Thursday, October 6, 2016

31. தமிழறிஞர் டாக்டர்.ராஜம்



தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தித் தகவல் பரிமாற்ற ஊடகமான மின்தமிழ் மடலாடற் குழுமத்தில் உறுப்பினராக இருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோரில் பலதரப்பட்ட ஆர்வம் கொண்டோர் இருக்கின்றனர். தொழில் அடிப்படையில்  வெவ்வேறு துறையைச் சேர்ந்திருந்தாலும் கூட, தமிழ்மொழி மேல் இருக்கும் ஆர்வமும் பற்றும் காரணமாக அமைவதால்,  தமிழ் மொழியின் பல தரப்பட்ட ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் பலர் இந்த இணையக் கலந்துரையாடல் தளத்தில் கருத்துப்பரிமாற்றம் செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவரே டாக்டர் ராஜம் அவர்கள்.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக டாக்டர்.ராஜம் அவர்களுடன் நான் இணையம் வழி கடிதப் போக்குவரத்து தொடர்பில் இருக்கின்றேன். அவர் மின்தமிழில் உறுப்பினராக இணைந்த ஆரம்பகால கட்டத்தில், மின்தமிழ் மடலாடற் குழுமத்தில் இவர் மணிமேகலைக் காப்பியத்தை ஆராய்ந்து தொடர் கட்டுரைகளைப் படைத்து வந்தார். இந்த முயற்சி மணிமேகலைக் காப்பியக் கதாமாந்தர்களை எளிய தமிழில் வாசிப்போர் புரிந்து கொள்ளவும், மணிமேகலைக் காப்பியத்திற்கு அறிமுகம் அற்றவர்களுக்கும் இக்காப்பியத்தைப் புரிந்து கொள்ள ஒரு அறிமுகமாக உதவியது என்பதோடு, இக்கட்டுரைத் தொடர்ந்து மின்தமிழ் மடலாடற்குழும உறுப்பினர்களின் பாராட்டுதலையும் பெற்றது.

அதன் தொடர்ச்சியாகப் பல தரப்பட்ட சிந்தனைகளைப் பரிமாறிக் கொண்டும், அதிலும் குறிப்பாகத் தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகளில் ஆர்வத்துடன் தொடர்ந்து  ஈடுபாடு காட்டி வருகின்றார். கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற ஃபெட்னா 2015 நிகழ்வில் சிறந்த தமிழ் ஆய்வறிஞர் என்று சிறப்பிக்கப்பட்டார் என்பதுவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றே.

டாக்டர்.ராஜம் அவர்களுடன் இணையத்தொடபில் பல முறை உரையாடி இருக்கின்றேன். தமிழ்மொழி ஆய்வு மேல் இவருக்கு இருக்கும் உயிர்ப்புடன் கூடிய பற்றுதல் என்னை வியக்க வைக்கும். பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் வேளையில் என்றாவது ஒரு முறை நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என்றும் பேசியிருக்கின்றோம். இந்த விருப்ப்ம் இந்த ஆண்டு நிறைவேறியது.

ஃபெட்னா 2016 நிகழ்வில் கலந்து கொள்ள வட அமெரிக்காவின் நியூ ஜெர்சி மானிலம் சென்றிருந்த நான் அங்கு மூன்று நாட்கள் நிகழ்வுகள் முடிந்தவுடன் சான் பிரான்சிஸ்கோ மானிலத்திற்குச் சிறிய விடுமுறை சென்று, என் தோழி தேமொழியுடன் மூன்று நாட்களைக் கழித்து கலிபோர்னியா நகரைச் சுற்றிப்பார்க்க ஒரு திட்டம் வகுத்திருந்தேன். அந்த திட்டத்தில் முக்கிய நிகழ்வாக கலிபோர்னியாவில் வசிக்கும் டாக்டர்.ராஜம் அவர்களையும் சந்தித்து வர எண்ணம் கொண்டேன்.

கலிபோர்னியா வந்திறங்கிய என்னை தோழி தேமொழி விமான நிலையத்தில் சந்தித்து அழைத்துக் கொண்டார். முனைவர்.தேமொழி அவர்கள் திருச்சியை பிறப்பிடமாகக் கொண்டவர். திருமணம் முடித்து பல ஆண்டுகளாக குடும்பத்துடன் கலிபோர்னியாவில் வசிப்பவர். அவரையும் மின்தமிழ் மடலாடற் குழுவின் வழியாக மட்டுமே, மடல்களின் வழியும், இணைய ஊடகங்கள்  வழியும் அறிந்திருந்தேன். ஆக, அவரையும் நேரில் சந்தித்து உரையாட இது வாய்ப்பாக அமைந்த்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது.

என்னை விமான நிலையத்தில் வரவேற்ற தேமொழியுடன் நேராக டாக்டர்.ராஜம் அவர்களின் இல்லம் நோக்கி இருவரும் வாகனத்தில் புறப்பட்டு விட்டோம். தோழி தேமொழி விமானம் ஓட்டுவது போல வாகனத்தை மிக நேர்த்தியாக ஓட்டிச் சென்றதை நினைக்கும் போது பாராட்டத்தான் தோன்றுகின்றது.

ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்தில் டாக்டர்.ராஜம் அவர்கள் இருக்கும் குடியிருப்ப்புப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். எங்கள் இருவரின் வருகைக்காகவும் டாக்டர்.ராஜம் மிகுந்த குதூகலத்துடன்  வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார் என்பதை  அவரது முதல் பார்வையிலேயே உணர்ந்தேன். என்னைப் பார்த்து வரவேற்று கட்டியணைத்தபோது அவர் கண்களில் தோன்றிய கண்ணீர் முத்துக்களை நான் பார்த்தபோது அந்தத் தமிழறிஞருக்கு என் மேல் இருக்கும் அளவற்ற பாசமும் அன்பும் வார்த்தைகளில்  விளக்கம் தேவைப்படாமலேயே எனக்குப் புரிந்தது.


தமிழகத்தின் மதுரையில் பிறந்து பின்னர் அமெரிக்காவிற்கு உயர்கல்விக்காக 1952ம் ஆண்டு புலம்பெயர்ந்தவர் டாக்டர்.ராஜம் அவர்கள். தமிழ் ஆய்வுதான் இவரது துறை. அமெரிக்காவைப் பொருத்தவரை பல்கலைக்கழகங்களில் தமிழ் என்பது  தென்னாசியத்துறை அதாவது South Asia Studies அல்லது  Southern South East Asia என்ற வகையில் தான் உள்ளது. அதில் தமிழ் மொழி ஒரு பகுதியாகக் கற்பிக்கப்படுகின்றது. இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு மொழியியல் படிப்பதற்காக வந்து, ஆனால் கல்வியைத்தொடர  ஏற்கனவே ஏற்பாடாகியிருந்த உதவிப்பணம் வருவதற்கு தாமதமாகிய நேரத்தில் தமிழ் பயிற்றுவிக்க அதே பல்கலைகழகத்தில் இருந்த இணைப் பேராசிரியர் ஒருவருக்கு உதவியாளராக, அதாவது Native Informant போன்று Teaching Assistant ஆக பணியைத் தொடர்ந்தார். அதன் தொடர்ச்சியாக University of Pennsylvania.  மொழியியல் துறையில் சிறப்பு பார்வையுடன் தனது முனைவர் பட்ட ஆய்வினையும் மேற்கொண்டார். வடமொழி இலக்கணமான பானினியைக் கறைத்து குடித்தவர் ஒருவரிடம் இவர் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இணைந்தது நல்லதொரு ஆய்வுத்துறையை இவர் தேர்ந்தெடுக்க உதவியது.

ஒரு சிலர் பானினியின் வடமொழி நூலில் உள்ளனவற்றைக் கடன் வாங்கித்தான் தொல்காப்பியர்  தொல்காப்பியத்தைப் படைத்தார் என்றும் சொல்வார்கள். அதில் எந்த அளவு உண்மை இருக்கின்றது என  ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்  தொடங்கியதுதான் இவரது முனைவர் பட்ட ஆய்வு. அதற்கு அவரது வழிகாட்டியும் நல்ல ஆசிரியராக அமைந்தார். இந்த ஆய்வின் முடிவாக இவர் வெளிக்காட்டியது என்னவென்றால் பாணினியும், அதற்கு முன்னர் சிவசூத்திரம் எழுதிய அனைவரது அனுகுமுறையும்  வெவ்வேறு; தொல்காப்பியத்தின் அணுகுமுறையோ வேறு;  அதனால் அங்கிருந்து இங்கே கடன் வாங்கியிருக்க முடியாது. ஆக பானினியைச் சார்ந்து அல்லது தழுவி எழுதப்பட்டதல்ல தொல்காப்பியம் என்பது இவரது ஆய்வு முடிவாக அமைந்தது.  பல தடங்கல்களினால் இந்த  ஆய்வு நூல் இன்னமும் நூல் வடிவம் பெறவில்லை என்பது ஒரு குறைபாடுதான்!

இதற்கிடையில் தனது ஆசிரியர் பணியின் போது மாணவர்கள் சங்க இலக்கியத்துக்கு ஒரு இலக்கணம் எழுதுமாறு கேட்க, அதனை கருத்தில் கொண்டு இவர் எழுதிய ஆங்கில மொழியில் அமைந்த நூல்தான்   A Reference Grammar of classical Tamil Poetry. இது 1992ம் ஆண்டில் American Philisophical Society  வெளியீடாக  வந்தது என்பதோடு, இத்துறையில் தற்காலத்தில் இருக்கும் மிக முக்கிய நுல் என்ற புகழையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதே.

இதனை அடுத்து இவரது ஆய்வுலகில் ஒரு மைல்கல் என்று சொன்னால் அது  The earliest Missionary Grammar of Tamil என்ற நூல். சங்க இலக்கியத்துக்கான இலக்கணம் முடித்து பதிணென்கீழ்க்கணக்கு நூல்களுக்கு இலக்கணம் எழுதத் தொடங்க வேண்டும் என நினைத்திருந்தவருக்கு யுகேவன் நகரைச் சார்ந்த ஜீன் கைன் என்ற அமெரிக்கப் பெண்மணியும் கிறித்துவ சமயத்துறையில் இருந்த அவரது கணவர்  வழியாகவும் கிறித்துவ பாதிரிமார்களின் இந்திய வருகையினால் எழுந்த தமிழ் மொழி பற்றிய ஆய்வில் ஈடுபடும் நிலை உருவாகியது.  அவர்கள் பாதிரிமார்களின் இந்தியப் பயணம் பற்றி படிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். குறிப்பாக தென்னிந்தியாவில் மதமாற்றம் எவ்வாறு நடந்தது என்ற ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். அது பின்னர் அண்ட்றிக்கி பாதிரியாரின் இலக்கண நூலை விவரித்து எழுதும் ஒரு திட்டத்தை வித்திட்ட முதல் புள்ளியாக அமைந்து விட்டது.

போர்த்துக்கீசியரான அன்றிக்கி பாதிரியார், 1547ம் ஆண்டு தொடங்கி  1549 வரை தென்னிந்தியாவின் தெற்குப்பகுதியான புன்னைக்காயல் பகுதியில் பரதமர் சமூகத்து மக்களுடன் வாழ்ந்து தமிழ் மொழிச் சொற்களைக் கற்றிருக்கின்றார். தான் கற்ற தமிழ்மொழிச் சொற்களைக் தொகுத்து ஒரு  கையேடாக Arte  da Lingua Malabar என்ற பெயரில் உருவாக்கியிருக்கின்றார். இந்தக் கையேடு,  தன்னை ஒத்த பாதிரியார்களுக்கு, அதாவது அன்றைய ஸ்பேனிஷ் அரசின் ஆதரவில் கத்தோலிக்க மதம் பரப்பும் சேவையில் ஈடுபட்டோருக்கு இந்தக் கையேடு தமிழ்க்கற்று தமிழ்மக்களோடு பேசி அவர்களது பணிகளைத் தொடர வழிகாட்டியாக அமையும் என்பது அவரது எண்ணம்.

ஜீன் அம்மையார் அண்ட்றிக்கி பாதிரியாரின் இந்த இலக்கண நூலை போர்த்துக்கீஸிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து கிறித்துவ பாதிரிமார்களின் தமிழ் மொழி கற்றல் பற்றி ஆங்கிலத்தில் எழுத நினைத்தபோது தமிழும் ஆங்கிலமும் அறிந்த ஒருவரது உதவி தேவைப்படவே டாக்டம்.ராஜம் அவர்களது உதவியுடன் இந்த நூல் எழுதும் பணியைத் தொடக்கினார். ஆயினும் பல தடங்கல்கள் தொடர நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2013ம் ஆண்டில் இந்த நூல் வெளிவந்தது.

தொடர்ச்சியாக, 2015ம் ஆண்டில் சிறிய தமிழ் நூல் ஒன்றினை டாக்டர்.ராஜம் அவர்கள் எழுதி வெளியிட்டிருந்தார். ”சங்கப்பாடல்களில் சாதி, தீண்டாமை, இன்ன பிற ..” என்ற தலைப்பிலான நூல் இது.  சங்க இலக்கியங்களிலேயே சாதி மற்றும் தீண்டாமைப் பற்றியக் குறிப்பினைத் தேடத்தொடங்கி  எங்கே, எப்போதிலிருந்து சாதி, தீண்டாமை என்ற கோட்பாடு தோன்றியது என ஆராய ஆரம்பித்ததின்  விளைவே இந்த நூல். வள்ளுவர் எத்தனையோ விசயங்களை தமது குறளில் சொல்கின்றார். ஆனால்  சாதியைப் பற்றியோ தீண்டாமையைப் பற்றியோ சொல்லவில்லை. தீண்டாமை என்னும் கருத்து வள்ளுவர் காலத்தில், அதாவது சங்க காலத்தில் இருந்திருந்தால் அவர் அதனைக் கடியாமல் இருந்திருப்பாரா? என யோசித்து தொடர்ந்து மேற்கொண்ட நூல்வாசிப்பு, ஆய்வு என்பதன் வழி, சங்க இலக்கியத்தில், இன்று நமது வழக்கில் இருக்கும் சாதி மற்றும்  தீண்டாமை என்பன பற்றிய சான்றுகள் கிடைக்கவில்லை, ஆனால் இவை பக்தி காலத்தில் தான் தென்படுகின்றன;  ஆக பக்தி காலத்தில் தான் சாதிக் கொள்கையும் தீண்டாமை என்ற கருத்தும் தோன்றியிருக்க வேண்டும் என தன் நூலில் குறிப்பிடுகின்றார்.

தமிழ்ச்சமூகத்தைப் பலவாறாகப் பிரித்து கூறுபோட்டு சமூக அவலங்களை உயிர்ப்பித்து வளர்க்கும் சாதியை தமிழ் மக்கள் மனத்திலிருந்து அகற்றுவதற்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றே என்ற சிந்தனையை ஆய்வு நோக்கில் மக்கள் மனதில் விதைப்பதற்கும் இந்தகை ஆய்வுகள் காலத்தின் தேவை.

இத்தகைய அரும்பணியைச் செய்து கொண்டிருக்கும் டாக்டர்.ராஜம் அவர்களை சந்தித்தபோது அவரைப் பற்றியும் அவரது ஆய்வுக் குறிப்புக்கள் பற்றியும் நான் தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக ஒரு பேட்டி ஒன்றினைச் செய்திருந்தேன். விழியப் பதிவு பேட்டியான அது அவரது ஆய்வுகள் தொடர்பான பல தகவல்களை வெளிக்கொணரும் ஒரு பேட்டியாக அமைந்தது. டாக்டர். ராஜம் அவர்களது தமிழ்ச்சேவை மேலும் தொடர வேண்டும்.  அவரது ஆய்வுப் பணிகளைத் தொடரும் மாணவர்களும் பெருக வேண்டும் என்பதுவே தமிழ் மரபு அறக்கட்டளையின் அவா!

2 comments:

  1. தமிழ் சேவை புரியும் டாக்டர் ராஜம் அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete