Wednesday, July 5, 2017

62. மாணவர் மரபு மையம்



மலேசிய சூழலில் தமிழரின் தொண்மையான வரலாற்றினைப் பாடபுத்தகங்களின் வழியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு இன்றைய இளைய தலைமுறைக்குக் கிடைக்கின்றதா என்றால் அது கேள்வியே. பாட நூல்களில் நாம் வாசிக்கின்ற தகவல்கள் மலேசியாவிற்கான தமிழ் மக்களின் புலம் பெயர்வுகள் தொடர்பான சில குறிப்பிட்ட வரலாற்றுச் செய்திகளைச் சிறிதளவு மேம்போக்காகச் சொன்னாலும் கூட, அவை முழுமையானதாகக் கிடைக்கின்ற சூழல் இல்லை. தமிழர்கள் சஞ்சிக்கூலிகளாக கடந்த 200 ஆண்டுகளில் மலேசிய தீபகற்பத்திற்கு வந்தவர்கள் என்ற தகவலே பெருவாரியாக மக்கள் மத்தியில் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி தமிழ் இலக்கியம், எழுத்து நடவடிக்கைகள், சமூகச் சேவைகளில் நாட்டம் கொண்டிருப்போர் ஆகியோருக்கும் கூட தமிழ் மக்களுக்கும் மலேசியாவிற்குமானத் தொடர்பின் பழமை என்பது தெரியாத நிலையே இன்றும் இருக்கின்றது. அதிகப்படியாகப் போனால் கெடா மாநிலத்தில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதி பௌத்த, இந்து சமயக் கோவில்கள் பற்றி சிறிது தகவல்களும் ராஜேந்திர சோழனின் படைகள் இங்கே வந்தன, இப்பகுதியைக் கைப்பற்றி சோழ அரசு இருந்தது என்ற செய்தி ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இதற்கும் மேல் பன்னெடுங்காலமாக தமிழர்களின் மலேசியாவிற்கான வருகை பற்றிய செய்திகளை பற்றி அறிந்து கொள்ள விரும்புவோருக்குப் பள்ளிக்கூட நூல்கள் போதாது. ஏனெனில் அவற்றில் வழங்கப்பட்டிருக்கும் செய்திகள் பெரும்பாலும் தமிழர்களின் மலேசியாவிற்கான தொடர்பை மிகக் குறைத்து எடைபோடும் வகையிலும் முக்கியத்துவம் குறைக்கப்பட்ட நிலையிலுமே மட்டுமே காட்டக் கூடியதாக இருக்கின்றன.

ஆக, இந்தச் சூழலில் மலேசியாவைப் பொறுத்தவரையில் அங்குபாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தகவல்கள் மலேசியாவில் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள விழைவோருக்கு உதவும் நிலையில் இல்லை என்பது வெளிப்படை. இருக்கின்ற ஒரு நல்ல வாய்ப்பு என்னவென்றால் மலாயா பல்கலைக்கழக் நூலகத்தில் உள்ள நூல்கள் தாம்.

மலாயா பல்கலைக்கழகத்து நூலகம் மிகப் பழமையானது. பல்லாண்டுகளின் சேகரிப்புக்கள் இந்த நூலகத்தில் உள்ளன. மலாயா பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவர்களே கூட இங்குள்ள தமிழ் மற்றும் தமிழ் மொழி, தமிழர் சார்ந்த  நூல்களைச் சென்று பார்த்திருப்பார்களா என்பது ஐயமே. இங்குள்ள பல நூல்கள் மலேசியாவில் தமிழர் வரலாறு தொடர்பான தகவல்களைக் கொண்டிருக்கின்றன. இந்த நூல்களையும் இங்குள்ள பழமையான சஞ்சிகைகளையும் ஆராய முற்படும் போது விடுபட்டுப் போன பல தகவல்களை நாம் தேடியெடுக்க முடியும்.

மாணவர்களுக்குக் கல்வி கற்கும் காலத்திலேயே நாம் நமது  தமிழர் பண்டைய வரலாறு தொடர்பாக அளிக்கின்ற செய்திகள் அவர்கள் மனதில் தேடுதலை மேலும் அதிகரிக்கும். அந்த வகையில், தமிழ் மரபு அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் பல பள்ளிகள், மற்றும் உயர்கல்விக்கூடங்களில் தமிழர் இன, பண்பாட்டு, வாழ்வியல் தொடர்பான  செய்திகளை சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், கண்காட்சிகள் வழியாக பகிர்ந்து கொள்கின்றோம். மாணவர்களையும் அவ்வகை முயற்சிகளில் ஈடுபடுத்துகின்றோம். தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு துணை முயற்சியாக மாணவர் மரபு மையம் என்ற அமைப்பினை ஏற்படுத்தி மாணவர்கள்  இவ்வமைப்பின் வழி தமிழர் வரலாறு தொடர்பான தேடல்களை மேற்கொண்டு ஆய்வுகளைச் செய்து தகவல்களைப் பெற செய்து வருகின்றோம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையம் என்ற இந்த அமைப்பினை முதன் முதலில்  தமிழகத்தின் குமாரபளையத்தில் இருக்கும் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியின் தான் அமைத்தோம். இந்த மாணவர் மரபு மையத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகள் பெருமைப்படத்தக்கவை.

2013ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவில் இருக்கும் திருமதி பவளசங்கரி அவர்கள் இந்த எஸ்.எஸ்.எம்.கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் செவாலியர் டாக்டர்.மதிவாணன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அக்கல்லூரியில் என்னை ஒரு வரலாற்றுக் கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்து உரையாற்ற அழைத்திருந்தனர். அந்த சந்திப்பின் போது தமிழ் மரபு அறக்கட்டளையின் உலகளாவிய செயற்பாடுகளை விவரித்து பேசிக் கொண்டிருந்தோம். கல்லூரியில் மாணவர்களுக்கு வரலாறு தொடர்பான செய்திகளைப் பகிரும் வகையில் ஏதேனும் தொடர் முயற்சிகளைச் செய்யலாமே என நான் முன்வைத்த கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவித்து அக்கல்லூரியின் முதல்வரையும் தமிழ்ப்பேராசிரியர்கள் டாக்டர்.மஞ்சுளா, டாக்டர்.சங்கரராம பாரதி ஆகிய இருவரையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து இவர்கள் தொடர்பில் இருந்து செயலாற்றுவர் என நம்பிக்கையுடன் சொல்லிச் சென்றார்..

அடுத்த ஆண்டில் தமிழ்  மரபு அறக்கட்டளையின்  மாணவர் மரபு மையம் இங்கு தொடங்கப்பட்டது. அதனை அடுத்து 2015ம் ஆண்டு ஒரு மாபெரும் தமிழர் மரபு கண்காட்சியை கல்லூரி முதல்வர். டாகடர்.ராமசாமி,  தமிழ்ப்பேராசிரியர்கள் டாக்டர்.மஞ்சுளா, டாக்டர்.சங்கரராம பாரதி ஆகியோர் மாணவர்களின் பக்க துணையோடு ஏற்பாடு செய்திருந்தனர். இக்கண்காட்சியில் தமிழர் வாழ்வியலில் அங்கம் வகிக்கும் பண்பாட்டுக் கூறுகளைப் பிரதிபலிக்கும் பல்வேறு விசயங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழர் வீர விளையாட்டுக்கள் பற்றிய செய்திகள், தமிழர் விவசாய மேம்பாடு, தானியங்கள், பயிர்கள் தொடபான காட்சிப்பொருட்கள், தமிழர் இசை, கலை, கூத்து தொடர்பான செய்திகளின் காட்சிப்பொருட்கள், தமிழர் உணவு, கிராமிய உணவு வகைகள், தமிழர் உடை , உடை அணியும் முறை, பருத்தி, வழிபாட்டு அம்சங்கள், கிராமப்புரங்களின் காட்சி என வகை வகையாக ஒரு வளாகம் முழுக்க கண்காட்சிப் பொருட்கள் நிறைந்திருந்தன.

2016ம் ஆண்டின் தொடக்கத்தில் இரு நாள் கருத்தரங்கம் ஒன்றினையும் இதே கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தோம். கல்லூரியில் தொடக்கப்பட்ட மாணவர் மரபு மையம் மற்றும் அதன் பொறுப்பாளர்கள், இந்த கருத்தரங்கம் ஆய்வாளர்களுக்குப் பயன் தரும் கருத்தரங்க நிகழ்வாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டனர். தமிழக கிராமப்புர தெய்வ வழிபாடு என்ற கருப்பொருளுடன் இக்கருத்தரங்கினை முன்னெடுத்தோம். தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் கிடைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 120 கட்டுரைகளுடன் இரு தொகுப்புக்களாக ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வுக்கட்டுரை தொகுப்பு வெளிவர கடுமையான உழைப்பினை நல்கிய தமிழ்ப்பேராசிரியர்கள் டாக்டர்.மஞ்சுளா, டாக்டர்.சஙகரராமபாரதி இருவருமே பாராட்டுதலுக்குறியவர்கள். இந்த ஆய்வுத் தொகுப்பு தமிழக நிலப்பரப்பில் உள்ள பல்வகையான வழிபாட்டுக் கூறுகளை விளக்கும் செய்திகளைக் கொண்டிருக்கின்ற கலைக்களஞ்சியமாகத் திகழ்கின்றது என்பது பெருமையே. இந்தக் கருத்தரங்கில் இக்கல்லூரி மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆய்வாளர்கள் வந்து கலந்துச் சிறப்பித்து இக்கருத்தரங்கை மிகத் தரம்மிக்க ஒரு கருத்தரங்காக செயல்படுத்திக்காட்டினர்.

2017ம் ஆண்டில் இதனை மேலும் விரிவாக்கி ஒரு நாள் கருத்தரங்கத்தையும் உள்ளடக்கி இரண்டு நாட்கள் பெரு விழாவாக எஸ்.எஸ்.எம். கல்லூரி வளாகத்திலேயே முதல் நாள் கண்காட்சியும் மறுநாள் ஆய்வுக் கருத்தரங்கமும் என்ற வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தோம்.  நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக அளவில் தேர்வுசெய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய  கருந்தரங்க ஆய்வுக்கோப்பும் அன்று வெளியிடப்பட்டது  ஒரு பெருமை தரும் நிகழ்வு.

தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து தமது கல்லூரியில் மாணவர்கள் கல்வி கற்பதோடு தமது வரலாற்றினையும் அறிந்திருக்க வேண்டும் என்ற பெரும் ஆவலுடன் செயல்படுபவர் தான்  டாக்டர். செவாலியர் மதிவாணன் அவர்கள். கண்காட்சி ஏற்பாடு செய்யும் மானவர்கள் தாங்கள் காட்சிப்படுத்தும் பொருட்களின் வரலாற்றுப் பின்னனியை அறிந்து வந்து கண்காட்சிக்கு வருவோருக்கு விளக்கம் தரவேண்டும் என்பதையும் மிக முக்கிய அம்சமாக செயல்படுத்தி வருவது மிகுந்த பாராட்டுதலுக்குறியது. கல்லூரி மாணவர்களை ஒரு தந்தையைப் போல அரவணைத்து அவர்களுக்குப் பல்வேறு பொது அறிவு சார்ந்த செய்திகளை வழங்கி செல்வதிலும் இவர் சிறந்த வழிகாட்டியாகத்திகழ்கின்றர என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். இத்தகைய உயரிய உள்ளத்துடன் செயல்படும் இக்கல்லூரியின் தலைவருக்கும் அதன் ஆசிரியப்பெருமக்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை மன்மார்ந்த நல்வாழ்த்துக்களைப் பதிகின்றோம்.

இளமையில் கல்வி கற்கும் போதே பொது அறிவினை விசாலப்படுத்தும் செய்திகளையும் மாணவர்கள் பெறும் வகையில் கல்வி நிறுவனங்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். தேர்வில் வெற்றி பெற்று ஒரு வேலையில் சேர்வது மட்டுமே மனித வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. மாறாக தனது வேர்களை அறிந்து, தனது வாழ்வியல் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து வாழும் போது தான் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல், மொழி ஆகியனவற்றில் ஆழமான ஈடுபாடு ஏற்படும். வரலாறு தெரியாத மனிதர்களின் செயல்களால்தான் எண்ணற்ற கலைச்சிற்பங்களும் புராதனச் சின்னங்களும் பாதுகாப்பின்றி அழிக்கப்படுகின்றன.  இது மாற  வேண்டும்!

No comments:

Post a Comment