பொதுமக்களாகிய நாம் தான் எது தமிழர் பாரம்பரிய, எது தமிழர் வழிபாடு, பண்பாடு என தீர சிந்தித்து இவ்வகையான ஏமாற்றிப் பணம் பறிக்கும் கூட்டத்தினரிடம் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். மனிதர்களாகிய நம்மில் பலருக்கு இருக்கின்ர பிரச்சனைகளை நாம் ஒருவருக்கொருவர் பேசி சுமுகமாகத் தீர்ந்துக் கொண்டாலே பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்து விடும்.  ஏமாற்றுபவர்களை விட ஏமாறுபவர்களால் தான் பல பிரச்சனைகளே எழுகின்றன!!

Thursday, August 10, 2017

66. செக் நாட்டில் தமிழ்



ஐரோப்பிய ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்க வகையிலான தமிழ்ப்பணிகளைச் செய்து கொண்டிருக்கும் தமிழறிஞர்கள் சிலர் இருக்கின்றனர். செக் நாட்டின் தலைநகரான அழகிய ப்ராக் நகரில்  அமைந்துள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் தென்கிழக்காசிய, மத்திய கிழக்காசியத்துறையின் தலைவராகவும் அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவரும் எனது இனிய நண்பருமான மறைந்த பேராசிரியர் வாச்சேக் அவர்களும் அந்த வரிசையில் ஒருவராக இடம்பெறுகின்றார்.

பேராசிரியர் முனைவர் வாச்சேக் அவர்கள் 1943ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி பிறந்தார். செக் நாட்டில் கல்வி கற்று பின்னர் தமிழகம் வந்து மதுரையில் தமிழ் கற்றார்.

அவருடைய பெயரை அவ்வப்போது நான் கேள்விப்பட்டிருப்பினும் முதன் முறையாக நான் அவரை நேரில் பார்த்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு 2015ம் ஆண்டு கிட்டியது. 2015ம் ஆண்டில்  பாரீசில் நடைபெற்ற ”ஐரோப்பாவில் தமிழ்” என்ற அனைத்துலக தமிழ் மாநாட்டில் கட்டுரை சமர்ப்பிக்க வந்திருந்த பேராளர்களில் அவரும் ஒருவர். 70 வயதைக் கடந்திருந்தாலும் கூட மிகுந்த ஆர்வத்துடன் எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொண்டும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டும் சுறுசுறுப்புடன் அந்தக் கருத்தரங்க நிகழ்வில் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். என்னை அவருக்கு ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அறிமுகம் செய்து வைத்தபோது, புன்னகை பூத்த முகத்துடன்  இனிய தமிழில் “வணக்கம், நலமாக இருக்கின்றீர்களா..?” என ஐரோப்பிய ஒலிகலந்த தமிழில் அவர் என்னை நோக்கிக் கேட்டது இன்றும் நினைவிலிருந்து அகலவில்லை.

ஒரு வகையில் இவரை பன்மொழி அறிஞர் என்றும் குறிப்பிடலாம். ஏனெனில், செக் மொழி, ஆங்கிலம், ஜெர்மானிய மொழி ஆகியவற்றோடு,  தமிழும், இந்தியும், சமஸ்கிருதமும் பேசக் கற்றவர் இவர். தமிழையும்  சமஸ்கிருத மொழியையும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குக்  கற்றுக் கொடுத்து  தமிழ் அறிந்த சில செக் மாணவர்களையும் இவர்  உருவாக்கியிருக்கின்றார். மாணவர்களின் கற்றல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதனை மனதில் கொண்டு அவர்கள் நேரடி களப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்று திட்டமிட்டு சில முறை மாணவர்களுடன் தமிழகத்திற்குக் களப்பணிகளுக்கும் வந்திருக்கின்றார்.  இடையே பல்கலைக்கழகம் ஏற்படுத்திய  பொருளாதார நிபந்தனைகளால்  பணி காரணமாக மங்கோலிய மொழியையும் கற்றுக்கொண்டு மாணவர்களுக்குத் தாம் அம்மொழியைப் போதிக்க வேண்டிய சூழ்நிலை இவருக்கு உருவானது.   ஆயினும், மங்கோலிய மொழியைக் கற்றுக் கொண்ட இவர், தனது தொடர்ச்சியான ஆராய்ச்சிக்களின் வெளிப்பாடாக, மங்கோலிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு இருக்கின்றது, என்று ஆர்வத்துடன் என்னுடன் பேசுகையில் குறிப்பிட்டதை நான் நினைவு கூறத் தான் வேண்டும்.

பாரீசில் நடைபெற்ற ”ஐரோப்பாவில் தமிழ்” என்ற மாநாட்டில், தமிழ் மக்கள் செய்ய வேண்டிய ஆய்வுகளில் மங்கோலிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வும் மிகத் தேவை என்ற கருத்தை தனது மாநாட்டு கட்டுரையில் முன் வைத்து அவர் பேசினார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்கும் உள்ள மொழிக்கூறு ஒற்றுமை பற்றி தமிழ் மரபு அறக்கட்டளை சில முயற்சிகளை முன்னெடுத்து செயல்படுத்தி வருகின்றோம். கொரிய மொழி போல, மங்கோலிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள  மொழிக்கூறு ஒற்றுமைகளை ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை ஒதுக்கி விட முடியாது.

தமிழக பல்கலைக்கழகங்களில் இயங்கும் தமிழ்த்துறையும் தமிழ் நாட்டில் இயங்கும்  உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இந்தக் கருத்தை சீரிய முறையில் நோக்க வேண்டும் என இந்தப் பதிவின் வழி தமிழ் மரபு அரக்கட்டளை முன்வைக்க விரும்புகின்றது. ஏனெனில், தமிழ் மொழியுடன் மங்கோலிய மொழிக்கு இருக்கக் கூடிய ஒற்றுமைகள் பற்றிய சாத்தியக்கூறுகளை ஆராய்வது, இரு பெறும் மொழிகளுக்கும் உள்ள தொடர்பினை அரிய வாய்ப்பளிக்கும். சமூக, பண்பாட்டு, வரலாற்றுப் பார்வையில் இந்த ஆய்வுகள் வடிவமைக்கப்பட்டு செய்லபடுத்தப்படவேண்டியது அவசியம்.

பேராசிரியர். வாச்சேக் அவர்கள்  இந்த மொழிக்கூறு ஒற்றுமை தொடர்பான அடிப்படை தரவுகளை தனது ஆய்வுகளின் வழி சேகரித்திருக்கின்றார். அந்த ஆய்வுகளைக் கண்டறிந்து, அவற்றை வாசித்து, ஆராய்ச்சி மாணவர்களை ஆய்வுப்பணிகளில் அமர்த்தி இவ்வகை ஆய்வுகளைத் துவக்க வேண்டியது மிக மிகத்தேவையான ஒன்று.  அதுவே பேராசிரியர். வாச்சேக் போன்ற ஆய்வாலர்கள் இதுகாறும் செய்து, நமக்காக விட்டுச் சென்றிருக்கும் ஆய்வுகளுக்குச் சீரிய முறையில் மதிப்பளிக்கும் ஒரு செயலாக இருக்கும் என்று கருதுகிறேன்.







னான் பேராசிரியர். வாச்சேக் அவர்களை முதன் முதலில் அந்தக் கருத்தரங்க நிகழ்வில் சந்தித்த போது, தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம், அதனை எப்போது ஆரம்பித்தோம், எவ்வகையான செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன என பல்வேறு தகவல்களை நான் அவருடன் பகிர்ந்து கொண்டேன். மிகுந்த ஆர்வத்துடன் எல்லா தகவல்களையும் உள்வாங்கிக் கொண்டார் பேரா.வாச்சேக். ”நாம் நிச்சமாக சார்ல்ஸ் பல்கலைக்கழக மத்தியகிழக்காசிய துறையில் பயில்கின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் சில நடவடிக்கைகளைத் திட்டமிடவேண்டும் என்று இருவரும் பேசிக் கொண்டோம். அதே கருத்தரங்க நிகழ்வில் பேரா.வாச்சேக் அவர்களை ஒரு விழியப் பதிவு பேட்டியும் செய்திருந்தேன். முழுதும் தமிழிலேயே அமைந்த சிறிய 15 நிமிட  பேட்டி அது.  அப்பேட்டியில் தனக்த் தமிழ் மொழி எவ்வகையில் அறிமுகமானது என விளக்கி தனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியரைப் பற்றிய தகவல்களை வழங்கியதோடு தனது ஆய்வுகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் http://video-thf.blogspot.com/2015/10/tamil.html என்ற தொடுப்பின் வழி இந்த விழியப் பதிவு பேட்டியை அனைவரும் கேட்கலாம்.


பேராசிரியர் வாச்சேக் போன்ற ஐரோப்பிய தமிழறிஞர் சிலரது முயற்சிகள் தொடர்வதால் தான் தமிழ் மொழி ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில் ஒலிக்கின்றது என்பதை நாம் மறந்துவிடலாகாது. இன்றைய காலகட்டத்தில் மொழி ஆய்வு என வரும்போது ஆசிய நாடுகளின் மொழிகளில் தமிழ் மொழியும் சில பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடமாக இருந்தது, இருக்கின்றது என்றால் அதற்கு இத்தகைய சான்றோர் சிலரது உழைப்பு காரணமாகவும் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

17 வயதில் இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் பேரில் சமஸ்கிருதம், இந்தி எனப் படித்தவர் டாக்டர். கமில் சுவாலெபல் அவர்களின் தூண்டுதலினால் தமிழ் கற்றதாகச் சொல்கின்றார். பின்னர் மதுரையிலிருந்து செக் நாட்டிற்கு கலாச்சார பிரதிநிதியாக வந்திருந்த திருமதி.தியாகராஜன் என்பவரின் அறிமுகம் இவருக்கு ஏற்பட்டது.  அவர் வழியாக சங்கத்தமிழ் பற்றி அறிந்து கொண்டார். அவருடன் இணைந்து சங்கத்தமிழ் கற்றதைத் தன்னால் மறக்க முடியாத அனுபவமாக நினைவில் கொண்டிருந்தார் பேராசிரியர்.வாசேக். ஆனால் துரதிஷ்டவசமாக  தமிழகத்தில் நடந்த ஒரு  வாகன விபத்தில் பலியானார் திருமதி.தியாகராஜன். அது தனக்கு ஒரு மிகப் பெரிய இழப்பாக அமைந்தது என்பதை எமது பேட்டியின் போதும் பேராசிரியர் வாசேக் நினைவு கூறியபோது மனம் கனத்தது.

திருக்குறளை விரும்பாதார் யார். அதிலும் தமிழகத்து வந்து சென்ற ஐரோப்பியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழ் கற்ற ஐரோப்பியர்கள் எல்லோருக்குமே பிடித்த  தமிழ் நூல் பட்டியலைத்தரச் சொன்னால்  அதில் சந்தேகத்துக்கு இடமின்றி முதலில் இருப்பது திருக்குறள் தான். அதனால் தான் கடந்த சில நூற்றாண்டுகளாக  தமிழகம்  வந்து தமிழ் கற்ற ஐரோப்பிய அறிஞர்கள் திருக்குறளை லத்தின், ஜெர்மன், பிரஞ்சு, ஆங்கிலம் எனத் தங்கள் மொழிகளில் ஆர்வத்துடன் மொழிபெயர்த்தனர். இவர்களைப் போலவே பேராசிரியர் வாச்சேக் அவர்களுக்கும் பிடித்த ஒரு தமிழ் எனும் போது திருக்குறளை உடனே அவர் நினைவு கூர்ந்தார். அப்பேட்டியின் போது, திருக்குறளில் உங்கள் மனம் கவர்ந்த ஒரு குறள் யாது என நான் கேட்ட போது, முகம் மலர
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவந்தற்று “
என்ற குறளைக் கூறி அதன் பொருளையும் கூறினார்.

சங்க இலக்கிய நூல்களோடு கல்கியின் வரலாற்று  நூல்களையும் வாசித்து மகிழ்ந்தவர் அவர் என்பதை அறிந்து கொண்டேன். நான் அவரை பேட்டி செய்தபோது ”சங்க இலக்கியத்தில் ஆடு” என்ற சொல்லின் பொருள் எதைக் குறிப்பிடுகின்றது எனத் தான் ஆராய்ச்சி கொண்டிருப்பதாகவும் அது விரைவில் வெளிவரும் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அந்தச் சந்திப்பிற்குப் பின்னர் நான் பேராசிரியர்.வாச்சேக் அவர்களுடன் சிலமுறை தொலைபேசித் தொடர்பில் இருந்தேன். தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்த வகையில் அவர் மாணவர்கள் தமிழகத்தில் களப்பணி மேற்கொள்வது  பற்றி திட்டமிட்டிருந்தோம். அதனைப் பற்றிய ஏற்பாட்டு விசயங்களைப் பற்றிப் பேசி ஒரு முறை நான் ப்ராக் நேரில் வரும் போது அவரது மாணவர்களை நேரில் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால் அது நிகழும் முன்னரே இயற்கை அவரை அழைத்துக் கொண்டது.  ஆம். பேராசிரியர் வாச்சேக் அவர்கள் இவ்வாண்டு ஜனவரி 23ம் தேதியன்று காலமானார்.

இந்திய அரசின் உயரிய விருதான “குறள் பீடம்” விருதினை 2012ம் ஆண்டு இவர் பெற்றார். பேராசிரியர்.வாச்சேக் அவர்களின்  மறைவு தமிழுக்கு  இழப்பு என்பதுடன்  ஐரோப்பிய தமிழ் சூழலில் ஒரு மாபெரும் இழப்பு என்றே நான் கருதுகிறேன். பன்மொழிப் புலமையும் ஆராய்ச்சி நேர்மையும், மாண்பும், இனிதாக உறவாடும் பண்பும் கொண்ட பேராசிரியர் வாச்சேக் தமிழ் கூறும் நல்லுலகின் தமிழ்ச்சான்றோர் வரிசையில் இடம்பெற்று  என்றும் நம் நினைவில் இருப்பார்.






Friday, August 4, 2017

65.தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி




இன்று பத்திரிக்கைகளில் தமிழ் எழுத்துக்களை வாசிக்கின்றோம். கணினியில் தமிழில் தட்டச்சு செய்கின்றோம். நமது கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சு செய்து குறுஞ்செய்திகளை அனுப்புகின்றோம். தமிழ் மொழி எழுத்துக்களின் பயன்பாட்டில் இவையெல்லாம் இன்று மிக எளிதாக நடக்கின்றன.

இன்று நாம் காணும் தமிழ் எழுத்துக்கள் நமக்கு நன்கு பரிச்சயமானவை. நாம் ஆரம்பப்பள்ளி கற்ற அடிப்படைகளைத் தான் இன்று வரை தொடர்கின்றோம் அல்லவா? தமிழ் மொழியில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துகளும், 216 உயிர்மெய் எழுத்துகளும், ஓர் ஆய்த எழுத்தும் என மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. இதனைத் தமிழ் நெடுங்கணக்கு என்றும் சொல்வோம்.

இன்று நாம் மிகப்பழமையானவை என நாம் கருதுகின்ற, அதாவது இன்று நமக்குக் கிடைக்கின்ற தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆத்திச்சூடி, பத்துப்பாட்டு, அகநானூறு, புற நானூறு போன்றவையெல்லாம் இன்று நாம் பயன்படுத்துகின்ற அதே வரிவடிவத்தில் தானா இருந்தன? இல்லை என்பதே அதற்கு விடையாகும். நம்மில் பலர் இதனைப் பற்றி ஒரு நாளும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரும் இன்று நாம் எழுதும் “அ” எழுத்து அதே போன்று “அ” என இருந்ததாகவும், “க” எழுத்து அதே போன்று “க” என்பதாகவும், “ம்” எழுத்து “ம்” எனவும் மற்றும் ஏனையை அனைத்து 276 எழுத்துக்களும் இன்று போலவே வரிவடிவத்தில் இருந்தன என்றும் நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது உண்மையல்ல.

தமிழ் மொழியின் வரிவடிவம் காலத்துக்குக் காலம் பரிணாம வளர்ச்சியடைந்து தான் வளர்ந்து வந்திருக்கின்றது. இதனைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா?

இந்தக் கருத்தை மனதில் கொண்டு 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு பிரத்தியேக கருத்தரங்கை நடத்தினோம். மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலத்தின் தலைவரும் ஏனைய விரிவுரையாளர்களும் இந்த நிகழ்ச்சியை தங்கள் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்வதில் பெறும் ஆர்வம் காட்டினர். இணைப்பேராசிரியர் முனைவர்.சபாபதி அவர்கள் முன்னின்று இந்த முயற்சியை ஏற்பாடு செய்தார். இந்தக் கருத்தரங்கில் நான் மாணவர்களுக்கு தமிழ் எழுத்து வரிவடிவங்களைப் பற்றிய அறிமுகமும், அதன் பரிணாம வளர்ச்சியையும் கல்வெட்டுச் சான்றுகளின் புகைப்படங்களோடு விளக்கினேன்.

தமிழின் தொன்மையான வரிவடிவத்தை அறிந்து கொள்ளவேண்டுமென்றால் நாம் மிக முக்கியமாகத் தமிழகத்திலும் மற்றும் ஏனைய பல இடங்களில் கிடைக்கின்ற தமிழ்க் கல்வெட்டுக்களைத்தான் ஆராய வேண்டும். நமது தமிழ் எழுத்துக்களின் பண்டைய வடிவம் நேர்கோடுகளாகவும் பக்கக் கோடுகளாகவும் கொண்ட வடிவில் அமைந்தவை. இது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட கல்வெட்டு ஆய்வுகளிலும், அகழ்வாராய்ச்சிகளிலும் நமக்குப் பல சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இந்த கிடைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் தமிழ் எழுத்தின் வரிவடிவத்தை நாம் வகைப்படுத்தலாம்.

தமிழ்ப் பிராமி என முன்னர் அழைக்கப்பட்ட ஆனால் பின்னர் தமிழி என அழைக்கப்படு ம்வரிவடிவமே இன்று நமக்குக் கிடைக்கின்ற பண்டைய தமிழ் எழுத்துக்களின் வடிவம் எனச் சொல்லலாம். இவ்வகை கல்வெட்டுக்கள் தமிழகத்தில் பல ஊர்களில் கிடைத்துள்ளன. இவற்றின் காலத்தை தோராயமாக கி.மு 6 லிருந்து கி.பி.2 வரை எனக் குறிப்பிடலாம். இவற்றில் மிக முக்கியமானவையாக நாம் கருதப்பட வேண்டியவை திருநெல்வேலி மாவட்டத்து ஆதிச்சநல்லூர் கல்வெட்டு, மதுரை மாங்குளம் கல்வெட்டு, திண்டுக்கல் மாவட்டத்து புலிமான் கோம்பை மற்றும் தாதப்பட்டி கல்வெட்டுக்கள், புதுக்கோட்டை சித்தன்னவாசல் கல்வெட்டுக்கள், புகழூர் கல்வெட்டு, ஜம்பைக் கல்வெட்டு, அரச்சலூர் இசைக்கல்வெட்டு, பூலாங்குறிச்சி கல்வெட்டு போன்றவை. இந்தக் கல்வெட்டுக்கள் மிக உறுதியான பாறைகளின் மேல் செதுக்கப்பட்டவை. அனைத்துமே இயற்கையான பாறைகளே.

இக்கல்வெட்டுக்கள் இருக்கும் இடங்களில் உள்ள பொதுக்கூறுகள் சிலவற்றைக் காண முடிகின்றது. அவற்றில் பெரும்பாலானவை சமண முனிவர்களுக்குக் கற்படுக்கை அமைத்துத் தந்தோரது பெயரையும் அவர் பற்றிய செய்திகளையும் கூறுவனவாக இருக்கின்றன. அதுமட்டுமன்றி இக்கல்வெட்டுக்கள் உள்ள இடங்களில் தரைப்பகுதியில் சமண முனிவர்கள் படுத்துறங்குவதற்காக செதுக்கப்பட்ட கற்படுக்கைகளையும் நாம் காணலாம். ஒரு சில இடங்களில் மூன்று அல்லது நான்கு கற்படுக்கைகளும் ஒரு சில இடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும் என்ற விதத்தில் கற்படுக்கைகளின் எண்ணிக்கைகளையும் காண்கின்றோம். இச்செய்திகள் தவிர்த்து வணிகர்கள் பற்றியும், தச்சர்கள், கொல்லர்கள் பற்றியும் உள்ள செய்திகளும் கிடைக்கின்றன. ஒரு சில கல்வெட்டுக்களில் மன்னர்களது பெயர்களும் வெட்டப்பட்டுள்ளன. அறச்சலூர் கல்வெட்டு இசைத்தாளத்தைப் பற்றிக் கூறும் தமிழி எழுத்தில் அமைந்த கி.பி2ம் நூற்றாண்டு கல்வெட்டாகும்.

தொன்மைத்தமிழ் எழுத்துக்கள் தமிழி வரிவடிவத்தில் இலங்கையிலும் கிடைத்துள்ளன. உதாரணமாக இலங்கையின் அநுராதபுரத்திலும் கி.பி.5ம் நூற்றாண்டு என அறியப்படும் கல்வெட்டு ஒன்று கிடைத்திருப்பதைக் கல்லெழுத்துக்கலை என்ற நூலில் டாக்டர். நடன காசிநாதன் பதிகின்றார். இந்தியாவில் வட நாட்டோடு ஒப்பிடும் போது, தென்னாட்டிலே, அதிலும் தமிழகத்திலே தான் மிகப் பழமையான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன என உறுதியாகக் கூறலாம்.

இந்த தமிழி எழுத்தின் வரி வடிவமானது காலப்போக்கில் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு வளர்ந்துள்ளது. தமிழி வட்டெழுத்து என்றும் தமிழ் எழுத்து என்றும் இரு பிரிவாக வளர்ச்சி கண்டது. இந்த மாற்றத்தை நிகழ்த்தியதில் பெறும் பங்கு அரசுகளையே சாறும்.

பல்லவர்கள் ஆட்சி ஏறக்குறைய கி.பி 4ம் நூற்றாண்டு முதல் சிறிது சிறிதாக வளர்ந்து பின்னர் தமிழகத்தின் வடபகுதி முழுமையையும் தன் ஆட்சிக்குள் கொண்டிருந்தது. தெற்கே பாண்டியர்கள் தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அக்காலச் சூழலில் சோழர்களோ தங்கல் பலம் குன்றி சிற்றரசர்களாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் தம் எழுத்துருவில் மாற்றம் விரிவடைந்தது. பல்லவர்கள் ஆட்சி செய்த பகுதியில் தமிழ் எழுத்துக்கள் என பெயரிட்டழைக்கப்படும் வரிவடிவங்கள் வழக்கத்திற்கு வந்தன. தெற்கில் பாண்டியர் ஆட்சி செய்த பகுதிகளிலோ தமிழியின் வளர்ச்சி பெற்ற வடிவமாக வட்டெழுத்து உருவெடுத்தது. வட்டெழுத்து உருவானதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. ஓலைச்சுவடிகளில் நேர் கோடுகளாகவும் பக்கக் கோடுகளாகவும் கீறும் போது அது சுவடிகளை சேதப்படுத்துவதால், சிறிது சிறிதாக வளைக்கப்பட்ட வடிவமாகத் தமிழ் எழுத்துக்கள் உருவாக்கம் கண்டன. இந்த அடிப்படையில் தமிழகத்தில் ஒரே காலகட்டத்தில் ஒரே தமிழ் மொழிக்கு இரு வேறு வரி வடிவங்கள் வழக்கில் வந்தன.


தமிழகத்தில் மிகப் பரவலாக சமஸ்கிருதப் பயன்பாடும் உருவாகிவிட்ட சூழல் இருந்தது. ஆக, சமஸ்கிருதச் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும் ஒரு வரி வடிவம் தேவைப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்டதுதான் கிரந்த எழுத்து.

பல்லவர்கள் பயன்பாட்டில் பொதுவாகவே சமஸ்கிருதப் பயன்பாடு என்பது கூடுதலாக இருக்கும். ஆகப் பல்லவர்கள் சமஸ்கிருதச் சொற்களுக்காகப் பிரத்தியேகமாக ஒரு வரி வடிவத்தை உருவாக்கினர். இதுவே பல்லவ கிரந்தம் என் அழைக்கப்பட்டது. மலேசியா, இந்தோனிசியா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, போன்ற நாடுகளில் இன்றும் கிடைக்கின்ற கல்வெட்டுக்கள் இத்தகை பல்லவ கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்ட கல்வெட்டுக்களே. இவற்றை நம்மில் சிலர் அருங்காட்சியகங்களில் பார்த்திருக்கலாம்.

இன்று நமக்குக் கிடைக்கின்ற வட்டெழுத்துக்களில் குறிப்பிடத்தக்கவையாக நாம் சில சான்றுகளைக் காணலாம். பொதுவாக இவை பாறைக்கல்வெட்டுக்கள், நடுகல் கல்வெட்டுகள், செப்பேட்டில் உள்ள எழுத்து என்பனவாக நமக்குக் கிடைக்கின்றன. அதில் மதுரை ஆனைமலை நரசிம்ம மூர்த்தி குடைவரைக் கோயில் ஜடிலவர்மன் கல்வெட்டு மிக முக்கியமானது. இக்கோயிலில் சுவர் முழுக்க கல்வெட்டுக்கள் நிறைந்திருப்பதைக் காணலாம். அதிலும் குறிப்பாக ஒரு பக்கச் சுவரில் வட்டெழுத்திலும், மறுபக்கச் சுவரில் கிரந்தத்திலும் கல்வெட்டில் ஒரே செய்தி பொறிக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பு. இன்றைக்கு ஒரு நூலை ஒரு பக்கம் தமிழிலும் மறு பக்கம் ஆங்கிலத்திலும் படிப்பது போல , என எடுத்துக் கொள்ளலாம். தமிழ் மொழி கற்றோரும் சமஸ்கிருதம் கற்றோரும் இருபாலருமே செய்தியை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, தருமபுரி மாவட்டத்துப் பாப்பம் பட்டி நடுகல், வட ஆற்காடு பெருங்குளத்தோர் நடுகல், திருப்பரங்குன்றம் கல்வெட்டு ஆகியவற்றைக் கூறலாம்.

இப்படி பல்லவர் காலத்தில் தமிழகத்தின் வடக்கில் தமிழ் என்றும் தென்பகுதியில் பாண்டியர் ஆட்சி செய்த பகுதிகளில் வட்டெழுத்து எனப் பிரிந்த தைழ் வரிவடிவம் பின்னர் சோழக் காலத்தில் தான் ஒரு வரிவடிவம் என்ற வகையில் நிலைபெற்றது. பல்லவர்கள் உருவாக்கிய எழுத்தின் வரிவடிவத்தின் வளர்ச்சியடைந்த வடிவமே கி.பி 10க்குப் பிறகு தமிழகத்தின் பல இடங்களில் நிலைபெற்றது. தமிழகத்தின் பெருங்கோயில்களான கங்கை கொண்ட சோழ புரம், தாராசுரம், தஞ்சை பெருவுடையார் கோயில் போன்றவற்றின் சுவர்களில் நாம் காண்கின்ற எழுத்துக்கள் தான் இவை. இவை தமிழ் வரிவடிவம் என்றே அழைக்கப்பட்டன. அந்த தமிழ் வரிவடிவத்தின் வளர்ச்சி பெற்ற எழுத்துருக்களைத் தான் நம இன்று பயன்படுத்துகின்றோம். கடந்த நூற்றாண்டிலும் கூட தமிழ் எழுத்தில் மாற்றங்களைத் தமிழக அரசு ஏற்படுத்தியது. இதன் பொருட்டு இன்று நம் பயன்பாட்டிலிருக்கும் „னை, ணை, லை, ளை“ போன்ற எழுத்துக்களைக் குறிப்பிடலாம்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் காலை பத்து மணிக்குத் தொடங்கி மதிய உணவு வரை இந்தக் கருத்தரங்கை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையோடு தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்த்தினோம். தமிழ்த்துறை கலந்து கொண்ட அனைவருக்கும் சேர்த்து மதிய உணவினையும் ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்து தங்கள் ஐயங்களைப் போக்கிக் கொண்டனர். இதேப் போன்று வருங்காலங்களிலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ் ஆய்வு சார்ந்த பல தகவல்களை வழங்க வேண்டுமென்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் அவா!