Thursday, August 23, 2018

91. வரலாறு சொல்லும் தரங்கம்பாடி



German Tamilology (சி.மோகனவேலு) என்ற ஒரு நூல் சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு நண்பர் ஒருவரின் வழி பரிசாகக் கிடைத்தது. வித்தியாசமான தலைப்பாக இருக்கின்றதே என அதனை வாசிக்கத் தொடங்கினேன். நாம் பொதுவாக பேசாத, அறியாத பல வரலாற்றுத் தகவல்கள் அந்த நூலில் இடம்பெற்றிருந்தன. அதிலும் குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து தமிழகத்திற்குச் சென்ற ஐரோப்பியர்கள் பற்றியும் அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணிகள், கல்விப்பணிகள், மருத்துவப் பணிகள் பற்றியும் பல தகவல்களை அந்த நூல் கோடிட்டுக் காட்டியிருந்தது. இந்த நூல் வாசிப்பின் தொடர்ச்சியாக மேலும் பல நூல்களை வாங்கியும், இணையத்திலிருந்து தரவிறக்கியும், வாசிக்கத்தொடங்கியிருந்தேன். பல ஆய்வுக்கட்டுரைகளும் இந்த விசயம் தொடர்பாக எனது இடைவிடாத தேடல்களில் கிடைக்கப்பெற்றேன். இந்த ஆய்வின் வழி பல்வேறு காலகட்டங்களில் ஐரோப்பாவிற்கும் தமிழகத்திற்கும் இருந்த தொடர்புகள் பற்றியும் அவை வணிகம், சமயம், நாட்டைக் கைப்பற்றி ஆளும் முயற்சி என்ற வகையிலுமான வரலாற்றுச் செய்திகள் பல எனக்குக் கிடைத்தன. இப்படிக் கிடைத்த நூல்களிலும் கட்டுரைகளும் குறிப்பிடப்படும் செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்தின் ஒரு நகரின் பெயராக தரங்கம்பாடி என்ற கடற்கரை நகரின் பெயர் எனக்கு அறிமுகமாகியது.

ஐரோப்பாவின் ஜெர்மனி, டென்மார் ஆகிய இந்த இரு நாடுகளுக்கும் தமிழகத்தின் இந்தக் குறிப்பிட்ட தரங்கம்பாடி என்ற நகருக்கும் ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் தொடர்புகள் இருக்கின்றன என்பதை எனது தேடல்களின் வழி அறிந்து கொண்டேன். இவ்வளவு வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டிருக்கும் இந்த தரங்கம்பாடி என்னும் நகருக்குச் சென்று நேரில் இந்த நகரைக் கண்டு ஆராய வேண்டும், இந்த நகரைப் பற்றில் நேரடி அனுபவம் பெறவேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது. ஆயினும் சில ஆண்டுகள் இந்த முயற்சி தடைப்பட்டுக் கொண்டேயிருந்தது. 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வடலூருக்கு ஒரு களப்பணிக்காக நான் சென்றிருந்தபோது இந்த நகருக்குச் செல்லும் வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டேன்.

என்னுடைய தரங்கம்பாடி பயணத்தில் வடலூர் நண்பர்கள் சிலரும் இணைந்து கொண்டனர். எங்கள் பயணம் வடலூரிலிருந்து தொடங்கியது. வடலூரிலிருந்து தரங்கம்பாடிக்கு ஏறக்குறைய என்பது கிமீ தூரம். வடலூரிலிருந்து புறப்பட்டு சாத்தப்பாடி, புவனகிரி, சிதம்பரம், சிவபுரி, சீர்காழி, திருக்கடையூர், சாத்தங்குடி ஆகிய ஊர்களைக் கடந்து தரங்கம்பாடி வந்தடைந்தோம். வழியில் எங்கள் பயணத்தில் பெருமாள் ஏரியைக் கடந்து பின்னர் கொள்ளிடம் நதியைக் கண்டு ரசித்தவாறே எங்கள் பயணம் அமைந்தது. தரங்கம்பாடியிலிருந்து வடக்கு நோக்கி கடற்கரையோரத்தில் பயணம் செய்தால் இலக்கிய காலத்திலிருந்து நாம் நன்கறிந்த பூம்புகார் நகரை வந்தடையலாம். தரங்கம்பாடியிலிருந்து பூம்புகார் ஏறக்குறைய 25 கி.மீ தூரம் அமைந்திருக்கும் ஒரு கடற்கரை நகரம்.

தமிழகத்தில் உள்ள இந்தத் தரங்கம்பாடி என்னும் கடற்கரை நகரத்திற்கும் ஐரோப்பாவின் டென்மார்க்கிற்கும் ஜெர்மனிக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பது ஒரு சுவாரசியமான வரலாறு.

ஜெர்மனியில் மார்ட்டின் லூதரால் 16ம் நூற்றாண்டு உருவாகி வளர்ந்த லூதரன் அல்லது சீர்திருத்த கிருத்தவ சமயம், இந்தியாவில் முதலில் தன் தடம் பதித்தது தமிழகத்தின் தரங்கம்பாடியில் தான். தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் சில நூற்றாண்டுகள் வரை உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை துறைமுகமாக விளங்கியது. டேனீஷ் ஈஸ்ட் இந்தியா வர்த்தக நிறுவனத்தைத் தொடக்கி, தரங்கம்பாடியைத் தமது வர்த்தக அமைப்பிற்குத் தளமாக அமைத்த பின்னர், டென்மார்க்கின் பேரரசர் நான்காம் ஃப்ரெடெரிக் தமிழகத்தில் சமயப் பணிக்காக சீர்திருத்த மறைபரப்பும் பணியார்களை அனுப்பி வைத்தார். ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரான ஹாலே நகரில் இயங்கிக் கொண்டிருந்த ஹாலே கல்விக்கூடத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த பேராசிரியர் ஃப்ரான்ங்கெ தனது மாணவர்கள் இருவரை இப்பணிக்காக அனுப்பி வைக்க எடுத்த முடிவுதான் தரங்கம்பாடி லூதரன் திருச்சபை உருவாகிய நிகழ்வுக்கு வித்தாக அமைந்தது.

லூதரன் திருச்சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர் ஜெர்மானியரான பார்த்தலோமஸ் சீகன்பால்க் ஆவார். தரங்கம்பாடியில் ஜெருசலம் இலவசப் பள்ளிக்கூடத்தினைத் தொடக்கியவர்; தரங்கம்பாடியில் 1712ம் ஆண்டு ஒரு அச்சகத்தை நிறுவியவர்; தமிழ் மொழியைக் கடமைப்பாட்டுடன் கற்றுத் தமிழ் இலக்கண நூற்களை லத்தீன், ஜெர்மானிய மொழிகளில் எழுதியவர்; தமிழ் மொழியின் சிறப்பினையும் தமிழக மக்களின் இலக்கிய இலக்கண மேன்மையும், வாழ்வியல் கூறுகளையும் ஐரோப்பாவில் கி.பி18ம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் விரிவாக அளித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

தரங்கம்பாடியின் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கின்றது டேனீஷ் கோட்டை. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது டென்ஸ்போர்க் கோட்டை என்றழைக்கப்படும் இக்கோட்டை. இக்கோட்டைக்குள் இன்று தமிழக தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளோடு இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புராதனச் சின்னங்களும் இன்று பாதுகாக்கப்படுகின்றன.

1616ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி டென்மார்க்கின் பேரரசர் நான்காம் கிறிஸ்டியன், டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனத்துக்குத் தன் நாட்டை பிரதிநிதித்து ஆசியாவில் பன்னிரண்டு ஆண்டுகள் வர்த்தகம் செய்யும் உரிமையை வழங்கினார்.

1620ம் ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சையை அச்சமயம் ஆண்டு கொண்டிருந்த அச்சுதநாயக்க மன்னரின் அரசவைக்கு வந்து மன்னரைச் சந்தித்து, டென்மார்க் மன்னரின் வர்த்தகம் தொடர்பான விருப்பத்தைத் தெரிவித்து, வர்த்தக புரிந்துணர்வு உடன்படிக்கைத் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் டென்மார்க் மன்னரின் பிரதிநிதியாகிய ஒவே ஜேட். இந்தப் பேச்சு வார்த்தைகள் இரு நாடுகளுக்குமிடையே வணிக ரீதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பை உருவாக்கியது. நாயக்க மன்னர் தரங்கம்பாடியில் டேனீஷ் அரச பிரதிநிதிகள் வந்து தங்கவும், வர்த்தகத்தைத் தொடங்கவும், அங்குக் கோட்டை கட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் பட்டயம் ஒன்று கையெழுத்திடப்பட்டது . இதன் அடிப்படையில் டென்ஸ்போர்க் கோட்டை இங்கு அமைக்கப்பட்டது

1622ம் ஆண்டு வாக்கில் தரங்கம்பாடியில் டேனீஷ் வர்த்தகத்தைச் செயல்படுத்தும் முழுப் பொறுப்பையும் ரோலான்ச் க்ரெப் எடுத்துக் கொள்ள, ஓவே ஜேட் டென்மார்க் திரும்பினார். தரங்கம்பாடியில் டேனீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைத் தொடங்கிய பின்னரும் கூட, டேனீசாருக்குத் தமிழகத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது ஆரம்பகாலகட்டத்தில் சிரமமான பணியாகவே அமைந்தது.

வர்த்தக முயற்சிகள் தொடங்கிய பின்னர் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் ஏற்கனவே வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு அப்பகுதியில் வர்த்தகம் நடத்திக்கொண்டிருந்த போர்த்துக்கீசியர்களும் அரேபியர்களும் அளித்த கடும்போட்டிகளையும் பல இடையூறுகளையும் சமாளித்தே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம். இது ஒரு அரிய முயற்சிதான் எனினும் கூட, ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் அடைந்த வெற்றியைப் போன்ற வெற்றியினை இந்த வர்த்தக நிறுவனம் பெறவில்லை.

டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் முப்பத்து நான்கு ஆண்டுகள் மட்டுமே இயங்கியது. இந்த முப்பத்து நான்கு ஆண்டு காலகட்டத்தில் ஏழு முறை மட்டுமே ஆசிய நாடுகளிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் வந்தன டேனீஷ் கப்பல்கள் . ஆக, ஒரு வெற்றிகரமான வர்த்தக வாய்ப்பினை இந்த டேனீஷ் வர்த்தக முயற்சி அளிக்கவில்லை. ஆயினும் ஜெர்மனியிலிருந்து வந்தடைந்த மறைபரப்பும் பணியாளர்களின் வரவும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த சமூக மாற்றங்களும் குறிப்பிடத்தக்க சமூக, வரலாற்று மாற்றங்களைத் தரங்கம்பாடி மட்டுமன்றி தமிழகத்தின் திருநெல்வேலி, கடலூர், மதராசப்பட்டினம் போன்ற பகுதிகளில் ஏற்படுத்தியது. ஜெர்மனியில் இதன் தொடர்ச்சியாக 18ம் நூற்றாண்டில் ஹாலே கல்விக்கூடத்தில் தமிழ்மொழி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நிலைகளில் தமிழ் மொழி போதிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வும் குறிப்பிடத்தக்கது.

தரங்கம்பாடி சங்ககாலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக திகழ்ந்துள்ளது. தரங்கம்பாடிக்கு அருகில் உள்ள பொறையாறு குறித்த செய்திகள் அகநானூற்றுப் பாடல்களிலும்(100:11-12) ) நற்றிணையிலும் (131:6-8) இடம்பெறுகின்றன. வணிகம் செழித்த ஒரு பகுதியாக இப்பகுதி சங்க கால இலக்கியங்களின் குறிப்புக்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது என்பது இந்த நகரின் சிறப்பை விளக்கும் வகையில் அமைகின்றது.

இங்கு டேனீஷ் கோட்டைக்கு வருபர்கள் அதன் இடப்புறமுள்ள மாசிலாமணீஸ்வரர் கோயிலைக் காணலாம். இக்கோயில் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததொரு கோயிலாகும். இது இன்று வழிபாடுகள் இன்றி பராமரிப்பின்றி காணப்படுகின்றது. கடற்கரையை நோக்கியவாறு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது இக்கோயில். இக்கோயிலில் பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் முப்பத்தேழாவது ஆட்சியாண்டில் (கி.பி.1305)ல் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் உள்ளது. ‘சடங்கன்பாடியான குலசேகரன் பட்டினத்து உடையார் மணி வண்ணீகரமுடையார்க்கு’ என்று இக்கல்வெட்டு கூறுகின்றது. இக்கல்வெட்டின் அடிப்படையில் இன்று தரங்கம்பாடி என நாம் அறியும் இவ்வூர் அன்று சடங்கன்பாடி என அழைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது இந்த ஊரை குலசேகரப்பாண்டிய மன்னன் தன் பெயரோடு தொடர்பு படுத்தி குலசேகரப்பட்டீனம் என்று பெயர் மாற்றம் செய்த செய்தியும் இக்கல்வெட்டில்னால் அறிய முடிகின்றது.

அதே போல தஞ்சை நாயக்கமன்னன் அச்சுதநாயக்கரின் முற்றுப் பெறா ஒரு கல்வெட்டும் இவ்வூரை ”சடங்கன்பாடி” எனக்குறிப்பிடுகின்றது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை தரங்கம்பாடி “சடங்கன்பாடி” என அழைக்கப்பட்டு வந்தமை இக்கல்வெட்டின் வழி அறியப்படுகின்றது. இதே கோயிலில் உள்ள மற்றுமொரு கல்வெட்டு, ‘இதுக்கு தாழ்வு சொன்னார் உண்டாகில் பதினென் விஷயத்துக்கும் கரையார்க்கும் துரோகியாகக் கடவர்களாகவும்” என்று குறிப்பிடுகின்றது. “பதினெண் விஷயம்” என்பது வணிகக் குழுவைக் குறிக்கும் என்று ஆ.சிவசுப்பிரமணியன் தனது ‘தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இக்கோயிலுக்கு வணிகர்கள் கொடைகள் தந்து பாதுகாத்த செய்தியும் கல்வெட்டுக்களினால் அறியமுடிகின்றது.

1712ம் ஆண்டு சீகன்பால்க் உருவாக்கிய தரங்கம்பாடி அச்சுக்கூடம் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றது. காலணித்துவ ஆட்சியின் போது படிப்படியாக அச்சு நூல்கள் உலகமெங்கும் உருவாகத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழகத்தில் தரங்கம்பாடியில் ஒரு அச்சுக் கூடம் இயங்கியது என்பது சிறப்பல்லவா?

இங்கிலாந்தில் இயங்கி வந்த லூத்தரன் சமய அமைப்பு பாதிரியார் சீகன்பால்கின் பணிகளுக்கு உதவும் வகையில் ஜெர்மனியிலிருந்து ஒரு அச்சு இயந்திரத்தை வாங்கி 1711ம் ஆண்டு கப்பலில் அனுப்பியது. அக்கப்பல் பிரஞ்சுக்கடற்படையால் தாக்கிக் கைப்பற்றப்பட்டு சிலகாலங்களுக்குப் பின் அக்கப்பலும் அதில் பயணித்தோரும் விடுவிக்கப்பட்டு தரங்கம்பாடிக்கு 1712ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்தடைந்தது. இந்தத் தரங்கம்பாடி அச்சுக்கூடத்தின் முதல் வெளியீடாக ஹாலே கல்விக்கூடத்து தலைமை இயக்குநர் பேராசிரியர் ஃப்ராங்கே அவர்களின் நூல் போர்த்துக்கீசிய மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டு வெளிவந்தது. அடுத்ததாக 1713ம் ஆண்டில் மேலும் சில கிருத்துவ சமய சார்பு நூல்கள் போர்த்துக்கீசிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தத் தரங்கம்பாடி அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டன. தமிழ் மொழியில் இந்த அச்சுக்கூடம் இயங்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் உணர்ந்ததால் தமிழ் அச்சு எழுத்துகள் உருவாக்கும் பணி ஜெர்மனியில் தொடங்கியது. சீகன்பால்க் அவர்கள் உருவாக்கியிருந்த லத்தீன்-தமிழ் இலக்கண நூலின் வழி தாங்கள் அறிந்து கொண்ட தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இப்பணி தொடங்கப்பட்டு தமிழ் அச்செழுத்து உருவாக்கம் நிறைவு பெற்றது. புதிதாக உருவாக்கிய அச்சு எழுத்துக்களையும் ஒரு புதிய அச்சு இயந்திரத்தையும் கப்பல் வழி தரங்கம்பாடிக்கு ஹாலே கல்வி நிறுவனம் அனுப்பியது. இந்த முயற்சியின் வழி சீகன்பால்க் தொடங்கிய தரங்கம்பாடி அச்சகம் தமிழில் நூல்களை அச்சிட்டு வெளியிட்டது. வீரமாமுனிவர் என நன்கு அறியப்பட்ட C.J.Beschi அவர்கள் இந்த அச்சுக்கூடம் வந்தார் என்றும் அவரது நூல்களும் இங்கு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப் பல வரலாற்றுச் செய்திகளைத் தன்னுள்ளே கொண்டு இன்று பெரிதும் பேசப்படாத ஒரு நகராக தரங்கம்பாடி திகழ்வது ஆச்சரியம்தான். இப்பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள், மாசிலாமணீஸ்வரர் ஆலயம், டேன்ஸ்பூர்க் கோட்டை என இந்த நகரில் பார்ப்பதற்கு ஏராளமானவை உள்ளன. இதனை வெளிப்ப்டஹ்ட்தும் வகையில் தமிழுக்கும் ஐரோப்பாவிற்கும் உள்ள தொடர்பினை வெளிக்காட்டும் வகையிலான ஒரு விழியப் பதிவை அண்மையில் தமிழ் மரபு அறக்கட்டளை வ்ளியீடு செய்திருந்தோம். அதனை https://youtu.be/FM6Wmzkrjmc என்ற பக்கத்திலிருந்து கண்டு மகிழலாம்.

நூல்கள் மட்டும் நமக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுப்பதில்லை. நகரங்களும் நம்மோடு வரலாறு பேசக்கூடிய வல்லமை பெற்றவையே!






Thursday, August 16, 2018

90. கல்லிலே கலைவண்ணம் - திருச்சி குடைவரைக்கோவில்



மலேசியாவிலிருந்து தமிழகம் செல்ல விரும்புவோருக்குத் தற்சமயம் சென்னை மட்டுமன்றி மதுரைக்கும் திருச்சிக்கும் விமான சேவைகள் கோலாலம்பூரிலிருந்தும் பினாங்கிலிருந்தும் கிடைக்கின்றன. திருச்சிக்குச் செல்லும் மலேசியத்தமிழர்களில் பெரும்பாலோர் தவறாமல் செல்வது திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலும் ஸ்ரீரங்கம் கோவிலும் தான். காவேரி பாயும் திருச்சியிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நாம் கண்டு மகிழவும் அறிந்து கொள்ளவும் ஏராளமான வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் உண்டு.

இன்று நாம் திருச்சி என அழைக்கும் இந்த ஊர் தேவாரப்பாடல்களில் சிராப்பள்ளி எனக் குறிப்பிடப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்புக்கள் மிகைந்து கிடப்பதாலோ என்னவோ திருச்சிராப்பள்ளி எனச் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது இந்த நகர். பள்ளி என்ற சொல், சமண பின்புலத்தைக் காட்டும் குறியீட்டுச் சொல். இங்கு பண்டைய காலத்தில் சமண கல்விக்கூடங்கள் நிறைந்திருந்தன. திருச்சி புனிதவளனார் கல்லூரியில் துணை நூலகராகப் பணியாற்றிய அ.ஜெயக்குமார் அவர்கள் தமது சரித்திரம் சந்தித்த திருச்சிராப்பள்ளி என்ற கட்டுரையில் 'சிரா என்ற பெயர்கொண்ட சமண முனிவர் இங்கு வாழ்ந்து பள்ளி அமைத்து சேவையாற்றி வந்தார்' எனக்குறிப்பிடுகின்றார். இதே கட்டுரையில் 'சிராப்பள்ளி என்பது சிரா என்ற சமண முனிவர் வாழ்ந்த ஒரு தவப்பள்ளியாக இருந்தது என்றும், பின் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் (கி.பி.600-630) அதை இடிக்க வைத்து அந்த இடத்தில் சிவன் கோவில் ஒன்றை எழுப்பினான் என்றும் அது சிராப்பள்ளி என அழைக்கப்பட்டதென்றும், அக்கோயிலின் பெயரே பின் நகரத்தின் பெயராகவும் அழைக்கப்பட்டதென்றும்' வரலாற்றிஞர் தி.வை.சதாசிவபண்டாரத்தார் குறிப்பிடுவதையும் காண்கின்றோம். (நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி, 2002)

திருச்சிராப்பள்ளி பாண்டிய, சோழ, பல்லவ, ஹோய்சாள, விஜயநகர மன்னர்களாலும் பின்னர் முகம்மதிய நவாப்புகளாலும், அதன் பின்னர் ஆங்கிலேயர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட நகரம். இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகத் திகழும் திருச்சி முன்னர் சிறியதொரு நகரமாகவே காணப்பட்டது. இன்று அறியப்படாத சிறு நகராக உருமாறியிருக்கும் உறையூர் தான் முன்னர் பெரிதும் அறியப்பட்ட ஒரு நகரமாக இருந்தது.   பிற்கால சோழ மன்னர்களில் சோழன் விஜயாலயன் காலம் வரை உறையூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து சோழ மன்னர்கள்  தஞ்சாவூர், பழையாறை,கங்கை கொண்ட சோழபுரம் என தமது தலைநகரங்களை மாற்றிக் கொண்டனர் என்பது வரலாறு. இந்த வரலாற்றுப் பெறும் சிறப்புக்களை இழந்து போன நகரமாக இன்று உறையூர் மாறிய சூழலில் அதன் அருகாமையில் இருக்கும் திருச்சி இன்று மாபெரும் நகரமாக வளர்ச்சி கண்டிருக்கின்றது.

இன்று நாம் தமிழகத்தில் காண்கின்ற கோயில் கட்டுமான அமைப்பிற்கு முன்னோடியாக இருப்பது குடைவரைக் கோயில்கள் எனலாம். இதற்கு முன்னர் மண்ணினாலும், மரத்தாலும், விரைவில் அழிந்து போகக்கூடிய வேறு பொருட்களினாலும் உருவாக்கப்பட்ட கோயில்கள் விரைவில் சேதப்படுவதற்கு ஒரு மாற்றாக குடைவரைக்கோயில்கள் எனும் அமைப்பு தமிழகத்தில் கி.பி 6 முதல் உருவாகத் தொடங்கியது எனலாம். அவ்வகையில் திருச்சியில் உள்ள கோயில்களில் குடைவரைக்கோயில்கள் என எடுத்துக் கொண்டால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஐந்து குடைவரைக்கோயில்கள் இருக்கின்றன. இரண்டு குடைவரைகள் மலைக்கோட்டை குன்று பகுதியிலும், இரண்டு திருவெள்ளரையிலும் ஒன்று திருப்பைஞ்ஞீலியிலும் அமைந்துள்ளன. அவற்றில் ஒரு குடைவரைக்கோயிலைப்பற்றியதுதான் இக்கட்டுரை.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளது திருச்சி மலைக்கோட்டை. இது ஒரு தொல்பழங்கால மலைப்பாறையாகும். இந்த திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வீதியில் இடது புறத்தில் இந்தக் குடைவரைக்கோயில் அமைந்திருக்கின்றது.

இந்த வீதிக்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தெரு எனப் பெயர் சூட்டியிருக்கின்றனர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்து வளர்ந்த ஊர் இது என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதே சாலையில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான மௌனமடம் ஒன்று இருக்கின்றது. இந்தத் தெருவில் வரும் போது குறுக்கு வீதி ஒன்று வரும். அது பல்லவர் குகைக்கோயில் தெரு, மலைக்கோட்டை, 11வது வார்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வீதியில் தொடர்ந்து நடந்தால் மலைக்கோட்டைப் பாறையின் சரிவில் இடதுபுறத்தில் இக்குடைவரைக் கோயிலைக் காணலாம்.

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் இரண்டு குடைவரைக்கோயில்களில் இதுவும் ஒன்று. மலைமீது உள்ள குடைவரைக் கோவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலமான கி.பி. 600-630ம் காலத்தில் அமைக்கப்பட்டது. ‘லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம்’ என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது. லலிதாங்குரன் என்பது மகேந்திரவர்மனுக்கு அமைந்திருக்கும் மற்றொரு பெயராகும். இக்குடைவரைக் கோவில் சிவனுக்காக அமைக்கப்பட்டதாகும்.

கீழேயுள்ள இக்குடைவரைக்கோயில் அளவில் பெரியது. இந்தியத் தொல்லியல் துறை இது பல்லவன் மாமல்லன் காலத்துக் கோயில் எனக்குறிப்பிடுகின்றது. இது பாண்டியர் காலத்துக் குடைவரை என சில ஆய்வாளர்கள் வேறுபடுகின்றனர். அனேகமாக இக்குடைவரைக் கோயில் நரசிம்மபல்லவன் காலத்து கலைப்பாணியாக இருக்கலாம் என்றும் கருதலாம்.

குடைவரை செதுக்கப்பட்டுள்ள பாறைக்கு முன்புறம் திறந்த வெளி அமைந்திருக்கின்றது. குடைவறையின் முன் வாசல் பகுதியில் கோயிலைத் தாங்கிய வண்ணம் நான்கு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேல் வரிசையாகப் பூதகணங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கோயிலின் உள்ளே நேர் எதிராக இரண்டு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கருவறைகளுக்கு முன்னே இடது வலது பக்கங்களில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட துவாரபாலகர்களின் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. வலது புறத்தில் அமைந்திருக்கும் கருவரைப்பகுதியில் விஷ்ணுவின் சிற்பம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் பாதத்தில் ஒரு ஆணின் சிற்பமும் ஒரு பெண்ணின் சிற்பமும் வலது இடது பக்கங்களில் வழிபடும் பாவனையில் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை இக்குடைவரையை எடுப்பித்த மன்னனும் அவனது அரசியும் வழிபடுவதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். இடதுபுற கருவறையில் சிற்பங்கள் ஏதும் இல்லை.

கோயிலின் வலது புற கருவறையினை அடுத்து வரிசையாகக் கணபதி, முருகன், பிரம்மா, சூரியன் ஆகிய சிற்பங்களும் கொற்றவையின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. கொற்றவையின் சிற்பத்திற்கு அடுத்து மற்றுமொரு கருவரை அமைந்திருக்கின்றது. இச்சிற்பங்களில் சிலவற்றின் முகப்பகுதி சிதைக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது.

இந்தக் குடைவரைக் கோவிலில் அமைந்திருக்கும் கணபதி புடைப்புச் சிற்பம், நான்கு கரங்களுடன், குட்டையான கால்களுடன் நின்ற அமைப்பில் ஆரம்பக்கால கணபதி வடிவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

இக்குடைவரையில் இருக்கும் கொற்றவை அல்லது துர்க்கையின் உருவம் முழுமைபெறாத வடிவில் உள்ளது. நான்கு கரங்களுடன் கொற்றவை காட்சி தருகின்றார். கொற்றவையின் பாதத்தில் வலது புறத்திலும் இடது புறத்திலும் இருவர் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது போன்றும், அதில் ஒருவர் தனது தலையை ஒரு கரத்தால் பிடித்துக் கொண்டும் மறு கரத்தால் கழுத்தை வாளால் வெட்டும் வகையில் இச்சிற்பம் அமைந்துள்ளது. இது கொற்றவைக்குத் தன்னை வீரன் ஒருவன் பலி கொடுத்துக் கொள்ளும் காட்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இவ்வகை நவகண்ட சிற்பங்கள் குடைவரை கோயிலிற்குள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

இதனை அடுத்து கொற்றவைக்கு வலப்புறத்தில் ஒளிவட்டத்துடன் கூடிய சூரியனின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மகர குண்டலம், கழுத்தணி என ஆபரணங்களுடன் இச்சிற்பம் உள்ளது. முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இச்சிற்பம் உள்ளது . தனது ஒரு கரத்தில் தாமரை மலரை ஏந்தியவண்னமும் மறு கரத்தில் அக்க மாலையை ஏந்தியவண்ணமும் இச்சிற்பம் அமைந்திருப்பது சிறப்பு.

னெடிய புடைப்புச் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு வாய்ந்த இக்குடைவரைக் கோயிலைப் பற்றிய ஒரு பதிவினைத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டுல்ளோம். அதனை https://youtu.be/7BfeC3NjW54 என்ற இணைய முகவரியில் காணலாம்.

தமிழகக் கோயிற் கலையில் குடைவரைக் கோயில்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை. கற்றளிகள் உருவாக்கப்படுவதற்கு முன் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட இத்தகைய கோயில்கள் பல இன்றும் தமிழக நிலப்பரப்பில் இருக்கின்றன. பல்லவர்களும் பாண்டியர்களும் எடுப்பித்துப் போற்றிப்பாதுகாத்த இத்தகைய கலைக்கோயில்கள் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புக்களாகும். இத்தகைய குடைவரைக்கோயில்களில் வழிபாட்டில் உள்ள கோயில்களில் சில பாதுகாப்பான சூழலில் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள் பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.










Wednesday, August 1, 2018

89. டல்லாஸ் நகரில் தமிழுக்குத் திருவிழா



டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 31வது விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்று பின் வாஷிங்டன் டிசி, மேரிலாண்ட், விர்ஜீனியா ஆகிய பகுதிகளிலும் தமிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 10ம் தேதி வரை எனக்கு அமைந்தது.

தமிழுக்குத் திருவிழாக்கள் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் எல்லா நாடுகளிலும் நடப்பது இந்த நூற்றாண்டின் சிறப்பு. இந்த விழாக்களில் தனித்துவமும் மிகுந்த சிறப்பும் கொண்டது வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் பேரவை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து நடத்தி வரும் பேரவை விழா. அந்த வகையில், இவ்வாண்டு பேரவையின் 31ம் விழா மிகச் சிறப்பான ஒரு விழாவாக, தமிழர் பெருமை கொள்ளும் வகையில் நடந்து முடிந்துள்ளது.

2016ம் ஆண்டுக்குப் பின்னர் 2ம் முறையாகத் தமிழ மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் எமது தொடர் முயற்சிகளைப் பற்றியும் இந்த 31வது பேரவை விழாவில் உரையாற்ற எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை மகிழ்வுடனும் பெருமையுடனும் நினைத்துப் பார்க்கின்றேன். எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் மீது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை கொண்டிருக்கும் அன்பும்
நம்பிக்கையும் மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த ஆண்டு பேரவை விழா தொடக்கம் முதல் இறுதி வரை தொய்வின்றி, ”மரபு, மகளிர், மழலை” என்ற கருப்பொருளில் நடைபெற்றது.

நிகழ்வின் மைய அமைப்பாக உருவாக்கப்பட்டிருந்த தஞ்சை பெரிய கோயிலின் வடிவம், மாநாடு நடைபெற்ற அரங்கில் நடுநாயகமாகத் திகழ்ந்தது. இதனை உருவாக்க விழா ஏற்பாட்டுக் குழுவினர் அளித்த உழைப்பை நன்றி கூறி பாராட்டுவது தகும். இந்தக் கோயில் மாநாட்டு நிகழ்வுக்குப் பின்னர் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரில் திரு.கண்ணப்பன் உருவாக்கியிருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலை நாகரிகத்தில் மூழ்கி தமிழையும் தமிழ் பண்பாட்டையும் மறந்து விட்டனர் என்ற மேம்போக்கான கூற்றினைப் பொய்யாக்கி, தமிழ் செழிப்புடனும் வளமுடனும் வாழ்கின்ற இடங்களில் அமெரிக்காவிற்குத் தனிச்சிறப்பு உண்டு என்று பறைசாற்றியது இந்தப் பேரவையின் தமிழ்த்திருவிழா.

பேரவையின் மாநாடு, அமெரிக்கத் தமிழர்களின் தொழில்நுட்ப ஈடுபாடு, அதில் தமிழ் மக்களின் வெற்றிப்பாதைகள், முயற்சிகள் என்பனவற்றை விவரிக்கும் வகையில் தொடங்கியது. பின் மாலை நேர மாபெரும் விருந்து. பின்னர் அதனைத் தொடர்ந்த அடுத்த இரு தினங்கள் தமிழ் மொழி, கலை, வரலாறு, பண்பாடு, சமூகம் என்ற வகையில் தன் பார்வையைக் குவிப்பதாக அமைந்தது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கிலும் சரி, பின்னர் மாலையில் தொடங்கப்பட்ட விருந்து நேரப் படைப்புக்கள், மாநாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கிய சிறார்கள், உச்சரிப்புச் சிறப்புடன் பேசி தமது திறனை நன்கு வெளிப்படுத்தினர். அடுத்த தலைமுறையைச் சரியாக உருவாக்குவதுதான் இந்தத் தலைமுறையின் தலையாய கடமை என்பதற்குச் சான்றாக இது அமைந்தது.

மாலை நேர விருந்து தொடங்கி ஒவ்வொரு நாள் உணவும் தமிழர் கலாச்சார உணவாக அமைந்திருந்தது. மாநாடு நடைபெற்ற அரங்கில் எட்டு இடங்களில் உணவு வழங்கப்பட்டதால் நீண்ட வரிசையைச் சற்று சமாளிக்கக்கூடியதாகவே இருந்தது. சுவையான உணவினைத் திறமையாக வழங்கிய பொறுப்பாளர்களுக்குப் பாராட்டுக்கள்.

பல அமர்வுகள் ஒரே நேரத்தில் அமைந்திருந்தன. 'எந்த அமர்விற்குச் செல்வது எதனை விடுவது?' என்பது தான் எனக்குப் பிரச்சனையாகிப் போனது. தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கத்திற்கும் தொடர் நடவடிக்கைகளுக்கும் தொடர்பான அமர்வுகளில் நானும் கலந்து கொண்டேன். பல புதிய செய்திகளையும் அறிந்து கொள்ள இந்த இணை
அமர்வுகள் எனக்கு உதவின.

மாநாட்டின் ஆரம்ப நாள் தொடங்கி நிகழ்ச்சியில் பறையோசை கேட்டுக் கொண்டிருந்தது. ஆடாத கால்களையும் ஆட வைக்கும் தன்மைகொண்டது அல்லவா பறையிசையும் நடனமும். மேலும் பரதக்கலையில் சிறந்த கலைஞரான நர்த்தகி நடராஜனையும் வரவழைத்து நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்திருந்தனர் பேரவை ஏற்பாட்டுக் குழுவினர். மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் ஆடல், பாடல், கூத்துக் கலை, நாடகம் என தமிழர் கலைவளத்தின் பல பரிமாணங்களை வந்திருந்தோர் கண்டு மகிழ்ந்தோம்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு வெற்றியடைந்ததைப் பாராட்டும் நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக, கனடா டொரொண்ட்டொ, போஸ்டன், ஹூஸ்டன் என தொடரவிருக்கும் நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பு நிகழ்வும் பயனுள்ளதாக அமைந்தது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஏற்பாடுகள், பேரவையின் 32வது விழா பற்றிய கலந்துரையாடல் என்பன பயனளிப்பதாக அமைந்தன. அரசியல் கலப்பின்றியும் தலையீடு இன்றியும் இது நடைபெறும் என பேரா.மருதநாயகம் இந்த வரவிருக்கும் மாநாடு பற்றி கூறியது வரவேற்கத்தக்க ஒன்று. இங்கு மட்டுமல்ல, பொதுவாகவே தமிழ் ஆய்வு மாநாடுகளில் அரசியல் அமைப்புக்களின் ‘மரியாதை நிமித்த’ தலையீடுகளைத் தவிர்ப்பதே சாலப் பொருந்தும். தமிழ் ஆய்வுக் கருத்தரங்குகளும் மாநாடுகளும் ஆய்வாளர்களால், ஆய்வு நோக்கத்தோடு மட்டுமே முன்னெடுக்கப்படும் முயற்சிகள் உலகெங்கும் பெறுக வேண்டும்.

நெசவாளர்களின் மனிதகுலத்திற்கான பங்களிப்பான கைத்தறி தயாரிப்புகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக எனது முதல் நிகழ்ச்சி இந்தப் பேரவை விழாவின் விருந்து நிகழ்ச்சியில் அரங்கேறியது. கைத்தறி தமிழர் உலகிற்கு அளித்த பண்பாட்டுச் சிறப்பு என்பதோடு ஆசிய நாடுகள் எங்கும் தமிழக நெசவுத் தொழில்நுட்பமே பரவியது என்பதையும் இந்த நிகழ்வில் வலியுறுத்த எனக்கு வாய்ப்பு அமைந்தது. அதனை அடுத்து தற்செயலாக ஏற்பாடாகிய ஒரு அமர்வில் தமிழகத்தில் இஸ்லாமிய மரபுகளின் வரலாற்றுப் பதிவுகள் பற்றிய உரையை வழங்கினேன். பேரவை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய இணை அமர்வில் தமிழ் ஆவணப் பாதுகாப்பிற்கான அவசியம் பற்றி வந்திருந்த ஆர்வலர்களோடு பேச வாய்ப்பமைந்தது.

ஏராளமான பேஸ்புக் நண்பர்களை நேரில் பார்த்து அறிமுகம் செய்து கொண்டதும், கடந்த ஆண்டுகளில் அமெரிக்காவின் ஏனைய மாநிலங்களில் சந்தித்த நண்பர்கள், உலகின் ஏனைய நாடுகளில் தமிழ்ப்பணி ஆற்றும் தமிழார்வலர்களையும் சந்தித்தது போன்ற நிகழ்வுகள் குடும்ப உறவுகளைச் சந்தித்தது போன்ற மனமகிழ்ச்சி அளித்தது. பல புதிய நண்பர்களை எனக்கு இந்தப் பேரவை விழா உருவாக்கிக் கொடுத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. என்னைப் போலவே வந்திருந்த பலரும் உரையாடி மகிழ்ந்த காட்சிகளை ஆங்காங்கே காண முடிந்தது.

மாலை நேர இசை நிகழ்ச்சிகளைப் பாடகர் கார்த்திக்கும் ஏனைய தமிழ்த்திரையுலக கலைஞர்களும் பிரமாண்டமாக்கினார்கள், ஏறக்குறைய 5500 பேர் கலந்து கொண்டதால் அரங்கமே மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காட்சியளித்தது.

இவ்வாண்டும் 31வது பேரவை விழாவை வெற்றிகரமான ஒரு விழாவாக ஆக்கியமையில் பெரும் பங்கு இந்த ஏற்பாட்டுக் குழுவையே சாரும். இக்குழுவிற்குத் தலைமையேற்ற திரு.கால்ட்வெல் மற்றும் அவரது குழுவினருக்கும், கடந்த ஆண்டு பேரவையின் தலைமைப் பொறுப்பேற்ற திருமதி செந்தாமரை, திரு.நாஞ்சில் பீட்டர் ஆகியோரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன். தமிழ் மரபு அறக்கட்டளையோடு இணைந்து கைத்தறி நெசவுக்கலை நிகழ்ச்சிக்காகக் கடுமையாக உழைத்த அனைத்து சகோதரிகள், கைத்தறி அணிவகுப்பில் கலந்து கொண்ட இளம் பெண்கள் அனைவரது ஒத்துழைப்பும் பாராட்டுதலுக்குரியது. பேரவை ஏற்பாட்டுக் குழுவின் பல்வேறு குழுக்களில் பணியாற்றிய தன்னார்வத்தொண்டர்கள் பல நாட்கள் இரவு பகல் எனப்பாராது இந்த மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் பதிகின்றேன்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பாதுகாப்பு, ஆவணப்பாதுகாப்பு, நடவடிக்கைகளும் வெளியீடுகளும் வழக்கம் போல் தொடரும். அடுத்த ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும், அதன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள பேரவையின் 32வது விழாவிலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையின் தமிழ் முயற்சிகளை வாழ்த்துவோம்!