Wednesday, April 26, 2017

53. பிரம்மநந்தீஸ்வரர் - சோழர்கால ஆலயம்



தமிழர் வரலாற்றில் புகழ் மிக்க காலகட்டமாகத் திகழ்வது சோழர்காலமாகும். முற்காலச் சோழர்கள் என்று எடுத்துக் கொண்டால், சோழ மன்னன் கரிகால்வளவன் காலம் தமிழக வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது எனலாம். அதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜயாலய சோழனின் எழுச்சி கி.பி.850 தொடங்கியது முதல், சோழ சாம்ராஜ்ஜியத்தின் புதியதொரு வீச்சுடன் கூடிய ஆட்சி தொடங்கியது. அவனை அடுத்து ஆண்ட பராந்தகசோழன் முதல் படிப்படியாக  சோழர் ஆட்சி என்பது விரிவடைந்து கொண்டே வந்தது.

பிற்காலச் சோழர்களில் புகழ்மிக்கவர்களாகத் திகழ்பவர்கள் முதலாம் ராஜராஜன், அவரது மகனான ராஜேந்திர சோழன், அதன் பின்னர் முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது காலத்தைக் குறிப்பிடலாம். இக்காலகட்டங்களில் தமிழக ஆட்சி முறை உயர்ந்த ஆட்சித்தன்மையுடன் திகழ்ந்தது என்பதை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சோழர்கால ஆய்வுக்கு மிக முக்கிய நூற்களாக இன்றும் விளங்குகின்ற நூல்களை வழங்கிய  தி.வை.சதாசிவ பண்டாரத்தார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இவர்களது நூல்கள் இன்றும் தமிழக வரலாற்று ஆய்வாளர்களால் பயன்படுத்தப்படும் நூல்களாகத் திகழ்கின்றன.  கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைப் படித்து விட்டு ராஜராஜனின் மேல் மையல் கொண்டு வியந்தவர்கள்,  இந்தச் சோழர்கால ஆய்வு நூற்களையும் படிக்கும் போது சோழர் வரலாற்றினையும் அதன் படிமங்களாக இன்றும் நமக்குக் கிடைக்கும் கட்டிடங்களையும் கல்வெட்டுக்குக்களையும் அறிந்து கொள்ள இந்த வாசிப்பு உதவும்.

சோழர்கள் காலத்தில்  நாட்டின் ஆட்சிமுறையில் சீர்மை ஏற்பட்டது. கோயில் கட்டிடக் கலை வளம் பெற்றது. உள்ளூர் ஆட்சி முறை சீர்படுத்தப்பட்டது. மக்கள் பயன்படுத்தும் சாலைகள் சீராக உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம், சமயம் எனப் பல துறை வளர்ச்சியை இக்காலகட்டத்தில் தமிழகம் அனுபவித்தது எனலாம்.

சோழர்கள் மட்டுமன்றி, பாண்டியர்கள் பற்றிய வரலாற்றினையும் பல்லவர்கள பற்றிய வரலாற்றையும் அதன் பின்னர் ஆட்சி செய்த நாயக்கர்கள் பற்றியும் நாம்  கோயிற்கல்வெட்டுக்களிலிருந்துதான் கண்டறிகின்றோம். பெருமளவில் இந்திய தொல்லியல் துறையினால் கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட கல்வெட்டு படியெடுப்பு, அவற்றின் பதிப்பு ஆகியவை, கோயில் கற்சுவற்றில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ச்சியாளர்கள் பார்த்து வாசித்து அதனை வெளிப்படுத்த உதவியது. அப்படி ஆய்வாளர்களால் படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட கல்வெட்டு படிமங்கள் இன்று நமக்கு ஆய்வுக்கு கிடைக்கின்ற அரிய சான்றுகளாக இருக்கின்றன. நூற்களில் நாம் காண்கின்ற கல்வெட்டுக்கள் கூட கடந்த சில ஆண்டுகளில் ஆலயப்புணரமைப்பு, சாலை புணரமைப்பு என்ற பெயர்களில் நாசம் செய்யப்பட்டு இல்லாமல் போய்விட்டன என்பது வேதனையே.

சோழ மன்னன் ராஜராஜன் அரியணை ஏறியது முதல் சோழர்களின் பொற்காலம் என்று தான் சொல்லலாம். அக்காலகட்டத்தில் பல கற்றளிகள் உருவாக்கப்பட்டன. செங்கற்களால் இதற்கு முன்னர் கட்டப்பட்ட கோயில்கள் பலவற்றைக் கற்றளியாக மாற்றும் பணியை ராஜராஜனின் சிற்றன்னையார் செம்பியன் மாதேவியார் மிகச் சிறப்புடன் செய்து முடித்தார். இவரது கோயில் திருப்பணிகள் எண்ணற்றவை. இவர் சோழ மன்னராக சில காலம் பதவி வகித்த கண்டராதித்த சோழனின் மனைவியாவார். மிகுந்த சிவபக்தியுடன் திகழ்ந்தவர் செம்பியன் மாதேவியார். கி.பி.1001 வரை வாழ்ந்த இவர் பல சிவன் கோயில்களைப் புணரமைத்ததோடு மேலும் சில கோயில்களையும்  கட்டினார் என்பதை கல்வெட்டுக்கள் வழி அறிகின்றோம்.

இந்தச் செம்பியன் மாதேவியாரின் பள்ளிப் படை கோயில் கும்பகோணத்தில் இருப்பதை அறிந்து அங்குச் சென்று அதனைப் பற்றிய நேரடித் தகவல்களைப் பதியவேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது. பள்ளிப்படை கோயில் என்றால் என்ன என்ற எண்ணம் சிலருக்கு எழலாம். அரச குலத்தவர் இறந்த பின்னர் அவரது உடலை கிரியைகள் சில செய்து உட்கார்ந்த  நிலையில் அவரது உடலை மண்ணில் வைத்துப்  புதைத்து பின் அந்தச் சமாதி மேல் ஒரு சிவலிங்கத்தை வைத்து வழிபடும் வகையில் செய்திருப்பர்.  இதுவே பள்ளிப்படை கோயில் என அழைக்கப்படுவது.

ஆக, இந்தப்பள்ளிப்படைக் கோயிலின் பதிவையும்  2013ம் ஆண்டு மார்ச் மாதம் கும்பகோணத்தில் நான் மேற்கொண்ட சோழர்கால கோயில்கள் ஆய்வின் போது செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டிருந்தேன்.  என்னுடன் தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.பத்மாவதியும், இந்திய தொல்லியல் துறை ஆய்வாளரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவருமான பரந்தாமனும் கலந்து கொள்ள, நாங்கள் செம்பியன் மாதேவி பள்ளிப் படை கோயிலைத் தேடிக்கொண்டு கும்பகோணத்தின் சாலைகளில் சென்றோம்.

காடுகளுக்குள்ளும், சிற்றூர்களிலும் தேடிக் கொண்டு எங்களை அழைத்து வந்த வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் இப்பள்ளிப் படைக் கோயிலைக் காண முடியாத நிலையில் ஒரு சாலையின் மூலையில் இரண்டு மோட்டார் வண்டிகளை நிறுத்தி விட்டு 4 பேர் நின்றிருக்க, அவர்களை விசாரித்தோம். அவர்களும் வாருங்கள் அழைத்துப் போகிறோம், என்று சொல்லி ஏறக்குறைய 500 மீட்டர் தூரம் மரங்களுக்கு இடையே நடந்து  ஒரு பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்று ஒரு கோயிலைக் காட்டினர்.

அது செம்பியன் மாதேவியின் பள்ளிப் படை கோயில் அல்ல. மாறாக கற்றளியாக மாற்றப்படாத ஒரு செங்கற்றளி கோயில்.

10ம் நூற்றாண்டிலே கட்டப்பட்ட கோயில் அது என்பதும் அங்கிருந்த ராஜராஜனின் கல்வெட்டுப் பகுதி பாறையும் இக்கோயிலின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ள உடன் எங்களுக்கு உதவியது. கோயிலைச் சுற்றி அருமையான 10ம், 11ம் நூற்றாண்டு நாகக்கண்ணி, லிங்கோத்பவர், தஷிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகிய தெய்வ வடிவங்களின் சிற்பங்கள் அதன் பழமை கெடாமல் காட்சியளித்துக் கொண்டிருந்தன.

உள்ளே பெரிய அகன்ற வடிவ பிரம்மநந்தீஸ்வரர், அதாவது சிவலிங்க வடிவம் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

இக்கோயில் சுதையில் செய்யப்பட்ட செங்கற்றளி கோயில். நாங்கள் சென்ற சமயத்தில்  புணரமைப்பு பணிகள் ஏதும் நடைபெற வில்லை. ஆனால் கோயிலைப் பார்த்துக் கொண்டு இரண்டு வயதான மனிதர்கள் அருகில் சில பராமரிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டுச்சிறுமி நான் வீடியோ கருவி கொண்டு பதிவாக்கம் செய்து கொண்டிருப்பதை என் கூடவே வந்து நின்று பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். இந்தக் கோயிலைப்பற்றிய பதிவினை அதே ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையில் வெளியீடு செய்தோம்.  அப்பதிவினை இங்கே காணலாம். http://video-thf.blogspot.de/2013/12/2014_7.html

இப்படி ஆங்காங்கே தமிழகத்தின் பல பகுதிகளில் கவனிப்பற்று கிடக்கும் கலைப்பொக்கிஷங்கள் பல.

அழகான கிராமப்புற சூழலில் காய்கறி தோட்டங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. விரைவாக பராமரிப்பும் பாதுகாப்பும் புணரமைப்பும் தேவைப்படும் ஒரு கோயில் இது. தமிழக தொல்லியல் துறை அல்லது தமிழக பல்கலைக்கழகங்களின் ஆய்வகங்களின் பாதுகாப்பு உடன் தேவைப்படும் ஒரு ஆலயம் இது. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களில் ஒன்று என்றாலும் மிகையில்லை.

Wednesday, April 12, 2017

52. தன்னிகரற்ற தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார்



தனிநாயகம் அடிகளார் உலகப் புகழ்பெற்ற தமிழ்ப் பேரறிஞர். உலக அரங்கில் தமிழுக்கு இடம் பெற்றுத் தந்த ஒப்பற்ற தமிழ்த் தொண்டர் இவர். 20ம் நூற்றாண்டில் இவரைப் போல உலகளாவிய தமிழ்ப்பணி புரிந்தவர் வேறொருவருமில்லை எனத் துணிவுடன் கூறலாம்.

இத்தகைய பெரும் புகழ்பெற்ற தமிழ் அறிஞரை தமிழுலகம் எளிதாக மறந்து வருவதைக் காண்கின்றோம். தனிநாயகம் என்றாலே உலகளாவிய தமிழ் மாநாடுகள் தாம் நம் மனதில் நிழலாடுகின்றன.

ஐரோப்பிய, அமெரிக்க நூலகங்களில் ஆய்ந்தறிந்து தமிழில் முதன் முதலாக வெளிவந்த கார்திலா, தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம், அடியார் வரலாறு போன்ற அரியத் தமிழ் நூற்களைத் தமிழுலகத்துத் தந்தவர் அவர்.

இத்தகைய சிறப்பு மிக்க தனிநாயக அடிகளாரின் அனைத்துப் படைப்புக்களையும் தொகுத்து மூன்று தொகுதிகளாக 2000 பக்கங்களில் வெளிக்கொணர்ந்த வரலாற்றுப் பெருமை அருட்தந்தை அமுதன் அடிகளுக்கு உண்டு.

அமுதன் அடிகளை முதன் முதலில் 2015ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 9வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் தான் நான் சந்தித்தேன். பிரான்சில் வசிக்கும் நண்பர் திரு.சாம் விஜய் எனக்கு அமுதன் அடிகளை அறிமுகப்படுத்தி வைத்து, தனிநாயகம் அடிகளாரைப் பற்றிய விரிவான ஆய்வினைச் செய்து வருபவர் இவர் என்றும் அவர் பெயராலேயே ஒரு கல்லூரியை அமைத்து வருபவர் என்றும் விவரித்தார். அன்று அந்த நிகழ்வில் என்னால் அமுதன் அடிகளாருடன் விரிவாக நேரம் ஒதுக்கி உரையாடி தனிநாயகம் அடிகள் பற்றி பேச வாய்ப்பு அமையவில்லை. ஆயினும் தமிழகம் செல்லும் போது அவரை நேரில் சந்தித்து தன்னிகரில்லா தமிழ்த்தொண்டு ஆற்றிய தனிநாயகம் அடிகள் பற்றிய வரலாற்றுப் பதிவு ஒன்றினைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கு மிகுந்தது.

2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தின் திருச்சி பகுதியில் இரண்டு நாட்களை ஒதுக்கி அங்குள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பதிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன். திருச்சி தூயவளனார் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் திரு.சூசை அவர்கள் எனக்கு இந்தப்பணியில் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மறக்க இயலாது. இந்த வரலாற்றுப் பதிவு முயற்சியில் அமுதன் அடிகளாரை நேரில் சந்தித்து உரையாடி தனிநாயகம் அடிகளாரின் சிறப்புக்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். திரு.சூசை மற்றும் முனைவர்.வீரமணி நான் மூவருமாக மதிய வேளையில் அமுதன் அடிகளார் நடத்தி வரும் தனி நாயகம் அடிகளார் கல்லூரிக்குச் சென்று அங்கு அவர் அளித்த விரிவான பேட்டியைப் பதிவு செய்தோம். அது கடந்த ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவாக வெளியீடு கண்டது.

தனிநாயகம் அடிகளார் யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்தவர். இவர் 2.8.1913ம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் சேவியர் நிக்கொலஸ் என்பதாகும். சேவியர் இறைப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று பெற்றோரின் விருப்பம் இருந்தது. ஆனால் சேவியருக்கு அத்துறையில் நாட்டம் ஏற்படவில்லை. தனது பள்ளி இறுதி ஆண்டில் லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்துயிர்ப்பு என்னும் நூலை தன் பதினைந்தாம் வயதில் படித்ததால் அவருக்குச் சமைய சேவையிலும் கல்விச்சேவையிலும் நாட்டம் ஏற்பட்டது என அவரே குறிப்பிடுகின்றார்.

இளமையில் உயர்நிலைப்பள்ளியில் அவர் தமிழ் மொழியில் பயின்றாலும் அவருக்கு நாட்டம் ஆங்கில மொழியின் பால் அதிகமாக இருந்தது. அதற்காக அவர் அதிக முயற்சிகள் மேற்கொண்டு ஆங்கிலம் எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார். கொழும்பு புனித பெர்நார்து கல்லூரியில் மெய்யியற் கல்வியைப் படித்தார். 1934ம் ஆண்டு இவர் ஐரோப்பாவில் உள்ள ரோம் நகரின் உர்பன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்து அங்குக் கல்வி கற்கச் சென்றார். அங்கு சமயக் கல்வி கற்ற அவர் ஸ்பானிஷ், போர்த்துகீசியம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம் ஆகிய மொழிகளையும் பயின்றார்.

தமிழகம் வந்த சேவியர் நெல்லை மாவட்டத்தின் வடக்கன்குளம் எனும் ஊரில் உள்ள புனித தெரசாள் உயர்நிலைப்பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக 1941ம் ஆண்டில் பதவி ஏற்றுக் கொண்டார். அங்கு ஒரு பண்டிதரிடம் தமிழை நன்கு கற்றுக் கொண்டார். இந்தக் காலகட்டத்தில் தனது பெயரை தனிநாயகம் அடிகள் என மாற்றிக் கொண்டார். பின்னர் 1945ம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வினைத்தொடங்கினார். 1948ம் ஆண்டில் தூத்துக்குடியில் இவர் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். தமது நூல்களான தேம்பாவணி ஆராய்ச்சி, திருக்காவலூர்க் கோவில், இயேசுநாதர், பத்துப்பாட்டு ஆங்கில மொழி பெயர்ப்பு, திராவிடர் வரலாறு ஆகிய தனது நூல்களை இந்த அமைப்பின் வழி வெளியிட்டார்.

1949 முதல் இவரது உலகளாவிய பயணங்கள் தொடங்கின. அன்றைய மலேயா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, பனாமா, எக்குவாடோர், பெரு, சிலி, அர்ஜெண்டீனா, உருகுவே, பிரேசில், மெக்சிக்கோ, ட்ரினிடாட், ஜமைக்கா, மார்த்தினீக், ஆப்பிரிக்க நாடுகள், இத்தாலி, பாலஸ்தீனம், எகிப்து என தொடர்ச்சியாகப் பல நாடுகளுக்கு இவர் பயணம் செய்தார். அங்கெல்லாம் தான் கலந்து கொண்ட நிகழ்வுகளில் தமிழ்மொழி பற்றியும், தமிழர் கலை, பண்பாடு, வரலாறு பற்றியும் உரையாற்றினார். அமெரிக்காவில் மட்டும் இருநூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார் என்பதை அறியும் போது அவரது ஆக்கமும் ஊக்கமும் வியப்பினை நமக்களிக்கின்றது.

தாய்லாந்துக்குச் சென்றிருந்த அடிகளார் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றார். அங்கு முடிசூட்டு விழாவில் இடம்பெற்ற ஒரு பாடல் தமிழில் அமைந்த திருவெம்பாவை தான் என்பதை அறிந்து அதனை அரச குருவிடம் குறிப்பிட்டார் அடிகளார். தமிழ் இன்றளவும் அரச சம்பிரதாயங்களில் இடம்பெறுவதை நோக்கும் போது தமிழகத்திற்கும் தாய்லாந்திற்கும் உள்ள நீண்ட நெடிய உறவினை ஆராய வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுவது போலவே அடிகளாருக்கும் தோன்றியது. பல்லவர்கால, சோழர்கால சிற்பங்களும் கட்டட அமைப்புக்களும் தாய்லாந்தில் பரவி இருப்பதைத் தமது தேடலில் உணர்ந்தார். இதே போல கம்போடியா சென்று அங்கு அங்கோர்வாட் கோயிலை ஆராய்ச்சி செய்து தனது கருத்துக்களை எழுதினார் அடிகளார்.

தனிநாயகம் அடிகளாரின் பயணங்கள் தொடர்ந்தன. அவரது தேடலும் தொடர்ந்தது.

உலகின் பல நாடுகளில் பணியாற்றும் பல தமிழறிஞர்களை ஒன்றிணைக்க வேண்டும், ஆராய்ச்சிகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என அவர் எண்ணினார். 1952ம் ஆண்டில் Tamil culture என்ற ஒரு இதழை அவர் தொடங்கினார்.

1964ம் ஆண்டு இந்தியாவில் டில்லி நகரில் நடைபெற்ற கீழைத்தேச அறிஞர்களின் மாநாட்டின் போது உலகத் தமிழ்ராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மலேசியாவில் முதல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை ஒன்று கூட்டும் முயற்சியில் தனிநாயகம் அடிகளார் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கு அமைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மாண்புமிகு துன் வி.தி.சம்பந்தன் அவர்கள் மாநாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்டார். அடிகளார் துணை தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள, திரு. வி.செல்வநாயகம் பொதுச் செயலாளராக நியமனம் பெற்றார்.

அடிகளார், டான்ஸ்ரீ.மாணிக்கவாசகம், திரு.வி.செல்வநாயகம் ஆகியோர் பெருமுயற்சியால் மாநாட்டுக்கான செலவுத்தொகை திரட்டப்பட்டது. பலரது ஒத்துழைப்புடன் இதுவரை வரலாறு காணாத மாநாடு மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் 1966ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 முதல் 23ம் தேதி வரை சிறப்புடன் நடைபெற்றது. 132 பிரதிநிதிகளும் 40 பார்வையாளர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உலகின் 21 நாடுகளிலிருந்து அறிஞர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற்றிய அப்போதைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் தனிநாயகம் அடிகளாரின் பன்மொழிப்புலமையையும், அவரது தலைமைப்பண்பையும் பாராட்டிப் பேசியதோடு மலேசியாவில் தமிழ் சிறப்புற வளர்ந்து வருவதைச் சுட்டிக் காட்டியும், தமிழ் மொழியின் தொன்மை பற்றியும் தமது உரையில் அன்று குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

இந்த மாநாடு முடிந்த பின்னர் அதன் தொடர்ச்சியாக மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் பணியில் ஈடுபட்டு அதனையும் சிறப்புடன் செய்து முடித்தனர் மாநாட்டுச் செயலவை குழுவினர் . இன்று வரை தமிழுக்காக அகில உலக அளவில் நடைபெற்ற மிகச் சிறந்த மாநாடு என்ற பெருமையைக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வாக இது கருதப்படுகின்றது என்பது தனிநாயகம் அடிகளாரின் முயற்சிக்கு ஒரு மணிமகுடம் அல்லவா?

தனிநாயகம் அடிகளாரின் தொண்டு எனச் சிறப்பித்துச் சொல்வதற்கு ஏராளமான செய்திகள் உள்ளன. அதில் மிகச் சிறப்பானதாக நான் கருதுவது ஐரோப்பிய நாடுகளுக்கானத் தனது பயணங்களில் அங்குள்ள தமிழ் நூல்களையெல்லாம் தேடிச்சென்று பார்த்து அவற்றைப் பற்றிய குறிப்புக்களை எழுதி தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அவர் அளித்தமையே எனலாம்.

பாரிஸ் தேசிய நூலகத்தில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேலான தமிழ் நூற்களைத் தாம் பார்த்ததாகவும், அவற்றுள் சில இந்தியாவில் கூட கிடைக்காதவை என்றும் அடிகளார் தமது குறிப்புக்களில் தந்துள்ளார். வாட்டிக்கன் நூலகத்தில் Flos Sanctorum என்ற பெயர் கொண்ட திருத்தொண்டர் திருமலர் என்ற நூலை இவர் கண்டெடுத்தார். அதுபோலவே கி.பி.17ம் நூற்றாண்டில் அந்தாம் தொப்ரோயென்சா அடிகளார் தொகுத்த தமிழ் போர்த்துக்கீசிய அகராதியையும் அடிகளார் இதே நூலகத்தில் கண்டெடுத்தார். கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்த நூலை அடிகளார் மீண்டும் பதிப்பித்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்த்துகலுக்கான தனது பயணத்தின் போது லிஸ்பன் நகர நூலகத்தில் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 15ம் நூற்றாண்டில் தமிழகம் வந்த ஹென்றிக்ஸ் ஹென்றிக்ஸ் அடிகளாரால் எழுதப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகளையும், 1554ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கார்திலா என்ற நூலையும் அவர் கண்டார். தனி நாயகம் அடிகளாரின் முயற்சிகள் இல்லாவிட்டால் இந்த செய்திகளைத் தமிழ் உலகம் அறிந்திருக்குமா என்பது மிகப் பெரிய கேள்வியே!

இப்படிப் பல வகையில் தமிழுக்குத் தொண்டாற்றிய தனி நாயகம் அடிகளாரைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கின்றோமா என்பது ஐயமே.

இவரை தமிழுலகம் போற்றிப்புகழ வேண்டாமா?

தமிழ்ப்பாட நூல்களில் இவரைப்பற்றிய குறிப்புக்களை இணைக்க வேண்டாமா?

அறிஞர் பெருமக்கள் இவரது தமிழ்த்தொண்டு பற்றி இக்கால இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வது வேண்டாமா?

அவர் விட்டுச் சென்ற பணிகளைத்தான் தொடர வேண்டாமா?

இப்படிப் பல கேள்விகள் நம் முன்னே நிற்கின்றன. இதற்கு ஒரு ஆரம்பமாக அமுதன் அடிகள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கியிருக்கும் பல வரலாற்று விபரங்கள் அடங்கிய ஒரு மணி நேர விழியப் பதிவை தமிழ் அன்பர்கள் பார்த்து கேட்டுப் பயனுற வேண்டும் என்பதே எமது அவா. இந்தப் பதிவு https://www.youtube.com/watch?v=h2LIJmysyNo&feature=youtu.be என்ற வலைப்பக்கத்தில் உள்ளது. கேட்டுப் பார்த்து பயன் பெறுவதோடு தனி நாயகம் அடிகளாரின் தமிழ்த்தொண்டினை நாமும் தொடர்வோமே!

Wednesday, April 5, 2017

51. பேராசிரியர்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பணி



19ம் நூற்றாண்டு தொடங்கி தமிழ் நூல்களை ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாகக் கொண்டு வரும் முயற்சிகள், பல தமிழறிஞர்களால் முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய முயற்சியில் தமிழகத்தின் தமிழ் அறிஞர்களும், தமிழகத்தில் காலணித்துவ ஆட்சியின் போது பணியாற்றிய ஆங்கிலேய அறிஞர்களில் சிலரும், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த தமிழறிஞர்களும் ஈடுபட்டனர். அத்தகைய பதிப்பாசிரியர்கள் வரிசையில் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, எல்லிஸ் (F.W.Ellis), உ.வே.சாமிநாதையர், வ.உ.சிதம்பரம்பிள்ளை, அருட்பிரகாச வள்ளலார், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் போன்றோருடன், பேராசிரியர்.வையாபுரிப்பிள்ளை அவர்களும் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர். 

ஓலைச்சுவடி வடிவில் இருக்கும் ஒரு நூலை அச்சு வடிவில் பதிப்பிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஓலைச்சுவடி நூல்கள் வழி வழியாகப் பலரால் படியெடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் புதிதாகப் எழுதப்படுபவை. இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால், பனை ஓலையில் தயாரிக்கப்படும் சுவடி நூல்கள் நீண்ட காலம் இருப்பது சாத்தியமல்ல. அதிக வெப்பமான புறச் சூழல், தூசிகள் படிதல், போன்றவை ஓலைச்சுவடிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதோடு பெட்டிக்குள் வைத்துப் பூட்டி பாதுகாக்கப்பட்டும் பல ஓலைச்சுவடிகளைப் புழுக்கள் ஓட்டையிட்டு துளைத்து நாசம் செய்துவிடுவதும் பெரும்பாலும் நடப்பதுதான். இதனால் தக்க காலத்திற்குப் பின்னர், அந்தச் சுவடியை வைத்திருப்போர், சுவடி எழுதத்தெரிந்திருந்தால் தாமே அதனைப் பார்த்து வரிக்கு வரி அதனைப் படியெடுத்து மீண்டும் புது சுவடி நூலில் எழுதி வைத்து விடுவர். அல்லது சுவடி வாசிக்கவும் எழுத்தாணி கொண்டு எழுதவும் தெரிந்தவரைக் கொண்டு சுவடி நூலைப் படி எடுக்கச் செய்வர். இந்த வகையில் தான் பல நூற்றாண்டுகளாக நூல்கள் நமக்குப் பாதுகாக்கப்பட்டு கிடைத்தன. ஆயினும் அப்படிப் படியெடுக்கும் போது நூல்களை எழுதுவோர் அதில் தெரிந்தோ தெரியாமலோ பல மாற்றங்களைச் செய்திருக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதை நாம் மறுக்க முடியாது. ஆக ஓலைச்சுவடி நூலை அச்சுப்பதிப்பாக்கம் செய்ய முனையும் ஒவ்வொருவருக்கும் பாடபேத ஆராய்ச்சி என்பதுதான் மிகப்பெரிய சவாலாக அமைந்து விடும். 

ஒரே தலைப்பிலான நூலாக இருந்தாலும், அது பலரிடம் இருக்கும் பட்சத்தில் அவற்றையெல்லாம் பெற்று ஒவ்வொரு சுவடியையும் வாசித்து ஒன்றிலிருந்து மற்றொன்று எவ்வாறு மாறுபடுகின்றது என அறிந்து அதில் எது சரியானது, எது தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது, என அறிந்து எழுதுவது தான் அச்சுப்பதிப்பில் முக்கியப் பணியாக அமைவது. பதிப்புப்பணியில் ஈடுபட்ட தமிழறிஞர்கள் எல்லோருமே இந்தச் சிரமத்தை அனுபவித்துத்தான் சுவடி நூற்களை அச்சுப்பதிப்பாக்கம் செய்தனர். அந்த வகையில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையும் ஒருவர். 

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அங்குச் சிக்க நாகையன் கிராமத்தில் சரவணப் பெருமாள் பிள்ளை என்பாருக்கும் பாப்பம்மாள் என்பாருக்கும் 12.10.1891ம் ஆண்டில் பிறந்தார். பள்ளிக் கல்வி முடித்து, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் படித்து பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ படித்தார். பின்னர் திருவனந்தபுரம் மகாராஜா சட்டக் கல்லூரியில் பி.எல் படிப்பை முடித்து திருவனந்தபுரத்திலேயே உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சட்டம் பயின்று தொழிலாற்றினாலும் அவரது ஈடுபாடு தமிழ் மொழி சார்ந்ததாகவே இருந்தது. 

இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேரகராதித் துறையில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்க அங்குப் பதிப்பாசிரியராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவே அகராதி தொடர்பான ஆய்வுகளில் அவர் ஈடுபட அவருக்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். அகராதி உருவாக்கப்பணியில் இருந்த சமயத்தில் அகராதிக்கு உறுதுணையாக இருந்த நிகண்டு நூல்கள், மற்றும் இதுவரை வெளிவராத சுவடி நூல்கள் எனத் தேடி அவற்றை ஆய்வு செய்து பதிப்புக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். இக்காலத்தில் இருபது நூல்கள் திரு.வையாபுரிப்பிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 

அகராதிப்பணி முடிவுற்ற பின்னர் திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழக தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பத்து ஆண்டுகள் இங்கே பணியாற்றி பின் பணி ஓய்வு பெற்றார். இவரது அகராதிப் பணியைப் பாராட்டி 1938ம் ஆண்டில் ராவ்சாகிப் என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 

பணி ஓய்வுக்குப் பின்னரும் இவரது பதிப்புப்பணிகளும் தமிழாராய்ச்சிப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அவர் திருவனந்தபுரம் செல்லும் வாய்ப்பு அமைந்தது. 

திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மு.இராகவையங்கார் 1951ல் பதவி ஓய்வு பெற்ற பின் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் திரு.வையாபுரிப்பிள்ளை என இவரைப் பலகலைக்கழகம் அழைத்தது. மூன்றாண்டுகள் அப்பதவியில் இருந்து சேவையாற்றினார். அங்கிருந்த போதும் தொய்வின்றி தமது நூல் பதிப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் திரு.வையாபுரிப்பிள்ளை. 

திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் ஓலைச்சுவடிகளைத் தேடி, பாடபேதம் ஆய்ந்து, அச்சு வடிவில் பதிப்பித்துள்ள நூல்களின் பட்டியல். 

1.மனோண்மணியம், 1922. 
2.துகில்விடு தூது, 1929. 
3.நாமதீப நிகண்டு, 1930. 
4.அரும்பொருள் விளக்க நிகண்டு, 1931. 
5.களவியற்காரிகை, 1931. 
6.கம்பராமாயணம்-யுத்த காண்ட1-3 படலம்), 1932. 
7.குருகூர் பள்ளு, 1932. 
8.திருக்குருங்குடி அழகிய நம்பி உலா, 1932. 
9.தினகர வெண்பா, 1932. 
10.நெல்விடு தூது, 1933. 
11.தொல்காப்பியம்-(பொருளதிகாரளம, இளம்்பூரணம்), 1933. 
12.திருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது), 1933. 
13.திருமுருகாற்றுப்படை (சேர்ந்து பதிப்பித்தது, புதிய உரையுடன்), 1933. 
14.கம்பராமாயணம்-பால காண்டம் (1-7படலம்), 1933. 
15.பூகோள விலாசம், 1933. 
16.திருப்பணி மாலைகள் (தென்திருப்பேரை, திருக்கோளூர்),1933. 
17.மூப்பொந்தொட்டி உலா, 1934. 
18.பொதிகை நிகண்டு, 1934. 
19.இராஜராஜதேவர் உலா, 1934. 
20.தொல்காப்பியம்-பொருளதிகாரம் (நச்சினார்க்கினியம்),1934. 
21.இராமலிங்கேசர் மீது பணவிடு தூது, 1934. 
22.மதுரைக் கோவை, 1934. 
23.தெய்வச்சிலையார்விறலிவிடு தூது, 1936. 
24.புறத்திரட்டு, 1938. 
25.கயாதாரம், 1939. 
26.சங்க இலக்கியபத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்), 1940. 
27.சீவக சிந்தாமணி, 1941. 
28.சாத்தூர் நொண்டி நாடகம், 1941. 
29.நவநீதப் பாட்டியல்-உரையுடன், 1943. 
30.திருமுருகாற்றுப்படை-பழைய உரை, 1943. 
31.நான்மணிக்கடிகை, 1944. 
32.இன்னா நாற்பது, 1944. 
33.திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும், 1944. 
34.இனியவை நாற்பது, 1949.. 
35.இராமப்பய்யன் அம்மானை, 1950. 
36.முதலாயிரம், 1955. 
37.திருவாய்மொழி. 
38.கொண்டல் விடு தூது. 

திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் தமது வெவ்வேறு பணிகளினூடே எழுதி வெளியிட்ட நூல்களின் பட்டியல். 

1930 - ஆராய்ச்சி உரை தொகுப்பு, ஆசிரியர் வெளியீடு. 
1944 - சிறுகதை மஞ்சரி, தினமணி வெளியீடு. 
1946 - Research in Dravidian Language, Madras Premier Co., Madras. 
1947 - இலக்கியச் சிந்தனைகள், பாரி நிலையம். 
1949 - தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம். 
1950 - கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு, கம்பன் கழகம், காரைக்குடி. 
1951 - உரைமணிமாலை, ஆசிரியர் பதிப்பு. 
1952 - இலக்கிய தீபம், பாரி நிலையம். 
1952 - இலக்கிய உதயம் (பகுதி 2), தமிழ்ப் புத்தகாலயம். 
1954 - இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம். 
1955 - கம்பன் காவியம், தமிழ்ப் புத்தகாலயம். 
1956 - இலக்கணச் சிந்தனைகள், பாரி நிலையம். 
1956 - திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, தமிழ்ப் புத்தகாலயம் 
1956 - History of Tamil Language & Literature, NCBH 
1956 - சொற்கலை விருந்து, பாரி நிலையம். 
1957 - காவியகாலம், தமிழ்ப் புத்தகாலயம். 
1958 - இலக்கிய விளக்கம், தமிழ்ப் புத்தகாலயம். 
1958 - ராஜி 
1959 - தமிழ்ச் சுடர்மணிகள், பாரி நிலையம் 
1959 - அகராதி நினைவுகள், தமிழ்ப் புத்தகாலயம். 
1960 - தமிழின் மறுமலர்ச்சி, பாரி நிலையம் 

மீண்டும் சென்னைக்குத் திரும்பிய திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் தமது இறுதிக் காலத்திலும் தமிழாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மர்ரே எஸ் ராஜம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திவ்யப் பிரபந்தத்திற்கு மக்கள் பதிப்பினை வெளியிடும் பணியில் தான் தன் இறுதி நாட்களை அவர் செல்விட்டுவந்தார். பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் 17.2.1956ம் ஆண்டு தமது அறுபத்து ஐந்தாவது வயதில் இறைவனடி சேர்ந்தார். 

திரு.வையாபுரிப்பிள்ளை தமது ஆய்விற்காகச் சேர்த்து வைத்த அவரது இல்ல நூலகத்து நூல்கள் அவர் காலத்துக்குப்பின் கல்கத்தாவிலுள்ள தேசிய நூலகத்திற்கு அவரது குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நூலகத்தில் இன்று கிடைக்கின்ற தமிழ் ஓலைச்சுவடிகள் அனைத்தும் பேராசிரியர் திரு.வையாபுரிப்பிள்ளை அவர்களின் சேகரிப்புக்கள் தாம். 


சீவக சிந்தாமணி பதிப்பின் போது ஏனைய பதிப்புக்களில் விடுபட்டவற்றை திருத்தம் செய்து மீண்டும் பதிப்பித்தார். இந்த நூலில் முகவுரையில் அவர் இப்படிக் குறிப்பிடுகின்றார். 
”ஆராய்ச்சிக்கு முடிவில்லை. முயற்சி மிகுந்தோரும் பிரதிகளின் உதவி பல்குந்தோறும் திருத்தங்கள் ஏற்பட்டுக் கொண்டிருத்தல் இயல்புதான். தமிழ்க்கல்வி மேன்மேலும் பரவ வேண்டுமாயின் பிழைகளைப் பிழையென உணர்தல் வேண்டும். அவற்றைப் பொதிந்து வைத்தலைக் காட்டினும் தமிழன்னைக்குச் செய்யும் பெருந்தீங்கு ஒன்றுமில்லை.” 
​என்று குறிப்பிடுகின்றார். ​இன்றும் தமிழாய்வில் ஈடுபடும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு ஆலோசனையாகவே இந்தக்கருத்து அமைகின்றது. 
திரு.வையாபுரிப்பிள்ளையின் பேத்தி டாக்டர். இராதா செல்லப்பன் அவர்கள் ஒரு தமிழறிஞர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். தமது தாத்தாவின் தமிழ்ப்பணிகளை விவரிக்கும் வகையில் வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பணி என்ற நூலினை எழுதியிருக்கின்றார். 2206ம் ஆண்டில் என்னை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சிறப்புச் சொற்பொழிவாற்ற இவர்கள் அழைத்திருந்த வேளையில் இவரது அறிமுகம் எனக்குக் கிட்டியது. இவரது தாத்தா பேராசிரியர்.திரு.வையாபுரிப்பிள்ளை என்பதை அறிந்து மகிழ்ந்து அவர் ஆய்வுகள் தொடர்பாக பல செய்திகள் பேசி மகிழ்ந்தோம். அத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பிரத்தியேகமாகத் தமது தாத்தாவின் தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்புப்பணி பற்றியும் விளக்கி தகவல்கள் பகிர்ந்து கொண்டார். இந்தத் தகவல்கள் ஒலிப்பதிவு கோப்புக்களாகத் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஒலிக்கோப்புக்களைக் கேட்க விழைவோர் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் http://www.tamilheritage.org/manulogy/radha/vaiya.html பக்கத்தில் இந்தப் பதிவுகளை கேட்டும் வாசித்தும் பயன்பெறலாம். ​