Thursday, December 28, 2017

79. திருநாதர்குன்றுக்குச் சென்ற கதை



பண்டைய தமிழ் எழுத்துக்களின்  சான்றுகள் பலவற்றை மலைப்பகுதிகளில் உள்ள குகைகளிலோ அல்லது பாறைகளிலோ தான் காண்கின்றோம். அப்படி சில கல்வெட்டுக்களைக் காணச் சென்ற போது பயணத்தில் ஏற்பட்ட ஒரு சுவாரசியமான நிகழ்வு ஒன்றினை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டமே வரலாற்றுச் சின்னங்கள் பல நிறைந்த ஒரு மாவட்டம் எனத் தயங்காமல் கூறலாம். தமிழக பண்டைய வரலாறு எனப் பேச முற்படும் போது பலரும் பொதுவாக மதுரையையும் நெல்லையையும் பேசுவார்கள். ஆனால் விழுப்புரத்தைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். விழுப்புரத்தின் சிற்றூர்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பல புராதனச் சின்னங்கள் உள்ளன. அதில் மிகக் கணிசமான அளவிற்குச் சமண சமயம் சார்ந்த சின்னங்கள் இருப்பதைக் குறிப்பிடலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையின் வடக்கே திருநாதர்குன்று எனும் ஒரு சிறிய மலை உள்ளது. இம்மலையில் உள்ள பாறைச்சிற்பம் மட்டுமல்ல, கல்வெட்டும் கூட, தமிழ் எழுத்து, தமிழ் மொழி வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ள ஒன்றாக அமைகின்றது.

இந்த மலை மீது மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முதிர்ந்தநிலை தமிழி (பிராமி) எழுத்திலிருந்து வட்டெழுத்தாகத் தமிழ் வளர்ந்த நிலையில் உள்ள, மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இது என்ற சிறப்பைப் பெறுவதாக இக்கல்வெட்டு திகழ்கின்றது. இந்த திருநாதர்குன்றில் உள்ள தமிழ் பிராமியிலிருந்து வட்டெழுத்துக்கு மாற்றம் பெறுவதாகக் கருதப்படும் கல்வெட்டில்தான் ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து முதன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.   வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது முக்கியமானதொரு சான்று அல்லவா?

இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வடக்கிருந்து உயிர்நீத்தார் என்ற செய்தியையும் சொல்கின்றது. இது கி.பி.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எனக்கூறலாம்.

மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைச் சொல்கின்றது. அதே போல மேலும் பல்லவ காலத்துத் தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது. இப்படி வரிசை வரிசையாகக் கல்வெட்டுக்கள் நிறைந்த ஒரு குன்றுப்பகுதிதான் இது. ஆனால் என்ன காரணமோ... இன்றளவும் தமிழக தொல்லியல் துறையினாலும் சரி, இந்தியத் தொல்லியல் துறையினாலும் சரி.. பாதுகாக்கப்படும் ஒரு புராதனச் சின்னமாக இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனை வேதனை என வருந்துவதா அல்லது குறைபட்டுக் கொள்வதா?

இம்மலையின் உச்சியில் ஒரு பெரிய கற்பாறை உள்ளது. அதில் சமண அறத்தைப் பரப்பிய இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் திருமேனிகள் செதுக்கப் பட்டுள்ளன. அவை தீர்த்தங்கரர்கள் அனைவரும் அமர்ந்த நிலையில், இருவரிசைகளில் ஒரே அளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியிலும் முக்குடை காணப்படுகிறது. தீர்த்தங்கரர்களுக்கே உரித்தான தனித்தனி சின்னங்கள் என்பன இல்லாமல் இவை காணப்படுகின்றன. மிக அழகியதொரு கலை வேலைப்பாடு இது. இப்படியும் ஒரு வடிவமா என முதன் முதலில் இதனைப் பார்த்தபோது நான் அதிசயித்துப் போனேன். இந்தக் கலைவடிவம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இதனைப் பற்றி அறிந்தோர் கூட மிகக் குறைவு என்பதையும் எனது அப்பகுதிக்கான பயணத்தின் போது அறிந்து கொண்டேன்.

சிற்பத் தொகுதி இருக்கும் கற்பாறையின் மேற்குப்பகுதியில் ஒரு குகை காணப்படுகிறது.இந்தக் குகைப்பகுதியில் சமண முனிவர்கள் தங்கி இருந்து இங்கே சமண சமயத்தை வளர்த்தனர்.

மலையின் நடுப்பகுதியில் ஒரு பெரிய பாறையில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், சிலையின் மேற்பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளன. ஆனால் அது இரண்டாக உடைக்கப்பட்டு தற்போது வீழ்ந்து கிடக்கிறது. பாறைகளை உடைத்துச் சேதப்படுத்தும் முயற்சி நடந்தபோது இங்கு மக்கள் ஒன்று கூடி அந்த முயற்சிகளைத் தடுத்தமையால் இன்று இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பகுதி பொதுமக்களால் பாதுகாக்கப் பட்டிருக்கின்றது என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

செஞ்சி விழுப்புரம் பதிவுகளுக்காக சென்னையிலிருந்து நாங்கள் புறப்பட்டதிலிருந்து எங்கள் வாகனப்  பயணம் மிகச் சுவாரசியமாக இருந்தது. 2 நாட்கள் குறுகிய கால பயணமாக ஏற்பாடு செய்திருந்தேன். என்னுடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களும் இப்பயணத்தில் சேர்ந்து கொண்டனர். சென்னையில் இருந்த நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்த வாகன ஓட்டுநர் காலையில் 4 மணிக்கு எங்களை அழைக்க வந்து விட்டார்.

காரில் ஏறி அமர்ந்ததும் பயணத்தில் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி பேச ஆரம்பித்தோம். ஆனால் வாகன ஓட்டுநர் எங்களிடம் எதுவும் பேசவில்லை. எங்கள் கலந்துரையாடலிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருக்குச் செவிப்புலன் சற்று பாதிக்கப்பட்டிருப்பதுதான் எனத் தெரிந்து கொண்டோம்.

முதலில் எங்களிடம் அவர் ஏதும் பேசவுமில்லை. ஆனால் திண்டிவனம் வரும் வழியில் எங்களிடம் ஏதும் கூறாமல் சட்டென்று வாகனத்தை அவரே நிறுத்தினார். என்ன ஏதென்று பார்த்தால் அங்கிருந்த இரணியம்மன் ஆலயத்தில் தானே காசு கொடுத்து சூடம் கொஞ்சம் வாங்கி ஏற்றி காரின் முன் வைத்து சாமி கும்பிட்டார். நாங்களும் சாமி கும்பிட்டுக் கொண்டோம்.

வழியில் நாங்கள் பேசிக் கொண்டு வந்த விசயங்களை வாகனமோட்டி ஓரளவு கேட்டுக் கொண்டே வந்திருக்கின்றார்.  அவருக்குத் தயக்கம் நீங்கியிருக்க வேண்டும்.    தானும் எங்களுடன் கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் சில முயற்சிகளைச் செய்தார். திடீரென்று எங்களை நிறுத்தி அங்கு ஒரு கோயில் இருக்கின்றது.. போகனுமா என்பார்.. நாங்கள் ”நேரம் ஆகிவிட்டது.. மேல் சித்தாமூர் மடம் போகனும் .. ஆக நேராகச் செல்லுங்கள்” எனச் சொல்லியவுடன் புரிந்து கொண்டார். பின்னர் மேல்சித்தாமூரில் எங்கள் பதிவுகளை முடித்ததும் அவரே அங்கிருந்த திரௌபதி அம்மன் கோயிலில் வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு ”இந்தக் கோயிலையும் படம் பிடிங்கள்” என்றார். நாங்கள் அவரது ஆர்வத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். அவருக்காக என்று மட்டுமில்லை. உண்மையில் வித்தியாசமானதொரு கோயிலாகவும் அது இருந்தது. நாங்கள் உள்ளே சென்று புகைப்படங்கள் பிடித்துக் கொண்டு வந்ததில் அவருக்கு மகிழ்ச்சி.  அவர் முகத்தில் தோன்றிய புன்னகை அதனை உணர்த்தியது.

அங்கிருந்து விழுப்புரம் செல்ல வேண்டும் என்று புறப்பட்டோம்.  வழியில் நிறுத்தி அங்கே ஒரு முனீஸ்வரன் இருக்கின்றார் பாருங்கள் எனச் சொன்னார். ”ஆகா.. இப்படியல்லவா நமக்கு உதவியாளர் தேவை” என அவரைப் பாராட்டிக் கொண்டே அங்கும் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தோம். அன்று நாள் முழுதும் எங்களுடன் இணைந்து நான் செய்த பதிவுகளையெல்லாம் உற்று பார்த்து கவனித்துக் கொண்டே வந்தார்.

அன்று மாலை நாங்கள் எண்ணாயிரம் மலை பதிவை செய்து விட்டுப் இப்பதிவில் மேல் குறிப்பிட்ட திருநாதர்குன்று சென்று அங்குப் பதிவை முடித்து வீரானாமூர் இருளர் குடியிருப்பு பகுதிக்குச் செல்ல வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். மிகுந்த ஆர்வத்திலிருந்தார் எங்கள் திருவாளர் வாகனமோட்டியார். நாங்கள் திருநாதர்குன்று மலைப்பகுதிக்குச் செல்ல வயல் வெளியைக் கடக்க வேண்டியிருந்தது. ஆக, அவரிடம் நீங்கள் வாகனத்தை இங்கே விட்டு விடுங்கள். நாம் நடந்து செல்வோம் எனச் சொல்லி நடந்து சென்று விட்டோம். அவரும் எங்களுடன் மலைப்பகுதிக்கு நடந்தே வந்து சேர்ந்தார். பின்னர் பதிவினைச் செய்து முடித்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தோம். தூரத்தில் பார்த்தால் வயல் வரப்பில்  ஓட்டிக் கொண்டே வாகனத்தை மலை அடிவாரத்திற்குக் கொண்டு வந்து விட்டார் அந்த ஆர்வம் மிக்க வாகனமோட்டி.

வாகனம் அருகில் வந்து விட்டது என்பதால் அன்றைய பதிவிற்காக வந்திருந்த ஏனைய ஆய்வாளர்களிடம் நன்றி சொல்லி நாங்கள் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.

ஆனால் ...

எங்களை ஏற்றிக் கொண்ட பின்னர் அவருக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் சேர்ந்திருக்க வேண்டும். வேகமாகச் செல்ல வேண்டும் என்ற ஆர்வக்கோளாரில் எங்கள் வாகனமோட்டியார் வாகனத்தைச் சற்று ஓரம் திருப்பியதில்  வாகனம் அப்படியே வயலுக்குள் இறங்கி விட்டது.

எங்களுக்கு விடையளித்துச் சென்ற ஆய்வாளர்களும் நண்பர்களும் எங்கள் நிலையைப் பார்த்து ஓடிவந்தனர். வாகனத்தை அப்படி இப்படி நகர்த்தினால் வாகனம் சற்றும் நகரவில்லை. பின்னர் அந்தக் கிராமத்தைச் சார்ந்தவர்களும், வயலில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மேலும் இருவரும் எங்களுக்கு உதவ வந்து சேர்ந்தனர்.

எங்களுடன் இருந்த தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலரும் என எல்லோரும் பெரிய பாறைக்கல் ஒன்றை ஒரு சக்கரத்தின் கீழே வைத்து வாகனமோட்டியை ஓட்டச் செய்து ஒரு வழியாக வாகனத்தை வெளியே கொண்டு வந்தனர்.

எங்கள் வாகனமோட்டியோ வாகனத்தை மீட்டு விட்டோம் என்ற மிகுந்த  மகிழ்ச்சியுடன் தொடர்ந்து வாகமோட்டினார். மாலை பதிவெல்லாம் முடிந்து இரவு செஞ்சி சேர்ந்து பின்னர் மறு நாளும் எங்களுடன் இருந்து நாங்கள் கேட்டுக் கொண்ட இடங்களுக்கெல்லாம் பத்திரமாக எங்களை இந்தப் பயணத்தில் அழைத்துச் சென்றார்.

எங்களுடன் வாகனமோட்டியாக வந்திருந்த வாகன ஓட்டுநரும் இந்தப் பயனத்தில் ஒரு வரலாற்று ஆர்வலராக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தப் பயண அனுபவம் இப்போது நினைத்தாலும் மறக்க முடியாத குதூகலமான ஒரு அனுபவம். அந்தப் பயணத்தின் போது செய்யப்பட்ட வரலாற்றுப் பதிவு https://youtu.be/7Soskq3M3H8 என்ற பக்கத்தில் வீடியோ விழியக் காட்சியாக தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக மலர்ந்தது. இப்படிப் பல வரலாற்றுச் சின்னங்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் காணக் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வதும், வாய்ப்பமைந்தால் நேரில் சென்று பார்த்து வருவதும் நமது தமிழர் வரலாற்றைப் பற்றிய சரியான புரிதலுக்கு நிச்சயம் வழிவகுக்கும்!







Friday, December 15, 2017

78. பொய்யாத வரலாறு



மலேசிய மாநிலங்களில் மலாக்கா மாநிலத்திற்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. நெகிரி செம்பிலான் மாநிலத்தை வடக்கிலும், மேற்கிலும் தெற்கிலும் ஜொகூர் மாநிலத்தையும் எல்லையாகக் கொண்ட மாநிலம் இது. மலேசிய வரலாற்று மாநிலம் என்ற சிறப்புடன் ஐக்கிய நாடுகள் சபையினால் பாதுகாக்கப்பட வேண்டிய உலக வரலாற்றுப் பகுதி என அடையாளம் காணப்பட்டு 2008ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி அதிகாரப்பூர்வமாகப் பிரகடணப்படுத்தப்பட்டது மலாக்கா.

பண்டைய மலேசியாவை எடுத்துக் கொண்டால், இன்று தீபகற்ப மலேசியா என நாம் குறிப்பிடும் பகுதியில் குறிப்பிடத்தக்க சில அரசுகள் நீண்ட காலம் ஆட்சி செய்துள்ளன. இந்த நிலப்பகுதியானது வணிகக் கடல் வழிப்பயணத்தில் அமைந்துள்ளது என்பது மிக முக்கியமானதொரு காரணமாக அமைகின்றது. இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும், பசிபிக் பெருங்கடல் பகுதிக்கும் இடையே மிக நூதனமான அமைப்பில் மலேசிய தீபகற்பமும் இந்தோனீசியத் தீவுகளும் அமைந்துள்ளதைப் புவியியல் கண்ணோட்டத்தில் சிறப்பித்துக் குறிப்பிடலாம். இந்தச் சிறப்பு இந்திய வணிகர்களும் சீனா, கொரியா ஜப்பான் போன்ற தூரக்கிழக்காசிய நாடுகளிலிருந்து வணிகர்கள் கடல் மார்க்கமாக வந்து செல்லும் போது ஓய்வெடுக்கும் ஒரு நிலப்பகுதியாக அமைந்திருந்ததைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பண்டைய மலேசிய நிலப்பகுதியை ஆட்சி செய்த முக்கியப் பேரரசுகளாக வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுபவை ஃபூனான், ஸ்ரீவிஜயா, மஜபாகிட், கங்கா நெகாரா ஆக்கியவை . 11ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரச் சோழனின் படற்படை தாக்குதல் மலாயா தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் அன்று முக்கியத் துறைமுகங்களுள் ஒன்றாக இருந்த கடாரத்தில், அதாவது இன்றைய கெடா மாநிலத்தில் நிகழ்ந்தது. ராஜேந்திர சோழன் ஸ்ரீவிஜயப் பேரரசைப் போரில் வென்றமைக்கு வெவ்வேறு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன என்றாலும் இப்பகுதியில் நிலைப்பெற்றிருந்த வணிகத்தைக் கையகப்படுத்தும் முயற்சியாகவும், அன்றைய மலாயாவின் வளங்களைக் கருத்தில் கொண்டு இப்பகுதியைத் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியாக சோழப்பேரரசு வைப்பதற்கும், தனது பேரரசை விரிவு செய்யும் முயற்சிகளில் ஒன்றாகவும் இம்முயற்சியைத்  தயக்கமின்றிக் காணமுடிகின்றது.

கடாரத்தைக் கைப்பற்றினாலும் கூட இங்கே சோழ அரசு நிலைப்பெற்றிருந்தது ஏறக்குறைய 99 ஆண்டுகள் மட்டும் தான். படிப்படியாகத் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மலாயா தீபகற்பத்தில் சோழர் ஆதிக்கத்தைக் குறைத்து விட்டது. அதன் பின்னர் அரேபியர்களின் தாக்கத்தினால் இஸ்லாமிய மதம் கடாரப்பகுதியில் பரவ ஆரம்பித்ததன் விளைவாக அப்பகுதியை ஆண்டு வந்த மன்னர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவி இஸ்லாமிய பண்பாட்டுக் கூறுகளை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் 12ம் 13ம் 14ம் நூற்றாண்டுகளில் கெடா ஒரு பேரரசாகத் திகழவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அடிப்படையில் ஒரு மீனவர் கிராமமாக இருந்த மலாக்கா கடாரத்திலிருந்து தெற்குப் பகுதியில் இருக்கும் ஒரு பகுதியாகும் . 1377ம் ஆண்டில் இன்றைய இந்தோனீசியாவின் ஒரு பகுதியில் சிற்றரசராக இருந்த பரமேசுவரா, மஜபாஹிட் அரசின் தாக்குதலால் அங்கிருந்து தப்பித்து வெளியேறுகின்றார். இன்றைய சிங்கப்பூருக்கு வந்து அங்கே 1389 முதல் 1398 வரை ஆட்சி செய்கின்றார். அங்கேயும் அவரை மஜபாஹிட் அரசு ஆட்சி செய்ய விடவில்லை. சிங்கப்பூர் பகுதியையும் கைப்பற்றும் நோக்கில் படையெடுத்த மஜபாஹிட் அரசிடமிருந்து தப்பியோடி மலாக்காவிற்குத் தனது பரிவாரங்களுடன் வந்து சேர்கின்றார் மன்னர் பரமேசுவரா. பெர்த்தாம் நதிக்கரையில் 1402ம் ஆண்டு வந்தடைகின்றார். மலாக்கா தான் தன் புதிய ராஜ்ஜியத்தை அமைக்க ஏதுவான நகரம் என்ற நம்பிக்கையுடன் அங்கே முடிசூட்டிக் கொண்டு ஒரு மன்னராக ஆட்சியைத் தொடங்குகின்றார் பரமேசுவரா. மலாக்கா துறைமுகத்தை விரிவாக்குகின்றார். இந்தியா சீனா மட்டுமன்றி ஐரோப்பாவிலிருந்தும் வணிகர்கள் வந்து தங்கியிருந்து வணிகம் செய்து செல்லும் பெறும் துறைமுகப்பட்டினமாக மலாக்கா வளர்ச்சி பெருகின்றது . அரேபிய இஸ்லாமிய இளவரசியை மணத்து இஸ்லாமிய மதத்தைத் தழுவுகின்றார் பரமேசுவரா. இதனால் தனது பெயரையும் சுல்தான் இஸ்கந்தர் ஷா என மாற்றிக் கொள்ள, மலாக்கா பேரரசு முழுமையான இஸ்லாமியப் பேரரசாக உருமாற்றம் பெற்றது.

1511 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கோவாவிலிருந்து போர்த்துக்கீசியரான அல்ஃபான்சோ டி அல்புகர்க் மலாக்காவைப் பற்றி கேள்விப்பட்டு அங்கிருந்து கடல் பயணம் மேற்கொள்கின்றார். 18 கப்பல்களுடனும் 1200 போர் வீரர்களுடனும் வந்து மலாக்காவைத் தாக்கி கைப்பற்றுகின்றார். இவர் காலத்தில் மலாக்கா முற்றிலுமாக போர்த்துக்கீசியர் வசமாகியது. இந்தியாவிலும் பெரிதாக அறியப்பட்ட கத்தோலிக்க பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் கி.பி. 1545, 1546, 1549 ஆகிய ஆண்டுகளில் மலாக்கா வந்து இங்கு கிருத்துவ சமயத்தைப் பரப்புவதற்காகப் பயணம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய மதமும் கிருத்துவ மதமும் இந்த அரசியல் மாற்றங்களினால் மலாக்காவிலும் மலாயாவிலும் முதன்மை பெற்ற நிகழ்வுகள் நடந்தன என்ற போதிலும் தமிழகத்திலிருந்து வருகை புரிந்த தமிழர்களும் சீனாவிலிருந்து வந்து சேர்ந்த சீன வணிகர்களும் தங்கள் இந்து சமய மற்றும் பௌத்த சமய வழிபாட்டுக்கூறுகளையும் மலாக்காவில் அறிமுகப்படுத்தத் தொடங்கியிருந்தனர். ஏற்கனவே மலாயாவில் இருந்த ஏராளமான இந்து மற்றும் பௌத்த ஆலயங்கள் போர்களினாலும் அரசியல் மாற்றங்களினாலும் பெருமளவு சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன. அந்தச் சூழலில் மீண்டும் ஒரு ஆலயம் அமைக்கும் முயற்சியாகத் தமிழகத்திலிருந்து மலாக்கா வந்து அங்கேயே தங்கி தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்த தமிழ் வணிகர்கள் குழு இங்கு ஒரு விநாயகர் ஆலயத்தை 1781ம் ஆண்டு அமைத்தது. இந்த ஆலயம் தான் இன்று நாம் மலாக்காவில் காணும் பொய்யாத விநாயகர் ஆலயம்.

அளவில் சிறியதுதான் என்றாலும் மலாக்கா நகரின் ஜோங்கர்  ஸ்ட்ரீட் பகுதியில் நகர மையத்தில் வணிகத்தலங்கள் இருக்கும் கட்டிடங்களின் வரிசையில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சுவாமியின் பெயர் ஸ்ரீ பொய்யாத வினாயகர்மூர்த்தி. இன்று இக்கோயில் மலாக்கா நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகின்றது. மலாக்காவிற்கு வந்து செல்லும் சுற்றுப் பயணிகள் பார்த்து வழிபட்டுச் செல்லும் ஒரு இடமாகவும் இது சுற்றுலா கையேட்டில் இடம்பெறுகின்றது.

ஸ்ரீ பொய்யாத வினாயகர்மூர்த்தி கோவிலில் கருவறையில் சிறிய வடிவத்திலான பிள்ளையார் சிலை வழிபாட்டில் இடம்பெறுகின்றது. கோவிலில் முருகன், மீனாட்சி அம்மை, சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னிதிகளும் உள்ளன. கோவிலின் பின்புறத்தில் பழமையான ஒரு கிணறு உள்ளது. இது இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றது. மிகத் தூய்மையாக ஆலயம் பராமரிக்கப்படுகின்றது.

எனது அண்மைய பயணத்தில் மலாக்காவிற்குச் சென்றிருந்தபோது இக்கோவிலுக்கு நேரில் சென்று பார்த்து வந்தேன். தமிழகத்திற்கும் மலேசியாவிற்கும் இடையிலான தொடர்பு என்பது இன்றைக்கு நேற்று வந்த தொடர்பல்ல. இது பன்னெடுங்காலமாக் நீடித்து இருக்கும் தொடர்பு. இத்தொடர்புகளுக்குச் சாட்சியாய் அமைந்த சின்னங்கள் பல சீரழிக்கப்பட்ட நிலை இப்போது காணப்பட்டாலும் கூட இன்றைக்கு நம் கண்ணெதிரே இருக்கும் ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்த 300 ஆண்டு பழமையான விநாயகர் ஆலயத்தை நாம் குறிப்பிட வேண்டும். மலேசியாவின் மலாக்காவிற்குச் செல்பவர்கள் இந்த வரலாற்றுப் பின்னணியையும் அறிந்து கொண்டு இக்கோவிலுக்குச் சென்று வருவது நமது பண்டைய தமிழ் மக்களின் முயற்சிகளைப் பெருமைப்படுத்தும் ஒரு நிகழ்வாகவும் அமையும் என்றே கருதுகிறேன்!

Friday, December 1, 2017

77. ஓர் இனிய தமிழ்த் திருமணம்


மலேசியாவிலிருந்து நான் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்று ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக நான் மலேசியாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஓரிருமுறை வந்து செல்வது வழக்கம். நண்பர்கள் இல்லத்தில் நடைபெறும் பல விசேஷங்களில் கலந்து கொள்ள முடியாத சூழல் தான் அனேகமாக எனக்கு அமைந்துவிடும். நான் மலேசியாவிற்கு வருகின்ற விடுமுறை நாட்களில் பல சமூக நிகழ்ச்சிகளுக்காகவும், அலுவல்களுக்காகவும் எனது நாட்கள் செல்வாகிவிடுவதாலும் கூட சில குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலாத நிலை எனக்கு ஏற்பட்டு விடுவதுண்டு.

மலேசியாவிற்கு வந்தால்தான் தமிழ்த்திருமணங்களைக் காண முடியுமா என சிலருக்குக் கேள்வியும் எழலாம். ஜெர்மனியிலும் ஐரோப்பிய சூழலிலும் கூட எனது தமிழ் நட்புச் சூழலில் அவ்வப்போது நடைபெறுகின்ற திருமண நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள் எனக்கு வந்து சேரும். ஆயினும் அத்தகைய நிகழ்வுகளில் அங்கு கலந்து கொள்ள எனக்கு நேர அவகாசம் கிடைப்பதில்லை. அலுவலகப் பணிகளிலும் தமிழ் ஆய்வுப் பணிகளிலும் மூழ்கி விட்டால் ஏனைய நிகழ்வுகளில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்றாகிப் போயிவிடும் சூழல் தான் இயல்பாக எனக்கு அமைந்து விடுகின்றது.

இந்த நிலையில் இம்முறை  எனது மலேசியப் பயணம் மிக சுவாரசியமாகத்தான் அமைந்து விட்டது. 2 வார விடுமுறை எடுத்துக் கொண்டு மலேசியா வந்து சேர்ந்தேன். ஆனால் திடீரென்று தமிழகத்தில் சில நிகழ்வுகள் ஏற்பாடாகியமையினால் எனது திரும்பிச் செல்லும் விமான டிக்கட்டை ரத்து செய்து விட்டு இந்தியா செல்லும் சூழல் எனக்கு ஏற்பட்டது. இப்போதெல்லாம் சில விமான நிறுவனங்கள் டிக்கட்டை மாற்றம் செய்யச் சொல்லிக் கேட்டால் ரத்து செய்வது மட்டும் தான் முடியும் என கறாராகச் சொல்லி விடுகின்றனர். ஆக, வேறு வழியில்லாமல் விமானப் பயண டிக்கட்டை ரத்து செய்து விட்டு தமிழகம் சென்று அங்குள்ள பணிகளை முடித்து விட்டு திரும்பும் போது மலேசியாவில் மேலும் சில நாட்கள் இருக்க வேண்டிய தேவை ஏற்படவே இன்னும் சில நாட்கள் இருந்து தேங்கிக்கிடக்கும் சில பணிகளை முடித்து விட்டுச் செல்வது என்று நினைத்து விட்டேன். இந்த இடைப்பட்ட வேளையில் நண்பர் திரு.ஓம்ஸ் தியாகராஜன் அவர்களின் புதல்வர் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு கிடைத்தது. நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் நான் கலந்து கொண்ட ஒரு திருமண நிகழ்வு இது என்று தான் சொல்ல வேண்டும்.

பொதுவாக மலேசியாவில் நடைபெறுகின்ற திருமணங்கள் பெரிய ஆலயங்களிலோ அல்லது திருமண மண்டபங்களிலோ நடைபெறும். ஆனால் இந்தத் திருமணமோ பெரிதும் அறியப்படாத ஒரு செம்பனைத்  தோட்டத்தில், அங்கிருக்கும் ஒரு குல தெய்வக் கோயிலில் ஏற்பாடாகியிருந்தது. கோலாசிலாங்கூர் ஜெராம் தோட்டம் செம்பனைத் தோட்டங்கள் நிறைந்த ஒரு பகுதி.  அங்கு புக்கிட் மெர்பாவ் பகுதியில் யானை மலை என அழைக்கப்படும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி குலதெய்வ ஆலயம் ஒன்று இருக்கின்றது. அந்தக் கோயிலில் தான் இந்தத் திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது என்பதை அறிந்து கொண்டபோது ஆச்சரியமும் இதனை நேரில் சென்று திருமண நிகழ்வுகளைக் கண்டு வர வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது.

காலை 9 மணிக்குத் திருமணம் என்பதால் கோலாலம்பூரிலிருந்து நண்பர்களுடன் ஒரு வாகனத்தில் காலை 7:30 மணி வாக்கிலேயே புறப்பட்டு விட்டோம்.  தமிழர்கள் வாழ்ந்த செம்பனைத் தோட்டம் தான் என்றாலும் கூட இன்று அதிகம் அறியப்படாத ஒரு பெயராக இப்பகுதி இருந்ததால் வாகனத்தில் GPS கருவியை பயன்படுத்தி முகவரியைக் கொடுத்து பயணிக்க ஆரம்பித்து விட்டோம். செல்லும் வழியெல்லாம் மலாய்க்காரர்கள் நிறைந்து வாழும் கிராமங்களும் ஆங்காங்கே மாரியம்மன், முருகன் கோயில்களும் கண்களில் தென்படவே செய்தன. இவ்வளவு தூரத்தில் இருக்கின்றதே. பொது மக்கள் இந்த இடத்திற்கு வந்து விடுவார்களா, என்ற ஐயத்தை மறைத்தது அங்கே வரிசை வரிசையாக வந்திருந்த ஏராளமான கார்களும் பேருந்தும்.

திருமணம் நடைபெற்ற கோயில் பகுதியில் இரண்டு பெரிய கோயில் வளாகங்கள் இருக்கின்றன. முதலில் நம்மை வரவேற்பது ஸ்ரீ வேங்கை முனி கருமாரியம்மன் ஆலயம். இது வடிவத்தில் ஒரு சீனர் கோயிலை ஒத்த அமைப்பில் கட்டப்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தின் உள்ளே பல சன்னிதிகள் இருக்கின்றன. பெயர் தெரியாத பல புதிய கடவுளர்களின் சிலைகளோடு மலேசியத் தோட்டப்புரக் கோயில்களில் நமக்கு நன்கு தெரிந்த முனியாண்டி சாமி, பேச்சாயி அம்மன், மதுரை வீரன், சுடலை மாடன், சூலம் ஆகிய சன்னிதிகளோடு வேங்கை முனி சாமியின் சன்னிதியும் உள்ளது. இதில் அதிசயமாக ஒரு சன்னிதிக்கு மேலே இஸ்லாமியர்கள் வழிபடும் பிறை நிலாவும் சந்திரனும் இருக்கும் வகையில் ஒரு சன்னிதியும் உள்ளது. இந்த சன்னிதிக்குள் தர்கா போன்ற அமைப்பில், ஆனால் சிறிய வகையில் ஒரு கல்  வைக்கப்பட்டு வழிபடுவதும் உள்ளது. மதுரைவீரன் சன்னிதிக்கு முன்னர் பெரிய அமைப்பிலான ஒரு குதிரையும் அதனைச் செலுத்தும் ஒரு குதிரை வீரனது சிலையும் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் இருப்பது ஒரு மலையடிவாரப்பகுதி என்பதால் குரங்குகள் இங்கு ஏராளம் குவிந்திருக்கின்றன. உள்ளே சென்று சன்னிதிகளைப் பார்த்து வரும் போது இந்தக் குரங்குகள் வருவோரை எவ்வகை சேட்டைகளும் செய்து அச்சுறுத்தவில்லை. மாறாக ஆங்காங்கே தாவி ஓடி இந்தக் கோவில் சூழலை இனிதாக்குகின்றன.

இதற்கடுத்தாற்போல உள்ள மற்றொரு கோயில் தான் திருமணம் நடைபெற்ற மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி குலதெய்வ ஆலயம். இங்கு ஆலயத்தின் முகப்பிலேயே பெரிய விநாயர் சிலை இருக்கின்றது. கோயிலின் உள்ளே இடது புறம் காளியம்மன் சன்னிதி வைக்கப்பட்டுள்ளது.  கருவரையில் மிக அழகிய முறையில் அலங்கரிக்கப்பட்ட புதுமை படைப்பாக அங்காளபரமேஸ்வரி அம்மன் காட்சி தருகின்றார்.  நாம் பொதுவாகப் பார்த்துப் பழகிய வடிவிலிருந்து மாறுபட்ட வகையில் மேலும் ஒரு சன்னிதியில் 16 கரங்களுடன் அங்காள பரமேஸ்வரி இளம் வாலைக்குமரியாகவும் காட்சி தருகின்றார்.

நாங்கள் சென்றடையும் போது  திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மாப்பிள்ளை டாக்டர்.தி.பழனீஸ்வரனும் மணமகள் டாக்டர்.த. நிஷாவும் மணமக்கள் கோலத்தில் சடங்குகள் செய்யப்படும் இடத்தில் அமர்ந்திருந்தனர். செவ்வாடை உடுத்திய பூசாரி ஒருவர்  தமிழில் சடங்கினை விவரித்துச் சொல்லி இரு வீட்டாருக்குமிடையிலான திருமணச் சடங்குகளை நடத்தி வைத்துக் கொண்டிருந்தார். வைதீக முறையில் வேதம் ஓதப்படவில்லை. மாறாக தமிழில் திருமண விளக்கம் வழங்கப்பட்டது. சடங்குகள் ஒவ்வொன்றையும் அதனைத் தனித்தனியே குறிப்பிட்டுச் சொல்லி, அதனை விளக்கி மணமக்களையும் அவர்கள் பெற்றோரையும் திருமணச் சடங்கில் ஈடுபடுத்தியிருந்தார் கோயில் பூசாரி ஐயா.  தமிழகத்தின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திலிருந்து செவ்வாடைத்தொண்டர்கள் சிலரும் இந்த நிகழ்வில் அருகிலிருந்து திருமண நிகழ்வினை வாழ்த்த வந்திருந்தனர்.  மஞ்சள் அரிசி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கப்பட்டது. மங்கல நாண் மணமக்கள் பெற்றோர்கள் கைகளில் வழங்கப்பட்டது. வந்திருந்த அனைவரும்  மஞ்சள் அரிசி தூவ  மணமகன் மணமகளுக்கு மங்கள நாண் பூட்டினார். திருமணத்தின் முழு நிகழ்விலும் நாதஸ்வர இசைக்கச்சேரி வாசிக்கப்பட்டது. உள்ளூர் மலேசிய தமிழ்க்கலைஞர்களே இதில் நாதஸ்வர இசைக்கருவியை இசைத்தனர். நாதஸ்வர இசையை வாசித்த இருவரில் ஒருவர் பெண்மணி என்பதும் இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு மெருகூட்டுவதாக அமைந்தது.

குலதெய்வ வழிபாடு என்பது பண்டுதொட்டு தமிழர் பண்பாட்டில் நிலைபெற்றிருக்கின்றது. தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து மலேசியா வந்த தமிழ் மக்களில் சிலர் இன்றளவும் குலதெய்வ வழிபாட்டினைத் தொடர்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டால், திருமணத்தைக் குலதெய்வக் கோவிலில் அழகிய தமிழ் மொழியில் நிகழ்த்தியமை மிகச் சிறப்பு. மலேசியத் தமிழர்கள் தமிழ் மொழியும் பண்பாடும் கலையும் அழிந்து வருகின்றதே என வருத்தப்படுவதை விடுத்து இது போல தங்கள் இல்லத் திருமணங்களைத் தமிழ் மொழியில் நடத்துவதும் தமிழர் பண்பாட்டு விசயங்களை ஒதுக்கி விடாமல் அவற்றை தங்கள் குடும்பங்களில் கடைபிடிப்பதும் மிக அவசியமான ஒன்றே.

மலேசியச் சூழலில் மிகப் புதிய அனுபவமாக இந்தத் திருமணம் எனக்கு அமைந்தது. அது மட்டுமன்றி நெடுநாட்கள் பார்க்க வாய்ப்பு கிடைக்காத நண்பர்கள் சிலரைப் பார்க்கவும் சந்தர்ப்பமாக இது அமைந்தது என்பதோடு  பல புதிய நண்பர்கள் அறிமுகமும் இந்த நிகழ்வில் கிட்டியது. திருமண நிகழ்வே ஒருவருக்கொருவர் சந்தித்து அன்பை பகிர்ந்து கொள்ளும் ஒரு மகிழ்வான நிகழ்வு தானே. இத்தகைய திருமண நிகழ்வுகள் நமது தமிழர் மரபின் ஆணி வேர்கள். வேர்களைப் பாதுகாப்போம். தமிழர் பரைனைப் போற்றுவோம்!




Thursday, November 16, 2017

76. அந்தியூர் நடுகற்கள்



இறைவனுக்குப் பலி கொடுத்தல் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். பொதுவாக இன்று மலேசிய சூழலில் நமக்குத் தெரிந்த வகையில் கூறுவதென்றால் முனீஸ்வரன், மாரியம்மன் போன்ற தெய்வங்களின் சன்னிதியில் நாம் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு காரியம் கைகூட வேண்டும் என்ற எண்ணத்தில் கோழி அல்லது ஆடு ஒன்றினைப் பலி கொடுப்பது என்பது நமது வழக்கில் மலேசியாவில் இன்றும் இருப்பதுதான். அப்படிப் பலி கொடுக்கப்படும் ஆலயங்களாக இருந்து பலி கொடுப்பது நிறுத்தப்பட்ட ஆலயங்கள் சிலவும் இன்று இருக்கின்றன. அதற்கு ஒரு உதாரணமாக பினாங்கு மாநிலத்தின் பட்டர்வொர்த் சைவ முனீஸ்வரர் ஆலயத்தைக் கூறலாம்.

பலி கொடுத்தல் என்பதன் அடிப்படையைப் பற்றி கொஞ்சம் யோசிப்போம். மனிதரின் வாழ்க்கை இன்ப துன்பம் நிறைந்ததாகவே இருக்கின்றது. மக்களின் வாழ்க்கை நிலை பல தேவைகளை உள்ளடக்கியதாக அமைகின்றது. மனிதர்களின் ஆசைகளும், எதிர்பார்ப்புக்களும் வளர வளர இன்ப துன்பங்களும் இணைந்தே வளர்கின்றன. தான் விரும்பும் ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்று விரும்பும் மனிதர் தம் விருப்பத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கும் போது தன் விருப்பத்தை அடைவது தனது சக்திக்கு மேற்பட்டதாக அமையும் என்ற எண்ணம் தோன்றுகையில் அதனை சாதிக்கக் கடவுளின் துணையை நாடுகின்றனர். கடவுள் தனது மனதில் உள்ள விருப்பங்களை அல்லது எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்தால் அதற்கு நன்றிக்கடனாகப் படையல் செய்து வழிபட்டு தனது நன்றியினை தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இப்படி இறைவனுக்குப் படைக்கப்படுகின்ற படையல் பல நேரங்களில் தானிய வகை மற்றும் பழ வகையிலான உணவுகளாக அமைகின்றன. தமிழர் பண்பாட்டு வழக்குகளில் மக்கள் உண்பதற்காக தாம் வீட்டில் வளர்க்கும் பிராணிகளை இறைவனுக்காகப் படைப்பது என்பதும் ஒரு வழக்காக உள்ளது. சிலர் ஒரு சேவலை அல்லது ஒரு ஆட்டினை வளர்த்து வருவர். அந்தச் சேவலோ அல்லது ஆடோ இறைவனுக்காக நேர்ந்து விடப்பட்ட ஒரு விலங்கு என்ற வகையிலேயே வீட்டில் அனைவராலும் கவனிக்கப்படும். அந்தச் சேவலையோ ஆட்டினையோ வீட்டுத் தேவைக்காக மக்கள் பயன்படுத்த மாட்டார்கள். தக்க நாளில் அதனைப் பிடித்து மஞ்சள் நீரில் குளிப்பாட்டி அலங்கரித்து, தாம் படையலிட நினைக்கும் சாமியின் சிலைக்கு முன் வைத்து அதனைப் பலிகொடுத்து பின்னர் அதனைச் சமைத்து சாமிக்குப் படைத்து, உற்றார் உறவினருடன் சேர்ந்து சாப்பிடுவர். இத்தகைய வழக்கு பண்டைய காலம் தொட்டு வழி வழியாக வருவதைக் காண்கின்றோம்.

சாமியையும் தன்னைப்போல ஒரு மனிதருக்கு இருக்கின்ற குணாதிசியங்களோடு கருதும் மனம் மக்களுக்கு இருப்பதாலேயே இத்தகைய சிந்தனையுடன் கடவுளின் பெயரில் பலிகொடுத்து அதனை மக்கள் உண்ணும் வழக்கைக் காண்கின்றோம். கடவுள் மனிதர்களைப் போல ஒன்றினை எதிர்பார்த்துத்தான் ஒரு நற்பலனைத் தனது அடியாருக்கு வழங்குகின்றாரா என்று மக்கள் யோசிப்பதில்லை. அதே போல, சமைத்து படையலாக வைத்த உணவை இறைவன் சாப்பிடுகின்றாரா? இல்லை யார் அவற்றை உண்டு முடிக்கின்றார்கள் என்ற ரீதியிலும் மக்கள் சிந்திப்பதில்லை. கடவுளின் பெயரால் நடத்தப்படும் இத்தகைய பலிகள் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. கோழியோ அல்லது ஆடோ, அல்லது மாடோ அல்லது எந்த விலங்காகினும், அதனைக் கடவுள் சாப்பிடுவார் என்ற பேதைமையான சிந்தனையுடன் பலி கொடுக்கத் தேவையில்லை. தான் சாப்பிட விரும்புவதும் தனது பெருமைக்காக விழா எடுப்பதும் தான் இத்தகைய நிகழ்வுகளின் வழி நடக்கின்றது. ஆனால் மனிதர்களோ இதனை நேரடியாகச் சொல்லிக் கொள்வதைத் தவிர்த்து, கடவுள் சாப்பிட விரும்புவதாகக் கூறி விலங்குகளைப் பலிகொடுப்பதும், அதனை ஒரு சடங்காக்கிப் பார்ப்பதும் அதில் மகிழ்வதும் ஒரு வித மாயைதான்.

கடவுளின் பெயரில் வீட்டு வளர்ப்புப் பிராணிகளைப் பலி கொடுத்தல் என்பது போல இன்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் ஒரு காரியம் கைகூடவேண்டும் என்று வேண்டிக் கொண்டு தன்னைத் தானே உயிர்ப் பலி கொடுத்துக் கொண்டு இறந்து போவதும் ஒரு வழக்கமாக இருந்தது. இதனைத் தலைப்பலி எனக் கூறுவர். நமக்கு இன்று கிடைக்கின்ற கல்வெட்டுச் செய்திகளும் இலக்கியச் செய்திகளும் போரில் தன் மன்னன் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் ஒரு வீரன் தன்னையே உயிர்த் தியாகம் செய்து கொண்டதைச் சான்று பகிர்கின்றன. தன் தலையைத் தன் ஒரு கரத்தால் பிடித்துக் கொண்டு, மற்றொரு கரத்தால் தனது தலையைத் தானே அறுத்துக் கொண்டு உயிர் விடுவது தமிழகத்தின் பல பகுதிகளில் நடைமுறையில் இருந்துள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக இத்தகைய அர்ப்பணிப்புச் செயலைச் செய்தமைக்காக மக்கள் இத்தகைய வீரனின் நினைவாக அவனுக்கு ஒரு நினைவுச் சின்னத்தை அமைக்கும் வழக்கத்தினைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். இறந்த வீரனின் வீரச்செயலைக் காட்டும் வகையில் ஒரு கல்லில் அவ்வீரனின் புடைப்புச் சிற்பத்தைச் செதுக்கி அதனை வழிபட்டனர்.

இவ்வகை தலைப்பலி நடுகல் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு சில நடுகல் சின்னங்கள் எழுத்துக்கள் ஏதும் பொறிக்கப்படாமல் இருக்கும். ஒரு சில நடுகல் சின்னங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு காணப்படும். சில, தனியாக ஒரு வீரன் மட்டும் தன் கழுத்தை வாளால் அறுக்கும் காட்சியுடன் இருக்கும். சில, ஒரு வீரன் தன் தலையை அறுத்துக் கொள்ளும் காட்சியுடன் ஒரு பெண்ணும் சிறிய வடிவில் அருகில் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கும். சில நடுகல் சின்னங்களில் வீரனுடன் வேறு விலங்குகளின் சிற்பங்களும் இணைந்த வகையில் செதுக்கப்பட்டிருக்கும்.

2015ம் ஆண்டில் நான் தமிழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காகச் சென்றிருந்தபோது மூன்று நாட்கள் ஈரோடு மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள நெடுங்காலமாக மக்கள் வழிபாட்டில் உள்ள ஆலயங்கள் சிலவற்றிற்கு ஆய்விற்காகச் சென்றிருந்தேன். அப்படி ஒரு ஆலயம் தான் அந்தியூரில் அமைந்திருக்கும் அந்தியூர் பத்ரகாளியம்மன் ஆலயம்.
அந்தியூர் பத்ரகாளியம்மன் ஆலயம் நன்கு புதுப்பிக்கப்பட்டு மக்கள் வெகுவாக வந்து செல்லும் ஒரு ஆலயமாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் வழக்கில் உள்ள மிகப் பழமையான தாய் தெய்வக் கோயில்களில் இதுவும் ஒன்று. கொற்றவை எனச் சங்க காலத்தில் அழைக்கப்பட்ட தெய்வமே பின்னர் பத்ரகாளியம்மன் என்ற பெயருடன் இன்று வழக்கில் அழைக்கப்படும் பெயராக அமைந்துள்ளது எனலாம்.

இக்கோயிலின் பின் பகுதியில் நாட்டார் வழிபாட்டுத் தெய்வங்களும் அண்ணன்மார் சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவை பின்னாளில் இக்கோயிலில் வழிபாட்டிற்காகச் சேர்க்கப்பட்டவையே. இவற்றைப் பார்த்து பதிவு செய்துகொண்டிருக்கும் போது ஆலயத்தின் பணியாளர் ஒருவர், கோயிலில் மேலும் சில சிற்பங்கள் இருப்பதாகவும் அவை கோயில் புனரமைப்பின் போது பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு ஒரு பகுதியில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். இச்செய்தி ஆவலைத் தூண்டவே அச்சிற்பங்களைப் பார்க்க வேண்டும், அவை எவ்வகை சிற்பங்கள் என ஆராய வேண்டும், என்ற என் ஆவல் எழுந்தது. முதலில் ஆலய நிர்வாகத்தினர் அதற்குச் சம்மதம் தெரிவிக்காவிட்டாலும் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு கோயிலின் பின் பகுதியில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அச்சிற்பங்களை எனக்குக் காட்டினர். அதில் ஒன்று தலைபலி நடுகல் என்பதை அதனைப் பார்த்த போது அறிந்து கொண்டேன். மேலும் சில தெய்வ வடிவங்களின் சிற்பங்களும் அங்கே கிடத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நடுகல் சிற்பத்தையும் ஏனைய சிற்பங்களையும் ஆலய நிர்வாகம் தூய்மை செய்து அவற்றைக் கோயிலில் ஓரிடத்தில் பதிந்து வைக்க வேண்டும் என்றும், அது இக்கோயிலின் பழமையையும் இங்குக் கொற்றவைக்காக வீரர்கள் தன்னையே தலைபலி கொடுத்துக் கொண்டு மாண்டிருக்கின்றனர் என்பதையும், இவர்களின் நினைவாக இவ்வூர் மக்கள் அவ்வீரர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்பி அவர்களை மரியாதை செய்து வழிபட்டு வந்துள்ளனர் என்பதை இன்று இக்கோயிலுக்கு வரும் மக்கள் அறிந்து கொள்ள உதவும் என்றும் கூறினேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நடுகல் சிற்பங்கள் கோயிலில் பத்திரப்படுத்தப்பட்டு மட்டுமே இருந்தன. இவ்வாண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று இக்கோயிலுக்குச் சென்று இந்த நடுகல் சிற்பங்கள் எவ்வகையில் இருக்கின்றன என்று கண்டு வர நேரில் சென்றிருந்தேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் இளையோர் பேரவை குழுவினரும் என்னுடன் வந்திருந்தனர்.

கோயில் நிர்வாகத்தினருக்கு முன்னரே ஆய்வு நிமித்தம் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் அங்கு வரவிருப்பதைத் தெரிவித்து எங்களுடன் இந்த ஆய்வில் இணைந்து கொள்ள ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். கோயில் நிர்வாகத்தினர் இரண்டு நடுகல் நிற்பங்களைத் தூய்மை செய்து எண்ணைப் பூசி வைத்திருந்தனர். மிகச் சிறப்பாக செதுக்கப்பட்ட நடுகல் சிற்பங்கள் அவை. இரண்டுமே மாறுபட்ட வடிவில் அமைந்தவை. முதல் நடுகல் ஒரு வீரன் மட்டுமே தனது தலையை ஒரு கரத்தால் பிடித்துக் கொண்டு மற்றொரு கரத்தால் தனது தலையை வாளால் வெட்டிக் கொள்வதைக் காட்டும் சிற்பம். மற்றொன்று, வீரன் ஒருவன் தன் தலையை வாளால் வெட்டிக் கொள்வது போலவும் அவனுக்கு வலப்பக்கம் கீழே ஒரு பெண்ணின் சிற்பமுமாக வடிக்கப்பட்ட சிற்பம். இது அனேகமாக தலைபலி கொடுத்துக் கொண்டு உயிர் நீத்த தன் கணவனுடன் தானும் தற்கொலை செய்து உயிர் மாய்த்துக் கொண்ட அவன் மனைவியினை நினைவு கூர்வதற்காக அமைக்கப்பட்ட சிற்பமே.

இந்த ஆய்வின் போது இந்த இரண்டு நடுகல் சிற்பங்களும் அந்தியூர் பத்ரகாளியம்மன் ஆலயத்திற்குச் சொந்தமானவையாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் இதற்குக் காரணம் பழமையான கொற்றவை வழிபாட்டில் வீரர்கள் தன்னையே தலைபலி கொடுத்துக் கொண்டு உயிர்ப்பலி கொடுத்தல் வழக்கில் இருப்பதையும் சுட்டிக் காட்டி விளக்கினேன். இந்தக் கோயிலிலேயே ஓரிடத்தில் இந்தப் புராதனச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அல்லது மாவட்ட அருங்காட்சியகத்தில் இவை ஒப்படைக்கப்பட்டு அங்கு இவை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தேன். கோயில் நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கையளித்தனர்.

தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் குறிப்பாக திருப்பூர், ஈரோடு கோவை மாவட்டங்களில் நடுகற்கள் அவ்வப்போது பொது மக்களாலும், வரலாற்று ஆர்வலர்களாலும் கண்டறியப்படும் தகவல்களைப் பற்றி நாம் அவ்வப்போது செய்தி ஊடகங்களின் வழியாக அறிய முடிகின்றது. இதே போல தொண்டை மண்டலத்திலும் குறிப்பாக பெண்ணையற்று நதிக்கரையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நடுகல் சிற்பங்கள் புதர்களில் மாட்டிக் கொண்டு கவனிப்பாரற்று கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக தொல்லியல் துறை இத்தகைய பாதுகாப்பற்ற புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கின்றோம்.

தமிழர் வரலாற்றை நாம் அறிய வேண்டுமென்றால் புராதனச்சின்னங்களைப் பாதுகாப்பதும் அவற்றை ஆராய்வதும் அவசியத் தேவை என்பதை நாம் அனைவருமே கருத்தில் கொள்வது அவசியமாகும்! 

Thursday, November 2, 2017

75. பள்ளிகளில் தொல்லியல் அறிமுகம்



இன்றைய இளம் தலைமுறையினர்தான் நாளை நமது தமிழர் மரபினைக் காக்கும் தூண்கள். இந்தச் சிந்தனையைக் கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை, ஆரம்பக்காலம் தொட்டு தமிழகத்திலும் மலேசியாவிலும் அவ்வப்போது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சி நிகழ்வுகளை நடத்தி வந்துள்ளோம். தமிழர் வரலாற்றையும் மரபையும், பண்பாட்டையும் பற்றிய தரமான செய்திகளை மாணவர் சமுதாயத்திற்குக் கொண்டு செல்வது அவசியம் என்ற நோக்கில் இந்தச் செயல்பாடுகள் அமைகின்றன.

மலேசிய சூழலில் இளம் வயது பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் சவால்கள் நிறைந்த ஒன்றுதான். அதிலும் குறிப்பாக 4ம் வகுப்பு படிக்கும் மாணவர் முதல் 5ம் படிவம் முடித்து உயர்கல்விக்கூடம் செல்லும் வரையில் குழந்தைகளைப் பராமரிப்பதும் கண்காணிப்பதும் பெற்றோருக்கு மிகுந்த சிரமம் நிறைந்த ஒன்று. சமூகத்தில் பெருகிவரும் குண்டர் கலாச்சாரம், போதைப்பொருள் கலாச்சாரம் போன்றவற்றினால் சீரழிந்த இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை தமிழ்ச்சமூகத்தில் உயர்ந்து கொண்டேயிருக்கின்றது. பெற்றோர் மிகுந்த கண்காணிப்புடன் இருக்கும் சூழலிலும் கூட சில இளம் மாணாக்கர்கள் வழி தவறிப்போய்விடும் நிலமை ஏற்பட்டு விடுகின்றது. கடந்த சில ஆண்டுகளில் தோட்டப்புறங்களில் மட்டுமன்றி நகர்ப்புறங்களிலும் கூட குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் மிகச் சாமர்த்தியமாகத் திட்டமிட்டு இளம் சிறார்களைக் கவரும் தந்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வழி இந்த இளம் பிஞ்சுகளின் வாழ்க்கைப் பாதையை தடம்புரளச் செய்து விடுகின்றனர். தொடர்ந்து வரும் இத்தகைய சமூக அவல நிலையை மனதில் கொண்டு சமூக அமைப்புக்கள் பல மாணவர்களுக்கு முன்னேற்றப்பாதையைக் காட்டும் வகையிலும் கல்வியில் ஆழமான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலுமான நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. இவை வரவேற்கத்தக்க முயற்சிகளாகும்.

பள்ளிப்பாடங்களைக் கற்பதும் பரீட்சைக்குத் தயார்படுத்துவதும் மட்டுமே மாணவர் அறிவு வளர்ச்சிக்குப் போதுமானவை என்று முடிவு செய்து விட முடியாது. வெளி உலக, சமகால அறிவியல், சமூகம், வரலாறு, பொருளாதாரம் போன்ற துறைகளில் நிகழும் நடப்புச் செய்திகளை மாணவர் தொடர்ந்து அறிந்து வருவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதும் மாணவர்கள் திறமையுடன் செயல்படுவதற்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையைச் சிறப்புடன் அமைத்துக் கொள்வதற்கும் கட்டாயமாக அடித்தளம் அமைக்கும்.

தொல்லியல் துறை, அகழ்வாய்வுகள் என்பது பற்றின ஒரு அறிமுக நிகழ்வு ஒன்றினை மாணவர்களுக்கு வழங்குவது அவர்கள் இத்துறையைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என்ற கருத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை கோலாலம்பூரில் இயங்கும் MENCO அமைப்புடன் இணைந்து கடந்த சனிக்கிழமை 28.10.2017 அன்று பத்துமலை தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். பள்ளியில் பயிலும் 4ம், 5ம், 6ம் வகுப்பு மாணவர்கள் பங்கு கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. பள்ளியின் முழு ஒத்துழைப்பும் இந்த நிகழ்விற்கு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொல்லியல் துறை என்பது மனித சமூகத்தின் பண்டைய வாழ்க்கை முறையை முறையான ஆராய்ச்சிகளின் வழி அறிந்து கொள்வதாகும். அகழ்வாராய்ச்சிகள் என்பன நிலத்துக்குக் கீழே அகழ்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்வது. நிலத்தின் அடித்தளத்தில் புதைந்து கிடக்கும் அப்பகுதியில் வாழ்ந்து மறைந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள், சான்றுகள், எலும்புக்கூடுகள் என்பன பற்றிய அறிமுகமும் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் உலக மனிதர்களின் வாழ்வியலை இன்று காலத்தால் பின்னோக்கி இட்டுச் சென்று வாழ்வியலை விளக்கும் கருவியாக அமைகின்றன என்ற விளக்கமும் இந்த நிகழ்வில் மானவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர், உலக நாடுகளில் இதுவரை நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் மிகப் பிரபலமாகக் கருதப்படுவன பற்றிய செய்திகள் விளக்கப்படங்களுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

அகழ்வாராய்ச்சிகள் என்பன முறையாக என்று தொடங்கப்பட்டது என்பது உறுதியாகக் கூறப்பட இயலாத போதிலும், ஐரோப்பாவில் பிரன்சுக்காரர்களும், ஜெர்மானியர்களும், ஆங்கிலேயர்களும் தங்கள் நாடுகளில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சிகளைக் கடந்த 300 ஆண்டுகளில் நிகழ்த்தியிருக்கின்றனர். இன்று உலகின் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து தொல்லியல் அகழ்வாய்வுத்துறைகளிலிருந்தும் பயிற்சி பெற்ற பல ஆராய்ச்சியாளர்கள் தொல்லியல் ஆழ்வுகளையும் அகழ்வாய்வுகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.

உலக அகழ்வாய்வு நிகழ்வுகளில் மிகப் பிரபலமானவை எனக் கருதப்படுபவனவற்றுள் போம்பேயி (Pompeii) அகழ்வாய்வும் ஒன்று. எரிமலை வெடிப்பின் போது லாவா கசிவினால் முற்றும் முழுதுமாக அழிக்கப்பட்ட ஒரு கிராமம் நிலத்தடியில் புதைந்து போனது. இது நிகழ்ந்த காலம் கி.மு 79. மிகப் பழமையான இந்த ரோமானிய நகரம் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து விட்ட நிலையில் அகழ்வாய்வின் வழி இந்த நகரம் கண்டெடுக்கப்பட்டது. எரிமலைக் கசிவினால் சிதைந்த மக்களின் உடல், வீடுகள், சிற்பங்கள், மண்பாண்டங்கள், கோயில் போன்றவை இந்த ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டன. எரிமலை வெடிப்பினால் வெளிப்பட்ட தூசித் துகள்கள் முழுமையாக மூடி அதன்மேல் எரிமலை வெடிப்பினால் வெளிப்படும் நெருப்புக் குழம்பு அதனை மூடியமையினால் அதன் கீழ் அகப்பட்டுக்கொண்ட மனிதர்கள் அனைவருமே இந்த நிகழ்வின் போது இறந்து போயினர். உயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் அந்த நகரின் கட்டமைப்பு உடைந்து நொறுங்காமல் முழுமையாக 2000 ஆண்டுகள் இருந்திருக்கின்றது என்ற உண்மை அகழ்வாய்வில் தெரிய வந்தது. ஒரு பண்டைய ரோமானிய நகரில் மக்கள் வாழ்வு, பண்பாடு, நகர அமைப்பு, கோயில் வழிபாடு என்பன எவ்வாறு அமைந்திருந்தன என்பதை ஒருவர் அறிந்து கொள்வதற்கு மிகச் சரியான முக்கியச் சான்றாக இந்த அகழ்வாராய்ச்சி அமைந்தது.

ஐரோப்பிய தொல்லியல் துறையினர் கடந்த 300 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளும் நாடுகளில் எகிப்தினைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆரம்பக் காலத்தில் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்ற குறிக்கோளுடன் தனியார் சிலர் எகிப்தில் குழுவாகச் சென்று பாலைவனத்தின் ஊடே பயணித்துப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் அவற்றைக் கண்டு அஞ்சி ஒதுங்காது அகழ்வாராய்ச்சிகளைச் செய்தனர். நிலத்துக்குக் கீழே இறந்து போன பண்டைய எகிப்திய மன்னர்களின் உடல்களோடு புதைக்கப்படும் விலையுயர்ந்த ஆபரணங்களையும் பொருட்களையும் எடுத்து வந்து அவற்றைப் பணக்காரர்களிடம் விலைபேசி விற்று செல்வந்தர்களாயினர். ஆனால் பின்னர் அரசு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திய பின்னர் அகழ்வாராய்ச்சிகள் என்பன தொல்லியல் துறையைச் சார்ந்த வகையிலோ அல்லது பல்கலைக்கழகங்களைச் சார்ந்த வகையிலோ மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் செயல்பாட்டிற்கு வந்தன.

உலக வரலாற்றில் மனித இனம் மிக நீண்ட நெடிய காலங்கள் வாழ்ந்த பகுதிகளில் தனிச்சிறப்பு பெறும் நாடாக எகிப்தினைக் கூறலாம். இங்குக் கடந்த 3 நூற்றாண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் வழி எகிப்தின் நீண்ட நெடிய வரலாறு உலகில் வெளிச்சத்திற்கு வந்தது. பிரமிக்க வைக்கும் பிரமிடுகள், 5000 ஆண்டுகள் வாக்கில் வாழ்ந்து ஆட்சி செய்த மன்னர்கள், அதாவது மம்மி என அழைக்கப்படும் ஃபாரோக்களின் பதப்படுத்தப்பட்ட உடல், கருமக்கிரியை சடங்குகள், எகிப்தியர்களின் பண்டைய ஹீரோகிலிப்ஸ் எழுத்துக்கள், கோயில் கட்டுமானத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஒபிலிஸ்க் என்ற செங்குத்தான நீண்டு உயர்ந்த கல் வடிவம், அரசாட்சி முறை, நைல் நதிக்கரை வணிகம், தொழில், அடிமைகள் வாழ்வு, கிரேக்கத்துடனான தொடர்புகள் போன்ற பல்வேறு தகவல்கள் கிடைத்தன. உலக வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு இந்தத் தகவல்கள் பெரும் பங்காற்றின. எகிப்திய தொல்லியல் அகழ்வாய்வுகளில் குறிப்பிடத்தக்கவை பல. அதில் ஒன்றுதான் தூத்தான்காமுன் என்ற ஒரு இளம் அரசனின் பதப்படுத்தப்பட்ட உடலும் அதனைச் சுற்றி வைக்கப்பட்டுப் புதைக்கப்பட்ட கல்லறையும். கல்லறை எனும் போது நம் மனதில் எழும் வடிவத்தோடு எகிப்திய ஃபாரோக்களின் கல்லறைகளை நாம் ஒப்பிடக் கூடாது. ஃபாரோக்களின் கல்லறைகள் பல தளங்களாக அமைக்கப்பட்ட ஒரு வீடு போன்றும் அதன் அறைகளுக்கும் மன்னருக்குத் தேவைப்படும் என அவர்கள் நினைக்கும் அனைத்துப் பொருட்களும் உள்ளே வைக்கப்பட்டிருக்கும். மன்னரின் உடலைப் பதப்படுத்தி வெள்ளை துணியால் சுற்றி, தங்க ஆபரணங்களினால் அலங்கரித்து விலையுயர்ந்த கற்களைக் கொண்டு தங்கத்திலும் வெள்ளியிலும் இழைத்துத் தயாரிக்கப்பட்ட அலங்காரப்பொருட்கள் சூழ, மிகுந்த கலை அழகுடன் தயாரிக்கப்பட்ட மரப்பெட்டிக்குள் வைத்திருப்பார்கள். அந்த மரப்பெட்டியை ஒரு தேரில் ஏற்றி அதனைச் சுற்றிலும் மன்னர் பயன்படுத்திய அனைத்துப் பொருட்களையும் இணைத்தே வைத்திருப்பர். அத்தகைய ஒரு கல்லறை 1922ம் ஆண்டு ஹோவர்ட் கார்ட்டர், ஜோர்ஜ் ஹெர்பெர்ட் என்ற இரண்டு தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது கண்டுபிடிக்கப்பட்ட போது உலகளாவிய அளவில் ஆச்சரியத்தையும் கவனத்தையும் இக்கண்டுபிடிப்பு பெற்றது. இந்த நிகழ்வே எகிப்திய ஃபாரோக்களின் கல்லறை அமைப்பைப் பற்றிய தெளிவை உலகுக்கு வழங்கியது எனலாம். இதுகாறும் கண்டுபிடிக்கப்பட்ட எகிப்திய மன்னர் பரம்பரையினரின் கல்லறைகளை ஒப்பிடும் போது அளவில் இக்கல்லறை சிறிதுதான் என்றாலும் கூட, இதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த 2000க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த அணிகலன்களும் மன்னர் தூத்தான்காமூனின் பதப்படுத்தப்பட்ட உடலில் முகத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த தங்க முகமூடியும் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தன. இன்று எகிப்தின் தலைநகர் கைரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்தப் பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆயினும் அவ்வப்போது உலகின் பல நாடுகளுக்கு நடமாடும் கண்காட்சியாக இந்தக் கல்லறையின் சில பொருட்கள் வரவழைக்கப்பட்டு உள்ளூர் மக்களுக்கு அவை கண்காட்சியாக காட்டப்படுகின்றன.

சிந்து சமவெளியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் அங்கு நாகரிகம் பெற்ற மனிதர்கள் வாழ்ந்தனர் என்றும், அவை இன்றைக்கு 2500 ஆண்டுகள் வாக்கில் இருந்த ஒரு சமூகம் என்றும், மிக உயர்ந்த வாழ்வியல் கலாச்சாரத்தைப் பேணிய ஒரு சமூகம் என்றும் இங்கு நிகழ்த்தப்பட்ட தொல்லியல், மற்றும் அகழ்வாய்வுகள் சான்றளித்தன. அங்குக் கண்டெடுக்கப்பட்ட எழுத்துருக்களைப் பற்றிய ஆய்வு அது தமிழ் மொழிதான் என்பதை உறுதிப் படுத்துவதாகவும் அமைந்தது. தமிழகத்தில் அண்மைய அகழ்வாராய்ச்சிகளாகக் கருதப்படும் கீழடி இன்றைக்கு 2200 ஆண்டுகள் வாக்கிலான தமிழர் நாகரிகத்தை உலகுக்குக் காட்டும் ஆராய்ச்சியாகத் திகழ்கின்றது.

மலேசியாவில் தமிழர்கள் பெருமைப்படத்தக்க வகையில் இருப்பது பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சிகள். கி.பி.5ம் நூற்றாண்டு தொடங்கி இங்கு லங்காசுக்கா, ஸ்ரீ விஜயா அரசுகள் அமைத்த பௌத்த, இந்து மத ஆலயங்கள், அதன் பின்னர் கி.பி 11ம் நூற்றாண்டில் சோழ மன்னர் ராஜேந்திர சோழனின் படையெடுப்பிற்குப் பின்னர் இங்கு அமைக்கப்பட்ட சிவன் கோயில்கள் பலவும் இந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டன. ஏறக்குறைய 22 கோயில்கள் இதில் அடையாளம் காணப்பட்டன. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் கெடா மாநிலத்தின் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதே போல, பேராக் மாநிலத்தில் பெருவாஸ் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு கி.பி 5-11 வரை இங்கு ஆட்சி செலுத்திய கங்கா நெகாரா அரசினைப் பற்றிய செய்திகளை உலகுக்கு வெளிச்சப்படுத்தியது. லங்காசுக்கா, ஸ்ரீ விஜயா அரசுகள் இருந்த போதே சமகாலத்தில் மிகுந்த பலத்துடன் ஆட்சி அமைத்திருந்த ஒரு இந்து அரசு தான் இந்தக் கங்கா நெகாரா அரசு. ராஜேந்திர சோழனின் கி.பி 11ம் நூற்றாண்டு படையெடுப்பினால் இந்த அரசு அழிந்தது. அங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கிடைத்த தெய்வ வடிவின் சிற்பங்கள், கோயில்கள், மக்கள் பயன்பாட்டில் இருந்த பொருட்கள் ஆகியன இன்று பெருவாஸ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய விளக்கங்களை வழங்கியபோது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருமே குறிப்புக்களை எடுத்துக் கொண்டனர். இடைக்கிடையே மாணவர்கள் வழங்கப்பட்ட செய்திகளை எவ்வளவு உள்வாங்கியிருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள கேள்விகள் கேட்கப்பட்டன. மாணவர்கள் அவற்றிற்குச் சரியான விடையளித்ததோடு இந்த நிகழ்வினால் தாங்கள் அறிந்து கொண்ட விசயங்களையும் அழகாக விவரித்துப் பேசினர். மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் தமிழ் மொழியில் வரலாற்றுச் செய்திகளை உள்வாங்கி அதனைச் சிந்தித்து தாமே இயல்பாக விவரிக்கும் வகையில் செயல்பட்டனர். இது பாராட்டுக்குரியது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு மாணவருமே எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக தாம் வளர வேண்டும் என்ற கனவினை இந்த நிகழ்வில் விதைத்தோம். அந்தக் கனவுகளோடு இந்த மாணவர்கள் நிச்சயமாக இயங்குவார்கள். எதிர்காலத்தில் உலகம் போற்றும் அறிஞர்களாகத் திகழ்வார்கள் என்ற நம்பிக்கை தமிழ் மரபு அறக்கட்டளைக்கு உண்டு!








Friday, October 27, 2017

74. மாயனைக் கண்டேன் - கொங்கர்புளியங்குளம்



தமிழ் நிலத்தின் ஐந்திணையைக் குறிப்பிடும் போது,

“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(அகத். 5)
என்கின்றது தொல்காப்பியம். ஒவ்வொரு நிலத்திற்கும் அந்த நிலத்தின் தன்மைக்கேற்ற ஒரு கடவுள் என வகைப்படுத்தும் செய்யுள் இது. இதில் சுட்டப்படும் மாயோன் என்ற சொல்லை ஆராயும் போது கருப்பு, கரியோன் எனப் பொருள் கொள்ளலாம். முல்லை நிலத்தின் தெய்வமாக இந்த மாயோன் சுட்டப்படுகின்றான்.

மற்றொரு கோணத்தில் காணும் போது மாயன் வழிபாடு என்பது தமிழகத்தில் இன்றும் வழக்கில் இருக்கின்ற ஒரு பழமையான நாட்டுப்புற வழிபாட்டுக் கூறு என்றும் அறியலாம். பொதுவாக கிராமங்களில் உள்ல மாயன் கோயிலில் ஒரு செங்குத்தான கல்லை வைத்து அக்கல்லைக் கடவுளாக உருவகித்து மாலைகள் பூசைப் பொருட்கள் வைத்து வழிபாடு நடத்தப்படுகின்றது. மனித உருவத்தை ஒத்த கடவுள் வடிவங்கள் இங்கே இல்லை. மூலஸ்தானம் அல்லது கருவரை என குறிப்பிடப்படும் பகுதியில் இருப்பது ஒரு செங்குத்தான கல் மட்டுமே. இந்த மாயன் வழிபாட்டினை நினைக்கும் போது நம் சிந்தனையில் தென் அமெரிக்காவில் குறிப்பாக மெக்சிகோ, குவாட்டமாலா போன்ற நாடுகளில் இன்றைக்கு 4000 ஆண்டு வாக்கு எனக் கணக்கிடப்படும் மாயன் கலாச்சாரம் நினைவுக்கு வரலாம். பண்டைய மரபுகளில் இருக்கும் பல சடங்கு முறைகளில் இத்தகைய ஒற்றுமைகளை அதிகம் காணலாம். இவை ஆராயப்பட வேண்டியவை.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் நான் சில நாட்கள் மதுரையில்  இருந்தேன். மதுரை மாநகரமும் அதன் புறநகர் பகுதிகளும் தமிழர் தொல் மரபுகள் வேரூன்றி இருக்கும் தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்று. மதுரையில் எந்த சிற்றூருக்குச் சென்றாலும் அங்கே ஏதாவது ஒரு தொல்மரபுச் சின்னம் நம் ஆய்வில் தென்படாமல் போகாது. அந்த அளவிற்கு மதுரை மனிதக் குலம் மிக நீண்ட காலம் வாழ்ந்த ஒரு நிலப்பகுதியாகத்தான் திகழ்ந்திருக்கின்றது. அதுமட்டுமா?

தமிழர் நாகரிகத்தினை உலகுக்குப் பறைசாற்றும் அண்மைய கீழடி அகழ்வாய்வுகள் நமக்குக் காட்டுவது இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்றைக்கு 2500 ஆண்டுகள் முன்னரான காலகட்டத்திலேயே மிக நுட்பமான அறிவு வளர்ச்சியைப் பெற்றவர்களாகவும், உயர்ந்த நாகரிகத்தை வெளிப்படுத்தும் கட்டுமானக் கலைகளைச் செய்தோராகவும், கலையை வளர்த்தோராகவும் உலகின் ஏனைய பகுதிகளைச் சார்ந்த வணிகர்கள் வந்து தங்கியிருந்து வணிகம் செய்து சென்ற வளம் மிக்க ஒரு பகுதியாகவும் இப்பகுதி இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

மதுரையில் நான் சென்று பார்த்து ஆராய்ந்து பதிவுகள் செய்வதற்கென்று ஒரு நீண்ட பட்டியல் அமைத்திருந்தேன். அதில் ஒன்றுதான் கொங்கர்புளியங்குளம் என்னும் சிற்றூர். மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர்.

இந்தக் கொங்கர்புளியங்குளம் சமண புராதனச் சின்னங்கள் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியுமாகும். ஆதலால் இங்குள்ள மலைப்பகுதிக்குச் சென்று அங்குள்ள அச்சின்னங்களைப் பதிவு செய்து வருவோம் எனத் திட்டமிட்டிருந்தேன். என்னுடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் முனைவர்.ரேணுகாதேவி, முனைவர்.பசும்பொன், சகோதரர் உதயன் ஆகியோர் வந்திருந்தனர். மூவருமே மதுரையைச் சேர்ந்தவர்கள். ஆக இரண்டு மோட்டார்சைக்கிள்களில் நால்வரும் பயணம் செல்வோம், அப்போதுதான் மலையடிவாரம் வரைச் செல்ல வசதியாக இருக்கும் என முடிவானது.

கொங்கற்புளியங்குளம். பண்டைய தமிழ் மக்களின் தொல் மரபுகள் தொடர்ச்சியாக இன்றும் பேணப்பட்டு வரும் ஒரு முக்கிய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற பகுதி. இன்று காண்பதற்குப் பாறையும் புதர்களும் தானே இருக்கின்றன என நினைப்போர் உள்ளே சென்று பார்த்தால் வளமான தமிழர் தொல் பழம் மரபுகள் இன்று உயிர்ப்புடன் இங்குத் தொடர்வதை அறியலாம்.

பசுமை மாறாத வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் சிறிய வகையில் பயிர் விவசாயம் செய்து வாழும் விவசாயிகள். ஆங்காங்கே ஓரிரு வீடுகள். அதனைச் சுற்றிலும் சிறிய பயிர் தோட்டங்கள், ஆடுகள், கோழிகள் மாடுகள் என கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்பட்டது. நாங்கள் பயணம் செய்து வந்த மோட்டார் சைக்கிள்களை ஓரமாக வைத்து விட்டு பாறை இருக்கும் பகுதியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம்.

நாகமலை பாறை பகுதிக்குச் செல்வதற்குக் கீழே நாட்டுப்புற வழிபாடு நடைபெறும் மாயன் கோயில் ஒன்று இங்குள்ளது. உருவங்கள் அற்ற வகையில் செங்குத்தான ஒரு கல்லினை மட்டுமே வைத்து வழிபடும் மரபு இங்கே இன்றும் தொடர்கின்றது. மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் கோயில் அது. கோயிலைக் காணும் போதே மிகப் பழமையான வழிபாட்டுக் கூறுகள் மாற்றமடையாத நிலையில் இன்றும் தொடர்வதை வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சிறிய கோயில் இருப்பதைக் கண்டேன்.

இந்த மாயன் கோயிலுக்கு வடகிழக்குப் பகுதியில் சற்று தூரத்தில் ஒரு சிறிய கொட்டகை ஒன்றினை அமைத்திருக்கின்றார்கள். இது இறந்தோரை எரிக்கும் ஒரு சுடலை. இங்கு மக்கள் இறந்தவர்களைக் கொண்டு வந்து எரித்து சாம்பலையும் எலும்புத் துண்டுகளையும் எடுத்துச் செல்லும் மரபு இன்றும் தொடர்கின்றது. நாங்கள் சென்றிருந்த போது ஓரிரு நாட்களுக்கு முன்னர் வந்து எரியூட்டிச் சென்றதற்கான தடயங்கள் காட்சியளித்துக் கொண்டிருந்தன. அதனைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு நாகமலை பாறைப்பகுதியை நோக்கி நடக்கலானோம்.

இந்தக் கோயிலுக்கு பின்னால் உள்ள பாறையில் தான் இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் சமண முனிவர்கள் தங்கியிருந்து பள்ளிக்கூடங்களை அமைத்து கல்வியும் கலையும் செழிக்கச் செய்துள்ளனர். அவர்களின் வாழ்விடமாக இங்குள்ள குகைத்தளம் அமைந்திருந்தது. அங்கு முனிவர்கள் தங்க இடம் அமைத்துக் கொடுத்த நல்லுள்ளங்களின் பெயர்களைப் பண்டைய தமிழ் எழுத்துக்களில் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர். இந்தச் சான்றுகளைக் கொண்டிருக்கும் இப்பாறைப்பகுதியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியைப் பற்றி அறிந்தபோதே எழுந்தது. மூன்று கல்வெட்டுக்கள் தனித்தனியே உள்ளன என்றும் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும் உள்ளது என்றும் அறிந்திருந்தேன். ஒரு சிறிய பாறையில் இவை அனைத்தும் இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் அந்தப் பாறைப்பகுதியில் நான் கண்ட காட்சியோ பிரம்மாண்டமான ஒரு காட்சியாக என்னை வியப்பில் ஆழ்த்தியது.

முதலில் அப்பாறையின் மேல் தளத்திற்கு எப்படிச் செல்வது என் வியந்து நின்று விட்டோம். பின்னர் அங்கே தமிழகத் தொல்லியல் துறை அமைத்துள்ள இரும்புப் படிகள் ஒரு பகுதியில் இருப்பதைக் கண்டோம். வழி முழுதும் முற்புதர் மண்டிக் கிடந்தது. புதரை அகற்றியவாறு அதனைக் கடந்து செல்வது பெரும் சவால்தான். செல்லும் போது முட்கள் நம் கைகளையும் கால்களையும் நன்கு பதம் பார்த்து விடும். ஆனாலும் பாறையில் ஏறி மேலே உள்ள புராதனச் சின்னங்களைக் காண நமக்கெழும் ஆர்வம் இந்த வலியையும் மறக்கச் செய்யும்.

படிகளின் மேலேறி பாறையின் மேற்பகுதிக்கு வந்த உடன் நமக்கு முதலில் தென்படுவது வரிசை வரிசையாக அங்கே பாறையின் குகைத்தளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கற்படுக்கைகள் தாம். ஏறக்குறைய 60க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் இங்கே உள்ளன. முனிவர்கள் அமர்ந்து தியானம் செய்யவும் படுத்து உறங்கவும் இந்தக் கற்படுக்கைகளை அமைத்திருக்கின்றனர். இந்தப் படுக்கை பகுதிக்குப் பின்னர் இருளான குகைப்பகுதி தொடங்குகின்றது. அதன் உட்பகுதியிலும் சில கற்படுக்கைகள் காணப்படுகின்றன.

இங்குள்ள குகைப்பகுதி இயற்கையான குகைத்தளமாகும். இக்குகையின் முகப்புப் பகுதியில் காடி என அழைக்கப்படும் நீர்வடி விளிம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் சுவற்றுப் பகுதியில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் கொண்ட வாசகங்கள் உள்ளன. ஒவ்வொரு எழுத்தும் பெரிது பெரிதாக நன்கு வாசிக்கக்கூடிய வகையில் தொல்தமிழ் எழுத்து வடிவமான தமிழி எழுத்துக்களில் செதுக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் தமிழில் செதுக்கிய வாசகங்களை இன்று நாம் நம் கண்களால் காண்கின்றோமே என நினைக்கும் போது நம் மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை எனலாம்.

இங்கு செதுக்கப்பட்டுள்ள மூன்று கல்வெட்டுக்களுமே இப்பகுதியில் வாழ்ந்த சமண முனிவர்களுக்கு அமைக்கப்பட்ட இந்த கற்படுக்கை மற்றும் குகை அமைப்பு சீரமைப்பினை ஏற்படுத்தியோரைக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் தாம். பண்டைய காலத்தில் செய்திகளைக் கல்வெட்டுக்களில் பொறிக்கும் மரபு தான் இருந்தது என்பதால் இந்த முறையைப் பயன்படுத்தி அந்த நிகழ்வை வரலாற்றில் இடம் பெறும் நிகழ்வாக மாற்றியிருக்கின்றனர். இத்தகைய கல்வெட்டுக்கள் தாம் இன்று நாம் தமிழின் தொன்மையை அறிந்து கொள்ளவும் தமிழின் வரி வடிவின் பரிணாம மாற்றத்தை அறிந்து கொள்ளவும் நமக்குத் துணை புரியும் தரவுகளாக அமைகின்றன.

கொங்கர்புளியங்குளம் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலகட்டத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்து கல்விச்சாலைகளை அமைத்து சமண நெறி தழைக்கச்செய்த ஒரு முக்கிய இடமாகும். பக்திகாலத்தில் சமண சமய வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அச்சணந்தி முனிவர் ஏற்படுத்திய சீரிய நடவடிக்கைகளினால் இப்பகுதியில் மீண்டும் சமணம் தழைத்தோங்கியது. அதன் சான்றாக இருப்பது தான் நாம் இன்று காணும் தீர்த்தங்கரர் சிற்பமும் அதன் கீழ் வெட்டப்பட்டுள்ள வட்டெழுத்து கல்வெட்டுகளுமாகும்.

இந்த முக்கியப் புராதனச் சின்னத்தைப் பற்றி அக்கறை கொள்ளாத சுயநலவாதிகள் இங்கே பாறை உடைப்புப் பணிகளைத் தொடங்கி சில பகுதிகளை சேதப்படுத்தி விட்டனர். ஆயினும் இது பொதுமக்களால்  தடுக்கப்பட்டு, இன்று கொங்கர்புளியங்குளம் புராதனச் சின்னங்கள் நாம் பார்த்து நம் வரலாற்றின் பழமையை நினைத்துப் பெருமைகொள்ளும் வகையில் இங்குள்ளன.

இங்கு வந்து செல்வோர் தங்கள் பெயர்களை கீறியும், கற்படுக்கைகளைச் சிதைத்தும் இச்சின்னங்களை அழிப்பது வேதனைக்குரிய விசயமாகும். இவை நம் மரபினை உலகுக்குக் காட்டும் சொத்துக்கள் என்று மனதில் உணர்ந்தால் இவற்றைச் சேதப்படுத்தும் எண்ணம் மனதில் எழாது. இதனை மனதில் கொண்டு இந்த வளம் மிக்க பகுதியை நமது பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றென உணர்ந்து பெருமை கொள்வோம்.






Thursday, October 19, 2017

73. சேலைகள்



தீபாவளி என்றாலே குடும்பத்தினருக்குச் சேலை துணிமணிகள் எடுக்க வேண்டும் எனத் துணிக்கடைகளை நோக்கிச் செல்வது நமக்குப் பழகிப்போன விஷயம்தான். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் எப்படி இனிப்பு பதார்த்தங்கள் நமக்கு முக்கியமோ, அதே போலத்தான் நாம் பண்டிகையைக் கொண்டாட அணிந்து மகிழக் காத்திருக்கும் புத்தாடைகளும்.   தீபாவளி பண்டிகையில் சேலை இல்லாமல் இருக்குமா?  நாம் அணியும் சேலை உருவாக்கப்படும் நெசவுத் தொழில் பற்றிய சில செய்திகளைப் பார்ப்போமே.

சேலைகளில் பல ரகங்கள் உண்டு. தமிழகத்தின் சில ஊர்களின் பெயர்களைச் சொன்னாலே எவ்வகைச் சேலைகள் அங்குப் பிரபலம் என்பது பலருக்கு உடன் தெரிந்து விடும். மதுரைக்கு சுங்குடி சேலை, திருப்பூருக்குக் கைத்தறி சேலை, காஞ்சிபுரம் பட்டுச் சேலை, காரைக்குடிக்கு நூல் சேலை எனக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல ஒவ்வொரு ஊரின் புகழ்பாட தனிச்சிறப்புடன் கூடிய சேலை வகைகள் விதம் விதமாக இருக்கின்றன. எத்தனையோ வகை ஆடைகள் நம் அன்றாட வாழ்வில் இடம்பிடித்திருந்தாலும் கூட சேலைகளுக்குத் தமிழர்களாகிய நம் வாழ்வில் நாம் கொடுக்கும் மதிப்பு என்பது எப்போதுமே உயர்ந்ததுதான். திருமண நிகழ்வுகள், பிறந்த நாள் வைபவங்கள், தமிழர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் என எல்லா நிகழ்வுகளிலும் சேலை அணிவதையே மலேசியத் தமிழ்ப் பெண்கள் பெருமை கொள்கின்றோம். 

நாம் அணிகின்ற சேலைகளில் பட்டு, நைலக்ஸ், கைத்தறி, எனப் பல வகைகள் இருந்தாலும் தமிழகத்திற்கும் தமிழ்ப்பெண்கள் அணிவதற்கும் சிறப்பு சேர்ப்பது கைத்தறி சேலைகள் தான். தமிழகத்தில் பல சிற்றூர்களிலும் பெறும் நகரமாகிய கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், போன்ற இடங்களிலும் கைத்தறி சேலைகளை நெசவு செய்து தயாரிக்கும் நெசவுத்தொழில் பெருமளவில் நடைபெற்று வருகின்றது. அப்படி ஒரு ஊருக்குச் சென்று நெசவுத் தொழிலின் தற்கால நிலையை அறிந்து அதனை ஒரு பதிவாக்கி கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவாக வெளியீடு செய்திருந்தோம். அதனை http://tamilheritagefoundation.blogspot.de/2017/10/2017.html என்ற பக்கத்தில் முழுமையாகக் காணலாம். 

சாயர்புரம் - இந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். சாயர்புரத்தில் நெசவுத்தொழில் பற்றிய ஒரு பதிவு செய்வதற்குத் தூத்துக்குடி சென்றிருந்த போது புதிய அனுபவங்கள் எனக்குக் கிட்டின. கிராமத்திற்குள் நுழையும் முன் எங்குப் பார்த்தாலும் பளிச்சென்ற செம்மண் திடல்கள். செம்மண் தரையிலே கட்டப்பட்ட வீடுகள். கிராமத்திற்குள் நுழையும் முன்னரே நெடுந்தூரத்திற்குப் பசுமையான மரங்கள் நிறைந்த காடு. கிராமத்திற்குள் நுழைந்ததும் சின்ன சின்ன வீடுகள். தூய்மையான தெருக்கள். ஆங்காங்கே சின்னச் சின்ன தேவாலயங்கள். வித்தியாசமான காட்சியாக இது எனக்குத் தோன்றியது. 

நான் சாயர்புரத்திற்கு வருவதற்கு முன்னர் தூத்துக்குடி  நகரத்தில் ஒரு நெசவுத்தொழிற்சாலைக்குச் சென்று அங்குப் பதிவினை முடித்து விட்டு இந்தக் கிராமத்திற்கு வந்தேன். கிராமத்திற்குள் ஒரு நெசவுத் தொழிற்சாலை இருக்கின்றது. மிகப் பாழடைந்த ஒரு கட்டமாக அது தோற்றமளிக்கின்றது. உள்ளே நெசவு இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நானும் என்னை அழைத்துச் சென்ற நண்பரும் சென்று பார்த்தோம். இரண்டு தறி இயந்திரங்கள் தானே இயங்கிக்கொண்டு சேலையை உருவாக்கிக் கொண்டிருந்தன. அதனை அடுத்தார்போல மனிதர்கள் இயக்கும் கைத்தறி இயந்திரத்தில் ஒரு பெரியவர் அமர்ந்து சேலைக்குத் தறி போட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று நெசவு பற்றிய சில அடிப்படைத் தகவல்களைக் கேட்டு அறிந்து பதிவு செய்து கொண்டோம். ஆண்களும் பெண்களுமாகப் பாகுபாடின்றி இத்தொழிலைச் செய்கின்றனர். கையால் போடும் தறி மட்டுமன்றி இன்று இயந்திரத்துடன் இயங்கும் நெசவு இயந்திரங்களும் வந்து விட்டன. இவை ஒரு கைத்தறி சேலையோ, கைலியோ, துண்டோ தயாரிக்கப்படும் நேரத்தை விரைவாக்குகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 


தொழிற்சாலையில் பதிவினை முடித்து விட்டு கிராமத்திற்குள் நடக்கத்தொடங்கினோம். அவை சற்றே பெரிதான குடிசை வீடுகள் இருபக்கமும் நிறைந்த வகையில் அமைந்திருக்கும் தெரு. தெருவில் இருந்த ஒரு வீட்டிற்குள் என்னை அழைத்து வந்த நண்பர் அங்கிருந்தோரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அந்த வீட்டில் முன் பக்கத்தில் வீட்டுடன் சேர்த்தே அமைக்கப்பட்ட ஒரு தறி இயந்திரம் ஒன்று இருந்தது. 

இங்குள்ள வீடுகள் அனைத்துமே சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு தறி இயந்திரம் முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட நிலையிலேயே அமைக்கப்பட்டிருந்தன என்றும் தற்சமயம் இது குறைந்து விட்டது என்றாலும் இன்னும் கூட தெருவில் உள்ள பல வீடுகளில் தறி இயந்திரங்களில் உள்ளன என்ற செய்தியை அறிந்து கொண்டேன். 

அவர்கள் எனக்குத் தறி இயந்திரத்தை இயக்கிக் காட்டினர். ஒரு பெரிய நூல் கண்டினைப் பொருத்தி விடுகின்றனர். இரு கைகளாலும் இயந்திரத்தை மேலும் கீழும் இழுக்கும் அதே நேரம் கால்களால் தையல் இயந்திரத்தை ஓட்டுவது போல அசைக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது இயந்திரத்தில் நூல் இழைகள் ஒன்றோடு ஒன்று பின்னி இறுகி துணியாக வடிவம் பெறுகின்றது என்பதை நேரில் பார்த்தேன். ஒரு பெரிய கண்டினைக் கொண்டு 21 சேலைகளை நெய்து விடுகின்றனர். அதில் 20 சேலைகள் அவர்கள் விற்பனை செய்யும் அமைப்பிற்குக் கொடுத்து கூலி பெற்றுக் கொள்கின்றனர். ஒரு சேலையை அவர்களுக்கு எடுத்துக் கொள்கின்றனர். இந்த வகையில் இக்கிராமத்தில் கைத்தறி சேலை உருவாக்கம் நடைபெறுகின்றது. 

தமிழக அரசாங்கம் ஏழை மக்களுக்கு இலவச சேலை வேட்டி துண்டு கொடுப்பதனால் அதற்கான ஆர்டர்கள் இவர்களுக்கு வருவதாகவும் அதற்குத் தேவைப்படும் சேலைகளை இவர்கள் தயாரிப்பதாகவும் அறிந்து கொள்ள முடிந்தது. பதிவினை முழுதாக முடித்த பின்னர் அதே கிராமத்திலேயே அன்று இரவு தங்கிவிட்டு மறுநாள் மாலை திருநெல்வேலி செல்லலாம் என்பது எனது திட்டமாக இருந்தது. 

அன்று இரவு அதே கிராமத்தில் நான் தங்குவதற்காக அந்தக் கிராமத்தில் முக்கியமானவர் பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்களின் இல்லத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பதிவுகள் முடித்து அங்குச் சென்று சேர்ந்தவுடன் அப்பெரியவருடனும் அவரது மனைவியுடனும் அறிமுகம் செய்து கொண்டேன். அப்பெரியவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர்கள் வீட்டின் மாடிப்பகுதியை முழுமையாக நூலகமாக மாற்றியுள்ளனர். கணினிகளை வைத்து கிராமத்துக் குழந்தைகள் வந்து பார்த்து படித்துச் செல்ல இலவசமாக அனுமதிக்கின்றனர். அக்கிராமத்து  மக்களின் பால்  மிகுந்த அன்பும் அக்கறையும், சமூக சேவையில் ஈடுபாடும் நிறைந்த தம்பதியர் அவர்கள். 

மறு நாள் காலையில் பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்களது தமிழ் ஆய்வுகள் பற்றியும் அக்கிராமத்துப் பிரச்சனைகள் பற்றியும் பல விசயங்கள் பேசினோம். மேலும் சில நண்பர்களும் நான் தங்கியிருந்த அந்த வீட்டிற்கு வந்து கூடினர். நெசவுத்தொழிலை வளர்ப்பதற்காகவும் கைத்தறி பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என இவர்கள் என்னிடம் தகவல் பகிர்ந்து கொண்டனர். 

பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்கள் நெசவுத்தொழிலை அறிமுகம் செய்யும் ஒரு கூடம் போன்ற ஒரு கட்டடம் ஒன்றை தன் சொந்தச் செலவில் அதே ஊரில் கட்டியுள்ளார். அதில் பயிற்சி வகுப்புக்கள், தொழில் முனைவர்களுக்கான ஆலோசனைகள் போன்றவற்றை நடத்தத் திட்டம் வைத்துள்ளார். 

நெசவுத்தொழிலுக்குப் பிரசித்தி பெற்ற இந்த சாயர்புரத்தில் சாலைகளில் நான் சந்தித்த பெண்கள் என்னிடம் அன்புடன் பேசினர். கைத்தறி இவர்களது குலத்தொழில் என்றும், இவர்கள் வாதிரியார் என்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அறிந்து கொண்டேன். 

இந்தப் பகுதியில் பாதிரியார் ஜி.யூ போப் அவர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடம் ஒன்றும் உள்ளது. அதில் கல்வி கற்று வாழ்வில் சிறந்த முன்னேற்றம் கண்டவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எனத் தயங்காமல் கூறலாம். இன்றும் கூட சாயர்புரத்தில் இப்பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவர்கள் தமிழகம் தவிர்த்து ஏனைய மாநிலங்களிலும் நல்ல வருமானம் தரக்கூடிய உயர் பதவிகளிலும் பணிபுரிவதாக அங்கு நான் சந்தித்த நண்பர்கள் வழி அறிந்து கொண்டேன். இன்றைய இளைய தலைமுறையினர் நெசவுத் தொழிலை நாடி வருவதில்லை என்றும் இத்தொழில் படிப்படியாக குறைந்து வருகின்றது என்பதையும் அங்கு முடங்கிக் கிடந்த கைத்தறி இயந்திரங்களே சாட்சி கூறின. 

சாயர்புரத்தின் நெசவுத்தொழில் மட்டுமல்ல - தமிழத்தின் பல இடங்களில் நடைபெறுகின்ற நெசவுத்தொழில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதையும் இத்தொழிலை விட்டு மக்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்வதையும் காண்கின்றோம். இது காலம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் தான். ஆனால் தமிழர் பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற இக்கலை நலிவுற்று அழிந்து விடாமல் ஏதாவது ஒரு வகையில் இக்கலை தொடர்வதைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கிருக்கின்றது. 

தூத்துக்குடியிலும் சாயர்புரத்திலும் தயாரிக்கப்படும் கைத்தறி சேலைகளை நேரில் பார்த்த போது அவை ஒவ்வொன்றுமே மிக அழகாக இருப்பதைக் கண்டேன். ஆனால் இப்போதெல்லாம் இக்காலத்துப் பெண்கள் கைத்தறியை விரும்புவதில்லை என்பதை மக்கள் சொல்லி கேட்கும் போது வருத்தமே மேலிடுகின்றது. தமிழர் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாகிய இந்த நெசவுத்தொழிலை அது மறையாமல் வளர்க்க வேண்டுமென்றால் நாம் கைத்தறி ஆடைகளை வாங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும்.  கைத்தறி வளர்ச்சிக்கு நாமும் நம் பங்கினை ஆற்றுவோம்!















Thursday, October 5, 2017

72. மருங்கூர் - சங்ககால நகரம்



ஹோமோ செப்பியன் என அடையாளப்படுத்தப்படும் மனிதக்குலம் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி, பின்னர் உலகின் பல பாகங்களுக்குப் பரவியதாக ஆய்வாளர் கூறுவர். ஹோமோ செப்பியன் வகை மனிதர்களுக்கு முன்னரே நியாண்டர்தால் வகை மனிதக் குலம் இருந்தது என்பதும் அவை படிப்படியாக குறைந்து மறைந்தது, அல்லது வேறு சிறு மனிதக் குல வகையோடு அல்லது ஹோமோ செப்பியன் வகை மனித குலத்தோடு கலந்து மறைந்தது என்பதும் வரலாறு நமக்களிக்கும் செய்தி. மனிதகுலம் நெடுங்காலம் வாழும் பகுதிகளில் ஒன்றாக இன்றைய தமிழகத்தையும் குறிப்பிடத்தான் வேண்டும். மிகப் பல ஆண்டுகளுக்கு முன் இருந்தே மனித குலம் இங்கே வாழ்ந்ததற்கான தடயங்களையும் ஆதாரங்களையும் பற்றிய செய்திகள் பல வெளியிடப்பட்டுள்ளன. இன்றைய தமிழகத்தில் விரிவாக நடத்தப்பட்ட சில அகழ்வாய்வுகள் இன்றைக்கு ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நாகரிகம் அடைந்த மனித இனக்குழுவாக இருந்தமையை உறுதி செய்யும் வகையில் உள்ளன. அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கீழடி, கொடுமணல் போன்ற நிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

சங்ககாலத்தில் புகழுடன் விளங்கிய நகரங்களுள் ஒன்று மருக்கூர். சங்கப்பாடல்கள் சுட்டும் மருங்கூர் எனப்படும் நகரம் என்பது யாது என்பதும் ஒரு கேள்வியாகவே தொடருகின்றது. ஆயினும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூர் ஒரு சங்ககால நகரம் தான் என்பதற்கானச் சான்றுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

இந்த வருடம் ஜனவரி மாதம் நான் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சில வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வரச் சென்றிருந்தேன். எனக்கு இப்பயணத்தில் திட்டமிடலுக்கு உதவியவர் வடலூர் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றும் பேரா.முனைவர்.சிவராமகிருஷ்ணன் அவர்கள். நான் வடலூருக்குச் செல்வது மிக இறுதி நேரத்தில் தான் முடிவாகியது. ஆக நகராண்மைக் கழக பேருந்திலேயே இரவுப் பயணம் செய்தேன். காலை 5 மணி வாக்கில் வடலூரை வந்தடைந்தேன். என்னை அந்த அதிகாலை நேரத்திலும் வரவேற்று அவ்வூரின் நாட்டமை திரு,சேகர் அவர்களது இல்லத்திலேயே நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர் வடலூர் நண்பர்கள்.

ஊர் நாட்டாமை பற்றி தமிழ்ச்சினிமா படங்களில் தான் கேள்விப்பட்டிருப்போம். நேரிலேயே ஊர் நாட்டாமையின் இல்லத்தில் தங்குவது மகிழ்ச்சியாக இருந்தது. அக்குடும்பத்தினர் என்மீது காட்டிய அன்பும் கரிசனமும் மறக்க முடியாதது. அவரது அழைப்பின் பேரில் வடலூர் இராமலிங்க வள்ளலாரின் திருச்சபைக்குச் சென்று பார்த்து வழிபட்டு வந்தேன். வடலூர் வள்ளலாரின் திருச்சபை நடவடிக்கைகளிலும் சமூஅக்ச் சேவையில் மிகுந்த நாட்டம் கொண்டவர் வடலூர் நாட்டாமை அவர்கள் என்பதை இந்தப் பயணத்தில் உணர்ந்தேன். ஒவ்வொரு பயணமும் எனக்குப் பல புதிய நட்பு வட்டத்தை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வாகவே அமைந்து விடும். அந்த வகையில் இந்த வடலூர் பயணமு எனக்குப் பல நல்ல புதிய நட்புகளை நான் அறிமுகம் செய்து கொள்ளும் பயணமாக அமைந்தது

எனது இருநாள் பயணப் பட்டியலில் இரண்டாம் நாள் நான்மருங்கூர் செல்வது உறுதியாகியிருந்தது. மருங்கூரை நாங்கள் சென்று சேர்ந்த போது காலை மணி 10 இருக்கலாம். வீடுகளே இல்லாத திறந்த வெளி. 1 ஏக்கர் நிலப்பகுதி தொல்லியல் அடையாளங்கள் நிறைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டு முள் வேலி போட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. முள்வேலி போடப்பட்டுள்ள பாதையின் வழியே நடந்து அருகே சென்று பார்வையிட்டோம். அப்பகுதியில் ஆங்காங்கே ஏறக்குறை 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்கள், உடைந்த பானை ஓடுகள் போன்றவை காணப்பட்டன. சில பானை ஓடுகளில் கீறல்களும் இருந்தன.

பேரா.சிவராமகிருஷ்னன் இப்பகுதியின் சிறப்புக்கள் பற்றி விளக்குவதை நான் வீடியோ பதிவாக்கிக் கொண்டிருந்தேன். அப்பகுதி முக்கியமான சங்ககால வாழ்விடம் என்பது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. ஆயினும் இங்கு முறையான அகழ்வாய்வுப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. 2007ல் முதலில் இப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பது தமிழக தொல்லியல் துறையின் ஆய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டது. இங்குக் கண்டறியப்பட்டுள்ள மக்கள் வாழ்விடத்தின் காலம் கி.மு.3ம் நூற்றாண்டு என்பதும், தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் இங்கு மேலோட்டமாகச் செய்யப்பட்ட ஆய்விலேயே இங்குக் கிடைக்கப்பெற்றன என்றும் தெரியவந்தது. சங்க காலத்து நார்ப்புர கட்டுமானத்தின் செங்கல் அமைப்புக்கள் இங்கு தென்படுகின்றன. முறையான அகழ்வாராய்ச்சி இன்னமும் இப்பகுதியில் செய்யப்படாத நிலையில் இது தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் பகுதியாகவே இன்றும் இருக்கின்றது.

மருங்கூர் பண்டைய காலத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்களால் உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புக்களின் எச்சங்களை இன்னமும் இங்கே காணமுடிகின்றது என்பது போன்ற தகவல்களைப் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் வழங்க, அவற்றை நான் வீடியோ பதிவாக்கிக் கொண்டிருந்தேன்

இப்பகுதியில் நாங்கள் இருப்பதைப் பார்த்த ஊர் மக்கள் சிலர் ஒருவர் பின் ஒருவராக எங்களை நோக்கி வந்து கூடிவிட்டனர். நாங்கள் நிலம் வாங்க வந்ததாக அவர்கள் நினைத்துக் கொண்டு விட்டனர் போலும். எங்களிடம் வந்து, ”இது அரசாங்க நிலம். இங்கே நிலம் விற்கமாட்டார்கள்” என எங்களுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தனர். அவர்களைச் சமாதானம் செய்து இங்கே வரலாற்றுப் பதிவுகள் செய்ய வந்திருக்கின்றோம் என்பதை விளக்கியதும் எங்களோடு இருந்து எங்கள் பதிவாக்கத்தைப் பார்த்துக் கொண்டு நின்றனர். ஒரு வகையில் இவர்கள் கவனமாக இப்பகுதியைப் பார்த்துக் கொள்வதும் பாராட்டத்தக்கதே.

இப்பகுதியைப் பார்த்து விட்டு வெளியே நடந்து வரும் போது வரிசை வரிசையாகக் கொட்டகைகள் இருப்பதையும் அங்கே தனியாக அமர்ந்து சிலர் வேலை செய்து கொண்டிருப்பதையும் கண்டேன். தச்சர்களின் கொட்டகைகள் தான் அவை. வரிசையாகக் கைத்தொழில் செய்வோர் அங்கு தனித்தனி கொட்டகைகளை அமைத்து இரும்புக் கத்திகள், இரும்பு பாத்திரங்கள், அருவாள்மனை, வேல்கம்புகள் என தயாரித்துக் கொண்டிருந்தனர். காலத்தைக் கடந்து செல்லும் ஒரு கால இயந்திரத்தில் ஏறிக் கொண்டு சங்ககாலத்துக்கே போய்விட்டது போன்ற உணர்வு இவர்களைப் பார்த்த போது எனக்கு ஏற்பட்டது.

எத்தனை விதமான தொழில் திறமைக் கொண்டோர் நம் தமிழ் நிலத்தில் இருந்திருக்கின்றனர். இன்றோ பெரிய வியாபார நிறுவனங்கள் வந்து விட்டதால் அவை ஒற்றை வியாபார நிறுவனங்களை நோக்கிய தொழில் அடிப்படையை நோக்கிச் செல்வதைக் காண்கின்றோம். சிறு தொழில் செய்து வருமானம் ஈட்டுவோரின் தொழில் திறமை இவ்வகை வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாக்குதலில் தாக்குப்பிடிக்கமுடியாது படிப்படியாக குறைந்து, மறைந்து அழிந்து போவது தான் நடக்கின்றது. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல. உலகமெங்கிலும் இதே நிலைதான் இன்று கண்கூடு. இங்கு மருங்கூர் பகுதியில் வசிப்பவர்களான இவர்கள் தச்சர்கள், கம்மாளர்கள், பொற்கொல்லர்கள் என வகை வகையாகத் தொழில் ரீதியில் அடையாளப்படுத்தப்படும் தொழில் திறமைமிக்கோர் என்பதை இவர்களது குடிசைப்பட்டறைகளை வைத்தே அறிய முடிந்தது.

அழகன்குளம் ஆய்வு போல இப்பகுதியிலும் முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் தொடர்பான செய்திகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் எதிர்பார்ப்பு. கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்த மருங்கூர் மட்டுமல்ல, இங்குள்ள பல பல சிறு கிராமங்களிலும் இது வரை ஆய்வாளர்களால் ஆராயப்படாத தகவல்கள் பல உள்ளன. அறியப்படாத தமிழகத்தை நாம் நம் தேடுதலின் வழி தொடர்ந்து ஆராயத்தான் வேண்டும்!! 

Thursday, September 28, 2017

71. போலந்தின் க்ராக்காவ் - தமிழகத்தின் கீழடி தொல்லியல் ஆய்வுகள்



ரஷ்யா, லுத்துவானியா, பெலாரஸ், உக்ரேன், சுலோவாக்கியா, செக், ஜெர்மனி ஆகிய 7 நாடுகளை எல்லைகளாகக் கொண்டும், வடக்கே பால்ட்டிக் கடலை ​எல்லையாகக் கொண்டும் திகழும் நாடு போலந்து. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் நாடாக இடம் பிடிக்கும் நாடுகளில் ஒன்று.

ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றிற்கும் பண்டைய வரலாற்றுப் பெருமைகள் இருப்பது போல, தனித்துவத்துடன் கூடிய வரலாற்றுப் பெருமை உள்ள நாடு போலந்து என்பதை மறுக்க முடியாது. இன்றைய நிலையில் பொருளாதார ரீதியாகச் சற்று பின் தங்கிய நிலையில் இருந்தாலும் கூட, சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சிறந்த பொருளாதார பலத்துடன் திகழ்ந்தது போலந்து. இதன் இன்றைய தலைநகரம் வார்சாவ். ஆனால் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, போலந்தின் தலைநகரமாக விளங்கியது க்ராக்காவ் நகரமாகும். பல நூற்றாண்டுகளாக போலந்த்தின் பண்பாட்டுக் கலாச்சார நகரம் என்ற சிறப்புடன் விளங்கும் நகரம் இது. இதன் சிறப்பினைக் கருத்தில் கொண்டு இந்த நகரத்தை முழுமையாக யுனெஸ்கோ, பாதுகாக்க வேண்டிய நகரங்களுள் ஒன்றாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த க்ராக்காவ் நகருக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது க்ராக்காவ் நகரின் தொல்லியல் பழமைகளையும் வரலாற்றுச் செய்திகளையும் ஓரளவு அறிந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன்.

க்ராக்காவ் நகர மையம் ஒரு விரிந்த பரந்த மேடையைப் போன்ற தோற்றம் கொண்டது. சதுர வடிவிலான அதன் மையப் பகுதியில் நடந்து செல்லும் போதும், அங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள உணவகங்களில் ஏதாகினும் ஒன்றில் அமர்ந்து உணவருந்தும் போதும், அங்குள்ள The Cloth Hall என அழைக்கப்படும் 600 ஆண்டுகள் பழமையான வர்த்தக மையக் கட்டிடத்திற்குள் சென்று பொருட்களைத் தேடிப் பார்த்து வாங்கும் பொழுதும், அந்தத் தரைப்பகுதிக்கும் கீழே சுரங்கப்பாதை ஒன்று இருப்பதையும், அங்கே நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது என்ற உண்மையையும் நிச்சயமாக யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.

Rynek Underground என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அருங்காட்சியகம் க்ராக்காவ் நகரத்தின் முக்கிய வரலாற்றுச் சான்றுகளில் ஒன்று. இது 4000 சதுரமீட்டர் பரப்பளவு கொண்டது. தொல்லியல் அகழ்வாய்வு செய்யப்பட்ட பகுதி கீழே நிலத்துக்கு அடியில் இருக்கின்றது. தொல்லியல் அகழ்வாய்வு நடத்தப்பட்ட ஒவ்வொரு பகுதிகளையும் தக்க வகையில் பாதுகாப்பு வளையங்களை அமைத்துப் பாதுகாத்திருப்பதோடு பொதுமக்கள் அவற்றை நேரில் கண்டு அங்கங்கு என்னென்ன பொருட்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டனவோ அவற்றிற்கான விளக்கத்தினை இணைத்து, தேவைப்படும் இடங்களில் கணினிகளைப் பொருத்தி விரிவான விளக்கங்களைப் பார்வையாளர் அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்திருக்கின்றனர் தொல்லியல் துறையினர் . சில இடங்களில் லேசர் விளக்கொளிகளைப் பொருத்தி, அங்கே தொழில்நுட்பக் கருவிகளின் துணையோடு பழங்கால சூழலை விவரிக்கும் காட்சிகளை லேசர் காட்சிகளாகத் தத்ரூபமான வடிவில் நம் கண்களின் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றனர்.


2005ம் ஆண்டு இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டிருக்கின்றது. அதாவது நிலத்துக்கு மேலே 600 ஆண்டு பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டிடங்கள் இருக்கின்ற அதே பகுதியின் அடித்தளத்தில் தான் இந்த ப் பணி தொடங்கப்பட்டிருக்கின்றது என்றால் எவ்வளவு சவாலான அகழ்வாய்வுப் பணியைத் தொல்லியல் துறை முன்னெடுத்திருக்கின்றது என்பதை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகின்றது அல்லவா?

இந்த அகழ்வாய்வின் போது பண்டைய போலந்து மக்கள் இப்பகுதியை ஒரு வணிக மையமாகப் பயன்படுத்தியமை பற்றிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இந்த அகழ்வாய்வில், காசுகள், உடைகள், காலணிகள், அணிகலன்கள் ஆகியவற்றோடு 4000 ஆண்டு பழமையான மனித உடலின் மண்டை ஓடுகள் எலும்புக் கூடுகள் ஆகியவையும் ஈமக்கிரியைச் செய்யப்பட்ட சடங்குப் பொருட்கள் ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டு போலந்து அரசு இந்தப் பகுதியில் அகழ்வாய்வுப் பணியை வெற்றிகரமாக முடித்து இப்பகுதியை பொதுமக்கள் வந்து பார்த்து அறிந்து செல்லும் தரமான ஒரு அருங்காட்சியகமாக அமைத்துள்ளது என்பது பாராட்டத்தக்க செய்தியல்லவா?

இந்த அருங்காட்சியகத்தின் உட்சென்று அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட்டு வந்த பின்னர் என் மனதில் தமிழகத்தின் கீழடி அகழ்வாய்வுகள் தொடர்பான கடந்த சில மாதங்களின் நினைவுகள் நிழலாடத் தொடங்கின.

2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட அகழ்வாய்வு  தொடர்பான சர்ச்சைகளை இன்றளவும் நாம் செய்தி ஊடகங்களின் வழியாக அறிகின்றோம். இன்று புதிதாக பேசப்படும் பொருள் அல்ல கீழடி. 1980-1981ம் ஆண்டிலேயே இப்பகுதியின் மேற்பரப்பில் தென்பட்ட சிவப்பு-கருப்பு நிறத்தில் அமைந்த பானை ஓடுகளைப் பார்த்த சிலைமான் என்ற ஊரில் இருந்த ஆசிரியர் திரு.பலசுப்பிரமணியம் என்பவர், தாம் கண்டெடுத்த அப்பானை ஓடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடும் எனச் சந்தேகித்து அதனைத் திருமலை நாயக்கர் மகால் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்து தகவல் தெரிவிக்க, அப்போது ஆய்வுப் பணியை அங்கிருந்த ஆய்வாளர்கள் தொடங்க முயற்சித்தனர். அந்த ஆய்வின் போதே இப்பகுதி சங்ககாலத்திற்கு முந்தைய நாகரிகத்தின் சான்று அடங்கிய பகுதிதான் என அடையாளம் காணப்பட்டாலும் அகழாய்வுப் பணி தொடரவில்லை. இது ஏன் என்பது நம் முன்னே நிற்கும் கேள்வி என்றாலும், அது பழங்கதையாகிவிட்ட நிலையில், மீண்டும் 2015ம் ஆண்டு தொடக்கம் நடைபெறுகின்ற அகழ்வாய்வுச் செய்திகளில் நமது கவனக் குவிப்பைச் செலுத்த வேண்டியுள்ளது.

இந்திய மத்திய அரசின் தொல்லியல் துறை, மதுரையில் பாயும் வைகைக்கு அருகே உள்ள 293 கிராமங்களில் தொல்லியல் சின்னங்கள் இருப்பதைக் கண்டறிந்தது. பின்னர் கீழடியில் 43 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வாளர் அமர்நாத் என்பவரின் தலைமையில் இங்கு ஆய்வுகள் தொடங்கப்பட்டன. இந்த ஆய்வில் மனித நாகரிகத்தைப் பறைசாற்றும் பல சான்றுகள் கிடைத்தன. பானை ஓடுகளில் கீறப்பட்ட பிராமி எழுத்துக்கள், சுடுமண் உலைகள், சுடுமண் குழாய்கள், சுடுமண் உருவங்கள், சுடுமண் கலங்கள், தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட தாயக் கட்டைகள், அணிகலன்கள் போன்றவை இந்த ஆய்வில் கிட்டின. அதுமட்டுமன்றி செங்கல்லினால் அமைக்கப்பட்ட கட்டிட சுவர்களையும் இந்த அகழாய்வு நமக்குப் புலப்படுத்தியது. அதுமட்டுமன்றி இதே போன்ற அடுப்புக்களும் தமிழகத்தின் அரிக்கமேடு, உறையூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன என்பதும் ஒரு பண்பாட்டுக் கலாச்சார ஒற்றுமையை நமக்கு நிறுவும் சான்றாக அமைகின்றது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் இவை பழமையானவை என கரிமச் சோதனைகளின் வழி இந்த அகழாய்வுச் சான்றுகள் நிரூபிக்கப்பட்டன.

பின்னர் கீழடியில் இரண்டாம் கட்ட ஆய்வு 2016ம் ஆண்டு தொடங்கியது. இதில் மேலும் வியப்பூட்டும் வகையில் ஏறக்குரைய 5000 சான்றுகள் அகழாய்வில் கிட்டின. இதன் பின்னர் படிப்படியாக கீழடி ஆய்வுக்குத் தடைகள் ஏற்படத் தொடங்கின. தொல்லியல் ஆய்வினைத் தொடர்வதற்கான நிதி ஒதுக்கீட்டில் பிரச்சனை, அகழாய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கிப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்த ஆய்வாளர் திரு.அமர்நாத் அவர்களின் பணியிட மாற்றம், என ஒன்றை அடுத்து மற்றொன்றாக கீழடி ஆய்வு சவால்களை எதிர்நோக்கியதைப் பலரும் அறிவோம். இந்தச் சூழலில் இந்த ஆண்டு மீண்டும் மற்றொரு தலைமை ஆய்வாளரின் மேற்பார்வையில் அகழாய்வின் மூன்றாம் கட்டப் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அத்துடன் கீழடி அகழாய்வு நிறைவு பெறுகின்றது என்ற செய்தியையும் அறிவித்து மீண்டும்  இப்பணியில் ஒரு சிக்கல் முளைத்துள்ளது. இது கீழடி தொடர்பில் நம் முன்னே தொடர்கின்ற பெரிய சவால்.

இது ஒருபுறமிருக்க,  கீழடி அகழ்வாய்வுப் பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட  அரும்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் எனப் பலரும் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இக்குரல்கள் பல தரப்பிலிருந்து எழுகின்றன. சமூக ஆர்வலர்கள், வரலாற்று அறிஞர்கள், கல்வியாளர்கள் எனப் பலரும் இந்தச் சான்றுகளை மையப்படுத்தி ஒரு அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தினை முன் வைத்த நிலையில்,  போராட்டங்களும் நடைபெற்றன. அவை தொடர்கின்றன. இதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இருப்பது, இங்கு உள்ளூரிலேயே ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பதை விடுத்து தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றும் இவ்வரலாற்றுச் சான்றுகளை மைசூரில் உள்ள அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தொடங்கப்பட்டமையே எனலாம்.

ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு போன்ற அகழ்வாய்வுகள் ஏற்படுத்திய அதிர்வலைகள் போலவும் அதற்கும் மேலான அதிர்வலையை கீழடி அகழாய்வுகள் ஏற்படுத்தியுள்ளன. தமிழரின் பண்டைய வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டினையும் சான்று பகரும் இந்தத் தொல்லியல் சான்றுகள், கீழடிக்கு அருகாமையில் சிறப்பான ஒரு புதிய அருங்காட்சியகக் கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பொதுமக்கள் வந்து பார்த்து அறியும் வகையில் அமைக்கப்பட வேண்டியது மிக முக்கியம். தமிழக அரசு இந்தப் பணிக்கு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கைகளை காலதாமதப்படுத்தாது செயல்படுத்த வேண்டியது மிக aவசியம். ஏனெனில் கண்டெடுக்கப்பட்ட பழம் சான்றுகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அருங்காட்சியகத்தினை விரைவில்  அமைப்பது தமிழர் நம் பண்பாட்டுச் சான்றுகளைப் பாதுகாக்க  எடுக்கப்படும் காலத்திற்கேற்ற  நன்முயற்சியாக அமையும்.